குருகுலக் கல்வி முறை: ஐரோப்பியர்கள் நமது நாட்டிற்கு வருவதற்கு முன் குருகுலக் கல்வி முறை இந்திய துணைக்கண்டம் முழுவதும் இருந்திருக்கிறது. நான் முன்பே குறிப்பிட்டது போல் கற்றறிந்த ஒரு குருவின் துணை கொண்டு சீடர்கள் சமயம் சார்ந்த கல்வியோடு வாழ்க்கைக் கல்வியான யோகத்தையும் தியானத்தையும் கற்றிருக்கிறார்கள். இவற்றுடன் மருத்துவம், தற்காப்புக் கலை, நாட்டியம், இசை போன்றவையும் கற்பிக்கப் பட்டிருக்கின்றன.
அகஸ்தியர், போகர் போன்ற சித்தர்கள் நிறைய மருத்துவ குறிப்புகளை எழுதியிருக்கிறார்கள். இவற்றிலிருந்து தோன்றியது தான் ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும், வர்மக் கலையும். இதுவே சீன தேசத்திற்குச் சென்று 'அக்குபன்சர்' சிகிச்சை முறையாகவும் பரவியது. 'உடலின் பிராண ஓட்டத்தில் தடை ஏற்படுவதே நோய்க்குக் காரணம்' என்பது தான் அக்குபஞ்சர் சிகிச்சை முறையின் அடிப்படை. நரம்பு மண்டலத்தின் முக்கிய புள்ளிகளை சிறு ஊசிகளால் தூண்டி தடையை நீக்கி ஓட்டத்தை சீராக்க சிகிச்சை அளிக்கிறார்கள். தொடு சிகிச்சை (touch therapy), வர்ம சிகிச்சை போன்றவையும் இதே அடிப்படையில் தான் செயல்படுகின்றன.
குருகுலக் கல்வி முறையைக் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒரு விஷயம் தெளிவாக விளங்கும்! அது நமது இன்றைய நடைமுறை ஏட்டுக் கல்விபோல் இல்லாமல் செயல்முறைப் பயிற்சிகளுடன் வாழ்க்கைக் கல்வியாக இருந்திருக்கிறது. சரி, அப்படி சித்தர்கள் என்னவெல்லாம் ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார்கள்? நான் தெரிந்து கொண்டவரையில் சித்தர்கள் கலைகள், மருத்துவம், அறிவியல், வான் சாஸ்திரம், ஆகம விதிகள், கணிதம் என அனைத்துத் துறைகளிலும் நமக்காக பல முக்கிய குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்கள்.
உதாரணம்:
1).கலைகள்: பரதக் கலையை உருவாக்கியவர் பரத முனிவர். அதேபோல் இந்திய இசை (குறிப்பாக தென்னிந்திய இசை) என்பது அதிக நுட்பங்கள் நிறைந்ததாக கணக்கு வழக்குகளை உள்ளடக்கியது (பர்முடேஷன்-காம்பினேஷன்).
கணித சூத்திரங்கள் சிற்பம், நாட்டியத்திற்கும் பொருந்தும். யோகப் பயிற்சியிலும் தியானத்திலும் சொல்லப்படுவது போல் நாட்டியம் உயிர்ப்புடன் அமைய மனமும் உடலும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பார்கள். அதேபோல் பாடும் போதும், இசைக்கருவிகளை மீட்டும் போதும் கரஒலியை எதிர் நோக்காமல் அடி மனதிலிருந்து வெளிப்படும் இசையே தன்னிகரில்லா சிறப்புடையது.
2). அறிவியல்: சித்தர்கள் ரசவாதம் தெரிந்தவர்கள். பலவகை உலோகங்களையும், வேதிப் பொருட்களையும் கொண்டு எண்ணற்ற ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். இவை மருந்துகள் தயாரிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் முன்பே குறிப்பிட்ட யூடியூபர் திரு.பிரவீன் மோகன் அவர்களின் காணொளிகளில் நமது பண்டைய கோயில்களுக்கும் நவீன அறிவியல் தொழில் நுட்பங்களுக்கும் உள்ள தொடர்புகளை மிக விரிவாக விளக்கியுள்ளார்.மின்சாரம்கூட அகஸ்தியரின் கண்டுபிடிப்புகளில் ஒன்றே என்பார்கள்.இது 'அகஸ்திய சமிதா' என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதுவே ஒரு உலோகத்தை மற்றொன்றாக மாற்ற 'இரசவாதம்' (electroplating) செய்யப் பயன்பட்டுள்ளது. இதை 'பாக்தாத் குடுவை' என்றும் குறிப்பிடுவார்கள்.
