அஹம் பிரும்மாஸ்மி: எனது பிளாகின் இந்தப் பக்கத்தில் நான் மிக விரிவாக விளக்கப் போவது, எப்படி தியானமும் யோகமும் பயிற்சி செய்தால் நமது உடலில் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு நமது சிந்தையில் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைப் பற்றியே. இந்த மாற்றங்களின் இறுதி வடிவம்தான் நம்முள்ளே இறைவனைக் காண்பது. இதுவே 'அஹம் பிரும்மாஸ்மி'. இதற்கு சற்று நேரம் ஒதுக்கி ஆழப்படித்தால் நாம் யார், கடவுள் யார் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். முழுவதும் படிக்கப் பொறுமை இல்லாதவர்கள் அடுத்த பகுதிக்குச் செல்லலாம். ஆனால் இந்தப் பகுதியைத் தான் எனது பிளாக்கின் உயிர் நாடி என்பேன். இதை புரிந்துகொண்டால் யோகா, தியானத்திற்கும் சவாண்ட் சின்ரோமிற்கும் உள்ள தொடர்பை நான் எவ்வாறு நிறுவினேன் என்பதைப் பின்னர்வரும் பகுதிகளில் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.
பிரும்மம் ஒக்கடே: இனி எப்படி யோகமும் (உடலையும்) தியானமும் (மனதையும்) ஒரு மனிதனை பண்படுத்த உதவும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம். இதில் நான் கொடுத்துள்ள விளக்கங்கள் தூரகிழக்கு நாடுகளைச் சேர்ந்த 'சீகோங்' மற்றும் 'டாய் சீ' போன்ற பயிற்சிகளைக் கற்பிக்கும் குருமார்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தழுவி நான் எழுதியது. இதே விதத்தில் தான் நமது யோகக் கலையும், தியானமும் செயல்படுகிறது என அறிகிறேன். எனவே நாம் கற்கும் யோகம் எந்த வகையைச் சேர்ந்ததாக இருப்பினும் சரி அதன் இறுதி நிலை ஒன்றே. அதாவது அனைத்தின் பலனும் ஒன்றுதான். இதே தான் நமது மதங்களின் நோக்கமும்! நாம் பின்பற்றும் மார்க்கம் வேறு வேறாக இருப்பினும் இறைவன் என்பது ஒரே 'பரம்பொருள்' (பிரும்மம் ஒன்றுதான்) தான்! அதை அடைவதும் ஒரு நிலைதான்! பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்த்த அன்னமாச்சார்யார் பாடிய "பிரும்மம் ஒக்கடே" என்ற பாடலின் பொருளும் இதுவே!
சக்கரங்கள் (நாளமில்லா சுரப்பிகள்- Endocrine system): பயனியல் சுரப்பி, ஹைபோதாலமஸ், தைராய்டு, பாராதைராய்டு, அட்ரீனல், பாங்கிரியாஸ், பெண்களுக்கு ஓவரீஸ் ஆண்களுக்கு டெஸ்டிஸ் என்று நிறைய இருக்கின்றன. இவை வெளியிடும் ஹார்மோன்கள் செய்திகளை கொண்டு செல்ல உதவும் கெமிக்கல் தூதர்கள் என்று சொல்லலாம். அதே வேளையில் நமது நரம்பு மண்டலத்தை மின் அதிர்வுகளை கடத்தும் தூதர்கள் எனலாம். இவை இரண்டும் நடத்தும் ஜாலங்களை இனி சற்றே விரிவாகக் காண்போம்.
தெய்வீக அனுபவங்கள்: இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக ஹைலுப்போதலாமஸ், பயனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளைச் சொல்லலாம். இவை மூன்றாவது உச்சிக்குழி (3rd ventricle) இருக்கும் இடத்தில் இருப்பதால் இவை அனைத்தையும் சேர்த்துதான் 'கண்ணாடி மாளிகை', கடவுள் இருக்கும் இடம், 'ஆக்ஞசக்கரம்' என்றெல்லாம் சொல்கிறோம். நமது நரம்பு மண்டலத்தையும், நாளமில்லா சுரப்பிகளையும், லிம்பிக் தொகுதி (உணர்ச்சிகள்/பாவங்களை வெளிப்படுத்தும் பகுதி) என்று அழைக்கப்படும் பகுதிகளையும் ஒருசேர தொடர்புகொள்ள முடிந்த காரணத்தால் 'ஹைபோதாலமஸ்' அதி முக்கியத்துவம் பெறுகிறது.
