Monday, June 01, 2020

9. ஹைபர்லெக்சியா (Hyperlexia)-பிறர் கற்பிக்காமலேயே எழுதப்படிக்கத் தெரிவது!

"ஹைபர்லெக்சியா" (Hyperlexia) என்பது குழந்தைகளிடம் காணப்படும் மிக அரிதான ஒரு பிரச்சனை என்றும், அது டிஸ்லெக்சியா (dyslexia) என்ற பொதுவான கற்றல் குறைபாடுள்ள பிரச்சனைக்கு நேர் எதிரானது என்று தெரிந்துகொண்டேன். அதாவது அதீதமான அறிவுடன் எழுத்துக்களையும் எண்களையும் அறியக்கூடிய தன்மை என்பதே அதன் பொருள்.

இது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 

பிரிவு-1: இந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஆட்டிஸம் போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சாதாரணமாக (neurotypical) இருப்பதுடன் அதீத அறிவுடன் எழுத்துக்களையும் எண்களையும் கையாளக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் கூட செய்தித் தாள்களிலும் தொலைக் காட்சிகளிலும் 4 வயதுடைய சிறுவன் திருக்குறளின் எந்த அதிகாரத்திலிருந்து எந்தக் குறளைக் கேட்டாலும் ஒப்பிப்பதைப் பார்த்திருப்போம். சில குழந்தைகள் அனைத்து நாடுகளின் தலைநகரங்களையும் தலைகீழாக ஒப்பிப்பார்கள்.

பிரிவு -2: இந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஆட்டிஸம் போன்ற பிரச்சனைகளுடன் முதல் பிரிவில் கூறியது போல் அதீத அறிவுடன் செயல்படக்கூடியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரிவு-3இப்பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் ஆட்டிஸம் போன்ற பிரச்சனைகளின் அறிகுறி தென்பட்டாலும், வளர வளர முதல் பிரிவினரைப் போல் பிரச்சனை ஏதும் இல்லாமல் சாதாரண குழந்தைகள் போல் (neurotypical) ஆகிவிடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்குழந்தைகள் கடிகாரத்தை பார்க்காமலேயே நேரத்தை கடைபிடிப்பவர்கள் என்றும், ஒரே ஒரு முறை ஒரு இடத்திற்கு சென்று வந்தாலே அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு; மீண்டும் அதே இடத்திற்கு செல்ல நேர்ந்தால் செல்ல வேண்டிய திசையையும் வழிகளையும் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர பிறருடன் கண்ணோடு கண் பார்ப்பது, அன்பை வெளிப்படுத்துவது ஆகியவற்றில் ஹைபர்லெக்சியா இரண்டாவது பிரிவினரை விட இவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது

