இந்த இடைப்பட்ட வேளையில், மீனாட்சிக்கு நடந்த நல்ல மாற்றங்கள் அனைத்தும் நாங்கள் ஆற் காட்டிற்குச் சென்று திப்பு மஸ்தான் அவ்லியாவை தரிசித்து வந்தபின் தான் என்று எனக்கு திடீரென ஒருநாள் தோன்றவே, ஆற்காட்டிலிருந்து என்னிடம் புரொக்கிராமராக வேலை செய்பவரை அழைத்து தர்கா நிர்வாகியிடம் பேசி அவரது அலைபேசியெண்ணை வாங்கத் தரச் சொன்னேன்.
இப்படியெல்லாம் உண்மையாகவே நம்மைச் சுற்றி நடக்கிறதாயென்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.ஆம்! உண்மை தான். இவற்றையெல்லாம் அறியாது சாமானியர்கள் இருக்கும் உலகமே மாயை என்றுணர்கிறேன் நான்!
அந்தப் பெண்மணி சொல்கிறார் "அவ எங்க 'தாதா' கூட பேசுறா! தொந்தரவு செய்யாதேப்பா. எங்க தாதாவுக்கு குழந்தைகள்னா உசிரு. அவர் வாழ்ந்த காலத்துல (17-18ஆம் நூற்றாண்டு!) அவர பாக்க வர்றவங்க கடலை மிட்டாயும் ரொட்டியும் அவருக்குக் குடுப்பாங்க.அவர் அத சாப்புடாம தெருவுல விளையாடுற குழந்தைகளைக் கூப்பிட்டு கொடுத்துட்டு காட்டுக்குள்ள போயிடுவாரு"என்றார்.
துறவி திப்பு மஸ்தான் அவ்லியாவைப் பற்றி நான் படித்தது: திப்பு மஸ்தானும் அவருடைய சகோதரர்கள் தாவகல் மஸ்தான் மற்றும் மாணிக் மஸ்தான் ஆகியோர் (இன்றைய கர்நாடக மாநிலத்தின்) பீஜப்பூரிலிருந்து வந்தவர்கள்.மூவருமே சூஃபிக்கள்.மற்ற இருவரும் பெங்களூரில் தங்கிவிட திப்பு மஸ்தான் மட்டும் ஆற்காட்டிலேயே பெரும்பாலும் இருந்திருக்கிறார் (தாவகல் மஸ்தானின் தர்கா பெங்களூர் கே.ஆர் மார்க்கெட்டிலும், மாணிக் மஸ்தானின் தர்கா காட்டன் பேட்டிலும் அமைந்துள்ளது.இவை இரண்டுமே அனைத்து மதத்தினரும் வந்துசெல்லும் பிரபல வழிபாட்டுத் தலங்களாகும்).
திப்பு மஸ்தான் பெரும்பாலும் மனிதர்களைக் கண்டால் அவர்களுடன் பேசுவதை தவிர்த்து விடுவாராம். மரங்களில் இருக்கும் பறவைகளுடனும் காட்டில் இருக்கும் புலி போன்ற கொடிய விலங்குகளுடன் பேசி மகிழ்வாராம். அப்போது அவ்வழியே மனிதர்கள் தென்பட்டால் தனது பேச்சை நிறுத்திக் கொள்வாராம். பறவைகளும் விலங்குகளும்கூட உடனே கலைந்து சென்று விடுமாம். வழிப் போக்கர்கள் சென்ற பின்பு மீண்டும் திரும்பி வந்துவிடுமாம்!
இதைப்பற்றி ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட எனது உறவினர் ஒருவரிடம் தொலைபேசியில் கூறினேன். இதைக் கேட்ட அவர் மகான்களின் சமாதி உள்ள இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம்தான் என்றும், இதே போல் 'மெட்ராஸ் கெஸட்டில்' (Madras Government Gazette,Chapter XI, page 213, with the caption “Manchali Adoni Taluka”) பதிவாகி இன்றும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும், மந்திராலயத்திலும் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு கோப்பைப் பற்றி கூறினார். அதாவது திப்புசுல்தான் 1799ல் போரில் கொல்லப்பட்ட பிறகு மைசூரின் பல பகுதிகளை அன்றைய ஈஸ்ட் இந்தியா கம்பெனி கையகப்படுத்திக் கொண்டது.1800ல் அப்பொழுது மைசூரிலிருந்து சேர்த்துக் கொள்ளப்பட்ட பெல்லாரி பகுதியின் கலெக்டராக இருந்த தாமஸ் மன்ரோவை (பின்னாளில் சென்னை மாகாண கவர்னராக 'சர் தாமஸ் மன்ரோ' என்று அறியப்பட்டார்! மன்ரோ சிலை சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று!) அதோனி பகுதிக்குட்பட்ட ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ள 'மந்த்ராலயம்' சென்று அதன் நில உரிமை குறித்த ஆவணங்களை விசாரித்துவிட்டு, அப்படி ஆவணங்கள் சரியில்லாதபட்சத்தில் அன்றைய ஆங்கிலேயரின் 'ராயத்துவாரி' சட்டத்தின்படி மடத்தையும் அதன் சொத்துக்களையும் பறிமுதல் செய்து கொள்ளலாம் என்ற முடிவுடன் மன்ரோ அனுப்பி வைக்கப்படுகிறார். 'மடம்' என்ற காரணத்தால் தனது ஷு மற்றும் தொப்பியை கழற்றி விட்டு மன்ரோ உள்ளே பயபக்தியோடு சென்றிருக்கிறார். மடத்தின் உள்ளே அமர்ந்திருந்த பெரியவர் மன்ரோ கேட்ட கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் கூறியதுடன் அவருக்குத் தேவையான ஆவணங்களையும் காட்டியிருக்கிறார்.அதாவது 17 ஆம் நூற்றாண்டில் அந்தப் பகுதியை ஆண்டு வந்த அதோனி நவாப் கொடையாக வழங்கிய மாஞ்சாலை கிராமம்தான் 'மந்த்ராலயம்' அமைந்துள்ள இடம் என்பதைப் புரியவைத்து, மன்ரோவை ஆசீர்வதித்து அட்சதையும் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அந்தப் பெரியவர். அந்த இடத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை என்பதால் 'மந்த்ராலயம் எந்த இடையூறுமின்றி செயல்படலாம்' என்று அரசாணை வெளியிட்டிருக்கிறார் மன்ரோ. பின்னர் தெரிய வந்த விஷயம் என்னவென்றால், மன்ரோ சந்தித்துப் பேசிய அந்த நபர் வேறு யாருமல்ல! இந்த சம்பவம் நடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே பிருந்தாவனத்தில் ஜீவ சமாதியான சுவாமி ராகவேந்திரர் தான் அது. அன்று சுவாமி ராகவேந்திரர் காட்சியளித்தது,பேசியது மன்ரோவின் கண்களுக்கு மட்டுமே தெரிந்ததாகச் சொல்கிறார்கள். இதை நான் படித்த சில நாட்களிலேயே மன்ரோவின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து 'மந்திராலயம்' சென்று வழிபட்ட செய்தியை இணையத்தில் படித்தேன்.
No comments:
Post a Comment