'ஆன்மா' (spirit) என்பது மறுபிறப்பு மட்டுமின்றி நமது ஆழ்மன எண்ணங்களுடன் தொடர்புடையது என்பதை நமது மதங்கள் தெளிவாகக் கூறுகின்றன. நான் மேற்கோள் காட்டிய குர்ஆனில் வசனத்தில் சொல்லப்படுவதும் அதுவே.
இதில் குறிப்பாக திபெத்திய பெளதத் தலைவரான தலாய்லாமா மரணித்தால் அடுத்த தலாய்லாமா எங்கே மறுபிறப்பெடுப்பார் போன்ற விஷயங்கள் புத்த பிட்சுக்களுக்கு கனவுகளின்மூலம் தெரிவிக்கப்படுகிறது. அல்லது இறந்த தலாய்லாமாவின் உடல் எரிக்கப்பட்டால் புகை செல்லும் திசை சொல்லும் என்கிறார்கள்.அப்படி சில பல ஆண்டுகள் தேடலுக்குப் பின் மறுபிறப்பாக அறியப்படும் சிறுவன் தனது முற்பிறவியில் (பழைய தலாய்லாமாவின்) பயன்படுத்திய உடமைகளை சரியாக அடையாளம் காட்டுவான்.இதுதான் பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் அவர்களின் நடைமுறை. தற்போதைய தலாய்லாமா "அடுத்த தலாய்லாமா திபெத்திற்கு வெளியேவும் பிறக்கலாம். வழக்கத்திற்கு மாறாக அது பெண்ணாகவும் இருக்கலாம்"என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் உலகின் பல முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு அவர்கள் விடைதெரியாது தவித்த நேரத்தில் அவர்களுடைய ஆழ் மனதில் குறிப்பாக அவர்களுடைய ஆழ்ந்த நித்திரையில் தீர்வு கிடைத்ததாக சொல்கிறார்கள்.'நித்திரையில் வெளிப்படும் உள்ளுணர்வு' (dream telepathy) இதைப்பற்றி ஹார்வர்டு பல்கலைக்கழக நரம்பியல் துறை மருத்துவ 'பேராசிரியை' டாக்டர்.டயானா ஹின்னசி பவல் தன்னுடைய வலைப்பக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார். இவர் இந்தியாவிற்கு வந்து நான் முன்பு குறிப்பிட்ட சிறுவன் விஷால் ஆனந்தைக் கண்காணித்து சில நாட்கள் இங்கேயே தங்கி அவனைப் பற்றிய விஷயங்களையும் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் ரமஸஸ் என்ற சிறுவன் தனது தாய் மனதில் நினைக்கும் எண்களை டெலிபதி மூலம் தெரிந்துகொண்டு அவற்றை சரியாகச் சொல்வதையும் விரிவாக எழுதியுள்ளார்.
விஞ்ஞானிகளின் கனவில் தோன்றிய முக்கிய கண்டுபிடிப்புகள்: எக்ஸ்ரே இயந்திரம், கனிம அட்டவணை (periodic table), பென்ஸீனின் வேதியல் வடிவம்(structure of benzene), தையல் இயந்திரம், அணுவின் வடிவம் மற்றும் ராமானுஜம் விட்டுச்சென்ற மூவாயிரத்துக்கும் அதிகமான கணித சூத்திரங்கள்.
மேற்கண்ட விஞ்ஞானிகளைத் தாண்டி 'ஆட்டிசம்' பாதிப்பு, வளர்ச்சி தாமதம் மற்றும் ADHD போன்ற பிரச்சனைகள் இருந்தவர்கள் என்று அறியப்பட்ட முக்கிய கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்:
1). தாமஸ் ஆல்வா எடிசன்: பல்பு, திரைப்படம் என்று தொடங்கி நூற்றுக்கும் அதிகமான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரரான இவர் பள்ளிநாட்களில் மற்ற மாணவர்களுடன் கலக்காமல் சிந்தையால் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காரணத்தால் பள்ளி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார். டெலிபதி தொடர்பாக இவரும் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதை நானும் படித்துத் தெரிந்து கொண்டேன்.
ராமானுஜம் பெரும்பாலும் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை. ராமானுஜத்தை பின்னாளில் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்ல குறைந்தபட்சம் அவர் ஒரு பட்டப்படிப்பாவது படித்திருக்க வேண்டும் என்பதற்காக பேராசிரியர் ஹார்டி பிரம்ம பிரயத்தனம் செய்து தேர்ச்சி அடைய வைத்து இங்கிலாந்து அழைத்துச் சென்றார். ராமானுஜம் தான் எழுதிய சூத்திரங்களை பற்றி சொன்ன விஷயம் "எனக்கு எதுவும் தெரியாது. நேற்று எனது கனவில் தோன்றிய நாமகிரி தாயார் எனக்கு சொல்லிக் கொடுத்ததைத் தான் நான் இங்கே எழுதுகிறேன்!".
3). விஞ்ஞானி ஐன்ஸ்டீன்: இளம் வயதில் தாமதமாகப் பேசிய குழந்தை ஐன்ஸ்டீன். நாம் முன்பே பார்த்ததுபோல் பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான திரு.தாமஸ் சொவல் அவர்கள் மீனாட்சி போல் பேரறிவு, பேச்சு தாமதம், வளர்ச்சிப் பின்தங்கல் போன்ற பிரச்சனைகளையுடைய குழந்தைகளை ஆட்டிசத்திலிருந்து தனியாகப் பிரித்து இளம் வயது ஐன்ஸ்டீனை ஒத்திருந்ததால் "ஐன்ஸ்டீன் சின்ட்ரோம்" என்று குறிப்பிட்டு புத்தகமாக வெளியிட்டதை முன்பே கூறியிருந்தேன்.
ஐன்ஸ்டீனின் 'தியரி ஆப் ரிலேட்டிவிட்டி' போன்ற அவருடைய முக்கிய ஆய்வுகளுக்கான அடிப்படை விஷயங்கள் அவருக்கு கனவில் தோன்றிய விஷயங்கள்தான்!
4).ஐசக் நியூட்டன்: இங்கே ஒரு சுவாரஸ்ய கிளைக்கதை! முன்பு ஒருமுறை மீனாட்சியைப் பற்றி இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருக்கும் எனது சித்தி மகனிடம் 'பல பெரிய விஷயங்களை நாம் சொல்லிக் கொடுக்காமலேயே தெரிந்து வைத்துள்ள மீனாட்சி சிறிய விஷயங்களை புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள்' என்று நான் கூறியதும், அவன் எனக்கு ஐசக் நியூட்டன் பற்றி சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அதை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்:
ஒருமுறை தனது உதவியாளனிடம் ஆய்வக அறைக் கதவைப் பிராண்டி திறக்கப் சொல்லி அடிக்கடி தொந்தரவு செய்யும் ஒரு பூனையும் அதன் குட்டியும் எளிதாக சென்று வர பெரிதும் சிறிதுமாக இரண்டு துளைகளிடும்படி சொல்லியிருக்கிறார் நியூட்டன்.
உதவியாளன் சொல்லியிருக்கிறான் 'பெரிய துளை மட்டும் போதுமே! பூனை அதன் குட்டி இரண்டுமே அதைப் பயன்படுத்திக்கொள்ளுமே!' என்று. நியூட்டனுக்குத் தான் அவன் சொன்ன விஷயத்தை புரிந்து கொள்ள சற்று தாமதமாகியிருக்கிறது!
No comments:
Post a Comment