ஹைபோதாலமஸ்: ஒரு பாதாம் பருப்பின் அளவில் இருக்கும் இந்த சுரப்பி நமது கண்களின் நரம்புகள் குறுக்கும் நெடுக்குமாக மூளையில் பின்னிச் செல்லும் இடத்திற்குப் பின்னால் அமைந்துள்ளது. இது மேலும் சில ஹார்மோன்களைச் சுரந்து பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி அதன்மூலம் பயனில் சுரப்பியையும் விழிப்படையச் செய்கிறது.
பிட்யூட்டரி சுரப்பி: ஹைபோதலமஸிற்குக் கிழே ஒரு பட்டாணி அளவில் அமைந்திருக்கும் இந்த சுரப்பி 'செல்லா டூர்ஸிக்கா' என்னுமிடத்தில் 'ஸ்பீநாய்டு' எலும்பின் மேல் அமைந்திருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வாயின் மேல் அண்ணத்திற்கு மேலே தான் இச்சுரப்பி அமைந்துள்ளது. நீங்கள் நாக்கை உள்மடக்கி மேல் அண்ணத்தைத் (upper palate) தொடமுடிந்தால் (இதுவே 'கேசரி முத்திரை') நீங்கள் பிட்யூட்டரி சுரப்பியின் அடிப்பகுதியைத் தூண்டுகிறீர்கள் என்று பொருள். இந்த எலும்பு மிகவும் நுட்பமானது.எனவே சிறு அசைவும், இதன் நிலையில் உண்டாகும் நுட்பமான மாற்றமும் ஹார்மோன் அளவுகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்கலாம்.
பிட்யூட்டரி சுரப்பியும் ஹைப்போத்தலாமஸ்ஸும் செய்யும் விந்தைகள்: இவை இரண்டும் சேர்ந்து இயங்கும்போது மூளையின் பிற பகுதிகளையும், உடலின் மற்ற உறுப்புகளையும், மனித உணர்ச்சிகளையும் கட்டுப்படுப்படுத்துகின்றன. மாற்றங்களை உண்டாக்குகின்றன. எப்படி?
இவை இரண்டும் சேர்ந்து தான் உடல் உஷ்ணம், பசி, தாகம், சோர்வு, வளர்ச்சி உறக்கம், எடை, இச்சை, வலி தாங்குதல், இரத்த அழுத்தம், உடல் கடிகாரம் (circadian rhythm), வினை, எதிர்வினை என அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன. 'தலையாய சுரப்பி' என்று நாம் பிட்யூட்டரி சுரப்பியை சொன்னாலும், ஹைபோதலமஸ் தான் அதற்குத் தேவையான தகவல்களை உடலின் பல பாகங்களிலிருந்தும் பெற்று வந்து நரம்பில் சுரக்கும் சில ஹார்மோன்களின் மூலம் பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி வேலை செய்ய வைக்கிறது. இதைத்தவிர பயனியல்(ஆனந்த) சுரப்பியையும் இயங்க வைப்பது ஹைபோதாலமஸ் தான்.
பிட்யூட்டரி சுரப்பியின் முன்பக்கமானது 7 முக்கியமான ஹார்மோன்கள் சுரக்கக் காரணமாகிறது. இதனால் தான் பால் சுரப்பி, விதைகள், தைராய்டு மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன.
பிட்யூட்டரியின் பின்பக்கத்தில் எந்த ஹார்மோனும் சுரப்பதில்லை என்றாலும் மூளையில் சுரக்கும் ஆக்சிடோசின், வாசோப்பிரசின் என்ற இரண்டு முக்கிய ஹார்மோன்களை தேக்கி வைத்து தேவைப்படும்போது வெளியேற்றுகிறது.
