Monday, June 01, 2020

10. சவான்ட் சிண்ட்ரோம் (Savant Syndrome):

இப்பொழுது சவான்ட் சிண்ட்ரோம்  (கற்றறிந்தவர் அல்லது ஞானி) பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்!

1). பிறவி ஞானிகள்(congenital Savants )பிறப்பிலேயே மிகுந்த அறிவோடு பிறந்த ஞானிகளென்றால் நாம் முன்பே பார்த்த கிம்பீக்,  நம்முடைய "கணித மேதை" ராமானுஜம் அவர்களையும், ஐன்ஸ்டீன் அவர்களையும் உதாரணங்களாகக் கூறலாம்.

2). விபத்தால் அல்லது திடீர்ஞானியானவர்கள் (accidental Savants):
இவர்கள்  சாதாரண மனிதர்களாக இருந்து திடீரென பக்கவாதத்தினாலோ அல்லது தலை மற்றும் முதுகுப்பகுதியில் அடிபட்ட பிறகு  (CNS injury) சவான்டாகி (ஞானியாகி) விடுவார்கள். இதை கீழ்க்கண்டவாறு புரிந்து கொள்ளலாம்; அதாவது செடிகளில் கொழுந்தாக இருக்கும் இலைகளைக் கிள்ளிவிடுங்கள். சில நாட்களில் செடியின் பக்கவாட்டிலிருந்து புதிதாக இலைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ளலாமென்றால், நமக்கு மூளையில்  பக்கவாதம் அல்லது விபத்து போன்ற பாதிப்புகள்  ஏற்பட்டாலோ அல்லது பிறவியிலேயே கட்டமைப்பு வித்தியாசமாக இருந்தாலோ மூளை தன்னைத் தானே சீராக்கிக் கொள்ள அல்லது தற்காத்துக் கொள்ள மாற்று முயற்சிகளை மேற்கொள்ளும்.இதற்க்கு "நியூரோ பிளாஸ்டிசிட்டி" (neuroplasticity) என்று பெயர். இதில் மூளையின் ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நியூரான்கள் தனது வழியை மாற்றிக்கொண்டு புதுப்புது தடங்களில் பயணித்து மூளையின் மற்ற பகுதிகளோடு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். இந்த "நியூரான் பின்னலை"(brain wiring or neuron wiring) தகவல் தொழில்நுட்பத்தில் web (வலைப் பின்னலோடு) ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நமக்கு சில சமயங்களில் இன்டர்நெட் மூலம் வரவேண்டிய தகவல் நேரடியாக வராவிட்டால் அது மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்து சேரும்.

விபத்தால் ஞானியானவர்
 உதாரணம்-1: ஜேசன் பேட்ஜெட் (Jason Padgett)
என்ற மெத்தை மற்றும் சோஃபா விற்பனைப் பிரதிநிதி தனது விவாகரத்துக்குப் பின்  வாழ்க்கையின் பெரும் பகுதியை குடியும் கூத்துமாக கும்மாளம் அடித்துக் கழித்து வந்துள்ளார்.அவருக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ளதுபோல் தானாம். ஆனால் ஜேசனின் உடமைகளைத் திருட வந்த இருவர் குடி போதையில் இருந்த அவரின் தலையிலும் வயிற்றிலும் தாக்கிவிட்டு  சென்றுவிட்டார்கள். இந்த பிரச்சனையிலிருந்து தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டு வந்த அவருக்கு சில மன ரீதியான மாறுபாடுகளுக்குப் பின் பார்க்கும் இடங்களிலெல்லாம் நீள்வட்டமும் அதற்குள் சிறு புள்ளிகளும் தென்படத் தொடங்கின. ஒரு கட்டத்தில் பகுவியலில் (Fractal) அவருக்கு அளவு கடந்த ஈடுபாடு ஏற்பட்டது. திடீரென இது தொடர்பான படங்களாக வரைந்து தள்ளத் தொடங்கியுள்ளார்.இவரது படங்களின் உண்மை அர்த்தத்தை உணர்ந்த ஒரு கல்வியாளர் அது வானியல் தொடர்பான நுட்பமான ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது என்பதை அறிந்து இவரை ஒரு சமூகக் கல்லூரியில் சேர்ந்து முறையாக கணிதத்தைப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.நடந்த விபத்து இன்று இவரின் வாழ்க்கையையே மாற்றி எழுதியிருக்கிறது.

உதாரணம்-2: எனக்கு உடனே மலையாளத்தில் திரு.மம்மூட்டி அவர்கள் நடித்த "ஐயர் த கிரேட்" திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. அதில் அவருக்கு ஒரு விபத்திற்குப் பிறகு நடப்பதை முன்கூட்டியே அறியும் தன்மை வந்துவிடும்.

உதாரணம்-3: மேலும் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி படித்தேன்! ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு சமையல் கலைஞர் தனது மனைவி இறந்த பாதிப்பில் ஒரு வகையான மன நோய்க்கு ஆட்பட்டதாகவும், கணிதத்தில் எந்தவித முன்னறிவும் இல்லாமல் அல்ஜீப்ரா போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டதாகுவும், மேலும் இராமானுஜம் விட்டுச்சென்ற தேற்றங்களை இவர் முடிக்கும் முனைப்புடன் செயல்படுவதாகவும் படித்தேன்.

சவான்ட் சிண்ட்ரோம்-சில முக்கியத் தகவல்கள்! 
ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் 10 சதவீதத்தினர் சவான்டாகப் (ஞானியாகப் )பிறக்கிறார்கள். மேலும் வளர்ச்சிநிலை குறைபாடுகள் மட்டுமின்றி தலை மட்டும் முதுகுத் தண்டில் ஏற்படும் பாதிப்பு (CNS injury) மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களாலும் இந்நிலை ஏற்படலாம். திடீரெனத் தோன்றும் திறமையானது ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுபட்டதாக தனித்துவம் மிக்கதாக பாதிக்கப்பட்டவரின் பிரச்சனைகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமையலாம். ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இப்பிரச்சனை உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் நினைவுத்திறன் அபாரமான கொள்ளளவைக் கொண்டதாக இருக்கும்.

