Friday, March 26, 2021

25. பாரதிக்கும் கவியரசருக்கும் நிகழ்ந்த உயிர் வேதியியல் மாற்றங்கள்!

டாக்டர்.மாரோ சாப்படெராவின் காணொளியின் மூலம் நான் புரிந்து கொண்டது: மூளையும் நமது மத்திய நரம்பு மண்டலமான முதுகுத் தண்டும் (CNS-central nervous system) வாலை நீரால்CSF-Cerebrospinal fluid) உட்புறமும் வெளிப்புறமும் குளிப்பாட்டப்படுகிறது 

(எனது எளிய விளக்கம்:'சாம்பார் இட்லி' கப் தான் உங்கள் கபாலமென்று நினைத்துக் கொள்ளுங்கள்!சாம்பார் தான் 'வாலை' இட்லி தான் 'மூளை')

நியூரான்களுக்கு வேண்டிய தகவல்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்தப்படுவது, மத்திய நரம்பு மண்டலத்திற்கு தேவையான புரதங்கள் மற்றும் ஹார்மோன்களை எடுத்துச் செல்வது, உடலின் கடிகாரத்தை (circadian rhythm) ஒழுங்குபடுத்துவது, பசியை உணர்த்துவது, செல்கள் மற்றும் மூலக்கூறுகளின் நகர்வதற்கு வழிகாட்டுவது, ஸ்டெம் செல்களை கண்காணிப்பது,கழிவுகளை வெளியேற்றுவது, மூளையையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் அதிர்வுகளிலிருந்து காப்பது, அயான்களின் சமநிலையைப் பாதுகாப்பது என்பதோடு, ஆற்றல், அதிர்வு, தகவல் முதலியவற்றை வாங்கவும் கொடுக்கவும் வல்லது வாலை  (CSF-Cerebrospinal fluid) என்கிறார்.

அவர் காட்டும் மேற்கோள்கள்:

1)."ஆன்மா வாலைநீரில் (CSF-Cerebrospinal fluid) நீந்துகிறது".

"ஒளியையும், கேளா ஒலியையும் (ultrasonic sound) கூடக் கடத்தக் கூடியது வாலை(CSF-Cerebrospinal fluid)"-டாக்டர்.ரென்டாப் ஸ்டோன்.

2)."தெய்வீக அறிவானது வாலைநீரின் மூலம் மனித உடலில் பாய்ச்சப்பட்டு மனிதனின் செயல்பாடு,நெறி, அறிவு போன்றவை அமையக் காரணமாகிறது"-டாக்டர்.சதர்லேண்ட்.

3).இவை தவிர மூன்றாவது உச்சிக்குழியுடன் (3rd ventricle) தொடர்பு கொள்ளும் பயனியல் சுரப்பி (ஆனந்த சுரப்பி) வெளியிடும் 'டிஎம்டி' மற்றும் 'மெலடோனின்' ஹார்மோன்களைக் கொண்டு செல்வதற்கும் வாலைநீர்(CSF) பயன்படுகிறது என்கிறார்.

மெலடோனின்: இந்த ஹார்மோன் நமக்கு இரவையும் பகலையும் புரியவைத்து, இரவில் வெளிச்சம் குறையும் போது அதிகம் சுரந்து நித்திரையைக் கொண்டுவருகிறது. (மீனாட்சிக்கு இது குறைவாக சுரந்திருக்குமோ? அதனாலேயே அவள் அதிகம் தூங்காது சிறு வயது முதல் விழிப்புடன் இருக்கிறாளோ?)

டிஎம்டி: இந்த ஹார்மோன் மனித உடலில் இயற்கையாகச் சுரப்பதைத் தவிர கஞ்சா,அபின்,எல்எஸ்டி போன்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் போதை வஸ்துக்களிலும் அதிகம் காணப்படுகிறது. இதுவே நமக்கு அமானுஷ்யமான கனவுகளையும், போதைப் பொருட்களை உட்கொண்டால் தன்நிலையையும் மறக்கச் செய்கிறது (இது அதிகமாக சுரப்பதால் தான் மீனாட்சி சில நேரங்களில் தானாக பேசி சிரித்துக் கொள்கிறாளோ?). அந்த 'தன்னை மறந்த நிலை'யில் தான் அவளுக்கு அறிமுகமில்லாத விஷயங்களும் யார் மூலமாகவோ அல்லது மற்ற பரிமாணங்களில் மூலமாகவோ கற்பிக்கப்படுகிறது என்றே நம்புகிறேன். 'சினஸ்தீஸியா' பிரச்சனையும் இதன் வெளிப்பாடே என்று தோன்றுகிறது. இந்த குறிப்பிட்ட ஹார்மோன் பிறக்கும் போதும், இறக்கும்போதும் நம் உடலில் அதிகம் சுரப்பதாகக் குறிப்பிடுகிறார் டாக்டர்.மாரோ சாப்படெரா. 'டிஎம்டி' அதிகம் சுரந்த காரணத்தால் தான் மரணப் படுக்கையில் இருந்த எனது தாத்தாவிற்கு அமானுஷ்யமான விஷயங்கள் கண் முன் தோன்றியிருக்கலாம்.

 இன்றும் எண்ணற்ற குடும்பங்களில் வயது முதிர்ந்தவர்கள் இறக்கும் தருவாயில் தங்களது குழந்தைப் பருவத்தில் எப்பொழுதோ நடந்த சில விஷயங்களைச் சொல்வது (அதைப் பற்றிய சிந்தனையே அதுவரை அவர்கள் வாழ்நாளில் இருந்திருக்காது), விட்டத்தை பார்த்தபடி யாருடனோ பேசுவது மற்றும் தனது முடிவைப் பற்றி முன்கூட்டியே சொல்வது போன்றவையும் நிகழலாம்!

இடகலை-பிங்கலை-மற்றும் சுழுமுனை நாடி: மேலும் சுவாமி விவேகானந்தர் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார். அதாவது முதுகில் உள்ள நரம்புத் தொகுதிகளாக 'இடகலை' (negative energy), 'பிங்கலை' (positive energy) என்ற நாடிகள் ஒன்றை ஒன்று பின்னியபடி செல்கின்றன மற்றும் 'சுழுமுனை' நாடியானது இவற்றின் நடுவே நேர்கோட்டில் செல்கிறது என்பதோடு, இம்மூன்று நாடிகளும் பின்னிக் கொள்ளும் ஒவ்வொரு இடமும் சக்கரங்களாக யோகிகள் கருதுவதைக் குறிப்பிடுகிறார். இடகலை நாடியானது பயனியல் (ஆனந்த) சுரப்பியையும், பிங்கலை நாடியானது பிட்யூட்டரி சுரப்பியையும்  சென்றடைவதாக தான் நம்புவதை விளக்குகிறார். மேலும் மூன்றாவது உச்சிக் குழியில் 'குண்டலினி' சக்தி வெளிப்பட்ட பின்பு 'கேசரி' முத்திரையைப் பயன்படுத்தி எவ்வாறு சித்தர்கள் அமுதுண்டு சாகா வரம் பெற்றார்கள் என்பதையும் விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறார்.

மேலும் இடகலை- பிங்கலை  பற்றி தெரிந்துகொள்ள: ராகு பிங்கலை  நாடியையும் (சூரிய நாடி) - கேது இடகலை நாடியையும்  குறிக்கின்றன (சந்திர நாடி). இது குறித்த கட்டுரை இங்கே!

நான் சொல்ல விரும்பும் மேலும் சில விளக்கங்கள்: நமது சித்தர்கள் 'பிரம்ம பத்திரம்' (புகையிலை) மற்றும் 'பதஞ்சலி மூலிகை' (கஞ்சா) போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தி உடலின் 'டிஎம்டி' அளவை அதிகப்படுத்திக் கொண்டு 'பரவசநிலை'யை அடைந்திருக்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா கிராமத்து பூசாரி ஏன் 'கள்' குடித்துவிட்டு சாமி ஆடியபடி குறி சொல்கிறாரென்று? இதுபோல் தென்அமெரிக்கப் பழங்குடி மக்களும் எல்எஸ்டி போன்ற போதை வஸ்துகளை வழிபாட்டின்போது பயன்படுத்தியிருக்கிறார்கள். 

பாரதிக்கும் கவியரசருக்கும்  உள்ளே நிகழ்ந்த உயிர் வேதியியல் மாற்றங்கள் : போதை வஸ்துக்களை பயன்படுத்திய காரணத்தால் தான் பாரதிக்கு காலம் கடந்து பயணித்து உலகத்தைக் காண முடிந்திருக்கிறது. 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சொல்வது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது போல் 'அனைத்து உயிர்களும் ஒன்றே' என்ற சித்தர்களின் வாக்கு தானே? 

அதேபோல் ஒவ்வொரு மனிதனும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் சாகாவரம் பெற்ற பாடல்கள் என்று சொல்வதோடு, ஒவ்வொரு வரியும் தனக்காக எழுதப்பட்டதாக நினைப்பது அவர்களுடைய மனதைத் தொடுவதால் தானே? "கண்ணதாசன் போல் தண்ணி அடித்தால் கவிதை வருமா கழுதைக்கு?"என்று மெல்லிசை மன்னரும் பாடியிருக்கிறாரே?! ஆன்மீக  நம்பிக்கை இல்லாத கண்ணதாசன் அவர்கள் பின்நாளில் ஆன்மீகவாதியாக மாறி  "அர்த்தமுள்ள இந்துமதம்" எழுதியது அவருக்குள் நிகழ்ந்த ஒரு உயிர் வேதியியல் மாற்றமே (bio-chemical reaction).

எனவே ஒருசிலருக்கு  மூளையில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஹார்மோன்களால் நிகழும் சில மாற்றங்கள் அதீத கற்பனையையும், படைப்பாற்றலையும், பேரன்பையும்,காதலையும், இறை பக்தியையும் தூண்டலாம். நன்மை செய்யலாம்!

ஆனால் சிலருக்கோ பழிவாங்கும் உணர்ச்சி,பயம்,மனநல பாதிப்பு,மன அழுத்தம், கனவிலும் நேரிலும் தீய சக்திகள் வந்து மிரட்டுவது, தூக்கத்தில் வேற்றுகிரக வாசிகள் கவர்ந்து செல்வதென பிரச்சனைகளையும் தூண்டலாம். இவற்றிற்கு எல்லாம் காரணம் நாம் முன்பே பார்த்தது போல் தனிப்பட்ட மனிதர்களின் உடலில் உள்ள திரவங்களின் கலவை மற்றும் திடப் பொருட்களான மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் அமைப்பு போன்றவை தானே?

                                                                 நீம் கரோலி பாபா

மேலும் 1960களில் நீம் கரோலி பாபா (ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரின் சீடரே!) என்ற இமயமலையிலிருந்த துறவியால் கவரப்பட்ட  ஹார்வேர்டு பல்கலைக்கழக மனவியல்துறை பேராசிரியர் ரிச்சர்ட் ஆல்பர்ட் தன்னை 'ராமதாஸ்' என்று பெயர் மாற்றிக்கொண்டார் (பாபாவைக் காண முதல் முறை நண்பருடன் இமய மலைக்கு வந்த ரிச்சர்ட் நம்பிக்கை இல்லாமல்தான் சென்றிருக்கிறார். ரிச்சர்டைக் கண்ட நீம் கரோலி பாபா "இரவில் வருகின்ற வழியில் வண்டியிலிருந்து இறங்கிய நீ விண்மீன்களுக்கு இடையே உனது இறந்த தாயைத் தேடினாயோ?"என்று கேட்க, பல மைல்களுக்கு அப்பால் நடந்த விஷயம் பாபாவுக்கு தெரிந்ததை அறிந்து அதிர்ந்துபோய் அன்று முதல் அவருடைய சீடராகியிருக்கிறார்). அவர் பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம், அவர் சமயக் கல்வி மாணவர்களுக்கு 'குட் பிரைடே எக்ஸ்பிரிமெண்ட்' என்ற பெயரில் 'சைலசெய்பின்' என்ற காளான் வகை போதை வஸ்துவை வழங்கி இறைவனை அடைய வழி சொன்னதே!

அப்படியானால் இறைவனை அடைய உண்மையிலேயே வழி இருக்கிறதா? ஆம்! நிச்சயம் இருக்கிறது. அவற்றிற்கு நாம் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் தியானமும்,யோகமுமே. இதற்குக் காலம் அதிகம் ஆகலாம் ('சித்தி' அடைய அதாவது உயர்நிலையை எட்ட 12 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள் சித்தர்கள்). தாமதமானாலும் பண்படுத்தப்பட்ட ஒரு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வது போல் 'யோகம்' என்ற உரத்தைப் போட்டு உடலையும், 'தியானம்' என்ற நீரைப் பாய்ச்சி மனதையும் முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டால் நிச்சயம் நம்மால் 'ஞானம்' எனும் பழத்தை அறுவடை செய்யமுடயும் என்பதை ஒரு நடுநிலையாளனாக நான் உறுதியுடன் நம்புகிறேன். யோகிகள் 'நாடி சுத்தி', 'வாலை பூஜை'யின் மூலம் யோகம் செய்ய உடலையும் மனதையும் தயார்படுத்தத் தொடங்குகிறார்கள்.


No comments:

Post a Comment