Thursday, December 17, 2020

15. பின் நோக்கிப் பாயும் அறிவு முன்னோக்கியும் பாயும்

மீனாட்சி போல் ஹைபர்லெக்சியாவுடன் சவான்ட்சின்ட்ரோமும் உள்ள சில குழந்தைகளிடம் நான் பார்த்து வியந்த குணாதிசயங்கள்: 

  • கற்காமலேயே முன்பின் அறிமுகமில்லாத அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருக்கிறார்கள். 
  • மேலும் இக்குழந்தைகளுக்கு கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என முக்காலமும் தெரிந்திருக்கிறது (extrasensory perception).
  • 'டெலிபதி': நுண்ணுணர்வு/உள்ளுணர்வு மூலம் பிறர் மனதை அறிவது. மேற்கண்ட இந்த முக்கிய குணாதிசயங்கள் தான் 'சவான்ட்சின்ட்ரோம்' உள்ள குழந்தைகளை வெறும் 'ஹைபர்லெக்சியா' (கற்க்காமல் எழுதப் படிக்கத் தெரிவது) மட்டுமேயுள்ள குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அதிலும் மேலே குறிப்பிட்டதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குணாதிசயங்கள் அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது. 

உதாரணம்#1: சிறுநீரக பாதிப்புள்ள எனது தந்தைக்கு சில சமயங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு/ சில மணிநேரங்களுக்கு முன்பிருந்தே மீனாட்சியின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக காணப்படும். சில முறை அவள் புரியவைக்க முயற்சித்த விஷயங்களை நாங்கள்தான் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம். நீங்கள் கேட்கலாம் "அவளுக்குத்தான் எழுதத் தெரியுமே? உங்கள் கைகளை பிடித்து எழுதிக் காட்ட வேண்டியதுதானே?" என்று. இதற்கு என் பதில் "அங்குதான் பிரச்சினையே! உணர்ச்சி வசப்படும் நேரங்களில் அவள் சிந்திக்க மாட்டாள்.நாம் எழுதிக் காட்டினால் மற்றவர்கள் புரிந்துகொண்டு விடுவார்கள்!"என்ற சாதாரண விஷயம் அந்த நேரத்தில் அவளுக்குத் தோன்றாது.(இது ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கும் பொருந்தும்! அவர்கள் சொல்வது நமக்குப் புரியாவிட்டாலோ, நாம் சொல்வது அவர்களுக்கு புரியாவிட்டாலோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள்!) நாம் எழுத சொல்லி வற்புறுத்தினால் அழத் தொடங்கிவிடுவாள்.

கிட்டத்தட்ட எல்லாம் தெரிந்தும் அதை வெளிக்காட்டாமுடியாமல் இருப்பது, 'எதுவுமே தெரியாது' என்ற நிலைக்கு ஒப்பானது தான். நான் இதை கீழ்க்கண்டவாறு விளக்க விரும்புகிறேன்: 'எதுவுமே தெரியாது' (முட்டாள்) 'எல்லாமே தெரியும்' (அறிஞன்) என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட தூரம் மிகக்குறைவே.நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், இது ஒரு கடிகாரத்தின் சூழற்ச்சி போல் முழு சுற்று சுற்ற வேண்டுமென்று.ஆனால் எனக்குத் தோன்றுகிறது கடிகார முள் எதிர்திசையில் ஒரே ஒரு அங்குலம் நகர்ந்தாலே அது மிகப் பெரிய மாறுதலை‌ உண்டாக்குமென்று.


அதுபோல்தான் இதுவும். 'ஆம்', 'இல்லை' என்ற நிலைகளுக்குள் நிகழும் மாற்றம். மிகுந்த அறிவு கொண்டவர்கள் திடீரென மனநல பாதிப்புக்கு உள்ளாவதும், 'ஒன்றுமே தெரியாது' என நாம் சிலரைப் பற்றி நினைக்கும் போது அவர்கள் அனைத்தும் அறிந்தவர்களாக இருப்பது என  முரண்பட்ட இரண்டு விஷயங்களுக்குள்ள தொலைவு மிக மிகக் குறைவே எனத் தோன்றுகிறது. 

