ஆட்டிசம் பாதிப்பு,ஹைபர் லெக்ஸியா மற்றும் சவாட்சிண்ட்ரோம் போன்ற பாதிப்புகளையுடைய நான் அறிந்த பெரும்பாலான குழந்தைகள் ஆன்மீகம் மற்றும் யோகா சம்பந்தமான விஷயங்களில் பிறர் சொல்லிக் கொடுக்காமலேயே ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள்.
இங்கே நான் குறிப்பிட விரும்பும் மிக முக்கியமானவர் மீனாட்சியின் யோகா ஆசிரியை: மீனாட்சிக்கு யோகா பலனளிக்கும் என்று சில பெற்றோர் கூறிய காரணத்தால், அவளுக்கு யோகா கற்பிக்க அந்த அம்மையாரை சந்திக்க சென்றோம். பார்த்த நொடியிலிருந்து மீனாட்சியும் அந்த யோகா ஆசிரியையும் பல ஆண்டுகள் பழகியவர்கள் போல மிக அன்னியோன்யமாக ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கொஞ்சத் தொடங்கிவிட்டார்கள். அந்த அம்மையார் என்னிடம் சொன்னார் "உங்கள் மகள் என்னிடம் யோகா கற்க வரவில்லை.அதை நான் அவளுக்கு கற்பித்து தான் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இங்கே வரும் பெரும்பாலான குழந்தைகள் எனக்கு யோகாவைக் கற்பித்திருக்கிறார்களே தவிர நான் அவர்களுக்கு எதுவும் கற்பிக்கவில்லை" என்றார். மேலும் "உங்கள் மகள் பிறந்ததன் நோக்கமே நீங்கள் சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற காரணத்திற்காகத் தான்" என்றுஅடிக்கடி கூறுவார். அதாவது ஆன்மீக நாட்டம் இல்லாத எனக்கு உண்மையான ஆன்மீகத்தை புரிய வைக்கவே மீனாட்சி பிறந்திருப்பதாக சொல்வார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான் என்று இன்று நான் உணர்கிறேன்.
இவருடைய கனவிலும் மீனாட்சி வருவதுண்டு. தனக்கு சாக்லேட், ஸ்வீட் என்று ஏதாவது வேண்டுமென்றால் அதை இவரது கனவில் தெரிவிக்கிறாள். அந்த அம்மையார் மறுநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து 'நேற்றிரவு உங்கள் மகளிடமிருந்து எனக்கு ஒரு சிறப்பு அழைப்பு வந்திருக்கிறது. தனக்குப் பிடித்த சில பொருட்களை வாங்கிவரும்படி சொல்லியிருக்கிறாள்' என்பார்.நாங்கள் மீனாட்சியிடம் "இன்று யார் உன்னைச் சந்திக்க வரப் போகிறார்கள்?" என்று கேட்டால், அவரது பெயரை மெதுவாகச் சொல்லிவிட்டு சிரித்துக் கொள்வாள்.
அதேபோல் அந்த அம்மையார் ஒரு முறை அவரது கணவருடன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த பொழுது அவரைக் கண்ட மகிழ்ச்சியில் தேன் குடித்த நரி போல் மீனாட்சி ஓடி வந்து வந்து அவரது வலது கால் மூட்டைத் தட்டிக் கொண்டே இருந்தாள். அந்த அம்மையாருக்கு அந்த இடத்தில் வலி இருப்பதை உணர்ந்த நாங்கள் மீனாட்சி தான் அவரது காலில் வலி ஏற்படும்படி ஏதோ செய்துவிட்டாள் என்று புரிந்துகொண்டு அவளை அதட்டினோம். எங்களைத் தடுத்த அந்த அம்மையார் "வேறொன்றுமில்லை! எனக்கு பத்து நாள் முன்பு குளிக்கும் போது வழுக்கிக் கீழே விழுந்துவிட்டேன்.முட்டியில் அடிபட்டுவிட்டது. அதைத்தான் இப்பொழுது குணமாகிவிட்டதா என்று உங்கள் மகள் கேட்கிறாள்"என்றார்.அவர்களுக்குள் இருக்கும் உள்ளார்ந்த அன்பைப் புரிந்து கொள்வது எங்களுக்கு இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. புரியாவிட்டால் என்ன? அவர்களுக்கு இடையூறாக இல்லாமல் ஒதுங்கி நின்று ரசிக்கும் அளவிற்காவது தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதே மகிழ்ச்சி தான்.