சவான்ட்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆண்களே அதிகம் சவான்ட்களாகப் பிறக்கிறார்கள்.

சவான்ட்களில் 50 சதவீதத்தினருக்கு ஆடிசமும், ஆடிசமற்ற மீதமுள்ள 50 சதவீதத்தினருக்கு மூளை மற்றும் நரம்பு சம்பந்தமான வேறு பாதிப்புகள் இருக்கலாம்.

வரலாற்றில் முதல் சவான்ட்யென  அறியப்பட்டவர் ஜெடிடியாபக்ஸ்டன் (Jedediah Buxton) என்ற மின்னல் வேகத்தில் கணக்கிடக்கூடியவரைப்  பற்றிய தகவல் 1783ஆம் ஆண்டு 'க்னோடி சாடன்' என்ற மனநலம் சம்பந்தமான ஜெர்மன்  மருத்துவ நாளேட்டில் வெளியானது.நமது "கணித மேதை" ராமானுஜத்தைப்போல் பிறர்  கற்பிக்காமலேயே  கணிதம்  இவருக்குக் கைவந்த கலையாக இருந்திருக்கிறது!  

முட்டாள் அறிஞன்:ஆனால் 1887ல் லண்டன் மருத்துவ சமூகம் நடத்திய கூட்டத்தில் மனநல மருத்துவர் J.L.டவுன் (இவரே "டவுன் சின்ட்ரோம்" என்ற வளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிந்தவர்.தனது முப்பதாண்டு அனுபவத்தில் தான் கண்ட வியக்கத் தகுந்த திறமையுடன் கூடிய பிரச்சனையுள்ள இவர்களை "முட்டாள் அறிஞன்" (idiot savant) என்று பெயரிடுகிறார். அக்காலத்தில் திறன் அளவு (IQ) 25க்கும் குறைவாக இருந்ததால் "முட்டாள்" என்ற சொல்லி வந்துள்ளார்கள். ஆனால் பிற்காலத்தில் நடந்த ஆய்வுகளில் இப்பிரச்சனை உள்ள அனைவருக்கும் திறன் அளவு 40க்கும் மேல் என்ற காரணத்தால் "முட்டாள்" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'சவான்ட்‌' என்று  மட்டும் குறிப்பிடுகிறார்கள். டவுனின் காலம் தொட்டு இன்றுவரை இப்பிரச்சனை உள்ளவர்கள் கணிதம், இசை, கடிகாரத்தின் உதவியின்றி காலத்தை கணக்கிடும் அறிவு போன்ற சிறப்பு திறன்களோடு கூடிய அபார நினைவாற்றலும் கொண்டே தான் இன்றுவரை பிறந்து கொண்டிருக்கிறார்கள். இது தவிர ஓவியம், சிற்பம் போன்றவற்றில் உள்ள திறமைகளும் இதில் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் டாக்டர் டவுன் குறிப்பிட்ட முக்கிய விஷயம் "வளர்ச்சி பாதிப்பு" (developmental disorder  -இன்று இதுவே "ஆட்டிசம் குறைபாடு" என்று அழைக்கப்படுகிறது).அவர் மேலும் மனநல பாதிப்பு என்பது பிறவியிலோ அல்லது திடீரென்றோ ஏற்படக்கூடியது என்று குறிப்பிடுகிறார். அதேவேளையில் "மூன்றாவது பிரிவினர்" என்று அவர் குறிப்பிடும் குழந்தைகள் வெளியில் மனநல பாதிப்புக்கு உள்ளாகாவிட்டாலும் நன்றாக வளர்ந்து வரும் வேளையில் திடீரென ஒரு பின்னடைவைச் சந்திக்கிறார்கள் (regression). அவர்களிடம் தென்படும் அறிவுத் திறன்  திடீரென மங்கும், பேச்சு நிற்கும், மூளை வளர்ச்சி நின்று விட்டதோ என்றே எண்ணத் தோன்றும். இவர்கள் தனக்குள்ளேயே வாழத் தொடங்குவார்கள், நம் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது நபருடன் பேசிக்கொண்டிருப்பார்கள், செய்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பார்கள். மேற்கூறிய‌ "வளர்ச்சி பாதிப்பு" (developmental retardation) என்று டாக்டர் டவுனால் அழைக்கப்பட்ட இவையே 93 ஆண்டுகளுக்குப் பிறகு  அனைத்து மனநல மருத்துவர்களாலும் பயன்படுத்தப்படும் DSM (Diagnostic and Statistical Manual of Mental Disorders) என்ற மனநல பரிசோதனை மற்றும் புள்ளிவிவரக் கையேட்டின் படி"வளர்ச்சி நிலை மாற்றம்" (developmental disorder) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

1944ல் இதையே டாக்டர்‌.‌லியோ‌ கென்னர் "குழந்தைகளின் ஆரம்ப கால மன இறுக்கம்" (early infantile autism) என்று குறிப்பிடுகிறார்.‌ இவரே "ஆடிசம்‌" என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் (டாக்டர்.‌டெரால்ட் டிரெஃபர்ட்டின் பேராசிரியர்).

ஹில்லின் 1977 கணக்கீட்டின்படி இரண்டாயிரத்தில் ஒருவர் சவான்டாகப் பிறப்பதாக கூறுகிறார். சால்வோவீடாவின் 2000ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 10000த்தில் 1.4% சதவீதத்தினர் சவான்டாக பிறக்கிறார்கள்.

