திருமந்திரம் சொல்லும் மூன்றாம் தந்திரம் சமாதி யோகம் (அஷ்டாங்க யோகத்தின் இறுதி நிலை!)
பாடல் எண்: 630
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும் ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே முன்நின்ற
விளக்கம்:
ஒப்பற்ற தனிப்பெரும் ஜோதிச் சுடர் ஒளியாய் நின்று ஈசனும் ஆதியாக அருளும் சக்தியும் உடம்பினுள் நின்ற ஆன்மாவும் ஒன்றே ஆகும்.
இம்மூன்றையும் ஒன்றாக்கி ஒன்றி இருப்பதே சமாதி யோகம் .
இந்த சமாதி நிலையில் நிற்கும் ஞானிகள் ஆதி பிரம்மனும் நீல வண்ணம் கொண்ட திருமாலும் சிவமே என்று அடிபணிந்து அன்பு செய்வார்கள்.
அதாவது வாசியை (உயிர்க் காற்றை!) புறம் போக விடாது பரம்பொருளில் நிலைக்கச் செய்து அந்தப் பொருள் ஒன்றினையே பற்றி ஒருங்கி இதனை உணர்ந்து அங்கேயே தவ சாதனையில் நின்றிருந்தால் பிராண வாயுவும் அங்கேயே மடங்கி உயிரின் உள்ளேயே அடங்கி நின்று விடும்.
தனித்தனி கடவுள்களாக ஆண் வேறு, பெண் வேறாக சொல்லத் தொடங்கி, ஒரு இடத்தில் சிவனும்-சக்தியும் ஒன்றெனக்கூறி; இங்கே தான் யோக மார்கத்தால் தூண்டப்பட்ட உயிர் மூச்சு நிலை நிறுத்தப்பட வேண்டும் என்கிறார். அப்படி ஒரு நிலையை எட்ட முடிந்தால் , அங்கே நாம் காண்பது நம்மைப் படைத்த பிரம்மனும், ஹரியும் (திருமால்)-சிவனும் ஒன்றென உணரமுடியும். இது தான் 'பரம்பொருள் ' எனும் 'பிரும்மம்'. இதுவே இறைவனிடம் கலக்கும் தத்துவம். இந்த விளக்கம் புரிகிறதா? இதையே சற்று விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போமா?
நான் முன்பே கரடி குளிர்காலத்தில் உணவும் நீரும் அருந்தாமல் உறக்கத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தேன். இவை தவிர குளிர் பிரதேசங்களின் தென்படும் குரூஸியன் கார்ப் மற்றும் தங்க மீன் போன்றவை குளிர்காலத்தில் அவை வாழும் நீர் நிலைகள் உறையும்போது, தங்கள் உடலில் இருக்கும் லாக்டிக் அமிலத்தை எத்தனால் மற்றும் ஆல்கஹாலாக மாற்றி அவற்றிலிருந்து பிராண வாயுவை எடுத்துக் கொள்ளுமாம். அசைவில்லாமல் குளிர்காலத்தில் இறந்தது போல் காட்சியளிக்கும் அவை பனி உருகத் தொடங்கியதும் மீண்டும் உயிர் பெற்றது போல் நீந்தத் தொடங்கும். இதேபோல் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் காணப்படும் 'இகுவானா' என்று அழைக்கப்படும் ராட்ச ஓணான்கள், குளிர்காலம் வந்தால் இறந்தது போல் மரங்களிலிருந்து அசைவில்லாமல் தரையில் விழும். இவற்றை பத்திரமாக மீட்கும் தன்னார்வலர்கள்; அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைத்து மீண்டும் உயிர்பெற உதவுகிறார்கள். இவை எல்லாமே குளிர் ரத்தம் கொண்ட உயிரினங்கள். இவற்றால் புறச்சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியும். ஆனால் மனிதர்களாகிய நாமோ உஷ்ண ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது சாத்தியமில்லை என்பார்கள்.
