Sunday, May 15, 2022

27. சித்தர்கள் யார்? யோகிகள் யார்? ஞானிகள் யார்?

யோகக் கலையைப் பயிற்சி செய்பவனே 'யோகி'. யோகத்தின் மூலம் பலனை முழுவதுமாக அடைந்தவனே 'ஞானி', 'சித்தன்' என்று நான் பகுதி 21-லேயே  கூறியுள்ளேன். 

நான்  புரிந்து கொண்ட வரையில் நம்மைப்போல் மனிதர்களாக பிறப்பெடுக்கும் சிலர் பிறந்தது முதலே மிகுந்த அறிவோடும் கற்காமலேயே அனைத்தையும் அறிந்தவர்களாக, முக்காலமும் தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் (இருக்கிறார்கள்).இவர்களை நான் பிறவியிலேயே சவான்ட்டாக (Savant) மற்றும் ஹைபர்லெசியாவுடன் பிறந்தவர்கள் என்பேன். இதில் நான் ஹைபர்லெசியாவையும் சேர்த்தே குறிப்பிடக் காரணம் பெரும்பாலான சித்தர்கள் மற்றும் ஞானிகள் பிறர் கற்பிக்காமலேயே பல மொழிகளையும் அறிந்திருக்கும் காரணத்தினால் தான்.

இதில் நான் குறிப்பிடும் அனைத்து விஷயங்களையும் அப்படியே ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுயவிருப்பம். எனது கருத்தால் பிறரை திசை திருப்புவது எனது நோக்கமல்ல.நமது அறிவிற்குப் புலப்படாத  விடயங்களை பொய்யெனக் கருதாமல் முடிந்தவரையில் உண்மையை அறிய முயற்சிக்கிறேன் .

சவான்ட் சிண்ட்ரோம் மற்றும் ஹைபர்லெசியா பிரிவு#1 (பேச்சு தாமதம் மற்றும் 'ஆட்டிசம்' அறிகுறிகள் இல்லாது பிறந்த மகான்கள்):

உதாரணம்#1: ராமலிங்க அடிகள்(எ) வள்ளலார். சிறுவயதிலேயே இறை பக்தி கொண்டவராக பிறர் கற்பிக்காமலேயே ஞானம் பெற்றவராக இருந்திருக்கிறார். வள்ளலாரின் தியானமுறையும் முற்றிலும் மாறுபட்டதாக முழு இருட்டில் இல்லாமல் ஒரு கண்ணாடியின் முன்பு விளக்கை வைத்துப் பார்த்தபடி தியானம் செய்திருக்கிறார். இறுதியாகப் பூட்டிய அறைக்குள் இருந்த வள்ளலார் ஜோதியில் ஐக்கியமானார் என்பதுடன் அவரது வாழ்க்கை வரலாறு முற்றுப் பெறுகிறது.

இப்படி இறைவனோடு ஐக்கியமாவதை  புத்த  மதத்தில்  'வானவில் உடல்'  என்பார்கள். பிறகு இதைப்பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.


உதாரணம்#2: 'மகாபெரியவா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட காஞ்சி சங்கர மடத்தின் 'சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்'. இளம் வயதிலேயே காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக ஆனவர். இவர் பெரும்பாலும் பிறருடன் பேசுவதைப் தவிர்த்து மெளனவிரதம் கடை பிடித்திருந்திருக்கிறார். இதனால் தான் இவருக்கு 'டெலிபதி' போன்ற சக்திகள் கை வரப்பட்டதாக நான் உணர்கிறேன். இன்றும் பெரும்பாலான பிராமணக் குடும்பங்களில் (குறிப்பாக 'ஐயர்' பிரிவில்)  இவரைப் பற்றிய கதைகளும் தெய்வீக அனுபவங்களும் பெருமதிப்புடனும் பக்தியுடனும் பகிரப்படும். அப்படிக் குறிப்பிடும் ஒவ்வொருவரும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் மட்டுமே ஏதோ தனிப்பட்ட முறையில் அவர் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்ற ரீதியில் சொல்வார்கள். ஆனால் உண்மையில் இது எப்படி நடக்கிறது என்பதை எனது குடும்பத்திலிருந்தும் மேலும் சில உதாரணங்களின் மூலமும் சொல்ல விரும்புகிறேன்.

