Monday, March 29, 2021

26. யோகம் உடலுக்கு! தியானம் மனதுக்கு!

அஹம் பிரும்மாஸ்மி: எனது பிளாகின் இந்தப் பக்கத்தில் நான் மிக விரிவாக விளக்கப் போவது, எப்படி தியானமும் யோகமும் பயிற்சி செய்தால் நமது உடலில் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு நமது சிந்தையில் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைப் பற்றியே. இந்த மாற்றங்களின் இறுதி வடிவம்தான் நம்முள்ளே இறைவனைக்  காண்பது. இதுவே 'அஹம் பிரும்மாஸ்மி'. இதற்கு  சற்று நேரம் ஒதுக்கி ஆழப்படித்தால் நாம் யார், கடவுள் யார் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். முழுவதும் படிக்கப் பொறுமை இல்லாதவர்கள் அடுத்த பகுதிக்குச் செல்லலாம். ஆனால் இந்தப் பகுதியைத் தான் எனது பிளாக்கின் உயிர் நாடி என்பேன். இதை புரிந்துகொண்டால் யோகா, தியானத்திற்கும் சவாண்ட் சின்ரோமிற்கும் உள்ள தொடர்பை நான் எவ்வாறு நிறுவினேன் என்பதைப் பின்னர்வரும் பகுதிகளில் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

பிரும்மம் ஒக்கடே: இனி எப்படி யோகமும் (உடலையும்) தியானமும் (மனதையும்) ஒரு மனிதனை பண்படுத்த உதவும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம். இதில் நான் கொடுத்துள்ள விளக்கங்கள் தூரகிழக்கு நாடுகளைச் சேர்ந்த 'சீகோங்' மற்றும் 'டாய் சீ' போன்ற பயிற்சிகளைக் கற்பிக்கும் குருமார்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தழுவி நான் எழுதியது. இதே விதத்தில் தான் நமது யோகக் கலையும், தியானமும் செயல்படுகிறது என அறிகிறேன். எனவே நாம் கற்கும் யோகம் எந்த வகையைச் சேர்ந்ததாக இருப்பினும் சரி அதன் இறுதி நிலை ஒன்றே. அதாவது அனைத்தின் பலனும் ஒன்றுதான். இதே தான் நமது மதங்களின் நோக்கமும்! நாம் பின்பற்றும் மார்க்கம் வேறு வேறாக இருப்பினும் இறைவன் என்பது ஒரே 'பரம்பொருள்' (பிரும்மம் ஒன்றுதான்) தான்! அதை அடைவதும் ஒரு நிலைதான்! பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்த்த அன்னமாச்சார்யார் பாடிய "பிரும்மம் ஒக்கடே" என்ற பாடலின் பொருளும் இதுவே!

 சக்கரங்கள் (நாளமில்லா சுரப்பிகள்- Endocrine system): பயனியல் சுரப்பி, ஹைபோதாலமஸ், தைராய்டு, பாராதைராய்டு, அட்ரீனல், பாங்கிரியாஸ், பெண்களுக்கு ஓவரீஸ் ஆண்களுக்கு டெஸ்டிஸ் என்று நிறைய இருக்கின்றன. இவை வெளியிடும் ஹார்மோன்கள் செய்திகளை கொண்டு செல்ல உதவும் கெமிக்கல் தூதர்கள் என்று சொல்லலாம். அதே வேளையில் நமது நரம்பு மண்டலத்தை மின் அதிர்வுகளை கடத்தும் தூதர்கள் எனலாம். இவை இரண்டும் நடத்தும் ஜாலங்களை இனி சற்றே விரிவாகக் காண்போம். 


தெய்வீக அனுபவங்கள்: இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக ஹைலுப்போதலாமஸ், பயனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளைச் சொல்லலாம். இவை மூன்றாவது உச்சிக்குழி (3rd ventricle) இருக்கும் இடத்தில் இருப்பதால் இவை அனைத்தையும் சேர்த்துதான் 'கண்ணாடி மாளிகை', கடவுள் இருக்கும் இடம், 'ஆக்ஞசக்கரம்' என்றெல்லாம் சொல்கிறோம். நமது நரம்பு மண்டலத்தையும், நாளமில்லா சுரப்பிகளையும், லிம்பிக் தொகுதி (உணர்ச்சிகள்/பாவங்களை வெளிப்படுத்தும் பகுதி) என்று அழைக்கப்படும் பகுதிகளையும் ஒருசேர தொடர்புகொள்ள முடிந்த காரணத்தால் 'ஹைபோதாலமஸ்' அதி முக்கியத்துவம் பெறுகிறது. 