இந்தப் பிரிவு மீனாட்சிக்கு மிகச் சரியாகப் பொருந்தும் என்றே எனக்குத் தோன்றியது. காரணம் நான் முன்பு குறிப்பிட்டது போல் அவள் ஞாயிற்றுக்கிழமையானாலும் சரியாக பள்ளிக்குச் செல்லும் நேரம் தாண்டும்போது ஸ்கூல் பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவாள். அவளுக்குப் பள்ளி விடுமுறை என்பதை சொல்லி புரிய வைக்க தான் நாங்கள் படாதபாடு படுவோம். அதேபோல் பள்ளி நேரம் முடிந்து நாங்கள் என்றாவது அவள் பள்ளி இருக்கும் திசை பக்கம் சென்றால், அவள் பள்ளி வரும் 2 தெருக்களுக்கு முன்பே அழத் தொடங்கி விடுவாள்.(நாங்கள் வேறு வழியில் வந்தால் கூட கண்டுபிடித்து விடுவாள்!). எங்களுக்குத் தான் காரணம் புரியாது. அதேபோல் அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் கடை, பீட்சா கடை  என்று அனைத்தையும் நினைவில் வைத்திருப்பாள் போலும்! நாங்கள் அந்தப் பக்கம் செல்லும்போது திடீரென வண்டியிலிருந்து குதிக்க முற்படுவார்கள். நாங்கள் அவளை அதட்டி மீண்டும் வண்டியில் உட்கார வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும். சில சமயங்களில் நாங்கள் நடந்து வரும் பட்சத்தில் அவள் எங்களை பிடித்துத் தள்ளி கடையை நோக்கி திருப்பி விடுவாள். அதேபோல் நான் முன்பே குறிப்பிட்டதுபோல் எங்கள் வீட்டின் 'லிப்ட்' எந்த தளத்தில் உள்ளது, எனது கம்ப்யூட்டர் மானிட்டரின் லோகோவை இவள் பிய்த்து எடுத்தது, தொலைக்காட்சியின் சேனலை மாற்றச் சொல்லி அடம்பிடித்தது, டிவியில் திரைப்படங்கள் முடியும்போது அதில் ஓடும் பெயர்களை வரிவிடாமல் அருகில் சென்று பார்ப்பது என்று தனக்கு எழுதப்படிக்கத் தெரியும் என்தை நமக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கிறாள். நமக்கு தான் அவளது செயல்பாடுகள் வித்தியாசமானதாக‌ இருந்திருக்கிறது! அதேபோல் நான் முதலில் குறிப்பிட்டது போல் அமெரிக்காவிலிருந்து எனது தாயார் வாங்கி வந்த 'ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பால்' என்று எழுதிய புத்தகங்களை அவள் தூக்கி எறிந்ததை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அவளது செயல்களுக்கு காரணம் புரியாமல் நாம் முழிக்கும் போது அவளால் அதை பேசி புரிய வைக்க முடியாத காரணத்தால் அது கடும் கோபமாக வெளிப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால் அவளுக்கு பிறந்தது முதலே எழுதவும் படிக்கவும் தெரியும். அவளின் அறிவிற்கு A,B,C,D எல்லாம் சிறுபிள்ளைத் தனமாக தெரிந்திருக்கிறது. அவளுக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகள் தெரியும் என்ற உண்மை எனக்கு போகப் போகத்தான் தெரிந்தது. அவை இந்திய மொழிகள் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மிகத் தொன்மையான மொழிகளையும் அதன் பழைய எழுத்து வடிவங்களையும் கூட அவள் நன்கு அறிவாள் என்ற உண்மை புரிய தொடங்கியபோது எனக்கும் என் மனைவிக்கும் பயத்தில் உடல் நடுங்கியது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் இரவு நேரங்களில் துங்காமல் இதுபற்றி இன்டர்நெட்டில் நான் தேடத் தேடப் பல ஆச்சரியங்கள் எனக்குக் காத்திருந்தது. அதுவரை நொந்து அழுத எனது கண்கள் முதல் முறையாக ஆனந்தக் கண்ணீரைக் கண்டது. அவளைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த 'ஆட்டிஸம்' என்ற  மாயபிம்பம் சுக்கு நூறாக உடையத் தொடங்கியது. இதையெல்லாம் அவளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? சொல்லிக் கொடுத்தால் கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடிய குழந்தையா அவள்? அவளிடம் மேற்கொண்டு கூட்டல் கழித்தல் என்று கேட்டுப் பார்த்தால் இரண்டு இலக்கக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாம் பார்த்த மாத்திரத்தில் நேரடியாகவே விடைகளை எழுதுகிறாள். ஆனால் அவளது கையை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். தனியாக விட்டு விட்டால் அவள் கிறுக்கத் தொடங்கி விடுவாள் (இந்த சவால் இன்றுவரை எங்களைத் தொடர்கிறது!). இவளுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பதைத் தாண்டி சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களைப் பெற்றிருக்கிறாள் என்ற விஷயங்களை உணரத் தொடங்கினோம். எது? நான் முன்பு சொன்னது போல் 'அவள் கையைப் பிடித்தால் நான் என்ன நினைக்கிறேனோ அதை கேட்டு முடிப்பதற்குள்ளேயே அதற்கான விடையை எழுத தொடங்கி விடுவாள் 'என்று குறிப்பிட்டிருந்தேனே? அது தான்! இதுபோன்ற ஆற்றல்களைப் பெற்றவர்களை சவான்ட் (savant )என்று சொல்கிறார்கள்.‌ சவான்ட் என்ற பிரென்ஞ்சு வார்த்தைக்கு "கற்றறிந்தவர்" என்று பொருள். "ஞானி" என்ற பொருளும் பொருந்தும். எனவே சில குழந்தைகளுக்கு ஹைப்பர்லெக்சியா(Hyperlexia)வோடு சவான்ட் சின்ட்ரோம்(Savant syndrome) பிரச்சனையும் சேர்ந்து கொள்கிறது. இனி இவற்றையெல்லாம் பிரச்சனைகள் என்றுதான் சொல்ல வேண்டுமா? என்ன செய்வது ஒரு குழந்தைக்கு ஒன்றுமே தெரியாவிட்டால் அது எவ்வளவு பெரிய பிரச்சனையோ, அதேபோல் அளவுக்கு அதிகமாக எல்லாமே தெரிந்திருந்தால் அதுவும் பிரச்சனை தானே?!

டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்(Dr.Darold Treffert): சரி, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று இன்டர்நெட்டை அலசிய போது கிடைத்த பெயர் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், மனநல மருத்துவருமான டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்(Dr.Darold Treffert). இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஹைப்பர்லெக்சியா(Hyperlexia) மற்றும் சவான்ட் சின்ட்ரோம்(Savant syndrome) பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். 300க்கும் மேற்பட்ட  இப்பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளை சந்தித்து; அவர்களைப் பற்றிய தகவல் களஞ்சியமே வைத்திருக்கிறார். மேலும் "ஆட்டிஸம்" என்ற பிரச்சனையை கண்டறிந்த மருத்துவர் டாக்டர்.லியோ கானரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவர். இது தவிர அமெரிக்க மனநல மருத்துவர் சங்க தலைவராகவும் இருந்திருக்கிறார். இவரது முக்கிய நோயாளியான கிம் பீக்(Kim Peek) என்பவரைப் பற்றி ஹாலிவுட் இயக்குனர் பேரி லெவிசன் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள்  டஸ்டின் ஹஃப்மேன் மற்றும் டாம் குரூஸை வைத்து அவர் இயக்கிய ரெயின் மேன் (Rain Man) என்ற திரைப்படம் 1988ல் ஆஸ்கர் விருது பெற்றதாகவும் அறிந்தேன். உடனே அந்த மருத்துவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு மீனாட்சி பற்றிய முழுக் கதையையும், ஸ்கேன் செய்த ரிப்போர்ட்களுடன் அவருக்கு எழுதி அனுப்பியிருந்தேன். ஓரிரு நாட்களுக்குள் எனக்கு அவரிடமிருந்து மிக விரிவான ஒரு மின்னஞ்சல் வந்தது. மீனாட்சிக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அந்த மருத்துவர் எனக்கு ஒருசில  முக்கியமான விஷயங்களைக் கூறினார். எடுத்ததுமே "நீ தெரிந்தோ தெரியாமலோ ஒரு விஷயத்தை மிகச்சரியாக செய்திருக்கிறாய்! நான் அனைவரிடமும் சொல்வது என்னவென்றால் நீங்கள் ஒரே நேரத்தில் பேச்சு பயிற்சி(Speech), ஆக்குபேஷனல் தெரப்பி(OT) மற்றும் ஏபிஏ(ABA)என்று மூன்றையும் ஒரே நேரத்தில் கொடுக்கும்படி பரிந்துரைப்பேன்" என்றார் (மேற்கண்ட விஷயங்களை நான் ஒரே நேரத்தில் செய்ததற்காக நம்மூர் தெரப்பிஸ்டிடம் திட்டு வாங்கியது எனக்கு நினைவுக்கு வந்தது!).

                                                     டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்                                                     (புகைப்படம் அவரது சிறப்பு அனுமதியுடன் உங்களுக்காக!