பொதுவாக ஆன்மீகம் என்பது ஒருவர் சார்ந்த மதத்திலோ அல்லது குடும்பத்திலோ குறிப்பிட்ட கடவுளையோ அல்லது சில துறவிகளையோ பின்பற்றுகிறோம். அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்கள்ப் பற்றி பெரியவர்களின் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறார்களே தவிர அவர்களாகவே எதையும் தெரிந்து கொள்வதில்லை.
ஆனால் அப்படி நமக்கே தெரியாத துறவிகளையும் ஞானிகளையும் இக்குழந்தைகள் தானாகவே அறிந்து வைத்துள்ளார்கள் என்பதே நிதர்சன உண்மை.இதை உணர்ந்த பெற்றோர்கள் எத்தனைபேர் ?
எனது கல்லூரி நண்பன் 'ரகு':
'யோகம்' 'தியானம்' என்பது போன்ற விஷயங்கள் ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனது பெரும்பாலான கேள்விகளுக்கு யோகா மற்றும் தியானம் போன்ற விஷயங்களில் தான் பதில் கிடைத்தது. இதை நான் அறிய முக்கியப் பங்காற்றியது எனது கல்லூரித் தோழன் 'ரகு'.
பாடுவது, இயற்கையைப் புகைப்படம் எடுப்பது போன்ற எண்ணற்ற திறமைகள் இருந்தாலும் ரகுவின் அதீதமான பேச்சு மற்றும் குறும்புத்தனத்தால் கல்லூரியிலேயே எனக்கும் அவனுக்கும் பேச்சு வெகு காலம் நின்று போயிருந்தது. ஒரு வழியாகப் பல ஆண்டுகள் கழித்து அவனே இறங்கி வந்து எனது அம்மாவிடமும் என்னிடமும் எங்களின் கல்லூரித் தோழியின் திருமணத்தின்போது பேச, எங்களது நட்பு புதுப்பிக்கப்பட்டது.மீனாட்சியைப் பற்றி நான் அவனிடம் சொல்ல, உடனே அவன் தனது குருமார்களான பாட்டு சித்தர் மற்றும் இசக்கி சித்தரின் 'வாசியோக' வகுப்புகளுக்கு என்னை வரும்படி கூறியிருந்தான். "உனக்கு அவர்கள் குரு என்றால் என்னை எதற்கு அவர்களைப் பின்பற்ற சொல்கிறாய்?" என்று கேட்டுவிட்டு வேண்டா வெறுப்பாகத்தான் ரேவதியையும், மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு சித்தர்கள் இருவரையும் சந்திக்கச் சென்றேன். தொடர்ந்து அவர்களுடைய வகுப்புகளில் என்னதான் சொல்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நான் மட்டும் சென்று அமர்ந்தேன்.அங்கே வருபவர்களை பற்றி பாட்டு சித்தர் சொல்லும்போது "விட்டகுறை தொட்ட குறை"பற்றித் தான் முதலில் குறிப்பிட்டார். அதாவது முற்பிறவியில் ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் தான் இங்கே வாசியோகம் கற்க வருகிறார்கள் என்றே தனது பேச்சைத் தொடங்கினார்.
இதில் பெரியவர் 'பாட்டு சித்தர்' நாராயணசாமி அவர்கள் சீர்காழியைச் சேர்ந்தவர்.இளையவர் இசக்கி சித்தர் கோவில்பட்டியைச் சேர்ந்த குங்ஃபூ ஆசிரியர். இருவரும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் தான். ஆனால் இருவரும் ஆன்மிக தேடல் கொண்டவர்கள். இதில் பாட்டு சித்தரின் கனவில் தோன்றிய ஐயப்பன் அவருக்கு வாசி யோகத்தை கற்பித்து அதை கோயில்பட்டியிலுள்ள எசக்கிக்கும் கற்பிக்கும்படி கட்டளையிட இவர்கள் இருவருக்குள்ளும் குரு சிஷ்யன் உறவு மலர்ந்திருக்கிறது.
