"தனி மனிதர்களின் சிந்தனை அவர்கள் மூளை + மத்திய நரம்பு மண்டலத்தின் (தண்டுவடம்) அமைப்பு மற்றும் அதில் உள்ள திரவங்களின் அளவைப் பொருத்து முற்றிலும் மாறுபடுகிறது" என்று சொன்னால் எனது கருத்தை அறிவியல் உலகம் நிச்சயம் ஏற்கும்.
வாலை (எ) உச்சி நீரைப் (cerebrospinal fluid) பற்றி எனக்குத் தெரிந்த சில மருத்துவப் பேராசிரியர்களிடம் நான் பேசியதில் எனக்குக் கிடைத்த பதில் "இது மூளையில் உள்ள உச்சிக் குழிகளில் தோன்றி, மூளையின் உட்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் பரவி அது மூளையை ஒரு 'குஷன்'போல் பாதுகாக்கிறது" என்ற பதிலோடு நின்றுவிட்டது.
எனக்குக் கிடைத்த பதில் போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் மேற்கொண்டு இணையத்தில் தேடிய பொழுது ஹார்வர்டு மருத்துவ ஆராய்ச்சியாளர், நரம்பியல் நிபுணர்,பேராசிரியர் மருத்துவர், மற்றும் ரேக்கி போன்ற மாற்று மருத்துவ முறைகளையும் கற்றுத்தேர்ந்தவரான டாக்டர்.மாரோ சாப்படெராவின் காணொளியைப் கண்டபோது நான் தேடிய பல விஷயங்களுக்கு விடை கிடைத்தது. அவர் மூளையைப் பற்றியும், மூளை நீரைப் பற்றியும், சித்தர்கள் சொன்ன 'குண்டலினி எழுச்சி'பற்றியும் தெளிவாக அறிவியல்பூர்வமாக விளக்குகிறார்.
அதாவது கரு உருவாகும் போது தாயின் பனிக் குடத்திலுள்ள நீரானது (amniotic fluid -இது உயிர்கள் உருவாகக் காரணமாக அமைந்த கடல் நீரிலிருந்து வெறும் ஒரு மூலக்கூறு தான் மாறுபட்டுள்ளது என்கிறார்!) கரு உருவாகத் தொடங்கும்போது மெல்லிய கம்பிபோல் வளரும் முதுகுத்தண்டால் மூடப்பட்டு மனித உடலில் வாலை நீராக (CSF-Cerebrospinal Fluid) மாறுகிறது என்கிறார். இதுவே 'நான்' என்ற உணர்வை ஒரு தனி மனிதனுக்குத் தருகிறது.
மூன்றாவது உச்சிக்குழியில் பிட்டியூட்டரி மற்றும் பயனியல் (ஆனந்த) சுரப்பி வெளியிடும் ஹார்மோன்களுடன் இந்நீர் (வாலை) சேர்ந்து நான்காவது உச்சிக் குழிக்கு வருகிறது. இங்கிருந்து மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது ஹார்மோன்களுடன் செறிவூட்டப்பட்ட உச்சிநீரின் ஒரு பகுதி மூளைக்கே மேல்நோக்கிய திருப்பி விடப்படுகிறது. மற்றொரு பகுதி முதுகுத்தண்டை சென்றடைகிறது. சராசரியாக ஒவ்வொரு மனிதனுக்கும் தினசரி குறைந்தபட்சம் அரை லிட்டர் அளவு இந்நீர் சுரக்கும் என்கிறார். மிகுதியான நீரானது நமது உடலால் உறிஞ்சப்பட்டு சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்பட்டுவிடும் என்கிறார்.
குண்டலினி' சக்தி: அவர் இதை விட முக்கியமாகச் சொல்லும் விஷயம் எனக்கு சித்தர்கள் சொன்ன விஷயத்தை முழுவதுமாக ஒத்திருக்கிறது. அதாவது முதுகுத் தண்டின் அடிப்பகுதியிலுள்ள முக்கோண எலும்பிற்கும் (sacrum-'புனித எலும்பு' என்பார்கள்) குதத்திற்கும் (anus) இடைப்பட்ட மிக நுண்ணிய ஒரு பகுதியில் தான் 'உயிர்' இருக்கிறது என்கிறார். இதையே சித்தர்கள் 'தனஞ்ஜெயம்' என்ற உயிர்க்காற்று என்பார்கள்.
