திப்பு மஸ்தான் அவ்லியா தர்கா, ஆற்காடு
இந்த நேரத்தில் சிறுவயதிலிருந்தே மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்த எனக்கு, ஒரு ஆண் வாரிசு வேண்டி அப்போது மைசூரின் தளவாயாக இருந்த ஹைதர் அலியும், அவரது மனைவி ஃபக்ருநிசாவும் ஆற்காட்டில் இருந்த "சூஃபி" ஞானி திப்பு மஸ்தான் அவுலியா (சூஃபி-என்றால் அரபியில் கம்பளி ஆடை அணிந்த துறவி என்று பொருள்.மஸ்தான்- என்றால் "இறைப் பித்தர்" என்று பொருள். இது போன்றவர்களை இந்து மதத்தில் "பிரம்ம ஞானிகள்"என்று குறிப்பிடுவார்கள்) தர்காவிற்கு சென்று, தொழுது, அவரது ஆசிர்வாதத்துடன் 1750ஆம் ஆண்டு மகன் பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு அந்த ஞானியின் நினைவாக 'திப்பு சுல்தான்' என்று பெயரிட்டதாக அறிவேன். இது தவிர ஆற்காடு நவாப் குடும்பத்தாருக்கும் அவர்கள் வேண்டியதை நிறைவேற்றித் தந்திருக்கிறார் என்று படித்திருக்கிறேன். இப்பொழுது அங்கே அந்த தர்கா இன்னும் இருக்கிறதா என்பதை கூகுள் உதவியுடன் தெரிந்துகொண்டு, மீனாட்சியை அழைத்துக்கொண்டு நானும் எனது மனைவி ரேவதியும் காரில் ஆற்காடு நோக்கிப் பயணித்தோம்.
கண்ணிழந்த ஒரு யாசகனுக்கு யார் பிச்சையிட்டார்கள் என்று தெரியுமா? அவன் இருக்கும் நிலைக்கு அவன் தட்டில் விழும் காசு தான் அவனுக்குக் கடவுள். கிட்டத்தட்ட நானும் அதே நிலையில் தான் இருந்தேன். எது உதவும்? யார் உதவுவார்கள்? இந்தப் பிரச்சனைக்கு தீர்வென்ன? எங்கே முடியப் போகிறது? எதுவும் தெரியாது! ராணிப்பேட்டை பாலம் கடந்த உடனேயே இடதுபுறம் ஆற்காடு வந்தது. உள்ளே நுழைந்த சில கிலோமீட்டர்களிலேயே இடம் வந்து சேர்ந்தது. மிக எளிமையாகக் காட்சி அளித்த அந்த தர்காவை திப்பு மஸ்தான் அவ்லியாவின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்னும் நிர்வாகித்து வருகிறார்கள். நான் சென்ற அன்று மதிய நேரம் என்பதால் தர்கா மூடியிருந்தது. இரண்டு கட்டடங்கள் தாண்டி அருகிலேயே அதன் நிர்வாகிகளின் வீடு இருந்ததால் அங்கிருந்த ஒரு இளைஞன் எங்களுக்காக தர்காவை திறந்து, மந்திரம் ஓதி, மயிலிறகால் குழந்தையை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தான். வழக்கம்போல் மீனாட்சி அங்குமிங்கும் ஓடிக் கொண்டும் அழுதுகொண்டும் தனி உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.அந்த இளைஞன் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பி இருப்பதாகவும் கூறினான். அந்த தர்கா அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் இடமென்று தெரிந்துகொண்டேன். நான் சில நிமிடங்கள் கண்மூடிப் பிரார்த்தனை செய்தேன். பிறகு அங்கிருந்து சென்னை நோக்கிக் கிளம்பினோம்.
No comments:
Post a Comment