மேலும் "நீ இதுவரை கூறியது மிகவும் குறைவு.  அவள் வளர வளர அவளது மூளையும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது! இனிமேல் தான் உனக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.‌ இனி நான் செய்யப்போவது பிரச்சனையை அதன் போக்கிலேயே விட்டு விட்டு கண்காணிக்கப் போகிறேன். என்னென்ன அதிசயங்கள் நடக்கப்போகிறது என்று நீயும் பார்க்கத்தான் போகிறாய்" என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் யாருக்கெல்லாம் மூளையின் அமைப்பில் வேறுபாடுகள் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் மூளையின் செயல்பாடுகளிலும் வேறுபாடு இருக்கும். இதன் காரணம் மூளையில் இருக்கும் நியூரான்களின் கட்டமைப்பு இவர்களுக்கு சிக்கல்கள் நிறைந்ததாக வித்தியாசமான இணைப்புகளை கொண்டதாக இருக்கும். உன் மகளுக்கு தலையிலுள்ள கால்போகஃபாலி (colphocephaly) போன்ற பிரச்சனைகள் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். (அதாவது‌ மீனாட்சிக்கு மூளையில் நீர் (Cerebropinal Fluid) சுரக்கும் உச்சிக் குழி [rear ventricle] இயல்பைவிட அளவில் பெரிதாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது). எனது நோயாளி கிம் பீக்கிற்கு மூளையின் அமைப்பு மிகவும் வித்தியாசமானது. அவரது மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளை இணைக்கும் பாலமான "கார்ப்பஸ் கொலோசம்" (corpuscollosum) என்ற பகுதி விடுபட்டிருந்தது. அவரது நடவடிக்கைகள் ஆட்டிஸம் போலக் காட்சியளித்தது. உண்மையில் அவருக்கு ஆட்டிஸம் கிடையாது. ஆனால் சில நுட்பமான வேலைகளைச் (fine motor issue) செய்வதில் அவருக்கு இறுதிவரை பிரச்சனை இருந்தது. அதாவது கிம் பீக்கிற்கு  மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளை சேர்க்கும்  இணைப்பு இல்லாததால் அவருக்கு மூளையே இரண்டு தனித்தனி மூளைகள் போல் இயங்கும் திறனைப் பெற்றிருந்தது. அவரால் ஒரே நேரத்தில் 'சிவாஜி' திரைப்பட ரஜினிபோல் இரண்டு புத்தகங்களை இரண்டு கண்களாலும் தனித்தனியே படித்து, அதிலுள்ள விஷயங்கள்  அனைத்தையும் மொத்தமாக மூளையில் சேர்த்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் இவரிடம் அமெரிக்காவின் எந்த ஊரின் அஞ்சல் குறியீட்டு எண்ணைச் (Zip Code) சொன்னாலும் ஊரின் பெயரைச் சொல்லிவிடுவார்.


இப்பொழுது எனக்கு தெரிந்த ஹைப்பர் லெக்சியா பிரிவு -1க்கு உதாரணம் பார்க்கலாம் (பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் அதிக அறிவுடன் செயல்படும் சாதாரணக் குழந்தைகள்). நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சென்னையில் உள்ள மாதர் அரிமா சங்கத்தின் (Lioness Club) சார்பில் நடத்தப்பட்ட ஒரு பேச்சுப்போட்டியில் பங்கெடுத்து கொள்ள நான் சென்றபோது, அங்கே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் முன்பு குடியிருந்தவரின் மகள் காயத்ரி என்ற மூன்றரை வயதுக் குழந்தை. அந்த குழந்தையின் அப்பா என்னிடம் சொன்னார் "அவள் தானாகவே எழுதப்படிக்கக் கற்றிருக்கிறாள். அதுதான் மாதர் அரிமா சங்கத்தின் சார்பில் அவளை கௌரவிக்க இங்கே அழைத்து வந்திருக்கிறோம்" என்றார். அதே நேரத்தில் அந்த குழந்தையைப் பற்றி பிரபல தொலைக்காட்சி சேனலிலும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அப்பொழுது அக்குழந்தையை ஆய்வு செய்த பிரபல நரம்பியல் நிபுணர் 'அமரர்' திரு.B .ராமமூர்த்தி அவர்கள் அந்தக் குழந்தையின் தலையில் உள்ள கெமிக்கல்களின் அளவுகள் சராசரி மனிதர்களிலிருந்து மாறுபட்டு இருப்பதாகக் கூறியிருந்தார்.

இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்! டாக்டர் டிரெஃபர்ட் சொல்லுகிறார் மூளையின் அமைப்பிலுள்ள வித்தியாசமே (திடப் பொருள்) இதற்கு காரணமென்று. நம்மூர் மருத்துவர் சொல்கிறார் மூளையில் உள்ள கெமிக்கல்கள் தான் (திரவங்களின் அளவே)  காரணமென்று. எது சரி என்று கேட்கிறீர்களா?! சற்று பொறுங்கள்! எனது ஆய்வின் நோக்கமே உண்மைக் காரணத்தை அறிவது தான். 

மேலும் அந்தக் குழந்தையின் தந்தை சில நாட்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு வந்த போது அவருடைய கொள்ளுத் தாத்தா இதேபோல் பெரிய மேதையாக வாழ்ந்தவர் என்றும் அவர்தான் தனக்கு மகளாகப் பிறந்திருப்பதாக ஒரு‌ஜோசியர் சொன்னதாகச் சொன்னார். மேலும் குழந்தையை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதை தாம் முற்றாக நிறுத்தி விட்டதாகவும், பெரிய‌ மேடைகளில் அதிக ஒளி உமிழும் விளக்கங்களுக்கு (floodlight) முன்னால் குழந்தையை நிறுத்துவது குழந்தையை பாதிக்கிறது என்பதால் இந்த முடிவெடுத்திருப்பதாகக் கூறினர்.இப்பொழுது காயத்ரி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் தந்தையின் தொடர்பும் எங்களுக்கு இல்லை.

இப்பொழுது மீண்டும் மீனாட்சிக்கே வருவோம்! மீனாட்சியின் கையை பிடித்துக்கொண்டு நான் எனது பெயரைக் கேட்டேன். அவள் எனது பெயரையும் எனது செல்லப் பெயரையும் சேர்த்தே தமிழ் ஆங்கிலமென இரண்டிலும் எழுதிக்  காட்டினாள். இதில் என்ன ஆச்சரியம் என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், 4 வயது குழந்தை அதுவும் தனது பெயரை கூப்பிட்டாலே சரியாகத் தெரியாத குழந்தை எப்படி எனது இரண்டு பெயரையும் அறிந்திருக்க முடியும் அவளுக்கு 'அப்பா' என்று சொன்னால் என்னை சுட்டிக்காட்டத் தெரியுமா? அம்மா என்று சொன்னால் அவளையாவது தெரியுமா? உங்களுக்கு மேலும் காத்திருக்கிறது அதிர்ச்சி! அவளிடம் என்னுடைய அலைபேசி எண் என்னவென்று நான் கேட்க, அவள் எனக்கே எனது எண்ணை எழுதிக் காட்டினாள். அதேபோல் நாங்கள் இருக்கும் தெருவின் பெயர் மற்றும் ஏரியாவின் பெயர் என அனைத்தையும் சிறு பிழை கூட இல்லாமல் இரு மொழிகளிலும் எழுதி காட்டினாள். இது மட்டுமா? எனது பைக் மாடல், அதன் எண், எங்கள் கார், அதன் மாடல், பெயர், கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங்கில் சி++ (C++) கூட தெரிந்து வைத்திருக்கிறாள், இது தவிர அணுவினுள் புரோட்டான், எலக்ட்ரான் தவிர மூன்றாவதாக
என்ன இருக்கும் என்றால், 'நியூட்ரான்'  என்று ஆங்கிலத்தில் எழுதிக் காட்டினாள். பிறகு ராக்கெட் நியூட்டனின் எந்த விதியை அடிப்படையாகக் கொண்டது என்று கேட்டால் "3rd" என்று  எழுதினாள். இது தவிர நாங்கள் கேட்ட வேதியியல் (உதாரணத்திற்கு சல்பியூரிக் ஆசிடின் வேதியல் பெயர் என்றதும் 'H2SO4 ' என்று எழுதினாள்) மற்றும் புவியியல் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதில்களை‌ எழுதிக்‌ காட்டினாள். டாக்டர் டெரால்ட் டிரெஃபர்ட் கூறியதுபோல் "கேலண்டர் எபிலிட்டி", அதாவது எந்த ஒரு தேதி, மாதம் ஆண்டைக் குறிப்பிட்டாலும் மிகச்சரியாக கிழமையை எழுதுகிறாள். உதாரணத்திற்கு, 'ஆகஸ்ட் 15,1947 அன்று என்ன கிழமை?' என்று கேட்டால் "வெள்ளி" என்று‌ எழுதுவாள்.