காஞ்சிப் பெரியவர் பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் முகாமிட்டிருந்த போது அவரை தரிசிக்க எனது பாட்டி பெருங்கூட்டத்தினூடே சென்றிருக்கிறார் (அதே நாளில் எனது தாத்தா அவருடைய 'பெப்டிக் அல்சர்' பிரச்சனைக்காக அவரது மாமனார் டாக்டர்.ஸ்வர்ணமணியுடன்  மதுரைக்கு மேல்சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்). எனது பாட்டி  பெரியவரை தொலைவிலிருந்து தரிசித்தபோது அவர் தனது கண்களை மூடியபடி தியானத்தில் இருந்திருக்கிறார்.திடீரெனக் கண்களைத் திறந்தவர் எங்கோ கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த எனது பாட்டியை நோக்கி தன்னருகே வரச்சொல்லி "டாக்டர்.ஸ்வர்ணமணியின் மகள் தானே நீ? உனது கணவரின் உடல்நிலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவருக்கு ரணசிகிச்சை(ஆப்ரேஷன்) தேவைப்படாது"என்று  சொல்லி குங்குமமும் பழங்களும் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பியிருக்கிறார். எனது பாட்டி தான் இன்னாருடைய மகள் என்று அவரிடம் சொல்லவில்லை. தனது கணவரின் பிரச்சனைக்கு தீர்வும் கேட்கவில்லை. இது நடந்த சில ஆண்டுகளில் மீண்டும் ஒருமுறை பெரியவர் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்.பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த எனது தாத்தா மாலை வேளையில் வேலையெல்லாம் முடிந்த பிறகு பெரியவரை தரிசிக்கச் சென்றிருக்கிறார்.

அவரைக் கண்ட பெரியவர் "என்ன ராமச்சந்திரன்! ஸ்கூல்ல இன்னைக்கு வேலைப்பளு அதிகமோ? அதனால் தான் வரத் தாமதமாகிவிட்டதோ?"என்று கேட்டபடி ஆசீர்வதித்து எனது தாத்தாவை அனுப்பி இருக்கிறார். எனது தாத்தாவின் பெயரும் தொழிலும் அவருக்கு எப்படித் தெரியும்?வேலைப்பளு அதிகம் என்று பெரியவரிடம் சொன்னது யார்?

இதேபோல் 'பெரியவா புராணம்' என்ற யூடியூப் சேனலில் பிலாஸ்பூர் சுவாமிகள் தனது சிறுவயது கண் பார்வைப் பிரச்சனையைப் பெரியவர் தீர்த்து வைத்தது. மேலும் தனக்கு சிகிச்சை அளித்த ரஷ்ய மருத்துவர் தன்னிடம் சொன்னதை எங்கோ இருந்த  காஞ்சிப் பெரியவர் பிறகு மேற்கோள் காட்டியது போன்ற சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.இதுதவிர மறைந்த நடிகர் திரு. வினுசக்கரவர்த்தி அவர்கள் காஞ்சிப்பெரியவருடன் தனக்கு ஏற்பட்ட திடீர் தெய்வீக அனுபவம் மற்றும் அந்த சமயத்தில் ஏற்பட்ட நேர மாற்றம் போன்றவற்றை மிக யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.இந்நிகழ்விற்கு முன்பு வரை இவருக்கும் பெரியவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதாம்!

இது நான் நாளிதழில் படித்த செய்தி!

அறுபது- எழுபதுகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமாக இருந்த பிரபல இசையமைப்பாளரின் மகன் அன்றைய 'ஹிப்பி' இயக்கத்தில் சேர்ந்து  வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், இதனால் மனமுடைந்த இசையமைப்பாளரும், அவரது மனைவியும் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் மகனை கண்டுபிடித்து தர உதவி கோரியதாகவும், அவர் உடனே காஞ்சி பெரியவரை சந்தித்து அவரிடம் முறையிடும்படி சொல்லியிருக்கிறார். காஞ்சிமடம் சென்ற இசையமைப்பாளரும் அவரது மனைவியும் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்து தங்கள் பிரச்சனையைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களை ஆசீர்வதித்த பெரியவர் 'உங்கள் மகன் விரைவில் வீடு வந்து சேருவான்' என்று சொல்லியிருக்கிறார். இது நடந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே அவர்களின் மகன் மனம் மாறி  தானாகவே வீடு திரும்பியிருக்கிறார்!