உதாரணம்#2:அதேபோல் அவளது பன்மொழித் திறமையை சோதிக்க நினைத்த நான் வீட்டில் அவள் அதிகம் எழுத ஒத்துழைக்காத காரணத்தால் அவளது ரைட்டிங் கிளாஸ் எடுக்கும் தெரப்பிஸ்டிடம் அவளுக்கு என்னென்ன மொழிகள் தெரியுமென்று சோதிக்கும்படி கேட்டிருந்தேன்.தெரப்பிஸ்டின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதத் தொடங்கிய மீனாட்சி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஐரிஷ் (உலகின் மிக வேகமாக அழிந்து வரும் மொழிகளில் ஒன்று), ஆங்கிலம் மற்றும் சைனீஸ் போன்ற மொழிகளில் ஒரு முக்கிய விஷயத்தை தனக்குப் பல மொழிகள் தெரியும் என்பதோடு சேர்த்தே வெளிக்காட்டினாள். அவள் சொன்ன விஷயம் தனக்கு வந்த கனவு என்கிறாள். அதாவது ஐஸ்வர்யா என்ற அந்த தெரபிஸ்டிற்க்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பதுதான் அந்த விஷயம் இதில் 'சப்னே' (கனவு) என்பதை மலையாளத்திலும் 'பேபி வில் கம் ஃபார் ஐஸு' என்பதை ஆங்கிலத்திலும், மேலும் பிறக்கப் போகும் குழந்தையை சீனமொழியில் "போபோ"என்றும் எழுதியிருந்தாள். அந்தந்த மொழிகளுக்குக் கீழேயே அது எந்த மொழி என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்திலும் எழுதியிருந்தாள். இதில் அவள் எழுதிய மலையாள எழுத்துக்கள் ஒரு கோணத்தில் பார்த்தால் தமிழ் எழுத்துக்கள் போல தெரிந்தது, இவளது தெலுங்கு எழுத்துக்களை டெல்லியில் உள்ள எனது அத்தை மகள் தனது அண்டை வீட்டாரிடம் கேட்க, அவர்களோ அது தெலுங்கு தான் ஆனால் இன்று வழக்கத்தில் இல்லாத எழுத்து வடிவமான கோவில் கல்வெட்டுக்களில் காணப்படும் பழைய கிரந்தத்தை ஒத்துள்ளது என்று கூறியிருக்கிறார்கள். "அவள் எழுதிய 'போபோ' சீன மொழியே இல்லை" என்றார் இதை தன்னிச்சையாக சோதித்த ஃபிரான்ஸில் இருக்கும் எனது உறவுக்கார பெண்மணி, தனது தோழியான ஒரு சீனப் பெண்ணிடம் விசாரித்துவிட்டு பதிலளித்திருந்தார். இதை நான் விரிவாக ஆராய்ந்த போது 'போபோ' என்ற அந்த வார்த்தைக்கு 'பாண்டாக் குட்டி' என்று கொச்சையாக குழந்தைகளை கொஞ்சு வதற்காக சீன தேசத்தில் வழக்கத்தில் பயன்படுத்தும் சொல் என்று அறிந்தேன். ஆனால் அவள் எழுதிய எழுத்துக்கள் சீன தேசத்தில் பயன்படுத்தும் எழுத்துக்களே அல்ல! அங்கு பயன்படுத்தப்படுவது நமது தமிழின் சீர்திருத்த எழுத்துக்களைப் போல் எளிமையாக்கப்பட்ட சீன மொழியாகும் (சிம்பிளிஃபைட் சைனீஸ்). இவள் பயன்படுத்திய எழுத்துக்கள் சீன தேசத்திற்கு வெளியே தைவான்,ஹாங்காங், மகாவா ஆகிய இடங்களில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் பண்டைய சீன எழுத்துக்களாகும் (ட்ரெடிஷனல் சைனீஸ்).என் உறவினரின் தோழி நேரடியாக சீனாவிலிருந்து வந்தவர் என்பதால் எளிய சீன எழுத்துக்களை மட்டுமே அறிந்திருக்கிறார். இதை நான் கூகுளில் கண்டுபிடித்து இரண்டு எழுத்துக்களுக்கும் உள்ள வித்தியாசங்களை அவருக்கு விளக்கினேன்.அவர் ஒப்புக் கொண்டாரா? தெரியாது! அவருக்கு இருந்ததும் ஒருவகை அக்கறை தான். நமது சந்திராயன் உண்மையிலேயே நிலவை நெருங்கியதா, அதன் தென்பகுதியில் தான் விழுந்ததா என்று நாசாவும், ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் சோதித்த அதே அக்கறை.நாம்ஆர்வக் கோளாறில் நமது உற்றார்‌ உறவினரிடம் நம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.அதை சரியாகப் புரிந்து கொள்வதும், எதிர்மறையாக செயல்படுவதும் அவர் அவர் மனநிலையைப் பொருத்தது! உங்களுக்கு அதிசயமாக தெரிந்த விஷயம் பிறருக்கு கேலிக்கூத்தாக தெரிவது இயல்புதானே?ஆனால் அதே பெண்மணியின் கனவில் இன்றும் அடிக்கடி மீனாட்சி வருவதாக அவரே கூறுகிறார். மீனாட்சியின் பள்ளி வகுப்பறை இப்படித்தான் இருக்கிறது, அங்கே ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்(சாதாரண ஒரு ஆசிரியர்+ ஒரு நிழல் ஆசிரியர்+ ஒரு உதவியாளர்) இருக்கிறார்கள் என்பது வரை அவர் கனவில் வந்ததாகச் சொல்லும் விஷயங்கள் உண்மையுடன் பொருந்திப் போகின்றன.