ஆண் பெண் விகிதாச்சாரம் ஆட்டிசத்தில் 4:1 என்று இருந்தால், சவான்ட் சிண்ட்ரோமில் 6:1 என்ற‌ கணக்கில் இருக்கிறது. கெஷ்விண்ட் மற்றும் கேலாபர்டாவின் 1987ன் ஆய்வு முடிவின்படி‌ கருவளர்ச்சியில் எற்படும் சில மாற்றங்களால் குழந்தைகளின் இடது மூளையின் வளர்ச்சி வலது மூளையை ஒப்பிடுகையில் தாமதப்படலாம். இது மேலும் ஆண் குழந்தையாக இருந்தால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் (Testosterone)காரணமாக இடது மூளையின் வளர்ச்சியை மேலும் தாமதப்படுத்தலாம். இதை ஈடுகட்ட இயற்கை வலது மூளையை வலுவூட்டுகிறது.அதாவது மொழி வளர்ச்சிக்கு உதவ வேண்டிய இடது மூளையின் திறன் வலது மூளைக்கு இடம்பெயர்கிறது. இதேபோல் இடது பக்கமாக தலையில் அடிபட்டாலும் அதை ஈடுகட்டும் வகையில் வலது மூளை செயல்படத் தொடங்குகிறது.

இதேபோல் சவான்ட் திறமையுள்ளவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் முதல் நிலை உறவினர்கள் 23 பேரை சோதிக்கும் போது அதில் ஒருவருக்கு சவான்ட் திறமை இருப்பதாகவும் (லா ஃபான்டெய்ன் 1974).மற்ற ஆய்வுகளில்  அப்படி குறிப்பிட்ட திறமையுடன் யாரும் இருப்பதாக முடிவு ஏதும் வெளியாகவில்லை.

சவான்ட்களின்‌ திறமைகள் என்றும் மங்குவதில்லை மாறாக வயது‌ மற்றும்‌ வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் மென்மேலும் வலுப்பெறுகிறது மெருகேறுகிறது.

சவான்ட்களுக்கு  அபார நினைவாற்றலுடன் கற்பனைத் திறனும் உண்டு! டாக்டர் டெரால்ட் டிரெஃபர்ட் தனது முந்தைய புத்தகமான "வியத்தகு மனிதர்கள்" (Extraordinary People) என்ற புத்தகத்தில் சவான்ட்களுக்கு கற்பனைத் திறன் குறைவு என்று கூறியதை பின்னர் வாபஸ் பெறுகிறார்.

உதாரணம்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியர் ஸ்டீபன் வில்ட்ஷயர் (Stephen Wiltshire).ஆட்டிஸ்டிக் சவான்டாக அறியப்படும் இந்த ஓவியர், ஒரு ஹெலிகாப்டரில் அமர்ந்து 20 நிமிடங்கள் நியூயார்க் நகரை வானிலிருந்து கண்காணித்தால், அவரால் அவர் கண்ட  வானளாவிய அனைத்து கட்டணங்களையும் நிலப்பரப்புகளையும் அப்படியே ஓவியமாக வரைய முடியும். இதற்கு அவரது "போட்டோகிராஃபிக் மெமரி"யே காரணம் என்று கூறுகிறார்கள். மேலும் தான் கண்ட காட்சிகளுடன்  கூடுதலாக சில விஷயங்களையும் தனது கற்பனையால் சேர்த்து அவர் அதை அழகுபடுத்தியும் காட்டியுள்ளார். இதைத்தான் டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் "சுய கற்பனைத் திறனும்" உண்டென பிறகு குறிப்பிடுகிறார்.

ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்து சவான்ட்களையும் பற்றி குறிப்பிடுவது இயலாத காரியம்.

இது தவிர மிகவும் அரியதாக சில குணாதிசயங்கள் சிலரிடம் இருப்பதாக விவரிக்கப்படுகின்றன. 
அவைகள்: பன்மொழிப் புலமை, தொடுவது, நுகர்வது, பார்ப்பது ஆகிய உணர்ச்சிகளை உணர்வதில் பிரச்சனை.‌ இதை சினஸ்தீசியா (synesthesia) என்று குறிப்பிடுவார்கள். இது தவிர மேற்கண்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு கடிகாரம் இல்லாமல் நேரத்தை உணர்வது, இவை தவிர நரம்பியல், கணக்கியல், மற்றும் திசை அறிவது போன்றவற்றில் உள்ள வியத்தகு அறிவு ஆகியவையும் குறிப்பிடப்படுகின்றன. இதேபோல் குழந்தைகளுக்கு எழுத்துக்களிலும் எண்களிலும் உள்ள வயதுக்கு மீறிய திறமையை "ஹைப்பர் லெக்சியா" என்றே குறிப்பிடப்படுகிறது.
(மேற்கண்ட அனைத்து குணாதிசயங்களும் நாம் மீனாட்சியிடம் கண்டதே!) 

உதாரணம்: இங்கிலாந்தை சேர்ந்த 'டேனியல் டாமட்' (Daniel Tammet )என்ற இளைஞர் இவரும் மின்னல் வேகத்தில் நேரடியாக கணக்குகளுக்கு விடை எழுதுபவர். சிறுவயதில் அடிக்கடி காக்கா வலிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். மற்ற ஆட்டிம் பாதித்தவர்கள் தங்களுக்கு என்ன நிகழ்கிறது, தங்களது செயல்பாடுகளை எது வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில்; திரு.டாமட் அவர்களால் சினஸ்தீசியாவைப் (synesthesia) பற்றியே விவரிக்க முடிகிறது. அவர் சொல்கிறார் மணங்களுக்கும் நிறங்கள் உண்டு (நான் முதலிலேயே கூறியுள்ளேன்  "மீனாட்சி வாசனை உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து முகர்ந்து பார்க்கிறாள்" என்று. குறிப்பாக: சோப்புக்கட்டிகள், தரையை துடைக்கும் திரவங்கள்!).

