'வாலைக் குமரியடி கண்ணம்மா' என்று பாரதியாரும் பாட்டெழுதியிருக்கிறாரே? பாரதி பாண்டிச்சேரியில் இருந்தபோது 'குள்ளச் சாமியார்' என்ற யோகியின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரின் மூலம் வாசியோகமும் கற்றிருக்கிறார் என்பதை எனது ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டேன். அப்படியானால் தனது காலத்திற்கு அப்பாற்பட்டு சீரிய சிந்தனையுடன் பெண்கள் முன்னேற்றம், சுதந்திர வேட்கை போன்றவற்றுடன் இயற்கையை விரும்பியது, நதிகளை இணைத்து நாடு, கண்டம் என்ற எல்லையைத் தாண்டி அனைவரும் ஒன்று என்று சிந்தித்தது,மேலும் 'காக்கை குருவி எங்கள் ஜாதி' போன்ற கருத்துக்களை முன்வைத்ததன் மூலம் பாரதியாரும் ஒரு சித்தரே என்பதை என்னால் உணர முடிகிறது. அவர் சில போதை வஸ்துக்களை பயன்படுத்தினார் என்றும் சொல்லப்படுவதுண்டு. அது எதனால் என்பதை பின்னால் பார்க்கலாம்.
வாலை, பாலா, பாலதிரிபுரசுந்தரி, பராசக்தி, அபிராமி, துர்கை, நாகாத்தம்மன் கன்னியாகுமரி, பாலமீனாட்சி, அம்பிகை, மனோன்மணி என்று நமது இந்து மதத்திலுள்ள 'அம்பாள்' என்று சொல்லப்படும் அனைத்துப் பெண் தெய்வங்களும் வாலையையே குறிப்பிடுகின்றன. வாலைத் தாய் பத்து வயது பெண்ணாக (குழந்தைக்கும் குமரிக்கும் இடைப்பட்ட வயதில்) பாவடை சட்டை அணிந்து காட்சியளிக்கிறாள்.
பாலதிரிபுரசுந்தரிஇந்தப் படத்தைப் பல இடங்களிலும் சிலர் வீட்டுப் பூஜை அறையிலும் நீங்கள் பார்த்திருக்கலாம்."சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்" என்ற திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடலும் பாலாவுக்காகப் பாடப்பட்டதே!
பாலா நம் அனைவருக்குள்ளும் இருக்கிறாள். எங்கே?
கீழ்கண்ட காகபுஜண்டர் என்ற சித்தர் எழுதிய பாடலில் இதற்கான விடை உள்ளது. பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
"சென்றேனே உச்சிநீர் தாயேயாகும்
சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும்
தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல்
தீண்டிவிட்டு மேலேறிற் தீபசோதி
சொல்லுமே கபாலத்திற் சேர்ந்தவாசி
சோதியொளி கண்டிடுமே கனலாற்காலால்
நில்லுமே மூலதலம் வாசிகொண்டு
நிமிர்ந்திருந்து பார்க்கவுமே பிடரியேறும்".
பாடலின் பொருள் உங்களுக்கே இந்தப் பதிவை முழுமையாகப் படித்து முடித்தால் விளங்கிவிடும். நான் மேற்கொண்டு எனது ஆய்வைத் தொடர்ந்ததில் நமது சித்தர்கள் இன்றைய மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் முன்னோடி என்பதைத் தெரிந்துகொண்டேன்.
இங்கே 'உச்ச நீர்' என்ற வார்த்தையை மட்டும் கவனிக்கவும். அதாவது நமது தலையில் 4 உச்சிக்குழிகள் (ventricles) உள்ளன. உச்சந்தலையில் இருக்கும் ஒன்று மற்றும் இரண்டாம் உச்சிக் குழிகளின் (Left & Right lateral ventricles OR ventricles 1 & 2) ஊற்று கண்களாய் விளங்கும் க்ளோரிட் பிளக்ஸஸ்(choroid plexus) மூலம் தான் 'உச்சிநீர்' சுரக்கிறது (CSF-Cerebrospinal fluid). இந்த நீர்தான் சித்தர்கள் குறிப்பிடும் 'வாலை'.
No comments:
Post a Comment