தான்  சொல்வது உண்மை (True) என்பதை  தமிழ்  ஆங்கிலம் சேர்த்து இறுதியாக 'Trண்மை' என்று எழுதியிருக்கிறாள். இதை எழுதியபோது மீனாட்சிக்கு  ஐந்து வயது!


ஐந்து வயது குழந்தையால்  எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கடந்தகால எழுத்துமுறையில் விளக்கமுடிகிறதென்றால் இது உண்மையில் வியப்பான விஷயம்தானே?!


(இது நடந்த ஆறு மாதங்களுக்குள் ஐஸ்வர்யா கர்ப்பமான காரணத்தால் வேலையிலிருந்து தற்காலிகமாக நின்றுகொண்டாள்.வேறு வழியில்லாமல் மீனாட்சியின் ரைட்டிங் கிளாஸும் நிறுத்தப் படவேண்டிய நிலை வந்தது!).

முக்கிய குறிப்பு: இதே ஐஸ்வர்யா, மீனாட்சியிடம் உனக்கு எத்தனைமொழிகள் தெரியும் என்று கேட்க "So many. Can't count"("நிறையத் தெரியும். எண்ணிலடங்காது)  என்று எழுதியிருக்கிறாள். "நீ அறிந்தவற்றுள் உனக்கு மிகவும் பிடித்த மொழி எது?" என்ற கேள்விக்கு ஏதோ மெத்தப் படித்த அறிஞரைப் போல் "தமிழ்" தான்! "இலக்கணம் இலக்கியம்" சிறப்பாக கொண்டுள்ளதால் காரணத்தால் என்று பொருள்படும்படி பதிலளித்துள்ளாள். மேலும் "எழில் மிகுந்த மொழி" என்று குறிப்பிட்டுள்ளாள். 


இது எழுதியபோது மீனாட்சிக்கு நாலரை வயது!

உதாரணம்#3: எனது மனைவியின் மூத்த சகோதரர் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபொழுது மீனாட்சியைப் பற்றி அவரிடம் குறிப்பிட்டேன். இதைக் கேட்ட அவர் "மாப்ளே!  எங்கிட்ட எழுதுவாளானு  தெரியல.நீங்களே அவ கையப் புடிச்சுக்கோங்க. நான் என்னைக்கு சுவிட்ஸர்லாந்து போவேன்னு அவ கிட்ட கேளுங்க!"என்றார். இது நடந்தது டிசம்பர் 2016ல். இவள் எழுதிய தேதி 'மே 5,  2017' என்று. இதைப் பார்த்த அவர் தனது மொபைலில் கேலண்டரை சென்று பார்த்தார். அவருக்கு முகமெல்லாம் வியர்த்து படபடப்பாக காணப்பட்டார் "மாப்ளே! நீங்க குழந்தைப் பற்றி கவலையே படாதீங்க!அவ பெரிய ஜீனியஸ்! என் மனைவியையும் அழைத்து "நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய நேரம் இது.எதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?"என்றார். அவர் மேலும் சொன்னார் "நான் மே முதல்வாரத்தில் வெளிநாடு செல்வேனென்று தெரியுமே ஒழிய, தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் எங்கள் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் வாரத்தின் இறுதி வேலை நாட்களில் தான் அதாவது வெள்ளிக் கிழமைகளில் தான் 'ஆன்சைட்' அனுப்புவார்கள். மீனாட்சி குறிப்பிட்டுள்ள தேதி வெள்ளிக்கிழமையாகத் தான் வருகிறது. அப்படியானால் எனக்கே தெரியாத நிலையில் நான் ஊருக்கு செல்லும் நாளை அவள் எப்படித் தெரிந்து வைத்திருக்கிறாள் பாருங்கள்!"என்றார்.