அவர்களைப் பொறுத்தவரையில் 'வரவேண்டும் என்று இருப்பவர்கள் தங்களிடம் தானாகவே வந்து சேர்வார்கள் என்பதே'. இந்தக் கூற்றின்படி பார்த்தால் 'வேட்டைக்காரனாக இருந்த வால்மீகி எப்படி ராமாயணம் எழுதினார், கலிங்கப் போரில் வென்ற அசோகர் ஏன் அமைதி வழிக்குத் திரும்பினார், அரசர் சித்தார்த்தன் ஏன் கெளதம புத்தரானார் மற்றும் ஆன்மீகத்துடன் சற்றும் தொடர்பில்லாமல் இருந்த குறும்புக்கார இளைஞன் ரகு ஏன் ஒரு நாள் ஆன்மீகவாதியானான்' போன்ற விஷயங்கள் புலப்பட்டது.
'பாட்டு சித்தர்' நாராயணசாமி
முதல் வகுப்பில் 'மெய்ப்பொருள் தீட்சை' (பிரம்மோபதேசம்) வழங்கிய பாட்டு சித்தர், அடுத்தடுத்த வகுப்புகளில் 'வாசியோகம்' கற்பித்தார். 'வாசி' என்பதை திருப்பிப் போட்டால் 'சிவா' என்று வரும். சிவனே சொல்லிக்கொடுத்த யோகம் என்று சொல்வார்கள். இதிலிருந்துதான் 'க்ரியா' முதலிய யோக முறைகள் தோன்றியதாகச் சொல்கிறார்கள். பழகும் யோக முறைகள் வெவ்வேறாக இருப்பினும் அனைத்தின் நோக்கமும் இறைவனை அடைவது தான். நான் தெரிந்து கொண்டவரையில் தொழில்முறை யோகா மாஸ்டர்கள் 'பிராணாயாமம்' போன்ற பயிற்சிகளைக் கற்பிக்கிறார்கள். ஆனால் சித்தர்கள் மூலம் தெரிந்து கொள்வது முற்றிலும் மாறுபட்டது. முன்பு இதைத் தான் குருகுலத்தில் தங்கி சீடர்கள் குருவிற்குப் பல காலம் பணிவிடை செய்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
எதற்காக பணிவிடை செய்ய வேண்டும்? முதலில் 'தான்' என்ற அகந்தையை விட்டால் தான் தன்னைப் புரிந்து கொள்ளமுடியும், பிறரைப் புரிந்து கொள்ள முடியும், இறுதியில் இப்பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ள முடியும்'.அதற்கே இப்பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள். கற்றுக்கொண்டதன் இறுதி வடிவம் தான் 'ஞானமடைவது'. யோகக் கலையைப் பயிற்சி செய்பவனே 'யோகி'. யோகத்தின் மூலம் பலனை முழுவதுமாக அடைந்தவனே 'ஞானி', 'சித்தன்'. யோகத்திற்கும், தியானத்திற்கும் மந்திரம், எந்திரம், தந்திரம் என்ற மூன்றுமே அதி முக்கியம்.
1).மந்திரம்: உச்சரிக்க வேண்டிய மந்திரம்!
மந்திரத்தை சொல்லும் விதம் மிக மிக முக்கியம்.சரியான உச்சரிப்புடன் அடிவயிற்றிலிருந்து,நெஞ்சிலிருந்து,நாவிலிலிருந்துயென சொல்வது உடலில் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தவல்லது.
2). எந்திரம்: உங்களுடன் உடல் தான் அது.
உடலை தயார்படுத்திக் கொள்ளாமல் நாம் மனதை தயார்படுத்தக் கொள்ள முடியாது. சரியான உணவுக் கட்டுப்பாடுகளுடன் வெறும் வயிறு, செரிமானம் ஆனபிறகென்று சரியான நேரத்தில் சரியான விஷயத்தை குருவின் வழிகாட்டுதலோடு செய்யவேண்டும்.
3).தந்திரம்: செய்யும் முறை!
நீங்கள் பின்பற்றும் ஆசனம் மற்றும் முத்திரைகளுக்கு நிறையப் பலனுண்டு.
