Monday, June 01, 2020

11. இன்று பிறக்கும் குழந்தைகளுக்குள் என்னதான் நடக்கிறது?

தற்போதைய புள்ளி விவரங்களின்படிஉலகிலேயே மிக அதிகமாக ஹாங்காங்கில் 27 இல் ஒரு குழந்தைக்கு, தென்கொரியாவில் 38 இல் ஒரு குழந்தைக்கு அமெரிக்காவில் 45 இல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகள் எல்லாம் வளர்ந்த நாடுகள். இந்தியா இந்தப் பட்டியலிலேயே இல்லை. வேறு தளத்தில் தான் இந்தியா குறித்த தகவலைத் தேடிக்  கண்டு பிடித்தேன்! இங்கே குறிப்பிடப்படுவது என்னவென்றால் இந்தியாவில் 100ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது மேலும் 8ல் ஒரு குழந்தைக்கு ஏதோ ஒருவகையான நரம்பியல் பாதிப்பு உள்ளது.உண்மையில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலும், பின்தங்கிய நாடுகளில் இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளிடம் இல்லையா? நிச்சயம் இருக்கும்! ஆனால் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் அவர்களைப் பற்றிய தகவல்கள் பெற்றோர்களின் மூலமாகவோ மருத்துவமனைகளின் மூலமாகவோ அதிகம் இடம் பெறவில்லை. மேலும் ஹைபர்லெக்சியா, சவான்ட் சிண்ட்ரோம்  பற்றிய முகநூல் பக்கங்களில் கூட வளர்ந்த நாடுகளை சேர்ந்த பெற்றோர்களே அதிகம் இருக்கிறார்கள். அதிலும் வெளிநாட்டுவாழ் இந்திய பெற்றோர்கள் இருக்கிறார்களே தவிர இந்தியாவில் இருக்கும் என் போன்றவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இதற்கு நேர்மாறாக எனது மகள் இறுதியாகச் சென்ற அந்த தெரப்பி மையத்திற்கு வரும் குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமானவர்கள் மீனாட்சியை போல் பேரறிவைக் கொண்ட குழந்தைகளே! அதனால்தான் அந்த மையத்தின் நிர்வாகி மீனாட்சியை கண்டவுடனேயே அவளை இனம் கண்டுள்ளார்.அங்கே ஒரு சிறுவன் 22க்கும் அதிகமான மொழிகளில் எழுதத் தெரிந்தவன் (யாரும் கற்பிக்கவில்லை அவனும் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை!). மற்றொரு சிறுவன் பேசமாட்டான். ஆனால் பக்திப் பாடல்களை வாய்விட்டு நன்றாகப் பாடுவான். பேசச் சொன்னால் வாயை மூடிக் கொள்வான்.ஒரு சிறுமி உங்களைப் பார்த்தால் அப்படியே தத்ரூபமாக வரைந்து விடுவாள். இன்னொரு சிறுவனின் கதையை சற்றுப் பரிதாபமானது ! அவனுக்கு 15 வயது ஆகும் வரை அவனை எங்கும் அனுப்பாமல் அவனது பெற்றோர் வீட்டிலேயே வைத்திருந்திருக்கிறார்கள். அவன் அனைத்தும்  தெரிந்தவன் எழுதப் படிக்கவும் தெரியும் என்று உணர்ந்தவுடன் அந்தத் தெரப்பி மையத்தின் நிர்வாகியின் உதவிகொண்டு அவனை நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வைத்தார்கள். அவன் அதிக மதிப்பெண்களை பெற்றதுடன். மேலும் படிப்பைத் தொடர ஆர்வம் கொண்டிருக்கிறான்.அவன் ஓரளவிற்கு பேசத் தொடங்கி இருக்கிறான். ஆனால் சொந்தமாக பேனா பிடித்து எழுத வராது. அவன் அதிகம் நம்புவது தனது பெற்றோரை விட அந்தத் தெரப்பி மைய நிர்வாகியான அந்தப் பெண்மணியைத் தான். பீச்சுக்கோ திரைப்படத்திற்கோ அவரைத் தான் அழைத்துச்செல்லச் சொல்வான். இப்படியும் சேவை மனப்பான்மை கொண்ட பல நல்ல மனிதர்கள் இந்தத் தொழிலில் இருக்கத்தான் செய்கிறார்கள் !