உதாரணம்#4: ஒருமுறை அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது மாமாவிடம் மீனாட்சியின் கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி உங்களுடைய அலைபேசி எண்ணைக் கேளுங்கள் எழுதுவாள் என்றேன். அவரிடம் அழகாக ஒத்துழைத்த மீனாட்சி அவருடைய பத்து இலக்க அமெரிக்க அலைபேசி எண்ணை அவருக்கே எழுதிக் காட்டினாள் (அவள் எழுதியதைப் பார்த்தால் அவரது கையை தொட்டதால் அவரது உணர்வுகளை புரிந்து கொண்டது போல் இல்லை! தனக்கு முன்பே தெரிந்த விஷயத்தை ஆர்வமாக எழுதுவது போல் நடந்து கொண்டாள்). இது தவிர அவரது மகள் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும்பொழுது அமெரிக்காவின் பிரபல போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருந்தாள். நான் "சந்தியா எந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்?" என்று மீனாட்சியிடம் வினவினேன். இவள் உடனே 'Lockheed Martin' (லாக்ஹீட் மார்ட்டின்) என்று ஆங்கிலத்தில் தொடங்கி கடைசி எழுத்து 'ன்'னை மட்டும் தமிழில் எழுதிக் காட்டினாள். இன்று அவளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் வேலை கிடைத்தாலும் அவள் வேலைக்கு சேர்ந்தது என்னவோ லாக்ஹீட் மார்டினில் தான். 

உதாரணம்#5: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒரு விஷயம்!