மேலும் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட குணாதிசமும், செயல்பாடும் உள்ளது என்கிறார் டாமட். உதாரணத்திற்கு '2' என்ற எண் அவருக்கு நகர்வதாக தோன்றுகிறது. '5' என்ற எண் அவருக்கு இடிபோல் கேட்கிறது. இந்த இரண்டு எண்களும் சேர்ந்து கொண்டால் அவருக்கும் மூன்றாவதாக ஒரு உருவம் தோன்றுகிறது! அதுவே விடையாகிறது. இப்படி தான் சிந்திக்காமலே விடைகள் தனக்குக் கிடைப்பதாக டானியல் குறிப்பிடுகிறார்.கன மூலம் (cube root)  போன்ற கணக்குகளுக்கு ஒரு கணிப்பானைவிட (calculator) வேகமாக விடையளிக்க இவரால் முடியும். π(Pi)ன் மதிப்பிற்கு 22,514 தசமஸ்தானங்களில் (decimal places) விடையளிக்கிறார். அவரால் 377ஐ  795துடன் பெருக்கி, பார்த்த மாத்திரத்தில் விடையெழுத முடியும். இது தவிர பன்மொழிப் புலமை கொண்ட திரு.டானியல் சொந்தமாக ஒரு புது மொழியும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு இன்றும் கார் ஓட்டுவது, கையைக் காட்டி திசையைச் சொல்வது, ஊசியில் நூல் கோர்ப்பது போன்ற நுட்பமான வேலைகள் செய்வது கடினமே. அவர் எழுதிய புத்தகங்கள் தலைசிறந்த புத்தகங்களாகக் கருதப்படுகின்றன.

(மீனாட்சியும் இதைத் தானே செய்கிறாள்?எதிர்காலத்தில் அவள் சந்திக்கப்போகும் பிரச்சினை என்ன? அனைத்தையும் புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்து 'ஸ்டெப் மார்க்' வாங்கியே மதிப்பெண்களை குவிக்கப் பழகிக் கொண்ட மாணவ சமுதாயத்திற்கு மத்தியில், மெய்யறிவுடன் கணக்குகளுக்கு நேரடியாக ஒரே வரியில் விடை எழுதினால் ஏற்றுக்கொள்வார்களா? மதிப்பெண் வழங்குவார்களா? இல்லை, ஏதோ தில்லுமுல்லு செய்து ஏமாற்றிவிடயளிக்கிறாள் என்று கூறி நுழைவுத் தேர்வுகளிலிருந்து  வெளியேற்றி "நீட்டாக" (neat) வீட்டிற்கு அனுப்பி வைக்கப் போகிறார்களா?  நான் இப்பொழுதே தலையைப் பிய்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டேன்!)

சினஸ்தீசியாவிற்கு நான் கூறும்  முக்கிய‌ உதாரணங்கள் : 


(சீக்ஷோபீனியாவும்,ஆட்டிமுன் பிரிக்கப்படாமல் இருந்த காலமும் உண்டு!)

ஆட்டிஸம் இல்லாமல் மற்ற வளர்ச்சி ரீதியான பிரச்சனைகளுடன் சவான்டாக இருப்பவர்களைவிட, அதிக அளவில் இருக்கிறார்கள் சவான்டாக இருப்பவர்களுக்கு ஆட்டிஸமும் சேர்ந்திருந்தால். மேலும் அவர்கள் பன்முகத் திறமை கொண்டவர்களாகவும் விளங்குகிறார்கள்-சொல்கிறார்கள் ரிம்லாண்ட் மற்றும் ஃபீன் (1988).

திறமைவாய்ந்த சவான்ட்கள் (Talented Savants): பெரும்பாலும் மனநலக் குறைபாடோ (cognitive impairment) அல்லது ஏதேனும் சில சிறப்பு திறன்களை மட்டும் பெற்றிருக்கும் சவான்ட்களை 'திறமைவாய்ந்த சவான்ட்கள்' என்பர்.

உதாரணம்#1: அமெரிக்காவைச் சேர்ந்த அலன்சோ  க்ளிமோன். இவருடைய திறனறிவு (IQ) 40-50 என்ற அளவில் சராசரிக்கும் குறைவானது. ஆனால் இவரால் மிருகங்களைப் பார்த்தால், அவற்றை நினைவில் கொண்டு மிகத் தத்ரூபமாக சிலைகளாக வடிக்க முடிகிறது. ஒவ்வொரு சிலையும் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விலை போகிறது!

உதாரணம்#2: இதேபோல், நான் கல்லூரியில் படித்த காலத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தின் சுற்றுச் சுவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டதாக அறியப்பட்ட ஒரு நபர் கையில் கிடைக்கும் கரித்துண்டு, செங்கல் துண்டு ஆகியவற்றைக் கொண்டு மிக அழகான படங்களை வரைவார். நான் கல்லூரிக்குச் செல்லும் பல நாட்கள் அவற்றை நின்று ரசித்துச் செல்வதுண்டு. சமீபத்தில் கூட கேரளாவின் கொல்லத்தில் இதுபோன்ற ஒரு ஓவியர் தென்பட்டுள்ளார். இவரது வரையும் பாணியையும், வரைந்த ஓவியங்களையும் பார்த்தால் தாம்பரத்தில் வரைந்த நபர் தான் இவரோ என்று எனக்கு தோன்றுகிறது. காணொளி இங்கே!

அதிமேதைகளான சவான்ட்கள்(Prodigious Savants): இவர்களிடம் இருக்கும் சிறப்பு திறமையானது சாதாரண மனிதர்களுக்கு சிறப்பு திறமை வாய்த்தால் அவர்கள் பரிமளிப்பதைவிடவும் பன்மடங்கு உயர்ந்ததாக இருக்கும். உலகம் முழுவதும் பார்த்தால் மொத்தமும் 100 பேர் என்ற கைவிட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இவர்கள் இருக்கிறார்கள்.