 ஹைபோதாலமஸ்: ஒரு பாதாம் பருப்பின் அளவில் இருக்கும் இந்த சுரப்பி நமது கண்களின் நரம்புகள் குறுக்கும் நெடுக்குமாக மூளையில் பின்னிச் செல்லும் இடத்திற்குப் பின்னால் அமைந்துள்ளது. இது மேலும் சில ஹார்மோன்களைச் சுரந்து பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி அதன்மூலம் பயனில் சுரப்பியையும் விழிப்படையச் செய்கிறது.                                                 

 பிட்யூட்டரி சுரப்பி: ஹைபோதலமஸிற்குக் கிழே ஒரு பட்டாணி அளவில் அமைந்திருக்கும் இந்த சுரப்பி 'செல்லா டூர்ஸிக்கா' என்னுமிடத்தில் 'ஸ்பீநாய்டு' எலும்பின் மேல் அமைந்திருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வாயின் மேல் அண்ணத்திற்கு மேலே தான் இச்சுரப்பி அமைந்துள்ளது. நீங்கள் நாக்கை உள்மடக்கி மேல் அண்ணத்தைத் (upper palate) தொடமுடிந்தால் (இதுவே 'கேசரி முத்திரை') நீங்கள் பிட்யூட்டரி சுரப்பியின் அடிப்பகுதியைத் தூண்டுகிறீர்கள் என்று பொருள். இந்த எலும்பு மிகவும் நுட்பமானது.எனவே சிறு அசைவும், இதன் நிலையில் உண்டாகும் நுட்பமான மாற்றமும் ஹார்மோன் அளவுகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்கலாம்.

 பிட்யூட்டரி சுரப்பியும் ஹைப்போத்தலாமஸ்ஸும் செய்யும் விந்தைகள்: இவை இரண்டும் சேர்ந்து இயங்கும்போது மூளையின் பிற பகுதிகளையும், உடலின் மற்ற உறுப்புகளையும், மனித உணர்ச்சிகளையும் கட்டுப்படுப்படுத்துகின்றன. மாற்றங்களை உண்டாக்குகின்றன. எப்படி? 

இவை இரண்டும் சேர்ந்து தான் உடல் உஷ்ணம், பசி, தாகம், சோர்வு, வளர்ச்சி உறக்கம், எடை, இச்சை, வலி தாங்குதல், இரத்த அழுத்தம், உடல் கடிகாரம் (circadian rhythm), வினை, எதிர்வினை என அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன. 'தலையாய சுரப்பி' என்று நாம் பிட்யூட்டரி சுரப்பியை சொன்னாலும், ஹைபோதலமஸ் தான் அதற்குத் தேவையான தகவல்களை உடலின் பல பாகங்களிலிருந்தும் பெற்று வந்து நரம்பில் சுரக்கும் சில ஹார்மோன்களின் மூலம் பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி வேலை செய்ய வைக்கிறது. இதைத்தவிர பயனியல்(ஆனந்த) சுரப்பியையும் இயங்க வைப்பது ஹைபோதாலமஸ் தான்.

பிட்யூட்டரி சுரப்பியின் முன்பக்கமானது 7 முக்கியமான ஹார்மோன்கள் சுரக்கக் காரணமாகிறது. இதனால் தான் பால் சுரப்பி, விதைகள், தைராய்டு மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. 

பிட்யூட்டரியின் பின்பக்கத்தில் எந்த ஹார்மோனும் சுரப்பதில்லை என்றாலும் மூளையில் சுரக்கும் ஆக்சிடோசின், வாசோப்பிரசின் என்ற இரண்டு முக்கிய ஹார்மோன்களை தேக்கி வைத்து தேவைப்படும்போது வெளியேற்றுகிறது.

சிற்றின்ப எண்ணங்கள் ஏற்படக் காரணமான ஆக்சிடோசின்: இது தான் பொருளாசை, பற்றுதல் நம்பிக்கை, இச்சை போன்ற 'சிற்றின்ப எண்ணங்கள்' ஏற்படக் காரணமாக அமைகிறது. கைலாயம் தான் 'மூன்றாவது உச்சிக்குழி' என்றால்  ராட்சஸ ஏரியை  நான் ' ஆக்சிடோசின்' னுடன்  ஒப்பிடுகிறேன்.


பேரின்ப எண்ணங்கள் ஏற்படக் காரணமான வாசோப்பிரசின்: கைலாயம்தான் 'மூன்றாவது உச்சிக்குழி' என்றால்  மானசரோவர்  ஏரியை  நான் ' வாசோபிரிஸின்'னுடன்  ஒப்பிடுகிறேன்.உடல் கடிகாரம், உடல் நீர் ரத்தத்தில் கலப்பது, தாய்மை உணர்வு ஆகியவை ஏற்படக் காரணமாக அமைகிறது. பேரின்ப எண்ணங்களைத் தூண்டுகிறது. 

பயனியல்(ஆனந்த) சுரப்பி: நமது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணமாக அமைவது பிட்டியூட்டரி சுரப்பியே. மேலும் இது பயனியல் (ஆனந்த) சுரப்பியையும் தூண்டிவிடுகிறது. பிட்யூட்டரி சுரப்பியும் பயனியல்(ஆனந்த) சுரப்பியும் கைகோர்த்து ஓர் அலைவரிசையில் வேலை செய்தால் நாம் உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் புதுப்பிக்கப்படுகிறோம்.  இது வெளியிடும் பீனோலின், டிஎம்டி போன்ற ஹார்மோன்கள் உடலிலும் மனதிலும் மாற்றத்தை உண்டாக்கக் கூடியவை.