அப்பொழுது எனது மனைவி கருத்தடை மாத்திரை உட்கொண்டதையும் மீறி கருவுற்றிருந்தாள். இதில் ஆபத்து அதிகம் என்ற காரணத்தால் மருத்துவரின் பரிந்துரைப்படி 38 நாள் கருவை மாத்திரை மூலம் கலைக்க முடிவு செய்திருந்தோம். குறிப்பிட்ட நாளில் கருக்கலைப்பு மாத்திரையை எனது மனைவி உட்கொண்ட அந்த சமயத்தில் கையில் ஒரு கைக்குட்டையை எடுத்துக் கொண்ட மீனாட்சி பூஜை அறையில் போய் உட்கார்ந்து கொண்டாள். ஒரு மணிநேரத்தில் கரு கலையத்
தொடங்கியது. சரியாக கரு கலைந்துவிட்டது என்று தெரிந்த அந்த நேரம் பூஜை அறையை விட்டு வெளியே வந்த மீனாட்சி தனது அம்மா ரேவதியின் மணிக்கட்டை கடிக்கத் தொடங்கினாள்.இதனால் மீனாட்சியின் பற்கள்பட்டு ரேவதியின் கைகள் முழுவதும் புண்ணாக்த் தொடங்கியது. இது கிட்டத்தட்ட 2 வாரங்கள் நீடித்தது. 'மீனாட்சிக்கு புதிதாக மனநல பாதிப்பும் ஏதேனும் சேர்ந்துவிட்டதோ?' என்று நாங்கள் அஞ்சத் தொடங்கினோம். அந்த சமயத்தில் ரேவதி ஓய்வில் இருக்க, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு நான் மட்டுமே மீனாட்சியை தெரப்பி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று வந்தேன். ஒருமாத காலம் கழித்து ரேவதி சற்று உடல் நலம் தேறியவுடன் அவளே அழைத்துச் செல்ல தொடங்கினாள். அவளை வெகு நாட்கள் கழித்து பார்த்த அந்த தெரப்பி சென்டர் நிர்வாகி "ரேவதி! உங்களுக்கு கருக்கலைப்பு ஏதேனும் நிகழ்ந்ததாயென்று கேட்க?". ரேவதிக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. அவர் மேலும் கூறியதாவது "உங்கள் மகள் உங்கள் மீதும் உங்கள் கணவரின் மீதும் மிகுந்த கோபத்தில் இருப்பதாக என்னிடம் எழுதிக் காட்டினாள். மேலும் "நன்றாகத்தானே இருந்தான் எனது தம்பி? (எனது கருத்து: 38 நாள் கரு ஆணா பெண்ணா என்று மருத்துவர்களாலேயே  கணிக்க முடியாதே!) பிறகு ஏன் அவனை அழித்தார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்" என்று ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறாள். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில்தான் கருக்கலைப்பு நடந்ததாக மீனாட்சியிடம் நாங்கள் வாய்மொழியாக எடுத்துச் சொன்னோம். பெரிய விஷயத்தை தானாகவே புரிந்து கொண்ட மீனாட்சிக்கு நாங்கள் சொன்னது புரிந்ததா என்று தெரியாது‌. ஆனால் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து எந்த பொம்மைக் கடைக்குச் சென்றாலும், அங்கே ஒரு தவழும் சிறுவனின் பொம்மையோ அல்லது பால்புட்டியுடனிருக்கும் ஒரு சிறுவனின் பொம்மையைக் கண்டாலோ மீனாட்சி  முதலில் அதைத் தான் எடுப்பாள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்  இன்றுவரை மீனாட்சி அவளது விரல்களைப் பிடித்துக் கொண்டால் மட்டுமே எழுதுகிறாள். எல்லோரிடமும் எழுதுவதில்லை. பள்ளியிலும்  தெரப்பி கிளாஸ்களிலும் அழகாக ஒத்துழைக்கிறாள்.பள்ளியில் தற்போது நிழல் ஆசிரியையின் (shadow teacher) உதவியுடன் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் (இது ஒரு இன்க்ளூஷன் பள்ளி. சிறப்பு பள்ளி அல்ல!) பயிலும் மீனாட்சி, அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதுடன் வியக்கத் தகுந்த வகையில் அனைவரையும் விடவும் மிக விரைவாகவே தேர்வுகளை எழுதுகிறாள் என்கிறார்கள். பெரிய வகுப்புகளின்  பாடங்கள் கூட அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை பள்ளி நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் வீட்டில் எங்களிடம் எழுதுவது அவளது அப்போதைய மனநிலையைப் பொருத்தது.தெரிந்தவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் போன்றவர்களிடம் அவளது இந்தத் திறமையைப் பற்றி சொல்லி எழுதுகிறாளா என்று பார்த்தால் பெரும்பாலும் கிறுக்கிவிடுகிறாள். யாரிடம் எப்போது எழுத வேண்டும் யாரிடம் எழுத வேண்டாம் போன்ற விஷயங்களை அவளே தீர்மானிக்கிறாள். அவளது பிடிவாதத்தை உடைப்பது எங்களால் முடியாத காரியமாகவே உள்ளது.அவள் எழுதுவதை கேமராவில் பதிவு செய்வதுகூட எங்களால் முடியாது! (எப்படி மறைத்துக்கொண்டு வீடியோ எடுத்தாலும் 'டெலிபதி' மூலம் தெரிந்து கொண்டு விடுகிறாள்!)அவளைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவளோ ஒரு மேதை. புரியாதவர்களுக்கு ஒன்றும் தெரியாத குழந்தையைப் பற்றி நடக்காத விஷயங்களை நடந்ததாகச் சொல்லி பொய்க்கதை பரப்பிவரும் பெற்றோர்கள் நாங்கள். ஒரு சில கண்முன் நிகழும் அதிசயங்களை பிறருக்கு புரிய வைக்கமுடியாமல் போவது மிகப்பெரிய தவிப்பு தான். கிட்டத்தட்ட எங்களின் நிலைமையும் பேசமுடியாமல் மீனாட்சி கஷ்டப்படுவதற்கு ஒப்பானதே. அவளுக்கு  தொலைக்காட்சி மூலமோ,செய்தித் தாள் மூலமோ பெருமை வாங்கித் தர வேண்டியது எங்களுடைய வேலையல்ல. அது எங்களின் நோக்கமும் அல்ல. உற்றார், உறவினர், அவள் பயிலும் பள்ளி போன்றயிடங்களில் அவள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால் அவளை கையாள்வது அனைவருக்கும் எளிதாக இருக்கும் என்பது மட்டுமே எங்களின் ஆதங்கம்.