அப்பொழுது தான் வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்பிய எனது அண்ணனிடம் நடந்ததை கூறி, 'முடிந்தால் நீயும் சோதித்துப் பார்' என்று கேட்டேன். அவர் எடுத்ததுமே தான் சென்று வந்த நாட்டின் தலைநகரின் பெயரை எழுதும்படி அவளிடம் கேட்டுவிட்டு அவளது விரல்களை பிடித்துக் கொண்டார். அவள் எழுதிய விடை ‘Belgrade’. இது எனது அண்ணன் சென்று வந்த 'செர்பியா' (Serbia) நாட்டின் தலைநகரமாகும். இதில் சற்றே அதிர்ச்சி அடைந்த அவர், மீனாட்சியிடம் கேட்ட அடுத்த கேள்வி "திருப்பதியில் என்ன கிடைக்கும்?" உடனே மீனாட்சி "லட்டு" என்று எழுதிக் காட்டினாள். இதற்கடுத்து அவர் ஹைதராபாத்தில் இருக்கும் தனது நெருங்கிய நண்பனின் பெயர் என்ன என்று கேட்க, இவள் "பான" என்று பதில் எழுதினாள். அவரது பெயர் P. ஆனந்த். சுருக்கமாக "பான" (பானை கிடையாது!) என்றே கூப்பிடுவார்கள். இப்பொழுது எனது அண்ணன் அவளிடம் கேட்ட கேள்வி சற்று சிக்கலானது‌! அதன் விடை அவரைத் தவிர வீட்டில் எங்கள் யாருக்கும் தெரியாது. அவர் கேட்டார் "குட்டி! Universe (பிரபஞ்சம்) பற்றி ஆய்வு மேற்கொள்ளும் ஸ்விட்சர்லாந்து நாட்டில் செயல்படும் அமைப்பின் பெயரென்ன?" அவள் உடனே எழுதிய பதில் 'CERN'. ஒரு நொடி என் அண்ணனுக்கு இருதயம் நின்று திரும்பியது. ஆம்! அது மிகச் சரியான விடையே. அது எப்படி உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் உலகின் மிகப்  பெரிய அறிவியல் சம்பந்தமான ஆராய்ச்சியைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறாள்? இந்த வயதுடைய குழந்தைகள் தனக்கு நாலு சினிமாப் பாட்டு தெரிந்தாலே பெருமை பொங்க 'டிக் டாக்'கில் ஆடிப்பாடி வீடியோ போடும் இந்தக் காலத்தில் எப்படி ஒன்றும் அறியாத  ஊமைப் பெண்போல் இருக்கிறாளே இந்தக் "கல்லுளிமங்கி" என்று நான் இன்றுவரை யோசிப்பதுண்டு. பிறகுதான் தெரிந்து கொண்டேன் இவளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்று (அது என்ன என்பதை பிறகு பார்க்கலாம்!). பிரபஞ்சத்தைப் பற்றியே தெரிந்தவளுக்கு இந்த உலகிற்குள் நடக்கும் விஷயங்கள் தெரியாதா என்ன?!