அதிக 'டிஎம்டி' சுரப்பது அமானுஷ்ய மற்றும் பரவச நிலையைக் கொடுக்கும். சில தாவரங்களிலும் இது சுரக்கிறது. இவற்றிலிருந்து கிடைக்கும் போதைப் பொருட்களை உட்கொள்ளும்போது டிஎம்டி சுரப்பதை அதிகப்படுத்தி தன்நிலையை மறக்கச் செய்யுமென முன்பே பார்த்திருந்தோம். 

                     

 பயனியல் (ஆனந்த) சுரப்பி-எங்கு அமைந்துள்ளது? நடு மூளையில் பிட்யூட்டரி சுரப்பிக்குப் பின்னால் சற்று மேலாக அமைந்துள்ளது. இது முழுவதுமாக வாலை நீரால் (CSF-Cerebro Spinal Fluid) குளிப்பாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் கியூபிக் கொள்ளளவில் உடலிலேயே அதிக ரத்தம் பாய்வதும் இங்குதான். இதை உடலின் சக்தி மிகுந்த இடமெனலாம். இதுவே தூக்கத்தைக் கொடுக்கும் 'மெலட்டோனின்' என்ற ஹார்மோன் அதிகளவில் சுரக்கக் காரணமாகிறது. மெலட்டோனின் இருட்டில் அதிகம் சுரக்கிறது, வெளிச்சத்தில் குறையத் தொடங்குகிறது. அப்படி உற்பத்தியாகும் மெலட்டோனின் வாலை நீரில் கலந்து (CSF-Cerebro Spinal Fluid) மூளை முழுவதும் வியாபிக்கிறது. மெலடோனின் அளவு தடைபடுவதே எண்ண ஓட்ட மாறுதல்கள், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை ஏற்படக் காரணமாக அமைகிறது.மேலும் வயதைக் குறைத்துக் காட்டும் கார்டிசாலைக் கட்டுப்படுத்துவது, குறிப்பிட்ட பருவங்களில் வரும் நோய்கள் முதலியவற்றிற்கும் மெலடோனின் அளவே காரணமாக அமைகிறது. 

 மெலடோனினைத் தாண்டி ஒரு யோகியால் தியானத்தின் மூலம் பண்படுத்தப்பட்ட பயனியல் (ஆனந்த) சுரப்பியானது வளர்ச்சிதை மாற்றங்களை செல் அளவில் உண்டாக்கி உடலையும் மனதையும் கட்டுப்படுத்தக்கூடிய சில முக்கிய ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள 'செரட்டோனின்' என்ற வேதிப்பொருள். இதுவே பினோலின் மற்றும் டிஎம்டி சுரக்க மூல காரணமாக அமைகிறது. இவ்விரண்டு ஹார்மோன்களும் உடலையும் மனதையும் இணைக்கவல்லது.

 பயனியல்(ஆனந்த) சுரப்பியின் ஆன்மீகத் தொடர்பு: மேலே குறிப்பிட்டது போல் ஒரு யோகியால் தியானத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட பயனியல்(ஆனந்த) சுரப்பி அவரை ஆன்மீகத்துடன் இணைக்கிறது. பைன் மரக் கூம்பு போல் காட்சியளிக்கும் இச்சுரப்பி பண்டைய நாகரீகங்களைக் குறிக்கும் படங்களிலும், சிலைகளிலும் காணப்படுகிறது. இது ஞானத்தையும், சாகாவரத்தையும் குறிப்பால் உணர்த்துகிறது. பண்டைய எகிப்தியர்கள் மன்னர்களும், முக்கியஸ்தர்களும் இறந்த பின்பு அவர்களின் உடலைப் பதனிடும்போது இப்பகுதியை வாயின் மேல் அண்ணததிலிருந்து துளையிட்டு தனியாக வெட்டியெடுத்து விடுவார்கள்.

பயனியல் (ஆனந்த) சுரப்பி- மூன்றாவது கண்ணைத் திறக்க உதவும் திறவுகோல்: மனக் கண்ணால் பார்ப்பது, ஞானம் அடைவது போன்றவற்றிற்கு பயனியல் (ஆனந்த)சுரப்பிக்கும் கண்களின் ரெட்டினா பகுதிக்கும் உள்ள தொடர்பு காரணமாக அமைந்திருப்பதாக விஞ்ஞானிகள் பல உயிரினங்களையும் ஆய்வு செய்ததன் மூலம் உணர்த் தொடங்கியுள்ளார்கள். இது இப்பொழுது தொடங்கிய வினையல்ல, உயிரினங்கள் உருவான காலத்திலிருந்தே தொடங்கி மனித இனம் உருவான காலம்வரை முக்கிய பங்காற்றியுள்ளது. மனிதக் கண்களின் ரெட்டினாவில் உள்ள செல்களும் பயனியல்(ஆனந்த) சுரப்பியில் உள்ள செல்களும் அவற்றின் அமைப்பும், புரோட்டீன்களும் ஒன்றுபோல் அமைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