"சேலம் குட்டி சாமியார்" பரணீதர ஸ்வாமிகள் (எ) 'நெரூர்' ஸ்ரீவித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள்: பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழக செய்தி சானல்களில் 'குட்டி சாமியார்' என்ற பெயர் அடிபட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். எட்டு வயது சிறுவன் காவி உடை அணிந்து ஆன்மீக விஷயங்களைக் கரைத்துக் குடித்தவராக இருந்தது 'ஆம்! இல்லை!' என்ற விவாதங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. அந்த சமயத்தில் அவரின் தாயாரின் பேட்டியை ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் படித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த அம்மையார் தனது மகனுக்கு சொல்லிக் கொடுக்காமலேயே அனைத்தும் தெரிந்திருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் குட்டி சாமியாரை தன்னை சந்திக்க வரச் சொன்ன காஞ்சி ஜெயேந்திரர், அந்த சந்திப்புக்குப் பின் அளித்த பேட்டியில் "அந்தக் குழந்தை பூர்வ ஜென்ம நினைவோடு பிறந்த குழந்தை" என்று சொன்னது எனது நினைவுக்கு வருகிறது. இன்று புகழ் வெளிச்சம் தன் மீது படாமல் தானுண்டு தனது இறைப் பணி உண்டென கரூரின் அருகே 'நெரூர்' என்ற ஊரில் அமைதியாக தனது மடத்தில் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்து வருகிறார் ஸ்ரீவித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள்.

சவான்ட் சிண்ட்ரோம் மற்றும் ஹைபர்லெசியா பிரிவு#2:                           (பேச்சு தாமதம் மற்றும் ஆட்டிசம் போன்ற  அறிகுறிகளுடன் பிறந்த மகான்கள்):

கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவி மாயம்மா: கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் பித்து பிடித்தவர் போல் காட்சியளித்து தெரு நாய்களின் கூட்டத்துடன் சுற்றித் திரிந்தவர் தான் தேவி மாயம்மா.அவர் செய்த சித்து வேலைகளைப் பற்றி இன்றும் சொல்பவர்கள் உண்டு.‌ அவரைப் பற்றி நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பிரபல போலீஸ் அதிகாரி ஒரு வாரப் பத்திரிகையில் கட்டுரை எழுதியது என் நினைவிற்கு வருகிறது. தனது தந்தையிடம் மாயம்மாவைப் பற்றி அவர்  சொல்ல, அவரின் தந்தையோ தான் குழந்தையாக இருந்தபோதே 'மாயம்மா' என்ற பெயரைக் கேள்விப் பட்டதாக பதில் சொல்ல, மாயம்மாவின் உண்மையான வயது, அவர் எங்கிருந்து வந்தார் போன்ற விஷயங்களை அறியமுடியவில்லை என்பன போன்ற விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

மாயம்மா தனது கை, கால் என்று ஒவ்வொரு உறுப்பாக தானே கழட்டி வைத்து 'நவகண்ட யோகம்' (உடலை 9 துண்டுகளாக ஆக்குவது!) செய்வாராம். மீண்டும் பிரித்த பாகங்களை தானே சேர்த்து வைத்துக் கொள்வார் என்றும் சொல்வதுண்டு. அதாவது உயிருடன் இருக்கும்போதே உடல் வேறு உயிர் வேறாகப் பிரித்தவர் என்பார்கள்.

எனது குரு ஆற்காடு திப்பு மஸ்தான் அவ்லியா!

 'அவர் உனக்கு குருவா?' என்று‌ என்னை சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூட கேட்பதுண்டு. அவர்களின் முக்கிய சந்தேகம் நான் மதம் மாறிவிட்டேனோ என்பதே. நான் எந்த மதத்திற்கும் மாறவில்லை.மதத்தையும் பெற்றோரையும் நாம்  தேர்ந்தெடுப்பதில்லை. அவை தானாகவே அமைகின்றன. என் மகள் பிறப்பதற்கு முன்புவரை எந்த நம்பிக்கையும் பெரிதாக இல்லாதிருந்த நான் இன்று மதவாதியல்ல! ஆன்மீகவாதி!- இதுவே எனக்கு மிகத் தாமதமாகத் தான் புரிந்தது. மேலும் எனது குருவின் படமோ உருவமோ குறிப்பிட்ட வழிபாட்டு முறையையோகூட‌  நான் பின்பற்றத் தேவையில்லை.அவரை நான் என்றுமே மனதில் நினைத்துக் கொள்கிறேன். அதுவே போதும். பார்க்க வேண்டும் என்று தோன்றும்போது காரில் குடும்ப சகிதம் ஆற்காட்டுக்கு ஒரு நடை சென்றுவிட்டு வருவேன்.‌ எனக்கு இதுவே சிறந்த பக்தி என்று தோன்றுகிறது.