சமீபத்தில் டெலாய்டு ரோடிஃபர் (bdelloid rotifer) என்னும் பல செல் நுண்ணுயிரி ரஷ்யாவின் சைபீரியாவின் உறை பனிக்குள் இருபத்தி நாலாயிரம் ஆண்டுகள் 'சமாதி நிலையில்' இருந்து விட்டு இப்பொழுது மீண்டும் உயிரோடு வந்ததோடு இல்லாமல், இணையின் துணையின்றி இனப்பெருக்கமும் செய்துள்ளது. இதை ஆங்கிலத்தில் 'கிரிப்டோ பயோஸிஸ்' (cryptobiosis) அல்லது ஹைபர்னேஷன் (hibernation) என்பார்கள். இதேபோன்று மாறுபட்ட சூழல்களில் வாழக்கூடிய மற்றொரு நுண் உயிரினம் தான் நீர்ப் பன்றி (tardigrade).இவ்விரு உயிரினங்களுமே அதி உஷ்ணமான அணுக்கதிர் வீச்சிலும், உறை பனியின் கடுங்குளிரிலும் தாக்குப்பிடித்து வாழும் தன்மை கொண்டவை.
இதில் நீர்ப் பன்றிகளை( Tardigrade) ஆராய்ந்தபோது அவைகளின் உடலில் காணப்படும் TDP (Tardigrade intrinsically disordered proteins) எனும் புரதம் அவற்றின் உடல் வரண்டுபோகும் போது மீண்டும் சுரந்து அவற்றை உயிர்பிக்கச் செய்கின்றன.
ஆனால் நம்மாலும் குளிர் ரத்தம் கொண்ட உயிரினங்களைப் போல் சமாதி நிலையை (கிரிப்டோபயோஸிஸ்) அடைய முடியும் என்பதைத் தான் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த சித்தர்கள் தங்களது ஜீவ சமாதிகளின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள். அதனால் தான் ஜீவ சமாதி இருக்கும் இடங்களில் ஆற்றல் அதிகம். எனவே நாம் முழு நம்பிக்கையுடன் மனமார வேண்டினால் நிச்சயம் நிறைவேறும் என்பார்கள். பெரும்பாலான ஜீவசமாதிகளில் இருக்கும் சித்தர்களின் உடல்கள் எத்தனை ஆண்டுகளானாலும் கெடுவதில்லை. நகம்,முடி மற்றும் தோல் போன்றவை அப்படியே இருக்கின்றன. யோகத்தையும், தியானத்தையும் கருத்தாய்ப் பழகும் யோகிகள், சித்தர்கள் தங்கள் உச்ச நிலையாக 'சமாதி' நிலையைத் தான் தேர்ந்தெடுத்து அடைகிறார்கள். இதன்போது அவர்கள் பெற்ற அறிவானது அவர்களின் உடலிலுள்ள செல்களிலிருந்து கிளம்பி உயிரோடு ஒன்றி விடுகிறது என்று புரிந்துகொள்கிறேன். அப்படியானால் யோகமும் தியானமும் மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனிதர்களையும் தாண்டி மற்ற உயிரினங்களுக்கும் பொதுவானது என்றே நம்பத் தோன்றுகிறது. மேற்கூறிய திருமந்திரப் பாடல் சொல்லும் உயிரை விடாமல் உள்ளேயே வைத்து இறைவனுடன் ஐக்கியமாகச் சொல்வதன் தத்துவமும் இதுவே.