மனிதனைத் தவிர 'டாட்டரா' என்ற ஓணான் வகையிலும்,'லாம்ப்ரீஸ்' வகை ஜெல்லி மீன்கள், மேலும் சில தவளை வகைகளிலும் கூட ஒளியை உணரும் தன்மையானது பயனியல் சுரப்பிகளில் காணப்படுகிறது. மனிதர்களின் மூன்றாவது கண் திறக்க ஒளி உணரும் பயனியல்(ஆனந்த) சுரப்பியின் தன்மை முக்கிய பங்காற்றுகிறது.

மெலடோனின் என்ற ஆன்ம மூலக்கூறு (spirit molecule):
ஆன்மீகத் தேடலில் உள்ளவரின் உடலில் சுரக்கும் அதிகப்படியான மெலடோனின் முதலில் உடலையும் மனதையும்  அமைதியாக்குகிறது. ஒரு யோகியின் பயனியல்(ஆனந்த) சுரப்பி வெளியிடும் டிஎம்டி மற்றும் பீனோலின் அவரின்  உணரும் தன்மை, விழிப்புணர்வு, மனநிலை, அறிவாற்றல், பழக்கவழக்கம் அகியவற்றில் மாறுதல்களை உண்டாக்குகிறது. இதில் பீனோலின் அவர் விழித்திருக்கும்போதே கற்பனை உலகில் சஞ்சாரிக்கவும், ஞானக்கண் கொண்டு பார்க்கவும் உதவுகிறது. இது போன்ற பரவச நிலையை பண்டைய எகிப்தியர்கள் மற்றும் ஜோராஷ்ட்ரியன்கள் வழிபாட்டின்போது (நம்மூரில் சாமியாடுவதுபோல்) பயன்படுத்தியுள்ளார்கள்.மேலும் பீனோலின் டிஎன்ஏவை பிரதியெடுக்கவும், உடலின் நாடியுடன் சேர்ந்து நொடிக்கு எட்டு சுழற்சிகள் என்ற விதத்தில் வேலை செய்யவும் உதவுகிறது.

டிஎம்டி: இது பயனியல்(ஆனந்த) சுரப்பியினால் ஆழ்நிலை தியானத்தின் போதும், பிறப்பின் போதும், அதிக மன அழுத்தத்தின் போதும், உறவுகொள்கையில் உச்சநிலையை அடையும் போதும், மரணத்தின் வாயிலை நெருங்கும்போதும் அதிகமாக சுரக்கிறது. அதேபோல் ஆழ்ந்த உறக்கத்தின்போது இது ரத்தத்தில் கலப்பதால் கண்கள் துடிக்கக் காரணமாகி கனவைக் கலைத்து விழிப்பைத் தருகிறது. டிஎம்டியே உடலையும் ஆன்மாவையும் 'ஞானக் கண்' கொண்டு காண அதீத விழிப்புணர்வால்  இணைக்கிறது.

பயனியல்(ஆனந்த) சுரப்பியும் அதிர்வும்: விழிப்படைந்த
பயனியல்(ஆனந்த) சுரப்பி நமது உணர்வுகளை அதிர்வுகளின் மூலம் மாற்றவல்லது. ஒர் அலைவரிசையில் ‌ஒருங்கே அமைந்த அதிர்வானது (மணியோசை) நமது மனநிலை, உணர்வு, உடல் நிலை போன்றவற்றை மாற்றி அமைக்கிறது. உதாரணத்திற்கு இசையை சொல்லலாம். எண்பதுகளில் இசைக்கலைஞர் ஃபேபியன் மேமன் செல்களில் இசையின் அதிர்வால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இசையால் கேன்சர் செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இதை நாம் முன்பே பார்த்ததுபோல் இஸ்ரேல் போன்ற நாடுகளில் கர்ப்பிணிப் பெண்கள் நல்ல இசையை கேட்டு தங்களையும் வயிற்றில் உள்ள சிசுவையும் நல்ல முறையில் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

ஹைப்போதலமஸ்ஸும், பிட்யூட்டரி சுரப்பியும் ஒருசேர பயனில்(ஆனந்த) சுரப்பியுடன் சேர்ந்து செயலாற்றினால், நமது முழு உடலும் சேர்ந்திசையில் ஆடும்.

