நான் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு செய்து பார்த்ததில் என்னால் ஒரு சில விஷயங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதை ஓரளவிற்கு அறிவியலின் துணை கொண்டு விளக்கியும் இருக்கிறேன். அறிவியல் கைகொடுக்காத இடங்களில் ஆன்மீகம் கைகொடுக்கிறது. ஆனால் அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அனைவருக்கும் உள்ளதா?
மீனாட்சியின் பிரச்சனையைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சித்த நான் இறுதியில் புரிந்துகொண்டது என்னவோ ஆன்மீகத்தைப் பற்றி தான். இப்பொழுது மீனாட்சி யார் என்பதைப் பற்றிய எனது ஆய்வின் முடிவை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!
மீனாட்சி தனது முற்பிறவியில் ஒரு யோகியாகப் பிறந்து (ஆணாகவா இல்லைப் பெண்ணாகவா? தெரியாது!) 'க்ரியா' அல்லது 'வாசி' போன்ற உயர்நிலை யோகக் கலையைக் கற்று, குண்டலினியை எழுப்பி மூன்றாவது உச்சிக் குழியில் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்.
கர்மவினைகளை அறுக்கப் பிறவா வரம் வேண்டி சமாதி நிலையை அடையும் முன்பே பின்னந்தலையில் ஏற்பட்ட விபத்து அல்லது காயம் போன்ற பாதிப்பால் இறந்திருக்க வேண்டும்.இதனால் தான் இவள் மீண்டும் பிறப்பெடுத்துள்ளாள். இப்பிறவியில் அவளது பின்னந்தலையில் தென்படும் அந்தக் காயம் தான் 'இரத்தக் குழல் கட்டி' (hemangioma). பிறவியில் தென்படும் மச்சம்,காயம் போன்றவற்றுக்கும் முற் பிறவியில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நாம் அறிவியல் பூர்வமாக முதலிலேயே பார்த்திருக்கிறோம்.
அவளது மூளையின் அமைப்பு வித்தியாசமாக அமைந்ததற்கான காரணமென்ன?
சமீபத்தில் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றை பற்றி நான் படிக்க நேர்ந்தது.அதில் யோகம் மற்றும் தியானம் பழகும் போது மூளையில் உள்ள நியூரான்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதுடன் மூளையின் அமைப்பிலும் மாறுதல்களை உண்டாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதை இப்படி புரிந்து கொள்ளுங்கள்! ஒரு சிறிய பிளாஸ்டிக் குழாயில் அதிகமான அளவு நீர் வரும் போது அது விரிவடையுமல்லவா? அதேபோல் மூளையில் உள்ள நாளங்களில் சில குறிப்பிட்ட ஹார்மோன்கள் யோகமும் தியானமும் பழகும் போது அதிகம் சுரப்பதால் அளவில் விரிவடையலாம். இதனால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக இவற்றின் அருகில் இருக்கும் மற்ற பகுதிகள் சுருங்கலாம்.இது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பட்சத்தில், மூளையின் திட மற்றும் திரவ அளவுகளில் குறிப்பிடத் தகுந்த மாறுபாடுகள் ஏற்பட்டு சம்பந்தப்பட்டவருக்கு உடல் மற்றும் மன ரீதியாக (நேர்மறையான) தாக்கத்தை உண்டாக்கலாம். இதையே மீண்டும் பஞ்சபூத தத்துவத்தின்படி சொல்கிறேன்! ஒரு காலத்தில் நதிகள் பாய்ந்தோடிய இடங்களை இன்று பார்த்தால் கரடுமுரடாக மேடு பள்ளங்கள் அதிகம் கொண்டதாக இருக்கலாம்.