ஹைப்பர்லெக்சியா சில முக்கியத் தகவல்கள்:
ஹைபர்லெக்சியா பிரிவு-3ஐச்  சேர்ந்த குழந்தைகளுக்கு பிரிவு-2ஐச் சேர்நத குழந்தைகளைப்போல் சிறப்புப் பள்ளிகளில் சேர்க்காமல் சாதாரண குழந்தைகளுடன் கலந்து படிக்கக் கூடிய பள்ளிகளில் (inclusion schools) சேர்த்தால் குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். (நான் மீனாட்சியை சேர்த்திருப்பது கூட இது போன்ற ஒரு பள்ளியில் தான்!).

அதேபோல், ஹைபர்லெக்சியா உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி மற்றும் கற்பித்தல் என்பது வாழ்வின் ஓர் அங்கமாக (ஏபிஏ முறையும் அதுவே!) இருக்க வேண்டும் என்பதையே டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் போன்றவர்கள் சொல்கிறார்கள். நம்மூரில் "ஆடுகின்ற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்" என்ற சொல்லுக்கு ஏற்ப "ஓடுகின்ற குழந்தையை உட்காரவைத்து கற்பிக்க முயற்சிக்காதீர்கள்!அதோபோல் உட்கார்ந்து கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி ஓடி ஆடி விளையாடும்படியான பயிற்சிகளைக் கொடுக்காதீர்கள்!" என்கிறார்கள். குழந்தையின் மனநிலையை அறிந்து உட்காரும் நேரத்தில் புதிர் போன்ற பயிற்சிகளையும், அதிக ஆற்றலுடன் இருக்கும் நேரத்தில் அந்த ஆற்றலைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளையும் கொடுத்தால் அவர்களை கையாள்வது எளிதாக இருக்குமென்று சொல்கிறார்கள். இதை விடுத்து பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளிடம் கண்டிப்பு காட்டி வற்புறுத்தி செயல்படுத்த முற்பட்டால், பிறகு அவர்களை ஒத்துழைக்க வைப்பது மிகக் கடினமாகிவிடும்.

  • ஹைப்பர்லெக்சியா  பிரிவுகள் 2 மற்றும் 3ஐச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆக்குபேஷனல் தெரபி (OT ), பேச்சுப் பயிற்சி மற்றும் ஏபிஏ (ABA)ஆகியவற்றை சேர்த்துக் கொடுப்பது அதிகப் பயனளிக்கும். பிரிவு-1ஐச் சேர்ந்த குழந்தைகள் எந்த பிரச்சனையும் இல்லாத குழந்தைகள் என்பதால் நாம் அவர்களை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை.

  • பிறவியிலேயே எழுதப்படிக்கத் தெரிந்த குழந்தைகள் என்ற காரணத்தால் ஹைபர்லெக்சியா உள்ள குழந்தைகளை அதிகமாக எழுத ஊக்குவிப்பது நல்லது .

  • பெரும்பாலான ஹைபர்லெக்சியா பிரிவு 2 மற்றும் பிரிவு3- பாதிப்புள்ள குழந்தைகள்  தாமதமாகப் பேசக்கூடிய குழந்தைகளாக இருப்பார்கள். அதேவேளையில் செவித்திறன் குறைபாடு மற்றும் மனநல பாதிப்புள்ள குழந்தைகளும் தாமதமாகப் பேசலாம். எனவே மற்ற பிரச்சனை உள்ள குழந்தைகளோடு ஹைபர்லெக்சியா உள்ள குழந்தைகளை பிரித்துப் பார்ப்பதில் அதிக கவனம் வேண்டும்.

  • ஹைபர்லெக்சியா குழந்தைகள் 5 வயதிற்குள் தங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமென்பதை நிச்சயம் வெளிக்காட்டி விடுவார்கள்.