ஆற்காடு திப்புமஸ்தானின் வரலாற்றைப் பார்க்கும்போது, அவர் 1750ல் திப்புசுல்தான் பிறக்கும் முன்பே அதே ஆண்டு இறந்திருக்க வேண்டும். அதனால் தான் நான் சென்ற 2017ல் அவருக்கு 267வது சந்தனக்கூடு‌ விழா ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் 1761ஆம் ஆண்டு திப்புவின் தந்தை ஹைதர் அலி (அன்றைய பெங்களூரின் ஜாகீர்தார் மற்றும் மைசூர் உடையார் சாம்ராஜ்ஜியத்தின் தளவாய்) பெங்களூரின் கலாசிபாளையம் மண் கோட்டையைக் கற்கோட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தபோது, அங்கே கல் சுமந்து கூலி வேலை செய்த மூன்று ஆண்கள் மட்டும் பணம் ஏதும்பெற்றுக் கொள்ளாமல் அங்கிருக்கும் மசூதியில் தங்கியிருந்துள்ளார்கள். அவர்களை கண்காணிக்க ஹைதர் தனது மைத்துனரை அனுப்பியுள்ளார். மூவரையும் பின் தொடர்ந்த அவருக்கு மசூதிக்குள்ளே அவர் கண்ட காட்சி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளே சென்றதோ மூன்று பேர். ஆனால் அங்கே இருந்ததோ மனித உடலின் இரு துண்டுகள் (இதுவும் மாயம்மா செய்த நவகண்ட யோகம் தானோ?!) மற்றும் அதைக் காவல் காக்கும் ஒரு நாய். பின்னர் தெரியவந்தது என்னவெனில் அந்த மூவர் திப்பு மஸ்தான் அவ்லியாவும் அவரது சகோதரர்கள் மாணிக் மஸ்தான் மற்றும் தாவாகல் மஸ்தானென்று. மூன்று பெயர்களிலும் 'மஸ்தான்' வருவதால் அவர்கள் 'இறைப் பித்தர்கள்' என்று பொருளாகிறது.'இந்த  சம்பவத்திற்கு 11 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்த திப்புமாஸ்தான் அவ்லியா அங்கு எப்படி தோன்றினார்?' என்ற கேள்விக்கு இன்றுவரை எனக்கு வரலாற்றில் பதில் கிட்டவில்லை.

சேஷாத்ரி சுவாமிகள்: திருவண்ணாமலை ரமண மகரிஷியுடன் மிக நெருக்கமாகப் பழகி, அவருடன் ஆன்மீகப் பாதையில் பயணித்த மகான் தான் "சேஷாத்ரி சுவாமிகள்". இவரது வரலாற்றைப் பார்க்கும்போது ஆட்டிஸம் உள்ளவர்களுக்கு இருப்பதுபோல் சில பிரச்சனைகளுடன் மிகப் பெரிய மகானாக வாழ்ந்தவர் என்றே சொல்ல வேண்டும்.‌இறுதிவரை இவருடைய நடவடிக்கைகள் எளிதில் கணிக்க முடியாததாக இருந்திருக்கிறது.

உதாரணம்: இவர் சிறுவயதில் தனது தாயுடன் கடைத் தெருவிற்குச் சென்றால் முன் பின் அறியாத ஒருவரின் பொம்மைக் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த கிருஷ்ணர் பொம்மையை எடுத்து விளையாடியதாகவும், குழந்தை தானேயென்று கடைக்காரரும் பொம்மையை வைத்துக் கொள்ளெனக் கூறியிருக்கிறார்.அதே நாளில் அந்த வியாபாரியின் அன்றைய வருமானம் பெருக, இந்த விஷயம் ஊரெங்கும் பரவ, 'தங்கக் கை' என்ற அடைமொழியுடன் சேஷாத்ரி சுவாமிகள் அழைக்கப்பட்டிருக்கிறார்.