இப்போது வெள்ளம் வந்தால் மேடு பள்ளங்களை மூடியபடி நதியானது அதே பாதையில் தான் மீண்டும் பயணிக்கும். இதுதான் நமது மூளைக்குள்ளும் நிகழ்கிறது. எனவே மீனாட்சியின் மூளையின் அமைப்பு வித்தியாசமாக அமைந்ததற்கு அவள் முற்பிறவியில் செய்த யோக சாதகமே காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இது இவளுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே பொருந்தும். தனிநபர்களின் செயல்பாடுகள் மூளையின் அமைப்பைப் பொறுத்து தானே அமையும்? எனவே தனிப்பட்ட மனிதர்களின் மூளையானது அவர்களின் முற்பிறவியின் தொடர்ச்சியாக இப்பிறவியில் தனித்தன்மை கொண்டதாக அமைகிறது என்றே நினைக்கிறேன்.அதாவது ஒருவருடைய மூளையின் அளவு அதில் உள்ள திட மற்றும் திரவங்கள் மற்றொருவரைப் போல் இருக்காது. அப்படியானால் இதைத் தான் 'தலையெழுத்தென்று' சொல்கிறார்களோ? அதே நேரம், ஒரே ஜாடையுடைய இரட்டையர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் உடல், பாலினம் மற்றும் மூளையென அனைத்துமே பிரதியெடுத்து வைத்ததுபோல் ஒன்றுபோல் இருப்பதால்தான் அவர்கள் உணர்வுகளாலும், செயல்களாலும் 'ஓருயிர் ஈருடல் போல்' வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். இரட்டையர்களுக்குள் டெலிபதித் தொடர்பு அதிகம் இருக்கிறதோ?
மீனாட்சிக்கு இப்பிறவியில் ஏற்பட்ட 'குண்டலினி எழுச்சி': நான் மேற்கூறிய காட்டாற்று வெள்ளத்துக்கு மீண்டும் வருகிறேன். முற்பிறவியில் அவளுக்குள் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம்தான் 'குண்டலி' எழுச்சி என்று வைத்துக்கொள்வோம். அதுதான் இப்பிறவியில் அவளுக்கு ஒண்ணேகால் வயதில் மீண்டும் கிளம்பி 'மூன்றாவது உச்சிக் குழியில்' சென்று அமர்ந்துள்ளது. இதனால் குழந்தைக்குள் நிகழ்ந்த பிரளயத்தைத் தான் மருத்துவர்கள் 'ரெக்ரஷன்' (regression) என்று குறிப்பிடுகிறார்கள்.
நான் முன்பே கூறியது போல் 'குண்டலி எழுச்சி' மனரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. அதை ஒரு பிஞ்சுக் குழந்தையால் எப்படித் தாங்க முடியும்? இதனால் தான் அவள் தன்னையும், தன் பெயரையும், புறச்சூழல்களையும் மறந்து 'பற்றற்ற நிலை'யை அடைந்திருக்கிறாள். இந்நிலையை அடைந்தவர்கள் யார்? ஞானிகள் தானே! அதனால் தான் அவள் ஒரு மெய்ஞானியாக தான் முற்பிறவிகளில் கற்ற பல மொழிகளையும் பண்டைய எழுத்து வடிவங்களையும் பாதுகாத்து வைத்த அறிவுச் செல்வத்தையும் (அதாவது அவளது உயிருடன் கலந்த 'ஞானம்') தற்போது அவளது 'செல்லுலர் மெமரி' தூண்டப்பட்டதன் வாயிலாக மீண்டும் நினைவு கொள்கிறாள் அனைத்தையும்.
இவ்வளவு தெரிந்தவள் தான் யாராக முற்பிறவியில் இருந்தோமென்று எப்பொழுதாவது கூறியிருக்கிறாளா? இதற்கு பதில் 'அவளால் நேரடியாக தான் யாரென்று கூற முடியவில்லை; அல்லது கூற விரும்பவில்லை!' என்றே புரிந்து கொள்கிறேன் (அதேபோல் நான் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் நான் உணர்ந்த 90 சதவீத உண்மையைத் தான்! பாக்கி 10 சதவீதத்தை வெளிப்படையாகச் சொல்ல எனக்கு தயக்கம் இருக்கிறது!).