பண்டைய சீன வான்சாஸ்திர வல்லுநர்கள், முதல் அதிர்வானது சப்தரிஷி மண்டலத்திலுள்ள (Ursae Minoris) அதிக ஒளியை உமிழும் துருவ நட்சத்திரத்திலிருந்து (North Star @ Polaris) உருவானதாகச் சொல்கிறார்கள். எனவேதான் பூமியும் சூரியனை நோக்கி திரும்பாமல் சப்தரிஷி மண்டலத்தை பார்த்தபடி வடக்கு நோக்கி சாய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால்தான் உயிர்களும் தாவரங்களும் பூமியில் தழைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். மேலும் சீனர்களின்  சீகோங் யோகப் பயிற்சிகளும் வடதிசையை நோக்கியே இருப்பதாக சொல்கிறார்கள்.அதாவது இந்த குறிப்பிட்ட நட்சத்திரம் வெளியிடும் அதிர்வானது‌ நேரடியாக நமது பயனியல் (ஆனந்த) சுரப்பியை வந்தடைந்து விழிப்படையச் செய்கிறது என்கிறார்கள். இந்த அதிர்வின் போது கிடைக்கும் அண்டத்தில் இருந்து வரும் செய்தியானது பயனியல்(ஆனந்த) சுரப்பியுடன் சேர்ந்தே அசையும் ஹைபோதலமஸ்‌ மற்றும் பிட்யூட்டரி சுரப்பியையும் சென்று சேர்கிறது. பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து தகவல் இதயத்திற்கும் ஏனைய உறுப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது. 

காந்த விசைக்கும் பயனியல்(ஆனந்த) சுரப்பிக்கும் உள்ள தொடர்பு:
ஒலி, அதிர்வு, இவற்றுடன் காந்தவிசையையும் அறியக்கூடியது பயனியல் (ஆனந்த) சுரப்பி. இதுவே விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் திசைகாட்டியாக விளங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பயனியல் (ஆனந்த) சுரப்பி விழிப்படைந்த காரணத்தினால்தான் மீனாட்சிக்கும் போன்ற சவான்ட்களுக்கு திசைகள் தெரிகிறது என்று நம்புகிறேன். 

இதே காந்தவிசையின் காரணமாகவே சுற்றுப்புற சூழலின் அழுத்தம் மற்றும் புவியில் ஏற்படும் காந்தப்புயல் போன்றவை நமது  உடலின் பயனியல்(ஆனந்த) சுரப்பியை பாதிப்பதன் மூலம் நம் உடலின் கடிகாரம், மெலடோனின் சுரப்பதை மாற்றுவதன் மூலம் நம் முழு உடலையும் பாதிக்கிறது.

அதேபோல் சவான்ட் சிண்ட்ரோம்‌ குறித்து ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் தலையில் காந்தப் புலத்தை (transcranial magnetic stimulation) உருவாக்கியபோது அவர்களின் மூளையின் லெஃ ப்ட் ஆன்டீரியர் டெம்போரல் லோப்(left anterior temporal lobe) தற்காலிகமாக செயலிழந்ததாகவும், அதன்மூலம் சாதாரண மனிதர்களாலும் அசாதாரணமாக சவான்ட்களைப்போல் தற்காலிகமாக சிந்திக்க முடிந்ததாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
                                                லெஃ ப்ட் ஆன்டீரியர் டெம்போரல் லோப்


அன்பே சிவம்: இது 'தான்', 'தன்னுடையது' என்ற நிலையைத் தாண்டி வாழும் ஞானப் பாதையை நோக்கி செல்பவர்களுக்கான வழிமுறை!

நமது இதயமானது மின்காந்தப் புலத்தை உருவாக்கக்கூடியது. 'நல்லதை நினை நல்லதே செய்' என்ற சித்தர்களின் வாக்கிற்கேற்ப நாம் அன்பும் கருணையும் கொண்டு வாழ்ந்தால் இந்த காந்தப் புலம் இதயத்திலிருந்து விரிவடைந்து பயனியல்(ஆனந்த)சுரப்பியை சென்றடைகிறது,இவ்விரு  உறுப்புகளும் ஓர் அலைவரிசையில் இயங்கும் போது நமது மூன்றாவது கண் மேலும் விரிவடைகிறது. இதுதவிர பயனியல்(ஆனந்த) சுரப்பிக்கும் இடஞ்சார்ந்த நோக்கு நிலைக்கும்(spatial orientation) உள்ள தொடர்பால் உடல் கடிகாரத்தின் இயங்கும் முறை மாறி காலமும் இடமும் நகர்ந்து உள்ளுக்குள் மாற்றங்களை நிகழ்த்துகிறது (இதுவே முக்காலத்தையும் அறியும் தன்மையைக் கொடுக்கிறது என்று நினைக்கிறேன்).

கண்ணாடி மாளிகையில் ஒளி: நாம் முன்பே பார்த்ததுபோல் பிட்யூட்டரி சுரப்பி, ஹைபோதாலமஸ்,பயனில்(ஆனந்த)சுரப்பி ஆகிய மூன்றும் சேர்ந்ததே 'கண்ணாடி மாளிகை'. 2002 ஆண்டிற்கு முன்புவரை விஞ்ஞானிகள் கண்களின் ஒளி அறியும் தன்மைக்குக் காரணம் கண்களில் உள்ள கூம்புகள் (cones) மற்றும் குச்சிகளே (rods) காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் மூன்றாவதாக  மெலனோஸ்பின் (Melanopsin) என்ற புதிய செல்களையும் கண்டுபிடித்தார்கள். இவை ஹைபோதலமஸ்ஸிலுள்ள SCN என்ற பகுதிக்கு நேரடியாக செய்திகளை கொண்டு செலுத்துகின்றது. இதுவே நமது விழிப்பு, ஹார்மோன்கள் சுரப்பு, உடல் உஷ்ணம், செரிமான செயல்பாடு, உடல் கடிகாரம், தூக்கம் எனஅனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.