 இது மீனாட்சியின் சில செயல்பாடுகளை எனக்கு நினைவூட்டுகிறது. சூப்பர் மார்க்கெட்டுக்கு அவளுடன் சென்றால் அங்கிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் சலவை டிடர்ஜெண்ட் பாட்டில்களை நேர்கோட்டில் அடுக்கிவைத்து அழகு பார்ப்பாள். சில சமயங்களில் முன் பின் தெரியாதவர்களைக் கண்டதும் அவர்களுடன் ஒட்டிக் கொள்வதும்,மால் போன்ற இடங்களில் நாங்கள் பாப்கார்ன் வாங்குவதற்குள் அருகிலிருப்பவர்களிடமிருந்து பாப்கார்னை கூச்சமில்லாமல் எடுத்து உண்பதும் இன்றுவரை  மீனாட்சியால் மாற்றிக் கொள்ளமுடியவில்லை.‌  இதில் எங்களுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டாலும் சம்மந்தப்பட்டவர்கள் அவளைத் துளியும் தவறாக நினைத்ததில்லை. சிலர் "குழந்தை தானே! அவளை அவள் போக்கில் விட்டுவிடுங்கள்" என்று எங்களை‌ தான் கடிந்து கொள்வார்கள். மீனாட்சியும் இப்படி எல்லோரிடமுமா நடந்து கொள்கிறாளா? இல்லை! இவர்கள் தன்னை 'உள்ளது உள்ளபடியே ஏற்கக் கூடியவர்கள்' என்பதை (டெலிபதி மூலம்!) நன்கு தெரிந்து தான் ஒரு சிலரிடம் மட்டும் இப்படி நடக்கிறாள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அதேபோல் தான் எழுதுவதும்! எல்லோரிமும்  அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டால் அவர்கள் மனதில் நினைப்பதையும், நடந்தது, நடக்கப் போவதையும் எழுதிவிட மாட்டாள்.இப்பொழுது புரிகிறதா பெற்றோராக நாங்கள் படும்பாடு? எல்லாமே தெரிந்திருந்தாலும்  'ஒன்றுமே தெரியாது!' என்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கக் கூடிய ஒரு அதிபுத்திசாலிக் குழந்தையைக் கையாள்வதில் உள்ள சிக்கலை?!

இவளது அன்பு வலையில்  வீழ்ந்தவர்கள் இவள் தங்களது கனவில் வருவதாகச் சொல்வது நாங்கள் அடிக்கடி கேள்விப்படும் ஒரு விஷயம்.

ஹைபர்லெசியா பிரிவு#3 (பேச்சு தாமதம் மற்றும் ஆட்டிசம் போன்ற  அறிகுறிகள் இளம்வயதில் மட்டும் தென்பட்ட  மகான்/யோகி): 

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து பின்னாளில் தர்மபுரம் ஆதீனத்தின் குருமஹா சன்னிதானமான குமரகுருபர சுவாமிகள். இவர் ஐந்து வயது வரை பேசாதிருந்திருக்கிறார். கவலையுற்ற இவரது பெற்றோர் இவரை திருச்செந்தூர் அழைத்துச் செல்ல, முருகனின் சன்னிதியில் பேசியதோடு 'கந்தர்க் களிவெண்பாவே' பாடியிருக்கிறார். இது நடந்த சில ஆண்டுகளிலேயே மதுரை மீனாட்சிக்கு 'பிள்ளைத் தமிழ்' இயற்றியுள்ளார். இதையெல்லாம் பிறர் கற்றுக் கொடுத்து எழுதியதா? 'நிச்சயம் இல்லை!'  என்பதை உறுதியாகச் சொல்வேன் நான்.  

ஜித்து கிருஷ்ணமூர்த்தி: சென்னை பெசன்ட் நகர் 'பிரம்ம ஞான சபையில்' (Theosophical Society) வளர்ந்த சிறுவன் கிருஷ்ணமூர்த்தியைக் கண்ட  சார்லஸ் வெப்ஸ்டர் லீட்பீட்டர் அந்த சிறுவனைச் சுற்றியிருந்த ஒளிவட்டத்தை(aura) உணர்ந்தார். அவன் சிறந்த ஆன்மீகவாதியாகவும் கடவுள் மைத்ரேயனின் (பிரம்மஞான சபையைப் பொறுத்தவரையில் இவரே சர்வ வல்லமை பொருந்திய கடவுள்!) வாகனமாக விளங்கும் தகுதி உடையவன் என்றும் கணித்தார். ஆனால் அந்த சிறுவனோ ஏதும் அறியாதவனாக தன்னுடைய உலகத்திற்குள் தனித்து வாழ்ந்து வந்திருக்கிறான்.  ஆட்டிஸ வர்ணனை சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு கனகச்சிதமாகப் பொருந்தும். அன்னிபெசன்ட் அம்மையாரின் தத்துப் பிள்ளையாக மாறிய ஜித்து கிருஷ்ணமூர்த்தி பின்னாளில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவாளராகவும் தத்துவமேதையாகவும் விளங்கி சார்லஸ் வெப்ஸ்டரின் கூற்றை உண்மையாகக்கினார்.‌

ஆனால் ஜித்து பின்னாளில் பிரும்மஞான சபையிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக் கொண்டு  செயல்பட்டது தனிக் கதை.


No comments:

Post a Comment