மேலும் போகர் உருவாக்கிய பழனி நவபாஷாண சிலையில் தொடங்கி எத்தனையோ கோயில்களையும் அதன் கட்டிட முறைகளையும் குறிப்பிடலாம்.
3).வான் சாஸ்திரம்-ஜோதிடம்-கணிதம்: இம் மூன்றும் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையவை. பாஸ்கரர், ஆர்யபட்டர் போன்ற நிபுணர்கள் இங்கிருந்தபடியே செயற்கைக் கோள்களின் உதவியின்றி கணித சூத்திரங்களின் துணை கொண்டு பிரபஞ்சத்தைப் பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். வெளிநாட்டவர்கள் டெலஸ்கோப் உதவியுடன் வானத்தை பார்ப்பதற்கு முன்பே இந்தியர்களின் கோள்களின் நிலை பற்றிய அறிவு, கிரகணங்கள் பற்றிய கணிப்புகள் அனைத்தும் மிகத் துல்லியமாக இருந்துள்ளன. இன்றும் நமது பஞ்சாங்கத்திலும் தினசரி காலண்டரிலும் குறிப்பிடப்படும் கிரஹணம், அமாவாசை, பெளர்ணமி போன்ற தகவல்கள் மிகச் சரியாகவே உள்ளது.
4).மருத்துவம்: நமது பண்டைய மருத்துவம் மூலிகைகளையும் சில உலோகங்களையும் அவற்றுடன் சேர்ந்த சில சூட்சுமான மருத்துவ முறைகளையும் உள்ளடக்கியது. பித்தம், கபம், வாதம் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டது தான் ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும். சுஷ்ருதர் போன்ற முனிவர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சைகளைக் கையாண்டதாக நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அந்தக் காலத்தில் நாடி பிடித்தே ஒருவரின் பிரச்சனையை எளிதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று நவீன மருத்துவம் பின்பற்றுவதும் இதே முறை தான்.
இன்று கூட தமிழகம் மற்றும் கேரளாவில் பின்பற்றப்படும் சித்தமருத்துவத்தில் கொரோனா சிகிச்சை முறையில் பரிந்துரைக்கப்படும் கபஜுரக் குடிநீர் போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.சுதா சேஷையனே ஒப்புக் கொண்டுள்ளார்.
தாங்கள் கற்ற அனைத்து விஷயங்களையும் தனது சீடர்களுக்கு கற்பித்த தோடு இல்லாமல் பிற்காலத்தில் அவற்றை சரியான நபர்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு ஏடுகளிலும் 'பரிபாஷையாக' (encrypted text) எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் (அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதற்கு பிறகு வருகிறேன்!). அதனால் தான் இவற்றை மேலோட்டமாகப் படித்தால் ஒரு பொருளும், உள்ளர்த்தம் புரிந்து படித்தால் வேறு பொருளும் கிடைக்கும். மேலோட்டமான பொருளை மட்டும் வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் எதிலும் வலுவான ஆதாரத்தை எதிர் நோக்கும் நாத்திகர்களுக்கு நகைப்பையே உண்டாக்கும்.
அழியாச் செல்வம் கல்விச் செல்வம்: இது மட்டுமில்லாமல் தாங்கள் கற்ற கல்வியை (அறிவை) தங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் தியானமும் யோகமும் செய்து பிராண சக்தியின் துணைகொண்டு சேமித்து வைத்திருக்கிறார்கள். இதுதான் இன்றைய மருத்துவர்கள் சொல்லும் மூளையைத் தவிர மற்ற உறுப்புகளிலும் நினைவுகளை சேமித்து வைக்கலாம் என்று குறிப்பிடும் 'செல்லுலர் மெமரி' என்று முன்பே கூறியுள்ளேன். மூளையின் ஆக்சிஜன் அளவு குறையும்போது மனிதன் சுய நினைவை இழக்கிறான். அதேபோல் பிராண சக்தியின் துணைகொண்டு அடையும் அதீத விழிப்புணர்வு (higher level of consciousness) அவனை இறைவனிடம் சேர்க்கிறது.எனவே உடலின் ஆக்ஸிஜன் அளவிற்கும் மனிதனின் விழிப்புணர்விற்க்கும் (consciousness) உள்ள நெருங்கிய தொடர்பு நிச்சயம் ஏற்கக் கூடியதே. இதை சித்தர்கள் தெளிவாக உணர்ந்தே பிராணசக்தியைத் தூண்ட யோகமும் தியானமும் செய்திருக்கிறார்கள்.