முற்பிறவியில் உடலையும் உயிரையும் தனித்தனியாக பிரிக்கும் வித்தையைக் கற்ற காரணத்தால் தான் இப்பிறவியிலும் அவளது உடலே பிரபஞ்சத்தின் வாயிலாகமாறி (gateway to universe) அவளது எண்ணங்கள் பிரபஞ்சத் துகள்களில் ஏறி அமர்ந்து காலங்கடந்து பயணிக்கிறது. நான் ஏற்கனவே கூறியது போல் அந்த நதி செல்வதற்கான பாதை என்பது ஏற்கனவே (முற்பிறவியில்) அவளுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலுள்ள கரடுமுரடான பகுதிகள்தான் அவளது இப்பிறவியின் வித்தியாசமான மூளை அமைப்பின் பிரதிபலிப்பு. ஆழமான பள்ளகளிலும் நீர் (வாலை/CSF) பாய்வதால் தான் நமக்கெல்லாம் கிளம்பாத முற்பிறவி ஞாபகங்கள் அவளுக்கு அதிகமாக உள்ளது. இதன் காரணமாகத் தான் அவள் பிறந்தபோதே ரேவதியை தாயாக அங்கீகரிக்காமல் பால் குடிக்க மறுத்திருக்கிறாள். இதனடிப்படையில் பார்த்தால் நமக்கு தெரிந்த பிறவி மேதைகள் எல்லோருமே முற்பிறப்பின் தொடர்ச்சியாக பிறந்தது முதலே குண்டலினி எழுச்சியைப் பெறுகிறார்கள் (congenital savant). ஒரு சிலரோ தலையிலும் முதுகுத் தண்டிலும் அடிபட்ட பிறகு குண்டலினி விழிப்படைந்து திடீரென ஒரு நாள் 'ஞானி' ஆகிறார்கள் (acquired savant).
உண்மையில் சிறு உயிரினங்கள், விலங்குகள், ஊர்வன, தாவரங்கள் ஆகியவற்றிற்குக் கைவரப் பட்ட விஷயங்கள் நமக்கு அமானுஷ்யமாகவும் ஆச்சரியமாகவும் இருப்பதற்குக் காரணம் மனிதர்களாகிய நாம் இயற்கையை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதே. மனித நாகரிகத்தை எடுத்துக் கொண்டால் நாம் முதலில் வணங்கியது இயற்கையைக் தான். அதன் பின்னால் வந்தது தான் மதங்களும், உருவ வழிபாடும், தனிமனித வழிபாடுகளும். நாம் நம்மை இயற்கையின் ஒரு அங்கமாக நினைக்கத் தொடங்கினால் தனியாக கடவுளை வணங்கத் தேவையில்லை. ஏனென்றால் கடவுள் (இயற்கையில்) நமக்குள்ளேயே இருக்கிறார்.
உருமாறிய கொரோனாபோல் உருமாறிய யோகம்: எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக நான் கூறிய யோகமும் தியானமும்னமும் தானே?!அவற்றை இப்பிறவியிலும் இன்னும் மீனாட்சி தொடர்கிறாளா? ஆம்! ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகள் கயிறு, கைக்குட்டை போன்ற குறிப்பிட்ட சில பொருட்களை கைகளால் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.இதற்கு 'ஸ்டிம்மிங்' என்று பெயர். இது போன்ற நேரங்களில் இவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து தனி உலகத்தில் தானாக சிரித்துக் கொண்டோ இல்லை வித்தியாசமான ஒலிகளை எழுப்பியபடி சஞ்சரித்துக் கொண்டோ இருப்பார்கள். தெரப்பிஸ்டுகளைப் பொறுத்தவரை இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளை தன் போக்கில் செல்ல அனுமதிக்காமல் பெற்றோர்கள் தலையிட்டு அவர்களை மீண்டும் நம்முடன் பயணிக்க உதவ வேண்டும் என்பார்கள். என்னைக் கேட்டால் இதுதான் அவர்கள் யோகம் பழகும் நேரம். அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் எல்லாம் நமக்கெல்லாம் அப்பாற்பட்ட சக்திகளின் மூலம் கிடைக்கப் பெறுகிறது. என்னைப் பொறுத்தவரை இவர்கள் செய்வது உருமாறிய யோகாசனம் தான். மீனாட்சி கூட பின்னிரவு நேரங்களில் படுத்துக் கொண்டு கையில் எதையாவது சுற்றிக்கொண்டே 'கபாலபாதி' (reverse breathing) போன்ற பயிற்சிகளை தன்னிச்சையாகச் செய்வதை கவனித்திருக்கிறேன். இவள் தங்கள் கனவில் வருவதாக மற்றவர்கள் குறிப்பிடுவதும் இதே நேரத்தைத் தான்.