சில கிழங்கு வகை தாவரங்களைக் கூட எடுத்துக்கொள்ளுங்கள்! பெரும்பாலும் அவற்றின் இலைகள் கருகி விட்டாலும், அவற்றின் கிழங்கை நாம் பாதுகாப்பாக வைத்து பராமரித்து மீண்டும் நட்டு வைத்தால் அவை உயிர்பெறும். தாவரங்களின் 'ஆணிவேரை' நான் நமது 'முதுகுத் தண்டு'டன் ஒப்பிடுகிறேன். ஆணிவேர் இல்லை என்றால் தாவரம் இறந்துவிடும். அதாவது அவற்றின் 'உயிர்' அங்குதான் உள்ளது நமக்கு முதுகுத்தண்டில் இருப்பது போல். தாவரங்களில் 'சல்லி வேரை' நமது நரம்புகளோடும், அவற்றின் கிழங்குகளையும், பழங்களையும் நமது தலையில் உருவாகும் 'அமிர்தத்தோடு' (ஞானப் பழம்) ஒப்பிடுகிறேன். எல்லாத் தாவரங்களிலும் வெற்றிகரமாக கனிகளும் கிழங்குகளும் உருவாவதில்லை. அதுபோல்தான் 'ஞானமும்' எல்லோருக்கும் கிட்டுவதில்லை.
நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளிக் கழகம் போன்றவை தங்களது எதிர்கால நெடுந்தூர விண்வெளிப் பயணங்களின்போது அதிக சவாலான மற்றும் செலவு தரக் கூடிய விஷயமான விண்வெளி வீரர்களுக்கான உணவு மற்றும் நீரின் தேவையின்றி அவர்களை 'கிரிப்டோபையோசிஸ்' முறையில் (சமாதி நிலையில்) வைத்து விண்வெளி ஓடத்தில் அனுப்பி, இறங்க வேண்டிய இடம் வரும் போது அவர்களை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்ப தேவையான ஆய்வுகளை தற்போது மேற்கொண்டுள்ளது. யோகி பிரகலாத் ஜானியை வைத்து நமது விஞ்ஞானிகள் செய்ததும் இதே ஆராய்ச்சி தானே?
மீண்டும் ஆன்மீகப் பாதைக்கு வருவோம்!
கீதையில் கிருஷ்ண பரமாத்மா "உடலுக்கு தான் அழிவு. ஆனால் ஆன்மா அழியாது மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும்" என்று சொன்னதை இங்கே நாம் நினைவு கொண்டால், அப்படி அழியும் உடலைக் கூட ஒரு சிலரால் அப்படியே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாது அவர்கள் கற்ற அறிவையும் தங்கள் உயிரோடு சேர்த்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள்.
கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்பு முக்தி அடைந்த ராமானுஜரின் திருமேனி இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பாக உள்ளது.
எப்படி நீரானது ஆவியாகி, மேகமாகி மீண்டும் மழையாய் பொழிந்து பூமியில் சேர்கிறதோ; அதேபோல் பிரியும் உயிர் மீண்டும் வேறு உடலைத் தேடி வந்துவிடுகிறது. இந்தச் சங்கிலியிருந்து விடுபடவே கர்மவினையினை அறுத்து தனக்குப் 'பிறவா நிலை' வேண்டும் என்று அடியார்கள் இறைவனை வேண்டுகிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் அந்த உயிர் எங்கே இருக்கிறது? யார் மீண்டும் திருப்பி அனுப்புகிறார்கள்? எந்தப் பெற்றோர்க்குக் குழந்தையாக? போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் விடை உள்ளதா?
உயிர்கள் மட்டுமா? இந்தப் பிரபஞ்சமே ஒவ்வொரு பிரளயத்திலும் மறுபிறப்பு எடுக்கின்றது என்கிறார் சர் ரோஜர் பென்ரோஸ் என்ற 2020க்கான நோபல் பரிசு பெற்ற கணித மேதை . இவரின் கூற்றுப்படி பிரளயதிற்கு முன்பு இருந்த பிரபஞ்சம் அழிந்து மீண்டும் உருவாகி உள்ளது. இப்போது நாம் இருப்பது அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதுவும் அழிந்த பிறகு மீண்டும் உருவாகும் என்கிறார்.
No comments:
Post a Comment