சிற்றின்ப எண்ணங்கள் ஏற்படக் காரணமான ஆக்சிடோசின்: இது தான் பொருளாசை, பற்றுதல் நம்பிக்கை, இச்சை போன்ற 'சிற்றின்ப எண்ணங்கள்' ஏற்படக் காரணமாக அமைகிறது. கைலாயம் தான் 'மூன்றாவது உச்சிக்குழி' என்றால் ராட்சஸ ஏரியை நான் ' ஆக்சிடோசின்' னுடன் ஒப்பிடுகிறேன்.
பேரின்ப எண்ணங்கள் ஏற்படக் காரணமான வாசோப்பிரசின்: கைலாயம்தான் 'மூன்றாவது உச்சிக்குழி' என்றால் மானசரோவர் ஏரியை நான் ' வாசோபிரிஸின்'னுடன் ஒப்பிடுகிறேன்.உடல் கடிகாரம், உடல் நீர் ரத்தத்தில் கலப்பது, தாய்மை உணர்வு ஆகியவை ஏற்படக் காரணமாக அமைகிறது. பேரின்ப எண்ணங்களைத் தூண்டுகிறது.
பயனியல்(ஆனந்த) சுரப்பி: நமது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணமாக அமைவது பிட்டியூட்டரி சுரப்பியே. மேலும் இது பயனியல் (ஆனந்த) சுரப்பியையும் தூண்டிவிடுகிறது. பிட்யூட்டரி சுரப்பியும் பயனியல்(ஆனந்த) சுரப்பியும் கைகோர்த்து ஓர் அலைவரிசையில் வேலை செய்தால் நாம் உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் புதுப்பிக்கப்படுகிறோம். இது வெளியிடும் பீனோலின், டிஎம்டி போன்ற ஹார்மோன்கள் உடலிலும் மனதிலும் மாற்றத்தை உண்டாக்கக் கூடியவை.
அதிக 'டிஎம்டி' சுரப்பது அமானுஷ்ய மற்றும் பரவச நிலையைக் கொடுக்கும். சில தாவரங்களிலும் இது சுரக்கிறது. இவற்றிலிருந்து கிடைக்கும் போதைப் பொருட்களை உட்கொள்ளும்போது டிஎம்டி சுரப்பதை அதிகப்படுத்தி தன்நிலையை மறக்கச் செய்யுமென முன்பே பார்த்திருந்தோம்.
பயனியல் (ஆனந்த) சுரப்பி-எங்கு அமைந்துள்ளது? நடு மூளையில் பிட்யூட்டரி சுரப்பிக்குப் பின்னால் சற்று மேலாக அமைந்துள்ளது. இது முழுவதுமாக வாலை நீரால் (CSF-Cerebro Spinal Fluid) குளிப்பாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் கியூபிக் கொள்ளளவில் உடலிலேயே அதிக ரத்தம் பாய்வதும் இங்குதான். இதை உடலின் சக்தி மிகுந்த இடமெனலாம். இதுவே தூக்கத்தைக் கொடுக்கும் 'மெலட்டோனின்' என்ற ஹார்மோன் அதிகளவில் சுரக்கக் காரணமாகிறது. மெலட்டோனின் இருட்டில் அதிகம் சுரக்கிறது, வெளிச்சத்தில் குறையத் தொடங்குகிறது. அப்படி உற்பத்தியாகும் மெலட்டோனின் வாலை நீரில் கலந்து (CSF-Cerebro Spinal Fluid) மூளை முழுவதும் வியாபிக்கிறது. மெலடோனின் அளவு தடைபடுவதே எண்ண ஓட்ட மாறுதல்கள், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை ஏற்படக் காரணமாக அமைகிறது.மேலும் வயதைக் குறைத்துக் காட்டும் கார்டிசாலைக் கட்டுப்படுத்துவது, குறிப்பிட்ட பருவங்களில் வரும் நோய்கள் முதலியவற்றிற்கும் மெலடோனின் அளவே காரணமாக அமைகிறது.