உதாரணம்: சென்னைச் சேர்ந்த சிறுவன் விஷால் ஆனந்த் . விஷாலைப் பற்றி ஹார்வர்டு நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர் பேராசிரியை டயானா ஹின்னசி பவல் தன்னுடைய வலைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விஷாலுக்கு யாரும் கற்பிக்காமலேயே பல விஷயங்களும் தெரியும்! பிறவி ஆங்கிலேயர்கள் எழுதுகின்ற அளவிற்கு சிறப்பான ஆங்கிலப் புலமையுடன் கதைகளும்,கவிதைகளும் ஆறு வயதிலேயே எழுதி, புத்தகங்களாக வெளியிடத்  தொடங்கி விட்டான். இவனது உதவி கொண்டு சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாசி போன்ற தாவரங்களிலிருந்து எரிபொருள் (algae fuel) தயாரித்துப் பயன்படுத்துவது பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.மேலும் சிறுவன் விஷால் தன்னிச்சையாக சமஸ்கிருத மொழியில் க்ருதிகள் எழுதி, பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடி சமீபத்தில் ஒரு மேடைக் கச்சேரி நிகழ்ந்துள்ளது. 

டாக்டர்.டெம்பிள் கிராண்டின்  அம்மையார்: ஆட்டிஸம் பாதிப்புடன் சவான்டாக அறியப்படும் கொலராடோ பல்கலைக்கழக விலங்கியல்துறை  பேராசிரியை  டாக்டர். டெம்பிள் கிராண்டின்  அம்மையார் அவர்கள், விலங்கியல் சம்பந்தமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். இறைச்சிக் கூடங்களில் கொல்லப்படும் விலங்குகளை வதைக்காமல்  கொல்வது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 2010ஆம் ஆண்டில் இவர் பெயரிலேயே  ஒரு ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகியுள்ளது.இவர்  டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்டின் நெருங்கிய நண்பரும் கூட. அடிக்கடி டிரெஃபர்டின் கருத்தரங்குகளில் பங்கேற்கிறார். இவரது படைப்புகளாக "படங்களாக சிந்திப்பது" (1995) மற்றும் "விலங்குகளுடன் சம்பாஷனை"(2005) ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இது தவிர "திறமையை மேம்படுத்துதல்: உயர்நிலை ஆட்டிசம் மற்றும் அஸ்பர்ஜர் சின்ட்ரோம் பாதிக்கப் பட்டோருக்கு" என்ற பெயரில் ஒரு புத்தகத்தை டஃப்பியுடன் இணைந்து 2004ல் வெளியிட்டுள்ளார்.
டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட் மற்றும் டாக்டர்.டெம்பிள் கிராண்டின் அம்மையார் (டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்டின் சிறப்பு அனுமதியுடன் உங்களுக்காக!)  

இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களென்ன?
டெம்பிள் கிராண்டின் அம்மையார் அவர்கள் மாடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவை தான் காணும் காட்சிகள் அனைத்தையும் புகைப்படங்களாக மனதில் வைத்துக்கொள்ளும் என்று குறிப்பிடுகிறார். இதைத்தான் "போட்டோகிராஃபிக் மெமரி" என்கிறார். இதை நான்  கீழ்கண்டவாரு புரிந்துகொள்கிறேன், கிராமங்களில் மாட்டுக்காரன் தான் எப்பொழுதும் பயன்படுத்தும் வழியில் இரவு நேரங்களில் பயணிக்கும்போது சற்று கண்ணயர்ந்து தூங்கி விட்டாலும் மாடு தானாகவே பயணத்தைத் தொடர்ந்து வீட்டிற்கு சரியாகச் சென்று நிற்க வேண்டிய இடத்தில் நின்று விடும்.

மேலும் அந்த அம்மையாரின் மூளையை விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அதில் அவர் இடது மூளையின் பின்பகுதி குறிப்பாக இடது உச்சிக்குழி (left ventricle) அளவில் பெரியதாக உள்ளது. இதனால் மொழி வளர்ச்சிக்கு தேவையான இடது மூளையில் சேதம் ஏற்பட்டு  (அல்லது) வளர்ச்சி குன்றி அவரது பேசும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதேவேளையில் இங்கே நான் கவனித்த மற்றொன்று, பாதிப்படைந்த பகுதிகளில் மூளையின் நீர்/திரவம் (Cerebrospinal Fluid) சராசரி மூளையில் இருப்பதை விட அதிக அளவில் தேங்கி உள்ளது. மீனாட்சியின் மருத்துவ அறிக்கையும் கிட்டத்தட்ட இதே பிரச்சனைதான் அவளுக்கும் உள்ளதாகக் காட்டுகிறது.

மீனாட்சி அதிக நேரம் எதையும் தொடர்ந்து பார்ப்பதில்லை அவளுக்கு கற்றல் குறைபாடு (learning disability) இருப்பதாக அவளுடைய ஏபிஏ (ABA )தெரப்பிஸ்ட் முன்பு கூறியதாக சொல்லியிருந்தேன். அவளுக்கு இருப்பதும் "போட்டோகிராஃபிக் மெமரி"தான் என்பதை மேற்கண்ட விஷயங்களை படித்தபிறகு தெரிந்துகொண்டேன்.நான் ஒருநாள் அவளுக்கு பிடித்த விஷயமான ஒரு தரை துடைக்கும் திரவ‌ பாட்டிலை (floor cleaning liquid) இரண்டு நொடிகள் காட்டிவிட்டு மறைத்துக் கொண்டு விட்டேன்.எனது மனைவியிடம் மீனாட்சியின் கையில் பேனாவைக் கொடுத்து பிடித்துக்கொள்ளச் சொல்ல, நான் அவளிடம் பார்த்ததை எழுதச் சொன்னேன். அந்த பாட்டிலில் இருந்த விவரங்கள் அனைத்தையும் வரி விடாமல் சிறு பிழையும் இல்லாமல் மீனாட்சியால் எழுத முடிந்தது. இதைப் படித்து புரிந்துகொண்டு திருப்பி எழுதுவதாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு சராசரி மனிதனுக்கே இரண்டு நிமிடங்களாவது ஆகும். எனவே ஒரு குழந்தை அதிகநேரம் எதையும் கண்கொண்டு கவனிக்கவில்லை (short attention span) என்றால் அதை குறை என்று நினைப்பது நமது தவறே. பார்த்த விஷயங்களை புகைப்படம் போல் மனதில் பதித்து வைத்துக் கொள்ள முடிந்தவர்கள் அதிகநேரம் எதையும் பார்க்கத் தேவையில்லை போலும். அதேவேளையில் உண்மையிலேயே கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அதிக நேரம் எடுத்து எதையும் பார்க்க மாட்டார்கள். இதில் பிரச்சனை என்னவென்றால் 'எல்லாம் தெரிந்தவர்கள், எதுவும் தெரியாதவர்கள்' என்று  இருவேறு துருவங்களாக இருப்பவர்கள் வெளி உலகிற்கு பார்ப்பதற்கு ஒன்று போல் தோன்றுவதால் நிகழும் குழப்பமே இது!

