2020ஆம் ஆண்டு முக்தி அடைந்த யோகி பிரகலாத் ஜானி. இவரை 2003ஆம் ஆண்டு அகமதாபாத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் Dr.சுதீர் ஷா தலைமையிலான மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனையில் யோகி பிரகலாத்தை தங்க வைத்து சோதித்தார்கள். இதில் கண்டறியப்பட்ட விஷயங்கள் என்னவெனில் அந்த யோகி தங்கியிருந்த நாட்களில் உணவு உண்ணவில்லை நீரும் அருந்தவில்லை.இதனால் அவர் மலமும் சிறுநீரும் கழிக்கவில்லை. அவரது சிறுநீர்ப்பையில் (bladder) உருவான சிறிதளவு சிறுநீரும் மீண்டும் அவரது உடலாலேயே உறிஞ்சப்பட்டு விட்டது. இதற்கான விடை எனக்கு இணையத்தில் வேறொரு இடத்தில் கிடைத்தது. துருவக் கரடிகள் குளிர்காலத்தில் நீரும் உணவும் உட்கொள்ளாமல் கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை உறக்க நிலைக்கு செல்வதாகப் படித்தேன். இந்த நேரத்தில் கரடியின் சிறுநீரில் உள்ள யூரியாவானது அதன் உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தின் போது உடைந்து நைட்ரஜனாக வெளிப்பட்டு மீண்டும் அதன் உடலில் உள்ள புரசத செல்களை உருவாக்கப் பயன்படுகிறதாம்.
2010ல் மீண்டும் டாக்டர்.சுதீர் ஷா மற்றும் Defence Institute of Physiology & Allied Sciencesஐச் (DIPAS-இது DRDO-எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் ஒரு அங்கமாகும்) சேர்ந்த 35 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் யோகி பிரகலாத் ஜானியை மீண்டும் சோதித்தார்கள். இம்முறை 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு, வெயிலில் அதிக நேரம் உட்காரச் செய்வது மற்றும் தொடர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். சோதனைகளில் யோகி பிரகலாத்தின் நாடித்துடிப்பு ஒரு விளையாட்டு வீரனைப்போல் அதிகத் துடிப்புடன் இருந்துள்ளது. மேலும் அவரது உடலில் லெப்டின் (இது அதிகம் சுரந்தால் பசி குறையும்) மற்றும் கிர்லின் (இது குறைவாக சுரந்தால் பசி குறையும்) என்ற இரு ஹார்மோன்களின் அளவுகளில் அதிக மாற்றம் தெரிந்துள்ளது. ஆய்வுகளின் முடிவு அறிவிக்கப்படவில்லை என்றாலும், DIPASன் இயக்குனர் டாக்டர்.இளவழகன் "இந்த ஆய்வு போர்க்களத்தில் நமது வீரர்கள் உணவும், நீரும் இல்லாமல் தாக்குப் பிடிப்பதற்கும், நெடுந்தூர விண்வெளிப் பயணங்களுக்கும், இயற்கைப் பேரிடர்களின் போது மக்களை காப்பதற்கும் அதிகம் பயன்படும்" என்றார்.
2017ல் IIT- மெட்ராஸ் மாணவர்கள் யோகி பிரகல்லாதின் மூளையை ஆராய்ந்ததில் அவரது பிட்யூட்டரி சுரப்பி மற்றும் பயனியல் சுரப்பி ஒரு 10 வயது சிறுவனுக்கு உண்டான அளவிலேயே இருந்ததாக அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
'வாலைக்குமரி 10 வயது சிறுமியாகக் காட்சியளிப்பாள்' என்று நாம் முன்பே பார்த்திருந்தோமல்லவா?
பிட்யூட்டரி, பயனியல் மற்றும் மூன்றாவது உச்சிக் குழி சேர்ந்த அமைப்பு தானே 'கண்ணாடி மாளிகை' (crystal palace)? சித்தர்கள் இறைவன் இருக்குமிடமெனக் குறிப்பிட்டதும் இதைத் தானே?!
யோகி பிரகல்லாதை பக்தர்கள் 'அம்பாஜி'(அம்பாள்) என்று தான் அழைப்பார்கள். 11 வயதில் ஞானம் பெற்றதாக சொல்லும் அவர் வாழ்வின் பெரும்பாலான நாட்களை குகையில் (சித்தர்கள் குகைகளை தேர்ந்தெடுப்பதன் காரணத்தை பின்பு சொல்கிறேன்!) தனிமையில் தியானத்தில் கழித்துள்ளார். ஒரு பெண்ணைப் போல் உடை மற்றும் மூக்குத்தி, வளையல்கள் போன்ற அணிகலன்களை விரும்பி அணிவார்.
ஆராய்ச்சியாளர்களுக்கு விசித்திரமாக தெரிந்த ஒரு முக்கிய விஷயம் அவரது வாயின் மேல் அண்ணத்திற்கு (upper palate) சற்று மேலே காணப்பட்ட ஒரு விசித்திர ஓட்டை. இதைப் பற்றி குறிப்பிடும் யோகி பிரகலாத் ஜானி ''பராசக்தி எனது தலையில் உள்ள அந்த ஓட்டையின் மூலமாக எனக்கு அமுதூட்டுகிறாள். இதுவே எனக்கு போதும். உணவோ, நீரோ தேவையில்லை"என்று சொல்லியிருக்கிறார்.
இது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் புரிந்ததோ இல்லையோ எனக்கு என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கும் புரியும் என்று நம்புகிறேன்! அதாவது யோகி பிரகலாத் ஜானி தனது யோகத்தாலும், தியானத்தினாலும் 'குண்டலினி சக்தி'யைக் கிளப்ப, அது தலையிலுள்ள மற்ற ஹார்மோன்களுடன் ஒன்று சேர்ந்து கெட்டித் தன்மை கொண்ட அமிர்தமாக மாறியுள்ளது. அதை அவர் கேசரி முத்திரையைப் பயன்படுத்தி நாக்கால் வாயின் மேல் அண்ணத்தில் துளையிட்டு பருகியுள்ளார். அமிர்தத்தைப் பருகுவது பேரானந்தத்தையும், புதிதாய்ப் பிறந்த உணர்வையும் தருமென்றும், மேலும் அது உடலின் ரத்தத்தில் கலப்பதால் உடலிலும் மனதிலும் நிறைய மாற்றங்களை உண்டாக்கும் என்பதை பகுதி 26ல் தெளிவாகப் பார்த்திருந்தோம்.
நான் எனது நண்பன் ரகுவின் மூலம் சந்தித்த கோவில்பட்டியைச் சேர்ந்த எசக்கி சித்தர், அவரது குரு 'பாட்டு சித்தர்' நாராயணசாமியின் மூலம் தீட்சை பெற்று வாசியோகம் செய்யத் துவங்கிய சில ஆண்டுகளிலேயே திட மற்றும் திரவ உணவுகள் உட்கொள்வதை முழுமையாக தவிர்த்துவிட்டதாகவும், ஆனால் என்றேனும் அன்பர்கள் வாங்கிக் கொடுத்தால் வேண்டாமென்று தவிர்க்காமல் சிறிதளவு பாலோ அல்லது டீயோ மட்டும் பருகி வருவதாகக் கேள்விப்பட்டேன். இதேபோல் நேபாளத்தின் நடுக் காட்டில் 'ராம் பகதூர் போம்ஜன்' என்ற இளைஞன் உணவும் நீருமின்றி பல மாதங்கள் கடும் தவம் புரிந்து வந்ததாக BBC டாக்குமெண்டரி ஒன்றைக் கண்டேன் (அதே இளைஞன் பின்னர் ஆள் கடத்தல், கற்பழிப்பு மற்றும் கொலை போன்றவற்றுக்காக தேடப்பட்டு வந்தது தனிக் கதை!).
No comments:
Post a Comment