இவ்வளவு ஏன்? தாயின் வயிற்றில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆசனங்கள் செய்துவிட்டு தான் பிறப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இன்று நமது நாட்டை விட மேலைநாடுகளில் பெரும்பாலானவர்கள் நமது யோகக் கலையையும், ப்ராணாயாமத்தையும் முறையே மைண்ட் ஃபுல்னஸ், கார்டியாக் கோஹெரென்ட் பிரீத்திங் என்ற பெயரில் அதிகம் பழகுவதை கவனித்திருக்கிறீர்களா?
சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் வாழ்ந்த 'கவியோகி' சுத்தானந்த பாரதியின் சாம யோகாவைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்றால் யூடியூபில் முதலில் வருவது ஹாலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் இலவசமாக சொல்லிக்கொடுக்கும் சாம யோகா வகுப்புகளே. நமது குருகுலக் கல்விமுறையை வழக்கொழித்த வெளிநாட்டவர்கள், இன்று நிச்சயம் காரணம் புரியாமல் யோகம் பழகவில்லை என்று நம்புகிறேன். நமது பள்ளிகளில் ஆரம்பம் முதலே தியானத்தையும், யோகத்தையும் குழந்தைகளுக்கு கற்பிக்கத் தொடங்கினால்; அவர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பதோடு நல்ல குடிமக்களாகவும் வளர நிறைய வாய்ப்புகள் உள்ளது.
எனது கணிப்பின்படி வரும் காலங்களில் ஆட்டிசம் உள்ள குழந்தைகள் உலகெங்கும் நிச்சயம் அதிகரிக்கத் தொடங்குவார்கள். இப்படியானால் அவர்களில் 10 சதவீதத்தினர் சவான்ட் சின்ட்ரோமுடன் பிறக்கும் குழந்தைகளாக இருப்பார்கள். ஒருகட்டத்தில் சாதாரண குழந்தைகளுக்கு நிகராக இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சமூகம் இவற்றைப் 'பிறவிப் பிரச்சனை' என்று பார்க்காமல் 'வாழ்வியல் குறைபாடாக' (lifestyle disease) அங்கீகரித்து ஒருகட்டத்தில் இயல்பான வளர்ச்சி நிலை என்றே ஏற்றுக்கொள்ளும். எப்படி? நமக்கு நகத்தின் பயன்பாடு குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு நகங்களே இருக்காது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.அதேபோல் இன்று உலகின் வாழ்வியல் மாறுபாடு காரணமாக தாடையின் அளவு சுருங்கி 'ஞானப் பல்' (wisdom tooth) வளர்வதற்கான இடம் இயற்கையிலேயே இன்றைய தலைமுறையினரிடம் குறைந்து வருவதாக சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.
