Monday, June 01, 2020

8. வெளிப்பட்டது மீனாட்சியின் சுயரூபம்!

இது நடந்த மறுநாள், மீனாட்சி படிக்கும் பள்ளியின் நிர்வாகியை சந்தித்து பெரும்பாலான வகுப்புகளை நிறுத்தி இருப்பதாகச் சொல்லி அதனால் புதிதாக ஏதேனும் பிரச்சனைகள் அவளிடம் தென்படுகிறதா என்று வினவினோம்.அதற்கு அவர் தனக்குத் தெரிந்த ஒரு பயிற்சி மையத்தில் ஆக்குபேஷனல் தெரபி,ஸ்பீச், ஸ்பெஷல் எஜுகேஷன் என அனைத்தும்  தரப்படுவதாகவும், அதை நடத்தும் பெண்மணியை ஒருமுறை சந்தித்து வரும்படியும் சொன்னார். நானும் என் மனைவியும் வழக்கம்போல் எல்லா இடத்திலும் சொல்வதுபோல் அவள் பிறப்பதற்கு முன்னால் தலையிலிருந்த கால்ஃ போகபாலி (colpocephaly) பிரச்சனை, பிறந்த பிறகு பின்னந் தலையில் தோன்றிய hemangioma (ரத்தக் குழல் கட்டி), நாங்கள் சென்று கொண்டிருந்த வகுப்புகள் என ஒவ்வொன்றையும் வரிசை மாறாமல் எடுத்துச் சொன்னோம். அந்தப் பெண்மணி அனைத்து பயிற்சிகளையும் ஒரு குடையின்கீழ் தங்கள் இடத்திலேயே தருவதாகச் சொல்லி எங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசி அனுப்பி வைத்தார். அந்தப் பெண்மணி நாங்கள் அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில், மீனாட்சியின் பள்ளி நிர்வாகியை அழைத்து "நீங்கள் அனுப்பி வைத்த அந்தக்குழந்தை மீனாட்சியும் அவளது பெற்றோரும் இப்பொழுது தான் இங்கு வந்து சென்றார்கள். அந்தக் குழந்தைக்கு நீங்கள் நினைப்பதுபோல் "ஆட்டிஸம்"  பிரச்சனை எல்லாம் கிடையாது.அவள் யாரென்று சில நாட்களில் அவளுடைய பெற்றோரே வந்து செல்வார்கள். அதுவரை நீங்கள் பொறுத்திருங்கள்" என்று சொல்லியிருக்கிறார். இதை பள்ளி நிர்வாகி மூலம் தெரிந்து கொண்ட எனது மனைவி ரேவதி அதை என்னிடம் சொல்ல "ஆட்டிஸம் மட்டுமல்ல இன்னும் நிறைய பிரச்சனைகள் சேர்ந்தே இருக்கிறது என்று சொல்லி நம் வயிற்றில் புளியைக் கரைக்க போகிறார். அதுதான் நடக்கப் போகிறது பார்" என்றேன்.

அதேவேளையில் எனது பெற்றோரும் நாடு திரும்பி விட, ஒரு நாள் நானும் எனது தாயாரும் தி.நகர் ரங்கநாதன் தெருவிற்கு சென்றோம். நான்காவது பிறந்தநாளை நெருங்கிக்கொண்டிருக்கும் குழந்தை படிப்பில் என்ன செய்யப்போகிறாளோ என்ற பயத்தில் நான் எனது  பள்ளிப்பருவத்தில் பயன்படுத்திய ஸ்லேட்டையும், குச்சியையும் தேடினேன். வீட்டிற்கு வந்து எனது மனைவியிடம் அதை கொடுத்து "தயவுசெய்து அவளுக்கு அ, ஆ-விலிருந்து ஆரம்பித்தது எழுதப் பழக்கு. நாம் பார்க்கும் நிறைய குழந்தைகளைப் போல் தனியாக எழுத சிரமப்பட போகிறாள்" என்றேன். மீனாட்சி அழைத்துக்கொண்டு எனது மனைவி ஸ்லேட்டுடன் எங்கள் ரூமிற்குச் சென்றாள். வழக்கம்போல் மீனாட்சியின் அழுகையும், அலறலும் கேட்டது. சிறுது நேரம் கழித்து வெளியே வந்த எனது மனைவி ரேவதி, "மீனாட்சி தானே நன்றாக எழுதுகிறாள்" என்றாள். "நீ கையைப் பிடித்தால் நீ எழுதிய எழுத்துக்களின் மேல் எழுதுகிறாளா?" என்று கேட்டேன். ரேவதி சொன்னாள் "இல்லை! அவளே எழுதுகிறாள்"என்று சொன்னாள். எனக்கு அது சரியாக புரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து நான் அந்த ஸ்லேட்டை வாங்கிக் கொண்டு, மீனாட்சியை என் மடியில் அமர்த்தி அவளின் கையை பிடித்துக்கொண்டு அ, ஆ எழுதச் சொன்னேன். ரேவதி சொன்னதன் அர்த்தம் எனக்கு இப்பொழுது தான் புரிகிறது! நான் கையை பிடித்திருக்கிறேன். ஆனால் எழுதுவது நானல்ல! அது மீனாட்சி தான்! எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. இப்பொழுது அ, ஆ தாண்டி 1 , 2 என்று எண்களைக் கேட்க நான்  கேட்டு முடிக்கும் முன்பே 1,2,3 என்று கிறுக்கலாக எழுதத் தொடங்குகிறாள். எனக்கு குழப்பம் இப்போது அதிகமானது. நாம் தான் எழுதுகிறோமா அல்லது அவள் எழுதுகிறாளா அது எப்படி நாம் கேட்கும் முன்பே பதில் எழுத ஆரம்பிக்கிறாள். எனக்கு உண்மையிலேயே தலைசுற்றியது .எனது லேப்டாப் முன்பு அமர்ந்த நான் கூகுளில் தேட தொடங்கினேன். எனக்குத் தேவையான பதில்கள் ஹைபர்லெக்சியா(Hyperlexia), சவான்ட் சின்ரோம் (savant syndrome) என்ற தலைப்புகளில் கிடைத்தன.

No comments:

Post a Comment