ஹைபோதலமஸ்ஸிற்கு ஒளியா இருளா என்ற தகவல் சென்று சேரும்போது, அது கிடைக்கும் தகவலுக்கேற்ப பயனியல் சுரப்பியை வேலை செய்யவோ அல்லது நிறுத்தவோ தூண்டுகிறது. இது நேரடியாக மெலடோனின் மற்றும் கார்டிசால் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மெலட்டோனின் அளவு மாறும்போது அது SCN, பிட்டியூட்டரி மற்றும் ரெட்டினாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் தொடர் மாற்றங்களை உண்டாக்குகிறது. பிட்டியூட்டரி சுரப்பியும் ஒளியின் தன்மைக்கேற்ப வசோபிரசினை வெளியிடுகிறது.இது SCNல் மாறுதலை உண்டாக்கி உடல் கடிகாரத்தின் இயக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கண்களைத் தாண்டி நமது முழு உடலுமே ஒளியின் தாக்கத்தை உணரக் கூடியதென்பதால்,  இதுவும் SCN மற்றும் பயனில் சுரப்பிக்குத் தகவல் அனுப்பி மெலட்டோனின் சுரப்பை நிறுத்துகிறது. இன்று அதிக ஒளி உமிழும் விளக்குகள் பெரும்பாலான இடங்களில் இருப்பதால் தான், தூங்கும்போதும் தியானம் செய்யும்போதும் அதிக ஒளி இருக்காத வண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள்.

இனி யோகப் பயிற்சியின் மூலம் எவ்வாறு பயனியல்(ஆனந்த) சுரப்பியும், கண்ணாடி மாளிகையும்  செரிவூட்டப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்:

மூச்சுப்பயிற்சி: பலவகை மூச்சுப் பயிற்சிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தும்போது  பிட்யூட்டரிபயனியல் (ஆனந்த)
 சுரப்பிகள் எழுச்சி அடைவதோடு வாலை நீரும் (CSF-Cerebrospinal Fluid) அயனியாக்கம் (ionisation) செய்யப்படுகிறது.

நெற்றிப் பொட்டைத் தட்டுவது: நெற்றிப் பொட்டை லேசாகத் தட்டுவது பயனியல்(ஆனந்த) சுரப்பியையும், கண்ணாடி மாளிகையையும் விழிக்கச் செய்கிறது. நெற்றியிலிருந்து கிளம்பும் அதிர்வானது நேரடியாக பயனியல்(ஆனந்த) சுரப்பியைச் சென்றடைகிறது. இதே அதிர்வானது ஸ்பீனாய்டு எலும்பின் வழியாகச் சென்று  'செல்லா டூர்ஸிக்கா'வைத் தூண்டி பிட்டியூட்டரி சுரப்பியை எழுப்புகிறது. பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் அதிர்வானது ஹைபோதாலமஸ்சையும் தூண்டுகிறது.


மந்திர உச்சாடனம்: சில மந்திரங்களை உச்சரிப்பது நேரடியாக கண்ணாடி மாளிகைக்கு செல்கிறது.பிட்யூட்டரி, பயனியல் (ஆனந்த) சுரப்பிகள் எழுச்சி அடைவதோடு, வாலை நீரும் (CSF-Cerebrospinal Fluid) அயனியாக்கம் (ionisation) செய்யப்படுகிறது. இதைத்  தான் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர்.ஜேம்ஸ் ஹர்ட்ஸ்ல்  'சமிஸ்க்ருத விளைவு' என்று தனது சமீபத்திய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சமிஸ்க்ருதம்  வேண்டாதவர்கள் "ஓம்" என்ற ஓம்காரத்தை மட்டுமே சொல்லி வந்தால் போதுமென்பது அடியேனின் கருத்து.

கேசரி முத்திரை: உங்கள் நாக்கை மடக்கி மேல்அண்ணத்தைத் தொடும் போது  கண்ணாடி மாளிகை எழுச்சி அடைகிறது.

சுருக்குவது: கண்களையும், பிஷ்ட சதைகளையும் சுருக்கி அங்கே உள்ள தசைகளுக்கு வலுவேற்றும் பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலம் முதுகுத்தண்டிற்க்கும், அங்கிருந்து நேரடியாக மண்டைக்கும் அதிர்வுகள் சென்று சேர்கின்றன. இது கண்ணாடி மாளிகையை வலுவேற்றுகிறது.

அரைவட்ட வடிவில் மேற்கொள்ளும் சில உடற் பயிற்சிகள் மூலம் மின்காந்தப் புலத்தை உண்டாக்குவது, வாலை நீரை அயனியாக்கம் (ionisation) செய்து இருதயத்தில் உள்ள மின்காந்தப் புலத்தைத் தூண்டி அதன்மூலம் பயனியல்(ஆனந்த) மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளை விழிப்படையச் செய்கிறது.