நாய்கள் கூட மனிதர்களுடன் பல ஆயிரம் ஆண்டுகளாக சேர்ந்தே வாழ்ந்து வருவதால் அவற்றின் முகபாவனைகள் மனிதனுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் மாறி வருவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
அதேபோல் நான் புரிந்து கொள்வது என்னவென்றால் குழந்தைகளின் வளர்ச்சி நிலை என்பது அவர்களின் மூளையின் ஒவ்வொரு பகுதியின் வளர்ச்சியின் வெளிப்பாடே ஆகும். நாம் மூளையின் பகுதிகள் 1,2,3,4,5ன் வளர்ச்சிக்கேற்ப ஒரு சராசரி குழந்தையின் வளர்ச்சி நிலைகளை வகுத்து வைத்திருக்கிறோம் என்றால்; இன்று பிறக்கும் சில குழந்தைகளுக்கு இந்த வரிசை மாறி (உதாரணத்திற்கு 1,5,3,2,4 என்பது போல் வரிசை மாறி அமைகிறது). இதனால் இவர்களின் செயல்பாடுகளும் வித்தியாசமாகவே அமைகின்றன. இவற்றை நாம் இன்று பிரச்சனை என்று கூறுவதற்கு முக்கிய காரணம் இன்னும் நாம் நமக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சியாக இவற்றைப் பார்க்காததே!
இதையே ஆன்மீக ரீதியாகப் பார்த்தால் இன்று உலகம் கலியுகம் முடிந்து சக்தி யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும், இந்தக் காலத்தில் யோகிகளும் ஞானிகளும் அதிகம் பிறப்பெடுப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். குறிப்பாக 2023ஆம் ஆண்டுமுதல் ஆன்மீக 'மறுமலர்ச்சி காலம்' ஏற்படும் என்கிறார்கள். எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக பிறந்தவர்கள் தான் மீனாட்சி போன்ற குழந்தைகள் என்பதையும்; அவர்களின் குணாதிசயங்களையும் தெள்ளத்தெளிவாக விளக்கி கோவாவில் உள்ள ஆன்மீகப் பல்கலைக்கழகம் தங்களின் வலைப் பக்கத்தில் 'ஆன்மீகக் குழந்தைகள்' என்ற ஆய்வில் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் உலகம் பேரழிவை சந்திக்கும் (covid) என்பதை 2 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி இருந்தார்கள்.
நான் இறுதியாகச் சந்தித்த சென்னையின் குழந்தைகளுக்கான மூத்த மனநல மருத்துவர் நாங்கள் மீனாட்சியைப் பற்றிக் கூறியவற்றை முழுமையாகக் கேட்டுவிட்டு அவள் பூப்படையும் பருவம் வரும்போது (12 வயதில்), அவளது மூளையின் முன் பகுதியான 'ஃபிரான்டல் லோப்' (frontal lobe) முழுவளர்ச்சி அடையும்போது அவள் அந்த வயதுக் குழந்தைகளைப் போல் இயல்பாகிவிடுவாள் என்றார். ஆனால் நான் பின்தொடர்ந்துவரும் சவான்ட் சின்ட்ரோம் உள்ள சிறுவர்களில் ஒருவன் பள்ளி இறுதி வகுப்பை நெருங்கியுள்ளான்.இளைஞனான அவனுக்கு அவனிடம் இருந்த சிறப்புத் திறமைகள் மங்கி கற்றல் குறைபாடு உள்ள குழந்தையைப் போல் இன்று தனித்து எழுத சிரமப்படுவதாகவும், மேலும் மனிதர்களுடைய முக ஜாடைகள் அவனுக்குள் அதிகக் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவனுடைய தாயார் என்னிடம் கூறினார்.
எனவே மீனாட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது எனது கணிப்பிற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவளது பிரச்சனைகள் நீங்கி அவளது உண்மையான திறமைகள் வெளிப்பட்டு அதனால் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை கிடைத்தால் எங்களைவிட மகிழ்ச்சியடையப் போகின்றவர்கள் யாரும் கிடையாது. அதே வேளையில் பிரச்சனைகள் தொடரப் போகிறது என்றால் எங்களால் இயன்றவரை, எங்களின் இறுதிவரை அவளுக்கு வேண்டிய 'தெரப்பி' முதலியவற்றைத் தொடர்ந்து அவளைக் 'கண்போல்' காப்போம். அனைத்து வகை வளர்ச்சிநிலைப் பிரச்சனைகள், ஆட்டிசம் போன்றவற்றிற்கு 'சர்வரோக நிவாரணியாக' இன்று இருப்பது தெரப்பிய மட்டுமே. இதைத் தாண்டி இதுவரை 'இதுதான் தீர்வு' என்று எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சையோ மருத்துவ முறையோ நிரூபிகப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இதில் ஒருவர் வெற்றி அடைந்ததைப் பார்த்து எனது மகளை கூட்டிச்சென்றால் அதே சிகிச்சைமுறை இவளை நூறு சதவீதம் குணமாக்குமென்ற உத்தரவாதத்தை யாரும் தரத் தயாராக இல்லை. நாங்களும் ஒவ்வொரு கதவாகத் தேடிச்சென்று தட்டுவதை நிறுத்தப் போவதும் இல்லை. இதுபோன்ற சமயங்களில் தான் மனிதர்களின்மேல் இருக்கும் நம்பிக்கையைவிட நமக்கு அப்பாற்பட்ட சக்திகளிடம் சரணடையத் தோன்றுகிறது.