நான் குறிப்பிட்டதைப் போல் உடலாலும் மனதாலும் பண்பட்ட நிலையை அடைந்த ஒருவரே (1).யோகி (யோகம் செய்பவர்) (2).சித்தர் (யோகம் சித்தி அடைந்தவர்கள்), (3).ஞானி (முழுமையாக ஞானமும் அடைந்தவர்). தனக்கு வேண்டியபடி உடலில் ஹார்மோன் அளவுகளை மாற்றிக்கொண்டு, அன்பை அடிப்படையாகக்கொண்டு கருணையின் வடிவமாக மாறுவது. இதை 'அன்பே சிவம்' 'கருணையே தேவன்' என்றும் சொல்லலாம் அல்லவா? இதில் கலக்கும் திரவங்கள் (ஹார்மோன்கள்) எல்லாமே Cerebrospinal Fluid எனும் 'வாலை'தான். காகபுஜண்டர் பாடிய
"சென்றேனே உச்சிநீர் தாயேயாகும்
சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும்
தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல்
தீண்டிவிட்டு மேலேறிற் தீபசோதி
சொல்லுமே கபாலத்திற் சேர்ந்தவாசி
சோதியொளி கண்டிடுமே கனலாற்காலால்
நில்லுமே மூலதலம் வாசிகொண்டு
நிமிர்ந்திருந்து பார்க்கவுமே பிடரியேறும்".
பாடலின் பொருள் இப்பொழுது விளங்குகிறதா?. இவற்றுடன் முதுகுத் தண்டின் அடியிலுள்ள 'தனஞ்ஜெயம்' என்ற உயிர்க் காற்றும் படிப்படியாக மேலெழும்பி 'குண்டலினி சக்தி'யாக மாறி மூன்றாவது உச்சிக் குழியை வந்தடைகிறது. இது மூளையிலுள்ள மற்ற ஹார்மோனாகளான ஆக்ஸிடோசின் மற்றும் வாசோபிரசினுடன் சேர்ந்து திடப்பொருளாக மாறத் தொடங்குகிறது. இதுதான் 'அமிர்தம்'. இதை வைத்து மறைபொருளாக சொன்ன கதைதான் 'பாற்கடலைக் கடைய அமிர்தம் வெளிப்படுவது'. இதில் வாலை தான் பாற்கடல். 'வாசுகி பாம்பு' என்பது வாசி(காற்று), தேவர்கள் என்பது இடங்கலை நாடி(கேது)-இது ஆனந்த சுரப்பியில் முடிகிறது (positively charged- நேர்மறை சக்தி). அசுரர்கள் என்பது பிங்கலை நாடி (ராகு)-இது பிட்யூட்டரி சுரப்பியில் முடிகிறது (negatively charged-எதிர்மறை சக்தி). இந்த இரண்டு பாம்புகளும் பின்னிக் கொண்டு செல்லும் இடங்கள் தான் சக்கரங்கள் (chakras). ஒவ்வொரு சக்கரமும் தூண்டப்படும்போது மனிதனின் சிந்தனையும் ஆற்றலும் விழிப்படைகின்றன. இவற்றின் நடுவே நேர்கோட்டில் செல்வது தான் சுழுமுனை நாடி(neutrally charged). எனவே குண்டலினி எழுச்சியை உடலில் நிகழும் 'மின்காந்த உயிர் வேதியல் மாற்றம்' என்றும் சொல்லலாம் (electronic magnetic bio-chemical reaction).
இதை மேற்கொண்டு இப்படியும் சொல்லலாம்:
- சிவன் என்பது சூரிய கலை (பிங்கலை)
- பார்வதி என்பது சந்திர கலை (இடங்கலை)
- விநாயகர் என்பது மூல அக்னி (சுழுமுனை நாடி)
சிவன்-கங்கை-பார்வதி கதைக்கு நான் சொல்லும் விளக்கம்:
சிவன்- அதாவது மூளை (திடப் பொருள்). Static energy!
கங்கை-சிவன் தனது ஜடாமுடிக்குள் ஒளித்து வைத்திருக்கும் ஒரு பெண்- அதாவது திரவ சக்தி! (dynamic energy). இது மூளையின் 1 மற்றும் 2ஆம் உச்சிக் குழிகளில் சுரக்கும் சுத்தமான வாலை (CSF).
பார்வதி (dynamic energy)- இவள் கொண்டுவரும் 'தனஞ்ஜெயம்' என்ற உயிர்க்காற்றுடன் மற்ற சுரப்பிகள்(இவை ஒவ்வொன்றுமே சக்தியின் வடிவம் தான்!) வெளியிடும் ஹார்மோன்களும், கங்கை (வாலை)யுடன் ஒன்று சேர 'பராசக்தி'யாக (குண்டலினியாக) அதாவது அனைத்துப் பெண் தெய்வங்களுக்கும் (திரவ சக்திகளுக்கும்) தலைவியாக உருவெடுக்கிறாள். அனைத்து சக்திகளும் இவளுள் அடக்கம்!