அதாவது தாயின் தொப்புள் கொடி அறுபடும் போது அந்த உயிர் காற்றானது குழந்தையின் முதுகுத் தண்டின் அடியில் சென்று உட்கார்ந்து கொண்டு விடுகிறது என்று சித்தர்கள் சொல்கிறார்கள். இந்தக் காற்றை 'வாசி' போன்ற யோகங்களின் மூலம் படிப்படியாக மேலெழுப்பி; அதேவேளையில் பிட்டியூட்டரி மற்றும் பயனியல்(ஆனந்த) சுரப்பியை தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளின் மூலம் செரிவூட்டி மூன்றாவது உச்சிக்குழியில் (இதையே 'ஆக்ஞசக்கரம்' என்கிறார்கள்.'நெற்றிக்கண்' என்று குறிப்பிடப்படுவதும் இந்த இடமே!) கொண்டுவந்து நிறுத்தினால் 'தனஞ்ஜெயம்' என்ற அந்தக் காற்று 'குண்டலினி' சக்தியாக மாறும் என்கிறார்கள். இதையேதான் மருத்துவர் டாக்டர்.மாரோ சாப்படெராவும் வழிமொழிகிறார்.
ஆனால் சிலரோ 'குண்டலினி சக்தி' என்பது விந்தை தலையில் ஏற்றி வைப்பது என்று தவறாகச் சொல்கிறார்கள். அப்படியானால் பெண்களால் எப்படி ஞானம் அடைய முடியும்? இதை இப்படி வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம்! பொதுவாக யோகிகள் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கும் போது 'தனஞ்ஜெயம்' என்ற உயிர்க் காற்றை முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றத் தேவையான உந்து சக்தியை விந்து தரலாம்.வாலையில்(CSF-Cerebrospinal fluid) நீந்தி முதுகுத்தண்டைக் கடந்து மூன்றாவது உச்சிக் குழியை வந்தடைகிறது.
உங்கள் நெற்றிப் பொட்டிலிருந்து நேராக ஒரு கம்பியை உள்ளே செலுத்தி விட்டு, உங்கள் காதுகளில் வழியாக மற்றொரு கம்பியைச் செலுத்தினால், இந்த இரண்டு கம்பிகளும் சந்திக்கும் இடம் தான் மூன்றாவது உச்சிக்குழி அமைந்துள்ள 'மூன்றாவது கண்' பகுதி. அதுவே 'கண்ணாடி மாளிகை', 'கடவுள் இருக்கும் இடம்', 'புருவமத்தி', 'ஆக்ஞ சக்கரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
கவனத்திற்கு:
- 'வெள்ளி நாண் (silver chord) அவிழும் முன் படைத்தவனை நினை' என பைபிள் பழைய ஏற்பாட்டில் (Ecclesiasted 12:6-7) குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 'வெள்ளி நாண்'(கயிறு) முதுகுத் தண்டையே குறிக்கிறது.பெரிதாக இறை நம்பிக்கை இல்லாத கல்வியாளரும் அறிஞருமான 99 வயதைக் கடந்த எனது தாத்தா சில ஆண்டுகளுக்கு முன்பு இறக்கும் தருவாயில் "நான் என்னைப் படைத்தவனிடம் செல்ல விரும்புகிறேன்"என்று கூறியதோடு, பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தாய், தந்தை போன்றோர் தன் கண்முன் தோன்றி 'நீ இங்கே வர வேண்டாம். அங்கேயே இரு!' என்று கூறியதாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது. இதை ஆமோதிக்கும் வகையில் சமீபத்தில் லூயிஸ்வில்லே பல்கலைக் கழகத்தின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர்.அஜ்மல் ஸிம்மர் சொல்கிறார் 'உயிர் உடலை விட்டு நீங்குவதற்கு 30 நொடிகள் முன்பிலிருந்து இதயம் நின்ற 30 நொடிகளுக்குப் பின்வரை மூளை கடந்தகால இனிய நினைவுகளையெல்லாம் flashback போல் அசைபோட்டுப் பார்க்கிறது'.
- அதேபோல் 18ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த சூஃபி ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடல் "சூத்திரப் பாவை கயிரற்று வீழுமுன் சூட்சுமக் கயிற்றினைப் பாரடா- அதி சூட்சும கயிற்றினைப் பாரடா!" என்ற பாடலில் குறிப்பிடப்படும் 'கயிறு' முதுகுத்தண்டு தான் என உணர்கிறேன்.
No comments:
Post a Comment