மெலடோனினைத் தாண்டி ஒரு யோகியால் தியானத்தின் மூலம் பண்படுத்தப்பட்ட பயனியல் (ஆனந்த) சுரப்பியானது வளர்ச்சிதை மாற்றங்களை செல் அளவில் உண்டாக்கி உடலையும் மனதையும் கட்டுப்படுத்தக்கூடிய சில முக்கிய ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள 'செரட்டோனின்' என்ற வேதிப்பொருள். இதுவே பினோலின் மற்றும் டிஎம்டி சுரக்க மூல காரணமாக அமைகிறது. இவ்விரண்டு ஹார்மோன்களும் உடலையும் மனதையும் இணைக்கவல்லது.
பயனியல்(ஆனந்த) சுரப்பியின் ஆன்மீகத் தொடர்பு: மேலே குறிப்பிட்டது போல் ஒரு யோகியால் தியானத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட பயனியல்(ஆனந்த) சுரப்பி அவரை ஆன்மீகத்துடன் இணைக்கிறது. பைன் மரக் கூம்பு போல் காட்சியளிக்கும் இச்சுரப்பி பண்டைய நாகரீகங்களைக் குறிக்கும் படங்களிலும், சிலைகளிலும் காணப்படுகிறது. இது ஞானத்தையும், சாகாவரத்தையும் குறிப்பால் உணர்த்துகிறது. பண்டைய எகிப்தியர்கள் மன்னர்களும், முக்கியஸ்தர்களும் இறந்த பின்பு அவர்களின் உடலைப் பதனிடும்போது இப்பகுதியை வாயின் மேல் அண்ணததிலிருந்து துளையிட்டு தனியாக வெட்டியெடுத்து விடுவார்கள்.
பயனியல் (ஆனந்த) சுரப்பி- மூன்றாவது கண்ணைத் திறக்க உதவும் திறவுகோல்: மனக் கண்ணால் பார்ப்பது, ஞானம் அடைவது போன்றவற்றிற்கு பயனியல் (ஆனந்த)சுரப்பிக்கும் கண்களின் ரெட்டினா பகுதிக்கும் உள்ள தொடர்பு காரணமாக அமைந்திருப்பதாக விஞ்ஞானிகள் பல உயிரினங்களையும் ஆய்வு செய்ததன் மூலம் உணர்த் தொடங்கியுள்ளார்கள். இது இப்பொழுது தொடங்கிய வினையல்ல, உயிரினங்கள் உருவான காலத்திலிருந்தே தொடங்கி மனித இனம் உருவான காலம்வரை முக்கிய பங்காற்றியுள்ளது. மனிதக் கண்களின் ரெட்டினாவில் உள்ள செல்களும் பயனியல்(ஆனந்த) சுரப்பியில் உள்ள செல்களும் அவற்றின் அமைப்பும், புரோட்டீன்களும் ஒன்றுபோல் அமைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
ஞானப் பல்லுக்கு (wisdom tooth) நான் சொல்லும் பெயர்க் காரணம்: பொதுவாக நமது வாயின் கடைசியில் இருக்கும் கடைவாய்ப் பல்லை ஞானப் பல் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பருவ வயதை கடந்த பிறகே வளரும். சிலருக்கு வாயின் மேல் வரிசை கடைவாய்ப் பல்லை வேரோடு பிடுங்க நேர்ந்தால் அவர்களுக்கு தவறுதலாக சைனஸ் பாதை திறந்து அதன் மூலம் தலையிலிருந்து வாலை நீர் (CSF-cerebrospinal fluid) வாய்க்குள் சொட்டத் தொடங்கும். அதை பலரும் கோழையென என நினைத்து துப்பிக்கொண்டே இருப்பார்கள். இறுதியில் அந்த சைனஸ் பாதை மருத்துவர்களால் மூடப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு தீர்வு கிடைக்கும். இதேபோல் தலையில் பலமாக அடிபட்டால் மூக்கின் வழியாகவும் வாயின் வழியாகவும் வெளிப்படும் சளி அல்லது கோழை நாம் நினைப்பதும் இதே வாலை நீர் (CSF-cerebrospinal fluid) தான்.