இதையேதான் டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்டின் ஹைப்பர்லெக்சியா கையேட்டில் (Hyperlexia Manualஐந்து நிமிடங்கள் ஸ்டீபன் கமரட்டாவுடன் (Five minutes with Stephen Cammarata) என்ற பகுதியில் திரு.ஸ்டீபன் கமரட்டரா (பேராசிரியர்-வான்டர்பில்ட் மருத்துவ மையம்-பேச்சு மற்றும் கேட்டல் துறை) '"ஹைபர் லெக்சியா-பிரிவு#3 (சிறுவயதில் ஆட்டிம் போன்ற அறிகுறிகளைக் கொண்டு பின்னாளில் பேரறிவுடன் சாதாரணமாக மாறிவிடும் குழந்தைகள்) மற்றும் சவான்ட் சின்ட்ரோம் பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். அதாவது, ஒருவருக்கு அதிக தாகம் எடுக்கிறது என்றால் நாம் அவருக்கு உடனே நீரிழிவு நோயாகத் தான் இருக்குமென முடிவெடுத்து; அதனை உறுதிப் படுத்தத் தேவையான சோதனைகளை மேற்கொள்கிறோம். அதேவேளையில், அந்த நபருக்கு அதிக நீர் வெளியேற்றம் மற்றும் சோர்வின் காரணமாகவும் தாகம் எடுக்கலாம். அறிகுறி ஒன்று தான் ஆனால் பிரச்சினைகள் வெவ்வேறு. எனவே அறிகுறிகளை மட்டும் வைத்து ஆட்டிசம் பாதிப்பு தான் என்று அனைத்து குழந்தைகளையும் கூறுவதற்கு முன் அதிக கவனம் தேவை என்கிறார்.மேலும் பெரும்பாலான பள்ளிகளும் குழந்தைகள் சற்று வித்தியாசமாக செயல்படத் தொடங்கினால், அவர்களுக்கு "ஆட்டிம்" முத்திரையைக் குத்தி விடுவது தவறு என்றும் சொல்கிறார். அதேபோல், அக்குழந்தைகளுக்கு "ஆடிசத்தை உறுதிசெய்ய மேற்கொள்ளும் திறன் தொடர்பான (IQ Test-பேசுகின்ற குழந்தைகளுக்கு, Development Quotient Test -பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு) சோதனைகள் குழப்பக் கூடியதாக அமையலாம்.‌ ஏனென்றால் இக் குழந்தைகளுக்கு இருக்கும் வேறுசில பிரச்சனைகள் உண்மை முடிவுகளை மறைக்கக் கூடியதாக அமையும் என்கிறார்.

 உண்மைதான்! நாங்கள் மீனாட்சிக்கு மேற்கொண்ட வருடாந்திர சோதனைகளில் (DQ Test) முதலாம் ஆண்டு அவளுக்கு மிகக் குறைந்த அளவு ஆட்டிசம் (mild autism), இரண்டாம் ஆண்டு மிதமான அளவு ஆட்டிசம் (modrate level) என்றே முடிவுகள் வந்தது. இதன் முக்கிய காரணம், வயதிற்கு ஏற்ப பேச்சுத்திறன் வளராததால் அவளது பெரும்பாலான மதிப்பீடுகள் அதை ஒட்டியே அமைந்ததால் அவளுக்கு மதிப்பெண்கள் குறையத் தொடங்கின.

அதேவேளையில் அவள் எழுதத் தெரிந்த குழந்தை என்று நாங்கள் கூறினாலும், அவர்களுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டாள். இதில் நான்  உணர்ந்த முக்கியமான காரணம் இக்குழந்தைகளை சோதித்து ஒரே நாளில் மதிப்பிடுவது மிகவும் சிரமம்; அவர்கள் பழகியவரிடம் ஒரு மாதிரியும், தெரியாதவர்களிடம் ஒரு மாதிரியும் நடந்துகொள்வார்கள். இதை சோதித்த தெரப்பிஸ்களே ஒப்புக் கொள்கிறார்கள். மேலும், வீட்டில் இருப்பது ஒரு போல் வெளியிடங்களில் நடந்து கொள்ள மாட்டார்கள். இது பொதுவாக அனைத்து குழந்தைகளுமே பொருந்தக்கூடிய குணம் தானே? என்ன சாதாரண குழந்தைகள் சற்று சமாதானம் செய்தால் சொல் பேச்சுக் கேட்பார்கள்.ஆனால்  இவர்களை சமாதானம் செய்வது அத்தனை சுலபமல்லவே!

ஐன்ஸ்டின் சின்ட்ரோம் (EINSTEIN SYNDROME): என்னைப்போலவே மருத்துவத்துறைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர் பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான தாமஸ் சொவல் (Thomas Sowell).என்ன செய்வது! நான் பள்ளியில் படித்த காலத்திலேயே பிற்காலத்தில் என் மகளுக்கு இது போன்ற வினோதமான பிரச்சினை வரும் என்று தெரிந்திருந்தால் அப்பொழுதே சோம்பேறித் தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒழுங்காக மருத்துவம் படித்து நரம்பியல் துறையில் மேற்படிப்பு மேற்கொண்டு நிச்சயம் ஒரு தீர்வைக் கண்டிருப்பேன். எங்கள் வீட்டில் கூட அடிக்கடி சொல்வார்கள் "கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமென்று!".