அப்படியானால் நாம் கல்விக்கும், செல்வத்திற்கும், வீரத்திற்கும் தனித் தனி பெண் கடவுள்களை வழிபடக் காரணம்? மேற்கண்டவற்றுள் குறிப்பிட்ட சக்தியைத் தரும் ஹார்மோன் மட்டும் தூண்டப்பட்டு நமக்கு நன்மை பயக்கவேண்டும் என்பதால்தானோ?
மேற்சொன்ன இதே விஷயங்களுக்கு இணையாக பைபிளில் எவ்வாறு மறைபொருளாக சில கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதை ஹாலிவுட் நடிகர் ஜிம் கெர்ரி ஒரு போட்டியில் சொல்கிறார் (இதையே நான் "யோகம் உடலுக்கு! தியானம் மனதுக்கு!" பகுதியில் தெளிவாக விளக்கியுள்ளேன்). பேட்டி எடுப்பவர்களுக்குத் தான் அது ஏதோ நகைப்பிற்குரிய விஷயமாகத் தெரிகிறது போலும். இதனால் தான் விஷயம் தெரிந்தவர்கள் அத்தனை எளிதாக பிறரிடம் தனக்கு எல்லாம் தெரியும் என்பதை காட்டிக் கொள்ளமாட்டார்கள். எனக்கும் அந்த பக்குவம் வந்திருந்தால் நான் இந்த ப்ளாக்கை எழுதியிருக்கமாட்டேனல்லவா?! நான் ஒரு அரைவேக்காடு என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை. இங்கே மற்றொன்றையும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்! இந்த பிளாக்கின் தலைப்பு 'கற்றது கடலளவு' என்பது நான் கற்றதைப் பற்றியல்ல! என் மகள் மீனாட்சியின் அறிவைப் பற்றி தான் குறிப்பிடுகின்றேன். நான் இங்கே தெரிந்துகொண்டு சொல்வதெல்லாம் அந்தக் கடலின் ஒரு துளியைப் பற்றி தான். நான் இன்னும் அவளால் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!
போப் பிரான்ஸ்ஸிடம் எதையோ சொல்ல விரும்பும் ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகள்: கடந்த சில ஆண்டுகளாகவே போப் பிரான்சிஸ் அவர்கள் பொதுமக்களிடம் உரையாற்றும் போதெல்லாம் எங்கிருந்தோ வந்து மேடை ஏறிவிடும் ஆட்டிசம் பாதிப்புடன் பேச்சு வராத குழந்தைகள், மேடையில் தங்கள் மனம் போன போக்கில் விளையாடுவதும், திடீரென போப் பேசும்போது அவரை இடைமறித்து ஏதோ சொல்ல விரும்புவது போலும் உள்ளது. அவர்கள் என்ன கூற விரும்புகிறார்கள்? அவரும் இன்முகத்துடன் "அந்தக் குழந்தைகளை யாரும் தடுக்க வேண்டாம். அவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக உள்ளது. அவர்களுக்கு மனதில் சரி என்று பட்டதை செய்யும்போது அந்த சுதந்திரம் நமக்கு இல்லையே என்று ஏங்கத் தோன்றுகிறது" என்று கூறுகிறார்.
எனது பார்வையில் ஞானப்பழக் கதைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஞானப்பழக் கதையில் முருகன் ஞானப் பழத்தினை அடைவதற்காக உலகெல்லாம் சுற்றி வருகிறார் (இது நாம் ஐம்புலன்களின் மூலம் பெறும் உலக அறிவைக் குறிக்கிறது!). ஆனால்
வேழமுகத்தோன் விநாயகனோ எங்கும் செல்லாமல் தனது தாயையும் தந்தையும் சுற்றிவந்து ஞானப்பழத்தை பெறுகிறார்.
இதில் தாய் என்பது சக்தி (திரவ வடிவமான வாலை!)
தந்தை என்பது சிவம் (திட வடிவமான மூளை!). அதாவது நீங்கள் படித்தோ, உலகைச் சுற்றியோ ஐம்புலன்களின் துணைகொண்டு (sensory perception) அனுபவத்தால் பெறக்கூடிய அறிவை, இருக்கும் இடத்தில் இருந்தே தாயையும் தந்தையையும் வேண்டி தியானித்து யோகத்தில் ஆழ்ந்தால் ஞானமாகப் பெறலாம். அதாவது 'உடல் தான் கோவில்! உங்கள் உள்ளமே இறைவன்!'.இதை உணர்ந்தவர்களுக்கு அனுபவ அறிவோ, ஏட்டுக் கல்வியோ தேவையில்லை என்பதே இதன் உட்பொருள்.
No comments:
Post a Comment