உங்கள் குழந்தையை நீங்களோ இல்லை இந்த சமூகமோ மற்ற பிரச்சையேதும் இல்லாத குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது அர்த்தமற்றது என்றே சொல்வேன். இது நீரில்வாழும் மீனை முயலோடு ஒப்பிடுவதுபோல். மீனுக்கு நிலத்தில் ஓடத்தெரியாது. அதேபோல் முயலால் மீன்போல் தண்ணீரில் நீந்தத்தான் முடியுமா? ஒரு குழந்தை அதிகம் கேள்வி கேட்கிறதென்றால் அது புதுப் புது விஷயங்களை கற்க விரும்புகிறதென்று பொருள். அதேபோல் ஒரு குழந்தை பேசாதிருத்தால் அதற்கு பிரச்சனை இருக்கலாம், இல்லை எல்லாம் தெரிந்த ஞானியாகவும் இருக்கலாம், இல்லை இவ்விரண்டும் சேர்ந்தேகூட இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனிச்சிறப்பு வாய்ந்த குழந்தையே! உண்மையிலேயே போற்றத் தகுந்த ஒரு குழந்தையை அதன் மகத்துவம் புரியாமல் வளர்ப்பது தான் நாம் அவர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம். பெற்றோராகிய நாம் நமது குழந்தையை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டால் வேறு யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?! நாங்கள் மீனாட்சியைப் பற்றி எல்லாம் தெரிந்தாலும் கண்டிப்பும் அன்பும் கலந்து ஒரு இயல்பான குழந்தையைப் பராமரிப்பதுபோல் தான் வளர்க்கிறோம்.
ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் துறவியிடம் உங்களது பிரச்சனைகளை முறையிட்டால் அவர் உங்களை 'அதைச் செய்.. இதைச் செய்..' என்று சொல்லிவிட்டு அவர் இருக்கும் இடத்திலேயே தான் 'சிவனே' என்று உட்கார்ந்திருப்பார். அதுபோல் மீனாட்சி எனக்குப் புரியாத பல விஷயங்களைப் புரிய வைப்பதற்காகத் தான் பிறந்திருக்கிறாள் என்றே தோன்றுகிறது. அவள் என்னை திசை திருப்பிவிட்டு விட்டு தனது குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாக கடந்து கொண்டிருக்கிறாள். நான் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் ஏராளம். அப்படி ஏதேனும் எனக்கு புதிதாகத் தெரிய வந்தால் நிச்சயம் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வேன். அதுவரை எங்களைப் போல் விசித்திரமான பிரச்சனைகளைச் சந்தித்து வரும் பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கத் தான் இந்த பிளாக்கை எழுதியுள்ளேன். நீங்களும் உங்கள் குழந்தையின் மேல் முழு நம்பிக்கை வைப்பதுடன்; அவர்களுக்கு தர வேண்டிய தெரபி, மருத்துவ உதவி மற்றும் அவர்களுக்கு ஏற்ற பள்ளியில் சேர்ப்பது போன்ற விஷயங்களை கடமை தவறாது செய்யுமாறு வேண்டுகிறேன். நன்றி வணக்கம்!