சரி... விஷயத்துக்கு வருவோம்! தாமஸ் சொவலின் மகனுக்கும் மேற்கண்ட பாதிப்புகள் இருந்துள்ளது. மேலும் பேச்சும் தாமதமாகத்தான் வந்துள்ளது. இதைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர் இளம் வயதிலேயே மிகுந்த அறிவைக் கொண்டிருப்பது, வளர்ச்சி நிலைகளில் தாமதம் ஏற்பட்டிருப்பது மற்றும் பேச்சு தாமதமாக வந்தது போன்ற குணாதிசயங்கள் இளம் வயது  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை ஒத்திருப்பதால்; இந்தப் பிரச்சனைக்கு "ஐன்ஸ்டீன் சின்ட்ரோம்"என்று பெயரிட்டு புத்தகமும் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளது, படித்த குடும்பங்களில் குறிப்பாக பொறியியல், டாக்டர் பட்டம், கணிதம், இசை, அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் உயர்கல்வி படித்த பெற்றோர்-ஆகியோருக்கே பெரும்பாலும் சவான்ட் சின்ட்ரோம் (பேரறிவு) கொண்ட குழந்தைகள் பிறக்கிறார்களாம்.

ஆம்! எங்கள் குடும்பத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் அதிகம். இதேபோல் இசையிலும் இசைக் கருவிகளை வாசிப்பதில் கைதேர்ந்தவர்களும் அதிகம். எனக்குக்  கூட மூன்று நான்கு வயதிலேயே 40க்கும் மேற்பட்ட ராகங்களை அடையாளம் காணத் தெரிந்திருந்தது. என்னை "மழலை மேதை"(child prodigy) என்று சொல்லியிருக்கிறார்கள் (இன்று என்னைப் பார்த்தால்  சொன்னதற்கு வருத்தம் தெரிவித்து "வாபஸ்" பெற்றுக் கொள்வார்கள்!). அதேபோல் நான் அதிக சுட்டித்தனம்  செய்வேன். வெகு சீக்கிரத்திலேயே பேசியிருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் பிறந்திருந்தால் எனக்கும் "ஹைபர் ஆக்டிவ் குழந்தை" என்ற முத்திரை விழுந்திருக்கும். அதேபோல் எனக்கு சிறுவயதில் OCD (Obsessive Compulsive Disorder) இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது!வீட்டைப் பூட்டினாலோ அல்லது காரைப் பூட்டினாலோ நான் ஐந்தாறு முறை சென்று  'பூட்டியுள்ளது' என்பதை உறுதி செய்து கொள்வேன்.பிறர் கிண்டல்செய்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக வெளியிடங்களில் சற்று குறைத்துக் கொள்வேன். இதே பிரச்சனை மீனாட்சிக்கும் உள்ளது. அடுத்தகட்ட பரிமாணமாக!

அதேபோல் என்னிடமிருந்து அவளுக்கு மரபு வழியாகப் புகுந்த நல்ல விஷயம்: ரைம்ஸ்களையும் குத்துப் பாடல்களையும் மட்டுமே யூடியூப்பில் கேட்டு வளர்ந்த மீனாட்சிக்கு என்னைப் போலவே கர்நாடக சங்கீத ராகங்களை அடையாளம் காணத் தெரிகிறது.அதைவிட எங்களுக்கே தெரியாத மேற்கத்திய இசைக் குறிப்புகளையும் எழுதத் தெரியுமென்கிற விஷயம் நான் அவளுக்கு சமீபத்தில் மேற்கொண்ட கைரேகை சோதனை(Dermatoglyphic Test) மூலம் தான் வெளிப்பட்டது.

ஐன்ஸ்டீனின் திருடப்பட்ட மூளை சொல்லும் ரகசியங்கள்:  ஐன்ஸ்டீன் இறந்தபிறகு அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் தாமஸ் ஹார்வி (Thomas Harvey) அவரது குடும்பத்தாருக்கு தெரியாமல் ஐன்ஸ்டீனின் மூளையைத் திருடி, பல சிறு துண்டுகளாக வெட்டி, பதப்படுத்தி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தன்னகத்தே ஆய்விற்காக வைத்திருந்திருக்கிறார். ஐன்ஸ்டீனின் மூளையில் சில மடிப்புகள் இயற்கையிலேயே தோன்றவில்லை என்றும், அதை சமன் செய்யும் விதமாக சராசரி மனிதர்களை விட 17 சதவீதம் அவர் மூளையில் அதிக அளவிலான நியூரான்கள் தோன்றி இருந்ததாகவும் கூறுகிறார். இதுதான் அவரின் பேரறிவிற்குக் காரணமோ?

அதேபோல், ஐன்ஸ்டீனின் வலது மற்றும் இடது மூளையின் மின் சமிக்ஞைகளை பரிமாற உதவும் இணைப்பான கார்பஸ்கலோசம் (corpuscollosum) பகுதி; அளவில் மிகப்பெரியதாக கிட்டத்தட்ட மூளையின் முன் பகுதியிலிருந்து கழுத்துப் பகுதி வரை நீண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.செய்தி இங்கே!

கவனிக்க: நான்  முதலில் குறிப்பிட்ட கிம் பீக்கிர்க்கு (Kim Peek)கார்பஸ்கலோசமே இல்லாததால் அவரது மூளையின் வலது மற்றும் இடது பகுதிகள் தனித்தனியாக இரண்டு மூளைகள் போல் செயல்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தேன்.இந்தப் பிரச்சனைக்கு 'அக்னஸிஸ் ஆஃப் கார்பஸ்கலோசம்'(Agenesis of corpus callosum) என்று பெயர். 


சில முக்கியத் தகவல்கள்:
  • ஆட்டிம், ஹைபர்லெக்சியா, சவான்ட்சின்ரோம், ஹைபர் ஆக்டிவிட்டி, டவுன் சின்றோம் போன்ற நரம்பியல் மற்றும் வளர்ச்சி நிலை குறைபாடுகள் தனியாகவும் வரலாம், ஒன்றுடன் ஒன்று கலந்தும் வரலாம். பெரும்பாலும் 2-3 வயதில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக அறியப்படும் குழந்தைகளை ஆறு ஏழு வயதில் பரிசோதிக்கும்போது ஏதேனும் ஒரு பிரச்சினையுடன் மட்டும் தான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் மூளையின் வளர்ச்சிக்கு ஏற்ப பிரச்சனைகளின் தீவிரம் குறைகிறது.