இருட்டால் கிடைக்கும் நன்மைகள்: இருள் சூழ்ந்த இடத்தில் தியானம் செய்வது மெலடோனினை அதிகம்  சுரக்கச் செய்து, அதனால் பீனோலின் மற்றும் டிஎம்டி சுரப்பதும் அதிகரித்து இறுதியில் மூன்றாவது கண் திறக்கிறது.

(இதனால்தான் யாரும் இல்லாத அமைதியான குகைகளில் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதைப்பற்றி இன்னும் விரிவாக பௌதீக ரீதியாக பிறகு பார்ப்போம்!)

புன்முறுவலும் சிரிப்பும்: சிரிப்பது இதயத்திற்கு இதமளிப்பதோடு மற்ற உறுப்புகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும். மேலும் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி ஊட்டுகிறது. மேலும் சத்தமாகச் சிரிப்பது என்டோர்ஸ்பின்னை வெளியிட்டு ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும். அமைதியான மனது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கண்ணாடி மாளிகையில் உள்ள ஹார்மோன்களை அதிகம் சுரக்கச் செய்கிறது.

மனதை ஒருமுகப்படுத்துதல்:மனதை ஒருமுகப்படுத்துவது சக்தியை அதிகரிக்கும். கண்ணாடி மாளிகையை நோக்கி மனதை செலுத்துவது அதனை விழிப்படையச் செய்யும்.

உணவே மருந்து: உடலும் மனமும் மேன்மை அடைய உணவும் நீரும் முக்கியம். அதிலும் கண்ணாடி மாளிகை விழிப்படைய உடலில் போதுமான அளவு  நீர் இருப்பது மிக அவசியம். அதேபோல் சத்தான உணவில் ட்ரிப்டோபான் (tryptophan) அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது உடலின் வேதிப்பொருட்களுக்கு மிக அவசியம். இச்சத்து சாக்லேட், பாதாம் பருப்பு,வாழைப்பழம், எள், பேரிச்சை, கடலை மற்றும் கொண்டைக்கடலை முதலியவற்றில் அதிகமிருக்கிறது.

தண்டுவட மூச்சு (vestibular breathing exercises)-சிறப்பு யோகப் பயிற்சிகள்!
வாசி யோகத்தில் உள்ள குயில், மயில், நெமிலி, மலை, சர்ப்பம் போன்ற நிலைகள் தண்டுவட மூச்சுப் பயிற்சிகளே. ஆனால் முறையாக குருவின் துணையின்றி ஆன்லைனில் பார்த்து அல்லது படித்து இவற்றைப் பயிற்சி செய்வது உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். 

இதுபோன்ற யோகப் பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளும்போது முதுகுத்தண்டில் ஏற்படும் ஒருங்கிணைந்த அதிர்வானது அங்கே காந்தப் புலத்தை உண்டாக்கி, வாலை நீரை (csf- cerebro spinal fluid) செரிவூட்டுகிறது. இதனால் பயனியல் (ஆனந்த) சுரப்பியையும் தூண்டப்படுகிறது. இதனால் உடலின் எலக்ட்ரோலைட்களின் சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி நமது உடலையே ஒரு 'மின்கடத்தி' போல் மாற்றுகிறது. அதிக கடத்தும் தன்மையானது, ஆற்றல்(சக்தி) நமது மூலையிலும், முதுகுத் தண்டிலும் பயணிக்க பாதை வகுக்கிறது. அதேநேரம் பயனியல்(ஆனந்த) சுரப்பி வெளியிடும் டிஎம்டி போன்ற வேதிப்பொருட்கள் வாலை நீரை (csf-cerebrospinal fluid) மேலும் செரிவூட்டுகின்றன.

இப்பயிற்சியால் முதுகுத்தண்டின் அடியிலுள்ள முக்கோண (sacrum-புனித ) எலும்பு அசைய தொடங்கி, அதனால் ஏற்படும் அதிர்வலைகளை தலையிலுள்ள ஸ்பினோய்டு எலும்பு உணர்ந்து அதுவும் அதிரத் தொடங்கும். இப்போது இவ்வெலும்பின் மீது அமர்ந்திருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு ஹைபோதலமஸ்ஸையும் தூண்டுகிறது. இதனால் பயனில்(ஆனந்த) சுரப்பி எழுப்பப்படுகிறது.மென்மேலும் அதிர்வால் தூண்டப்படும் பிட்டியூட்டரி சுரப்பி ஆக்சிடோசின் மற்றும் வாசோப்ரஸின் போன்ற வேதிப்பொருட்களை வெளியிடும். இதனால் நம்பிக்கை,அமைதி,கருணை போன்ற எண்ணங்கள் அதிகரித்து, பயம்,பதட்டம், கோபம் போன்ற குணங்கள் குறையத் தொடங்கும்.
                                    
