'உலகின் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் தனிநபர்களைப் பற்றிய விஷயங்கள் என அனைத்துத் தகவல்களும் அண்டத்தின் ஓரிடத்தில் பதிவு செய்யப்படுகின்றன' என்று சொல்வார்கள். அதற்கு "Aakashik Records"என்று பெயர் (சித்திரகுப்தன் கையில் இருக்கும் கணக்குப் புத்தகம் இதுதானோ?). இன்று தகவல் தொழில்நுட்பத்தில் நாம் பயன்படுத்தும் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' முறையும் இதுதான். நமக்கு வேண்டிய தகவல்களை நமது கணினியிலோ, தொலைபேசியிலோ சேமித்து வைக்கத் தேவையில்லை. ஏதோ ஒர் இடத்தில் இருக்கும் சர்வரை இன்டர்நெட் உதவிகொண்டு தொடர்பு கொண்டால் நமக்கு வேண்டிய தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.அதேபோல் கூகுள் போன்ற தேடு பொறிகள் (search engines) நீங்கள் ஒரு வார்த்தையை குறிப்பிட்டால் அதை கணப்பொழுதில் உலகிலுள்ள கணினிகளையெல்லாம் தேடி அலசி உங்களுக்கு வேண்டிய தகவலை கண்முன் காட்டிவிடும். இப்படியே சில மனிதர்களால் தனக்கு வேண்டிய தகவல்களை தேவைப்படும்போது ஆகாயப் பதிவுகளிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். சித்தர்களும், ஞானிகளும், சவான்ட் சின்ட்ரோமும் உள்ளவர்கள் முன் பின் தெரியாதவர்களைப் பற்றியும், தெரியாத விஷயங்களைப் பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பது இப்படித்தானோ? நான் நினைக்கிறேன் 'ஒரு படைப்பு என்பது யாரோ ஒருவருடைய மனதில் தோன்றும் ஒரு கற்பனை தானே? அந்த கற்பனையில் அவர் ஒரு படைப்பை முழுமையான வடிவத்தில் எதிர்காலத்தில் பார்க்கிறார். பிறகு அதற்கு செயல்வடிவம் கொடுக்க நிகழ்காலத்தில் முயல்கிறார்' என்று சொல்லலாமா? அப்படியானால் அந்த படைப்பாளி தனது மனதைப் பயன்படுத்தி சிறிது தூரம் காலப் பயணம் மேற்கொண்டு முன்னோக்கி சென்று எதிர்காலத்தைப் பார்த்துவிட்டு நிகழ்காலத்திற்கு திரும்புகிறார் என்று வைத்துக் கொள்ளலாமில்லையா?
பொதுவாக இறந்தகாலத்தை அனைவராலும் மனதில் கொண்டு வந்து பார்க்க முடியும் என்பது சாத்தியம் தானே? அப்படியானால் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்பதும் சாத்தியமே!
இசைஞானியும் இசைப்புயல் சொல்லும் ரகசியம்: சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா அவர்கள் "தனக்குத் தோன்றும் கற்பனையானது முழு வடிவம் பெற்ற இசையாக மனதில் அப்படியே கேட்கிறது. எனவே கருவிகளை இசைத்து இசை கோர்க்காமல் நேரடியாக இசைக் குறிப்புகளாகவே எழுதி விடுவேன்" என்று கூறியுள்ளார். மேலும் "இசை என்னைத் தேர்ந்தெடுத்து என் மூலமாக வெளிப்படுகிறது. இதில் எனக்கு எந்த வேலையும் இல்லை"என்று அவர் கூறுவது முற்றிலும் உண்மையே தவிர அதில் துளியும் ஆணவமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். அதேபோல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் தனக்கு கற்பனை என்பது எல்லையற்ற ஒரு இடத்திலிருந்து வருவதாகவும், அந்த இசையே ஒருவரின் மனதைத் தொடக்கூடியது என்றும் சமீபத்திய பேட்டியில் ஒன்றில் கூறியுள்ளார். இவர்கள் இருவருமே தியானம் செய்பவர்கள் என்பதை நீங்கள் இங்கே மனதில் கொள்ள வேண்டும். அவ்வாறு மனதில் கேட்கும் இசையை உரிய வடிவத்தில் பதிவு செய்து பிறருக்குக் கொடுக்க இவர்கள் முறையாக இசைக் குறிப்புகளை எழுதவும் பயின்றுள்ளார்கள். கிட்டத்தட்ட நாற்பது வயதை நெருங்கும் எனக்கு இந்தக் கொரோனா காலத்தில் இசையமைக்கும் திறமை புதிதாக வந்துள்ளது. இதுகூட எனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மாற்றம் என்று உணர்கிறேன். எனக்குள்ளும் அழகான இசை கேட்கிறது! ஆனால் எனக்கு முறையான பயிற்சி இல்லாததால் அதை இசைப்பதற்கு அதிகம் சிரமப்படுகிறேன். நான் மனதில் கேட்ட இசைக்கும் அதையே நான் வாசித்தபோது கேட்ட இசைக்கும் அதிக வேறு இருப்பதாக உணர்கிறேன். எனவே நமது கற்பனைக்கும் அதை செயல்படுத்தும் விதத்திற்கும் உள்ள தொலைவே நமது வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று சொல்லாமல்லவா?
மொபைல் இயங்கு தளங்களுகும் குண்டலினி எழுச்சிக்கும் உள்ள தொடர்பு: என்னைப் பொருத்தவரை 'எந்த ஒரு படைப்பும் எண்ணங்களுக்கு கொடுக்கப்பட்ட செயல்வடிவம்' என்று உறுதியாக நம்புகிறேன். இங்கே நான் குறிப்பிட போவது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த ஒப்பீடு!
ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்கு தளங்கள் குறிப்பிட்ட வரையறைக்குள் இயங்கும்படி அவற்றின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு நமக்கு அந்தந்த நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இதை நான் ஒரு சாதாரண மனிதனின் மூளையோடு ஒப்பிடுகிறேன். அதாவது அங்கீகாரம் இல்லாத செயலிகளை உங்களால் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது. அதேபோல் தேவையில்லை என்று நினைத்தாலும் சில செயலிகளை உங்களால் நீக்க முடியாது. ஆனால் இந்த இயங்குதளங்களை முற்றிலுமாக மாற்றி உங்களுக்கு ஏற்ற வகையில் மொபைலில் பயன்படுத்த வழிவகை உள்ளது. இதற்கு ஆண்ட்ராய்டில் 'ஃபிளாஷிங் பிராசஸ்' (flashing process) என்று பெயர். ஐஓஎஸ்ஸில் இதை 'ஜெயில் பிரேக்கிங்' (jail breaking) என்று சொல்வார்கள். நீங்கள் அப்படிச் செய்துகொண்டால் உங்களுக்கு வேண்டிய செயலிகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம். உங்களது கைபேசியின் ஆற்றலைக் கூட மாற்றியமைத்துப் பயன்படுத்தலாம்.ஆனால் இப்படி செய்வதால் உங்கள் கைபேசிக்கு அதன் உற்பத்தியாளர் வழங்கியுள்ள உத்தரவாதம் ரத்தாகும். இதை நான் குண்டலினி எழுச்சி அடைந்த மூளையோடு ஒப்பிடுகிறேன். 'குண்டலினி' எழுச்சி அடைந்தால் உங்களது மூளையின் ஆற்றல் மற்றும் செயல்பாடு மாற்றி அமைக்கப்படுகிறது. அதேநேரம் இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் இல்லையா?
No comments:
Post a Comment