  • அதேபோல் கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படும் எம்.எம்.ஆர் (MMR )போன்ற தடுப்பூசிகள்தான் ஆட்டிஸமும் ஹைப்பர் ஆக்டிவிட்டியும் ஏற்படக் காரணம் என்று நம்பப்படுவது மிகப்பெரிய தவறு. தடுப்பூசி வழங்கப்படாத குழந்தைகளுக்கு பின்னர்  சில பிரச்சனைகள்  வந்தால்  கையாள்வது மிகவும் கடினமே!

  • ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் கண்பார்வையை சோதிப்பது மிகவும் அவசியம். இவையெல்லாம் நரம்பியல் தம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்பதால் கண் நரம்புகளையும் பாதிக்கலாம்.

  • பெரும்பாலான தெரப்பிஸ்டுகள் குழந்தைகளுக்கு அதிக இனிப்புள்ள மிட்டாய்கள், பிஸ்கட்டுகள் மற்றும் சர்க்கரையுள்ள பானங்களை தவிர்க்கச் சொல்கறார்கள்.சர்க்கரையானது ஏற்கனவே உடலில் அதிக சக்தியுள்ள 'ஹைப்பர் ஆக்டிவ்' குழந்தைகளுக்கு மேலும் சக்தியை அதிகரிக்கிறது.எனவே  தவிர்க்க வேண்டுமென்கிறார்கள். அதேபோல் க்ளூட்டன் நிறைந்த மாவுப் பொருட்களையும், ஐஸ்கிரீம் போன்றவற்றையும் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

  • மேலும் 'வைட்டமின் டி' குறைபாடே ஆன்ட்டிஸ் அதற்கு காரணம் என்றும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் அது போன்ற வைட்டமின்களை கொடுப்பதாக இருந்தால் கண்டிப்பாக தங்கள் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்கவும்.

  • சமீபத்தில் நான் படித்த ஓர் ஆய்வறிக்கையில்  தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவிட்டி போன்ற பாதிப்புகள் குறைவென்றும். மேலும் பால் பவுடர் மற்றும் சமன் படுத்தப்பட்ட பாக்கெட் பால்களை (toned milk) தவிர்த்தல் நலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

வளர்பிறை தேய்பிறைக்கும்- மனநல மற்றும் நரம்பியல் பாதிப்புகளுக்கும் உள்ள தொடர்பு:

சந்திரமா மனஸோ ஜாதஒருவரின் மனநிலைக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் ஸ்லோகம்.

பொதுவாக  மனநல பாதிப்பு  உள்ளவர்கள் பௌர்ணமி போன்ற நாட்களில் உக்கிரம் அடைவதாக பழங்காலம் தொட்டு நமது நாட்டில் சொல்வதுண்டு.

நவீன விஞ்ஞானம் சொல்வதென்ன? அதாவது கடலானது பௌர்ணமி போன்ற தினங்களில் பொங்குவதற்கு காரணம்  சந்திரனின் ஈர்ப்பு விசையே. அதேபோல் 75% நீராலான மனித உடலில் "கிரிப்டோக்ரோம்" என்ற புரதம் உள்ளது.இதுவே உடலின் சுழற்சி கடிகாரத்தை (circadian rhythm) இயங்கச் செய்யவல்லது. நமக்கு இரவையும், பகலையும் உணரச் செய்கிறது. இந்தப் புரதம் ஃபிளாவின்(flavin) என்ற ஒளியை இழுக்கக் கூடிய மூலக்கூறுடன் சேரும்போது அதற்கு காந்தங்களுடன் சேரக் கூடிய தன்மை கிடைக்கிறது. இதுவே இரவையும், பகலையும் உடலுக்கு சொல்கிறது.

 பௌர்ணமி போன்ற நாட்களில் உடலில் இருக்கும் திரவங்கள் சந்திரனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் பொழுது, உடலின் சுழற்சி கடிகாரத்தை பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு பிரச்சனைகள் அதிகரிக்கிறது. 

ஏன் எல்லாம் தெரிந்தும் மீனாட்சி போன்ற சில குழந்தைகளால் தனியாக எழுத முடியவில்லை?
நான் முன்பே குறிப்பிட்டதுபோல் மீனாட்சி வளர்ச்சி நிலைகளில் நீஞ்சிவிட்டு தவழாமல் ஒரு வயதிற்கு மேல் நேரடியாக நடக்கத் தொடங்கிவிட்டாள்.

நான் இதுபற்றி புரிந்து கொண்டது: எழுதுவதற்கு தோள்களில் பலம் வேண்டும். தவழாத குழந்தைகளுக்கு தோள் பலம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு எழுதுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இன்றுவரை மீனாட்சிக்கு தோள் வலிமை சேர்க்க நாங்கள் சிறப்புப் பயிற்சிகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அவள் தனியாக எழுதினாலொழிய அவளது திறமையை யாரும் புரிந்து கொள்ள போவதில்லை. நாங்களே எழுதிவிட்டு அவள் எழுதுவதாக பொய் சொல்கிறோம் என்றே சொல்வார்கள்!

அதே நேரத்தில் இக்குழந்தைகளை தனியாக எழுத வைக்க பயிற்றுவிக்கும் பொழுது மேஜையில் அமர்ந்தால், இவர்களின் கால்களை தொங்க விடாமல் கீழே ஒரு பலகையை வைத்தால் முன்னேற்றம் ஏற்படும் என்றும், மேலும் செங்குத்தாக கரும்பலகையில் (black board) எழுதும்போது தன்னிச்சையாகவே எழுதுகிறார்கள் என்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தாய்மார்கள் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

No comments:

Post a Comment