எனது கருத்து: ஆட்டிசம் பாதிப்புடைவர்களில் 10% சதவீதத்தினர் சவான்ட்கள்.  உலகளவில் ஆடசம் பாதிப்பு அதிகரித்து வருகிறதென்றால் சவான்ட்சின்ட்ரோம்  பாதித்தவர்களும் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள் என்றுதானே அர்த்தம்? அப்படியானால் பிரச்சனையிலும் ஒரு நன்மையாக பேரறிவைக் கொண்ட குழந்தைகளும் இன்று அதிகளவில் பிறக்கிறார்கள் என்பதுதானே உண்மை? எனவே வித்தியாசமான மூளை அமைப்பைக் கொண்டு  விசித்திரமான பழக்க வழக்கங்களுடன் இனி வரும் காலங்களில் குழந்தைகள் அதிகம் பிறக்கப் போகிறார்கள். அவர்களை கையாள அரசும்,பெற்றோர்களும், பள்ளிகளும் தயாரா? இல்லை அனைவரையும் "சிறப்புக் குழந்தைகள்" என்று முத்திரையிட்டு அவர்களை சிறப்பு பள்ளிகளுக்கு அனுப்பிவிடப் போகிறோமா?

நான் இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு தெரிந்தவர்களிடம் இந்த பிரச்சனையை பற்றி வெளிப்படையாக சொல்லி வந்திருக்கிறேன். என்னை அனைவரிடமும் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று எனது நலம் விரும்பிகள் சொல்லியிருக்கிறார்கள். நான் பேசுவதற்கு காரணம் நாம் நமது விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது பிறர் நமக்குத் தேவையான கருத்துக்களை (இதில் பெரும்பாலும் தேவையற்ற மற்றும் முரண்பாடான கருத்துக்களும் வரலாம்!) பதிலுக்கு கூறலாம். மேலும் நமது அனுபவம் பிறருக்குப் பயன்படலாம். பிறருடைய அனுபவங்களையும் நாம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் நான் அறிந்த விஷயங்கள் அனைத்தையும் உங்களுடனும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

எங்களிடம் வேலை பார்க்கும் கன்சல்டன்ட் ஒரு நாள் என்னிடம் கேட்டான் "சார்! நீங்கள் உங்கள் மகளைப் பற்றி பெருமையாக பேசுகிறீர்களா? இல்லை அழுது புலம்புகிறார்கள்?" என்று கேட்டான். நல்ல கேள்விதான்! அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் தான் இருக்கிறார்கள் ஹைபர்லெக்சியா மற்றும் சவான்ட்சின்ரோம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்.எனது உதவி இல்லாமலேயே யார் வேண்டுமானாலும் இதே விஷயங்களை ஆய்வு செய்து புரிந்து கொள்ளலாம்.ஆனால் இதுவரை நான் செலவிட்ட நேரமும் முயற்சியும் இந்த நேரத்தில் உலகத்தின் வேறொரு மூலையில் இருக்கும் யாரோ ஒருவருக்கு நிச்சயம் பயன்படலாம். எனது தொழில் மற்றும் நண்பர்கள் வட்டத்தின் மூலம் பல நாடுகளிலிருந்தும் கண்டங்களிலிருந்தும் அவர்களுக்கு தெரிந்த இதுபோன்ற பிரச்சினைகளை உடைய குழந்தைகளின் பெற்றோர் என்னைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.இதில் பெரும்பாலானவர்களுக்கு நான் கூறும் விஷயங்கள் ஆறுதலாக நம்பிக்கை அளிப்பதாக இருப்பதுடன், பிரச்சனையை வேறு கோணத்திலிருந்து பார்க்க உதவுகிறது. பலர்  நான் பேசிய பிறகே தங்களது குழந்தையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டதாக என்னிடம் உணர்ச்சிப் பெருக்குடன் கூறியிருக்கிறார்கள். என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கு இந்த பிளாக் பயன்படட்டுமே!

 என்னுடைய இயல்பைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், வெகுளித்தனமாக மனதில் இருப்பதை பிறரிடம் கொட்டுவதற்கும், மனதிற்கு சரி என்று பட்டதை எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் நேர்மையாக பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. இதில் நான் இரண்டாவது வகை.

இதை சமுதாயத்தில் புரிந்து கொள்ளக் கூடியவர்களின் மனநிலையும் இரு வேறாக இருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்தது கொண்டேன். ஒரு சாரார் நான் கூறுவதில் உண்மை இல்லை என்று நினைப்பதோடு நான் என் மகளைப் பற்றி இல்லாத விஷயங்களை கற்பனை செய்து கொண்டு கூறி வருவதாக நினைக்கிறார்கள். இது போன்ற வினோத பிரச்சனைகளைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பெரிய மருத்துவர்களுக்கும் இதே அவப்பெயர் தான் ஏற்படுகிறது என்பதை நான் பிறகு தெரிந்து கொண்டேன். முதன்முதலில்  உலகம் 'உருண்டை' என்று சொன்னவனை  "முட்டாள்" என்ற உலகமல்லவா இது! இதில் நானெல்லாம் எம்மாத்திரம்?