                                                         

                                                                                                                  sacrum (புனித  எலும்பு)



முதுகுத் தண்டைப்  பற்றி  பைபிள் சொல்வது:
நமது இமயமலையைப் போல் இஸ்ரேலில்  இருக்கும் பனி மலைத் தொடர் தான் ஆன்டி லெபனான் . இங்கிருந்து தான் நமது புனித  நதியான கங்கையைப் போல்  ஜோர்டான் நதி உருவாகி தெற்கு நோக்கிப் பாய்ந்து  இறுதியாக சாக்கடலில் கலக்கிறது (முதுகின் அடிப்பகுதி). இங்கிருக்கும்  ஹெர்மன் சிகரம் (கபாலம்) நமது கைலாயம்போல்  மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தது.






          கைலாயம் தான் 'கபாலம்' என்றால் நேர்கோட்டில் அமைந்திருக்கும் இலங்கையின் கதிர்காமமே  'முதுகின் அடிப்பகுதி'.                                                                         

அதேபோல்  இஸ்ரேலின்  இந்த  ஆன்டி லெபனான் மலையும்  இமயத்தின் கைலாயமும் நேர்கோட்டில் அமைந்துள்ளதைப்  பார்க்கலாம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
நாம் முன்பே பார்த்ததுபோல் பிட்டியூட்டரி சுரப்பி வாயின் மேல் அண்ணத்தில் ஸ்பீனாய்டு எலும்பிற்கு மேல் அமைந்துள்ளது. இப்பொழுது கேசரி முத்திரையைப் பயன்படுத்தி நாக்கின் மேல் அண்ணத்தைத் தட்டத் தொடங்கினால் வசோபிரசின் மற்றும் ஆக்சிடோசின் கலந்த கலவை வாலை நீருடன்(Csf-cerebrospinal fluid) கலந்து சைனஸ் ஓட்டைகளின் வழியாக நமது வாயை வந்தடையும். இதுவே 'அமிர்தம்' (nectar) என்றழைக்கப்படுகிறது.                               
                                                                  கேசரி முத்திரை

வசோபிரசினும், ஆக்சிடோசினும் பிறக்கும்போது அதிகம் சுரக்கும் ஹார்மோன்கள். இவையே மீண்டும் அமிர்தமாக கிடைக்கும்போது அது உங்களுக்குள் பேரன்பையும் மீண்டும் பிறந்தது போன்ற உணர்வையும் தரும்.

இதனால்தான் நமது வாயின் கடைசிக் கடைவாய்ப் பல்லை 'ஞானப் பல்' என்றழைக்கிறோமோ? சில நேரங்களில் இப்பற்களை வேருடன் பிடுங்கிவிட்டால்  சைனஸ் ஓட்டைகள் திறந்து அவற்றின் வழியாக  மூளைநீர் வாய்க்கு வந்து பிரச்சனைகளை உண்டாக்குகிறதே?இப்படி வாயை எட்டும் அமிர்தம் நேரடியாக வயிற்றுக்குள் செல்கிறது. மேலும் செரிமானத்தின் மூலமாக நமது ரத்தத்திலும் கலக்கிறது.

ஞானப் பல்லுக்கு (wisdom tooth) நான் சொல்லும் பெயர்க் காரணம்: பொதுவாக நமது வாயின் கடைசியில் இருக்கும் கடைவாய்ப் பல்லை ஞானப் பல் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பருவ வயதை கடந்த பிறகே வளரும். சிலருக்கு வாயின் மேல் வரிசை கடைவாய்ப் பல்லை வேரோடு பிடுங்க நேர்ந்தால் அவர்களுக்கு தவறுதலாக சைனஸ் பாதை திறந்து‌ அதன் மூலம் தலையிலிருந்து வாலை நீர் (CSF-cerebrospinal fluid) வாய்க்குள் சொட்டத் தொடங்கும். அதை பலரும்  கோழையென என நினைத்து துப்பிக்கொண்டே இருப்பார்கள். இறுதியில் அந்த சைனஸ் பாதை மருத்துவர்களால் மூடப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு தீர்வு கிடைக்கும். இதேபோல் தலையில் பலமாக அடிபட்டால் மூக்கின் வழியாகவும் வாயின் வழியாகவும் வெளிப்படும் சளி அல்லது கோழை நாம் நினைப்பதும் இதே வாலை நீர் (CSF-cerebrospinal fluid) தான்.

அதேவேளையில் ஒரு யோகி தியானமும் யோகமும் கருத்தாய்ப் பழகி மனதையும் உடலையும் செம்மைப்படுத்தி சித்தியடையும் நிலை வரும்போது 'கேசரி' முத்திரையைப் பயன்படுத்தி அவரால் ஆக்சிடோசின்  வாஸோபிரிஸ்சின் மற்றும் வாலையுடன் கலந்த திரவத்தை  சுவைக்க முடிந்தால் அதுவே 'அமிர்தம்' என்றழைக்கப்படுகிறது.







No comments:

Post a Comment