யோகப் பயிற்சியின் மூலம் எவ்வளவுக்கெவ்வளவு நாம் வெளிவிடும் கரியமில வாயுவின் அளவைக் (கார்பன் டை ஆக்சைடு) குறைத்துக்கொண்டே வருகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமது ஆயுள் பெருகும் என்கிறார்கள். இதன் மூலம் மரணத்தை வெல்லலாம் என்பதைக் குறிக்கவே வாசியோகத்தை 'சாகாக் கலை' என்று குறிப்பிடுகிறார்கள்.
'நாம் முன்பு பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வதை இங்கே பொருத்திப் பார்த்தால் மரணம் வரும் நேரத்தில் இதுபோன்ற உயிர்களும் உடலைவிட்டு நிச்சயம் நீங்கும்.ஆனால் அந்த உயிர் அழியாது 'ஞானத்தோடு' (enlightened soul) இருக்கும்.மேலும் தேவைப்படும்போது நோக்கம் புரிந்தே பிறப்பெடுக்கும் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். நோக்கம் தெரியாது பிறந்தவர்கள் தான் யார், தனக்கு எது வரும்,எது வராது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு போய்ச் சேர்கிறார்கள்' என்பது அடியேனின் கருத்து.
இதில் பெரியவர் பாட்டு சித்தர் நிறைய ஆன்மிக நூல்களை எழுதி வருகிறார். அவை எல்லாமே அவருக்கு காகபுஜண்டர் போன்ற சித்தர்கள் கனவில் சொல்லும் விஷயங்கள் தானாம்! 'சாகாக் கலை'யைப் பற்றி பாட்டு சித்தர் குறிப்பிடுகையில், "சாதாரணமாகப் பிறந்து, வளர்ந்து,கல்வி கற்ற ஒருவன் இறந்து போனால், அவன் அடுத்த பிறவியில் மீண்டும் பிறந்து, முதலில் இருந்து தான் அனைத்தையும் கற்றாக வேண்டும்.ஆனால் சித்தர் கல்வியைக் கற்று உடலிலுள்ள 35000 நாடி நரம்புகளை சுத்தப்படுத்திய ஒரு யோகி இறக்க நேர்ந்தால், மறுபிறவியில் அவருடைய வாழ்க்கை அதே 35000 நாடி நரம்புகளிலிருந்து தான் தொடங்குகிறது. இப்பிறவியில் அவருடைய வாழ்க்கை முற்பிறவியில் அவர் விட்ட இடத்திலிருந்தே தொடங்கும் "என்கிறார்.இன்றைய நவீன மருத்துவர்கள் குறிப்பிடும் 'செல்லுலர் மெமரி' (cellular memory) இதுவே என்று எனக்குத் தோன்றுகிறது. தாய், தந்தை மற்றும் இருவீட்டுக் குடும்பத்தாரின் மூலம் கிடைக்கும் 'ஜெனிடிக் மெமரியைத் (மரபு வழி அறிவு) தாண்டி சில தனித்துவமான முற்றிலும் வேறுபட்ட குறிப்பிடத் தகுந்த குணாதிசயங்களை உள்ளடக்கியதாகவே 'செல்லுலர் மெமரி' அமைந்துள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. அதாவது மூளையைத் தாண்டி இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், இரத்தம், நுரையீரல்யென பிற உறுப்புகளிலும் நினைவுகளை செல்களில் சேர்த்து வைக்க முடியும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு திரைப்படத்தில் கதாநாயகி இறந்துவிட்டால் அவளுடைய இருதயம் வேறு பெண்ணுக்கு பொருத்தப்படும் போது அந்தப் பெண்ணுக்கு இயல்பாகவே கதாநாயகன் மேல் காதல் வருவதாக காட்டுவார்களே?அதே தான்!