நான் இப்பொழுதும் சொல்கிறேன் என் மகளுக்கு ஒன்றுமே தெரியாது என்றால் நான் அவளுக்குப் புரியாத பாடங்களை வற்புறுத்தி படிக்கவைத்து பள்ளிக்கு அனுப்பி தலையில் ஏற்றி நிச்சயம் துன்புறுத்த மாட்டேன்.இதை நான் எழுதுவதன் நோக்கமே சில நேரங்களில் நமது கண்ணே நம்மை ஏமாற்றலாம். விஞ்ஞானத்திற்கும் மருத்துவத்திற்கும் சவால் விடக்கூடிய பிரச்சனைகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி சவாலான விஷயங்கள்தான் சவான்ட் சின்ட்ரோமும்  ஹைப்பர்லெக்சியாவும். சில ஆண்டுகளுக்கு  முன்பு தென் தமிழகத்தில் ஒரு குழந்தையின் உடலில் தானாகவே அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது என்ற செய்தியை ஒரு தமிழ் செய்தித்தாளில் படித்த நான் அதைப்பற்றி இணையத்தில் அலசி அந்த பிரச்சனைக்குப் பெயர் ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஸ்ஷன் (Spontaneous Human Combustion), வெகு சிலருக்கு அரிதாக உடலில் சுரக்கும் திரவங்கள் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்பதைக் கண்டறிந்து அந்த நாளேட்டின் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதோடு அதன் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு தொலைபேசியிலும் தெரிவித்தேன். (அதுவரை அந்த குழந்தையின் பெற்றோர் பொய் சொல்கிறார்கள் அல்லது அவர்களே குழந்தையின் உடலுக்கு தீ வைக்கிறார்கள் என்ற ரீதியில் விசாரணை சென்றுகொண்டிருந்தது).நான் மின்னஞ்சல் அனுப்பிய இரண்டு நாட்களில் நான் கூறிய அதே கருத்தை அந்த குழந்தைக்கு வைத்தியம் பார்த்த அரசு மருத்துவக் குழுவினரும்,தமிழக சுகாதாரத்துறையும் கூறியது அதே செய்தித்தாளில் வெளியானது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் சொன்னதைதான் அவர்கள் அந்த நாளேட்டின் ஆசிரியரின்  வாயிலாக அறிந்து வழிமொழிந்தார்களா என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. எனக்கு பாராட்டோ,பணமோ, நற்சான்றிதழோ தேவையில்லை.உண்மை புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் போதும்!

அதே வேளையில் நான்‌ கூறியவற்றை கேட்ட மற்றொரு சாரார் தீவிர ஆன்மிகவாதிகளாக இருக்கிறார்கள்.அதில் பெரும்பாலானவர்களுக்கு இந்த விஷயங்களை ஆன்மீகத்தோடு தொடர்புபடுத்தி புரிந்துகொள்ள முடிந்தாலும் அதிலும் சிலருக்கு அவர்களின்  மதமும் அவர்கள் குருமார்களின் வழியும் பிறருடைய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு தடையாக உள்ளது. இன்னும் சொல்வதானால் இந்தப் பிரச்சனையை நீங்கள் புரிந்து கொள்வது கிட்டத்தட்ட கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ரீதியில் மனிதர்களைப் பிரிக்கிறது.ஆனால் நான் ஒரு வகையில் கொடுத்து வைத்தவன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் எனது கர்வமோ  சுயசிந்தனையோ எனது கண்களை மறைக்காமல் மனதை நடுநிலையுடன் வைத்துக் கொண்ட ஒரே காரணத்தால் தான் எனக்கு பெரும்பாலான விஷயங்கள் நன்கு புரிந்தன.நான் இனி உங்களுடன் இங்கே பகிரப் போகும் கருத்துக்கள் இன்று புரியாததாகவும் உண்மைக்குப்  புறம்பானதாகவும் தோன்றலாம்.ஆனால் சில ஆண்டுகளில் இதைப் பற்றிய உண்மைகள் நிச்சயம் விஞ்ஞானத்தால் அறிந்து கொள்ளப்படும். அப்பொழுது விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்திற்கும் உள்ள தொலைவு குறைந்துவிடும்!

No comments:

Post a Comment