நாம் அனைவரும் காய்ச்சல்,தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றின் அறிகுறிகளை உணர்ந்துள்ளதால் நமக்கு அவற்றின் தாக்கம் தெரியும். இப்படியும் ஒரு பிரச்சனை உள்ளது என்பதை சொன்னாலும் பிறருக்குப் புரிய வைப்பது மிகவும் கடினமாகவே உள்ளது. இது ஒருவகையில் பார்த்தால் இதுபோன்ற குழந்தைகளுடன் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே நான் சொல்வது முழுமையாகப் புரியும். 

நான் மேற்கொண்டு இணையத்தைத்  தேடியதில் கருநீலக் குழந்தைகள் (Indigo Children) பற்றித் தெரிந்து கொண்டேன்:
நான்ஸி ஆன் டாஃபே என்ற‌ அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு பெண்மணி. இவருக்கு சினஸ்தீஸியா பிரச்சனை உண்டென்று சொல்லப்படுவதுண்டு. வண்ணங்களால் ஏற்படும் சினஸ்தீஸியாவை (colored grapheme synesthesia) அடிப்படையாகக் கொண்டு வண்ணங்களின் (colorology) அடிப்படையில் மனிதர்களை ஒளி வட்டங்களாகப் பிரித்து (energy level or aura) அவர்களது குணாதிசயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இவரது கூற்றின்படி கருநீலக் குழந்தைகள் (Indigo children) என்பவர்கள் 70களின் பிற்பகுதி மற்றும் என்பதுகளில் அதிகம் பிறந்த குழந்தைகள்.பெரும்பாலும் நினைத்ததைச் சாதிக்கும் குணமும், கட்டுப்பாடுகளை அதிகம் விரும்பாததும் இவர்களின் குணாதிசயங்களாக இருக்கும் என்கிறார். ஆனால் மருத்துவ உலகமோ ADHD போன்ற கவனச்சிதறல் உள்ள குழந்தைகளை 'கட்டுப்பாடுகளை விரும்பாதவர்கள்' என குறிப்பிடுவது ஒரு வகையில் அவர்களின் குறைகளை மறைப்பதற்கு எடுத்தாண்ட முயற்சி என்று குறிப்பிடுகிறார்கள். இதே  கருநீலக் குழந்தைகளை அடிப்படையாக வைத்து ஹாலிவுட் திரைப்படங்களும் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஸ்படிகக் குழந்தைகள் (crystal children): நான்ஸியைத் தொடர்ந்து கருநீல குழந்தைகளைப் பின்பற்றி புதிதாகப் பிறக்கத் தொடங்கியிருக்கும் புதிய தலைமுறைக் குழந்தைகளைப் பற்றி டோரன்‌ வெர்ச்யூ என்ற பெண்மணி ஸ்படிகக்  குழந்தைகள் (crystal children) என்ற தத்துவத்தை முன்வைக்கிறார். இவரது புத்தகம் "A guide to the newest generation of psychic and sensitive children" அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவர் குறிப்பிடும் குணாதிசயங்கள் மீனாட்சிக்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. அதாவது இக்குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், பேரன்பைக் கொண்டவர்கள், தாமதமாகவே பேசுவார்கள், ஆனால் நுண்ணுணர்வும் (telepathy) அமானுஷ்ய சக்தியும் இவர்களுக்கு உண்டு. கூட்டமான இடங்களில் தவிர்ப்பார்கள். இயற்கையை அதிகம் விரும்புவார்கள். சில குழந்தைகள் பிரபஞ்சத்தைப் பற்றியும் முற்பிறவியைப் பற்றியும் கூட பேசுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவை எதுவுமே மருத்துவர்களாலும் விஞ்ஞானத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 





No comments:

Post a Comment