ஒரு யோகியின் சுயசரிதம்: இதே வேளையில், நான் படிக்கத் தொடங்கிய பரமஹம்ச யோகானந்தர் என்ற பிரபல யோகி எழுதிய 'ஒரு யோகியின் சுயசரிதம்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்படும் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த 'மகா அவதார் பாபாஜி' (இவரின் இயற்பெயர் நாகராஜன்.சொந்த ஊர் பரங்கிப்பேட்டை,போகரின் சீடர் என்று சொல்லப்படுகிறார்) என்ற யோகி இமயமலையின் இந்திய-திபெத் எல்லைப் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த புத்தகம் வெளிவந்த நேரம்வரை பலருக்கு 'ஆன்ம சொரூபமாக' (அதாவது முழு மனித உருவமாக ஒருசிலரின் கண்களுக்கு மட்டும் தென் பட்டிருக்கிறார்.மன்ரோவின் கண்களுக்கு மட்டும் ராகவேந்திரர் புலப்பட்டது போல்!) காட்சி அளித்திருக்கிறார். அவர் 'க்ரியா' யோகம் பழகியதாகச் சொல்கிறார்கள். அதையே தனது சீடர்களுக்கும் கற்பித்திருக்கிறார்.
இந்த புத்தகத்தை எழுதிய சுவாமி யோகானந்தர் முதல் பக்கத்திலேயே தனது சிறுவயது பற்றி குறிப்பிடும்போது தனக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் அதிகம் இருந்தது பற்றியும் முன்பின் அறியாத பல மொழிகள் அவருடைய காதுகளில் மட்டும் கேட்கும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லாம் தெரிந்த ஒரு யோகியின் மனது, சிறு குழந்தையின் உடல் இரண்டுக்கும் இடையே நடந்த போராட்டமாக தனது குழந்தைப் பருவம் அமைந்ததாகச் சொல்கிறார்.அதாவது முற்பிறவியில் ஒரு யோகியாகப் பிறந்த பரமஹம்ச யோகானந்தர் அதன் தொடர்ச்சியாக இப்பிறவியில் குழந்தைப்பருவம் தொட்டு ஆன்மிகத்தின்பால் இழுக்கப் பட்டுள்ளார். இது பிறவியிலேயே பேரறிவுடன் பிறப்பதுபோல் (congenital savant). இதில் குறிப்பிடப்படும் பெரும்பாலான யோகிகள் சாதாரண மனிதர்களாக இருந்து திடீரென உள்மனதின் உந்துதலால் யோகத்திலும் தியானத்திலும் நாட்டம்கொண்டு ஆன்மிகத்தின்பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் 'விபத்தால் ஞானியானவர்'களைப் போல் (accidental savants). இன்னும் இந்த புத்தகத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம், 'க்ரியா' யோகமானது ஒருவரிலிருந்து அடுத்தவருக்கு ' டெலிபதி மூலம்' உள்மனதின் வழியாகவே சூட்சுமமாக (ஆன்ம சொரூபத்தில் ) கற்பிக்கப்பட்டிருக்கிறது. குருவும் சிஷ்யனும் வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்தவர்களாகக்கூட இருந்திருக்கிறார்கள் .
ஆப்பிள் நிறுவன அதிபர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி, நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (இந்த புத்தகம் உந்தியதன் காரணமாகவே 'பாபா' என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார்) மற்றும் பிரபல பீட்டில்ஸ் இசைக்குழுவின் ஜார்ஜ் ஹேரிசன் போன்றவர்களுக்கும் இது மிகவும் பிடித்தமான புத்தகமாக இருந்து வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது: யோகாவைத் தவிர தியானத்தையும் சேர்த்துப் பழகும்படி பாட்டு சித்தர் கற்பிக்கிறார். மேலும் இவ்வுலகம் பஞ்சபூதங்களைக் கொண்டிருப்பது போல் நமது உடலிலும் பஞ்சபூதங்கள் ('ஸ்தூல' பஞ்சாட்சரம்) உள்ளதைச் சொன்னார். இந்தப் பஞ்சபூதங்களில் நீரும் நிலமும் நமது உடலில் எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் இங்கே முக்கியமாகத் தெரிந்து கொள்வோம். இதையே தான் சித்தர்கள் "அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது" என்கிறார்கள். நாம் நம்மைப் புரிந்து கொள்ள முயற்சித்தால் கிட்டத்தட்ட இவ்வுலகையும் ஏன் பிரபஞ்சத்தையுமே புரிந்துகொள்ளமுடியும் என்பதே இதன் தத்துவம்.இதில் சித்தர்கள் வழிபடும் முதன்மையான தெய்வம் 'வாலைத்தாய்' யார் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment