இனி சில விஷயங்களை ஆன்மிக ரீதியாக முதலில் பார்ப்போம்!
புரியாதவர்களுக்கு: பெளதீகத்திலும் கணிதத்திலும் நாம் கான்ஸ்டன்ட் (constant) என்ற ஒன்றைப் பயன்படுத்துவோமே எதற்காக? நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரை, சமன்பாடு முடியும்வரை 'இதுதான் அது' என்று நாம் புரிந்து கொள்வதற்காக, ஒரு தீர்வை எட்டுவதற்காக இந்தக் கான்ஸ்டன்டை பயன்படுத்துகிறோம். அதுபோலவே நானும் இங்கே ஆன்மீகத்தை 'X' 'Y' போல் பயன்படுத்திக்கொள்ளச் சொல்கிறேன். இறுதியில் 'இதுதான் அது' என்று நீங்களும் என்னைப் போல் எளிதாகத் தெரிந்து கொண்டுவிடுவீர்கள்.
எதை? 'கான்ஸ்டன்ட்' என்ற வார்த்தைக்கு 'நிரந்தரமானது' என்ற வேறொரு பொருளும் உள்ளதை.
மேலும் நான் சொல்லும் நிறைய உதாரணங்கள் வெளிநாடுகளில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆய்வுகளை பற்றியதாகவே இருக்கும். இவற்றையெல்லாம் நான் மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் பெரும்பாலானவர்கள் அறிவியல் சார்ந்த விளக்கங்களை மட்டுமே ஏற்பார்கள் என்ற காரணத்தால் தான். அதேவேளையில் இங்கே நாம் விவாதிக்கும் அனைத்து விஷயங்களும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா போன்ற பண்டைய நாகரிகங்களையும் முதிர்ச்சியடைந்த சமுதாயத்தையும் கொண்ட நாடுகளில் அது ஆன்மீக ரீதியாகவே பார்க்கப்பட்டிருக்கிறது.
'ஆன்மீகம்'(spirituality) என்பது நான் உணர்ந்து கொண்டவரையில் 'அது மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது.ஆனால் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.தனிப்பட்ட நபர்களால் உணரப்பட வேண்டியதே தவிர பிறருக்கு உணர்த்த முடியாது'.இது 'சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைகிறது' என்பதுபோல் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயமாக இருந்திருந்தால் இன்றுவரை யாரும் விவாதித்துக் கொண்டிருக்க மாட்டோமில்லையா? ஒருவகையில் 'ஆன்மீகம்' என்றும் உயிர்ப்போடு இருக்கும் பேசுபொருளாக மாறத் தான் இரு அணிகளாக பிரிந்திருக்கிறோமோ? இது யாருடைய திட்டம்? திட்டமிட்டவர் தான் கடவுளோ? மெய்ஞானம் விஞ்ஞானத்தால் எட்டிப் பிடிக்கக் கூடிய தூரத்திலா இருக்கிறது? ஆனால் நெருங்க நெருங்க தொலைவு அதிகரித்துக் கொண்டே செல்கிறதோ?'
மதங்கள் ஆன்மாவைப் பற்றியும் மறுபிறப்பைப் பற்றியும் சொல்வதென்ன?
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை | ஸாங்கிய யோகம்:
போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்: “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்".
இஸ்லாத்தின் திருக்குர்ஆன்:
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன்: 39:42)
கிறித்தவர்களின் பைபிள்:
இயேசு கிறிஸ்து :
இயேசு “மறுபடியும் பிறத்தல்” என்பதைப் பற்றி, அவற்றைப் பற்றி விளக்கமாக கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:
இயேசு நிக்கொதேமுவிடம் மறுபடியும் பிறத்தல் பற்றி பேசுகிறார்:
வசனம் - 1:
“ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்.” ------யோவான்-3:3
நம்முடைய பாவங்கள் அனைத்தும் கழிக்கப்பட்டால் ,
நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டால் ,
கடவுள் நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு
மன்னித்து நம்மை ஏற்றுக் கொண்டால் ,
கடவுளுடைய குழந்தையாக நம்மை ஏற்றுக் கொண்டால் ,
நாம் புதியதாகப் பிறப்பு எடுத்தவர்களாவோம் ;
அதாவது புதியதாகப் பிறந்தவர்களாவோம் ;
அதையே மறுபடியும் பிறத்தல் என்ற வார்த்தையின்
மூலம் குறிப்பிடுகிறார் இயேசு .
இவ்வாறு ஒருவன் ஒரு மனிதன் கடவுளுடைய ஆசி பெற்று மறுபடியும் பிறந்தால் மட்டுமே ,
கடவுளுடைய ராஜ்யத்தைக் காண்பான் .
இவ்வாறு ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால்
கடவுளுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் .
என்பதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன் ;
சத்தியமாக உனக்குச் சொல்கிறேன் ;
மெய்யாக உனக்குச் சொல்கிறேன் ;
என்று நிக்கொதேமுவிடம் கூறுகிறார் இயேசு.
இதேபோல் சமணம், பௌத்தம்,சீக்கிய மதமென பெரும்பாலான அனைத்து மதங்களும் மறுபிறப்பைப் பற்றிப் பேசுகின்றன.
No comments:
Post a Comment