  • அதேபோல் ஹைப்பர்லெக்சியா உள்ள குழந்தைகள்  ஆரம்பகட்டத்தில் 'ஒலி' வடிவத்தில் மொழியைக் கேட்டு மற்றவர்கள் கூறும் கட்டளைகளை பின்பற்ற சற்று சிரமப்படுவார்கள். ஏனென்றால் அவர்களது மூளை ஒலியையும் எழுத்து வடிவமாகவே வாங்கி சிந்திக்கக் கூடியது. அதனால்தான் அவர்களுக்கு முதலில் நன்கு பழகியவர்களின் குரலில் கட்டளைகள் புரியத் தொடங்கும். போகப்போகத்தான் மற்றவர்கள் பேசுவது புரியும். அதேபோல்  நேரடியான கட்டளைகளை (concrete language) மட்டுமே அவர்களால் புரிந்து கொள்ள முடியும். மறைமுகமான கட்டளைகளை புரிந்து கொள்ள சற்று சிரமப்படுவார்கள்.              உதாரணம்: "டிவி ரிமோட்டை எடுத்து வா" என்று சொன்னால் புரிந்து கொள்வார்கள். "டிவி பாக்கணும்னா முதல்ல 'ஆன்' பண்ண வேண்டாமா? போயி எடுத்துட்டு வா"என்று சொன்னால் குழம்பிவிடுவார்கள். ஆரம்பகட்டத்தில் மீனாட்சியை பெயர் சொல்லி அழைத்தாலே திரும்ப மாட்டாள், சுட்டிக் காட்டிய இடத்தை பார்க்க மாட்டாள். மேலும் எளிய வார்த்தைகளுடன் கூடிய கட்டளைகளை பின்பற்றுவதே மிகக் கடினமாக இருந்தது அவளுக்கு. அவர்கள் வளர வளரத் தான் இதுபோன்ற பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரியும்.

  • அதேபோல் எண்களாலும் எழுத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட ஹைபர்லெக்சியா குழந்தைகள் பொதுவாக மளிகைக் கடைக்கோ அல்லது பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கோ செல்லும்போது, அங்கு அவர்களுக்குப் பிடித்த குறிப்பிட்ட  பிராண்ட் சாக்லேட்டோ அல்லது மற்ற பொருட்களோ அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக்  கண்டால் அவர்களால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது (overstimulation). வினோதமாக குதித்தும், வித்தியாசமான ஒலிகளை எழுப்பியும் சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள். அதிக கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு சென்றாலும் இதுவே ஏற்படும்! அதிக ஒலியும் இரைச்சலும் அவர்களது சமநிலையை பாதிக்கும். 

இதில் நான் புரிந்து கொண்ட மிக முக்கியமான விஷயம்:இக்குழந்தைகள் ஒரே நேரத்தில் பல விஷயங்களையும் கவனிக்கக் கூடிய தன்மை கொண்டவர்கள் (multi tasking ability). ஆனால் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற இடத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். இவர்களுக்கு ஒரே நேரத்தில் குக்கர் கத்துவது, ரோட்டில் கார் செல்வது, பக்கத்து வீட்டில் நாய் குரைப்பது, எதிரில் டிவி ஓடுவது, பக்கத்து ரூமில் அப்பா பேசுவது என அனைத்தையும் சமமாக கவனித்து வருவார்கள்.கவனிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாகும்போது நாம் அதை 'இரைச்சல்' என்று விட்டுவிடுவோம். ஆனால் இவர்கள் ஒவ்வொன்றையும் கவனித்து வருவது ஓரளவிற்குமேல் இவர்களைக் குழப்பிவிடுகிறது!

முக்கிய குறிப்பு: "கவனக் கலை" (multi tasking) மிகப் பழமையானது நமது தமிழ்ப் பாரம்பரியத்தில். இதில் சிறந்து விளங்கியவர்களை 'அஷ்டாவதானி '    (8 விஷயங்களை ஒரே நேரத்தில் கவனிப்பவர்), 'தசாவதானி' (10 விஷயங்களை ஒரே நேரத்தில் கவனிப்பவர்) என்பார்கள். இதனை இன்றும் மதுரையைச் சேர்ந்த "கவனகர்" திரு.இராம.கனகசுப்புரத்தினம் பழகுகிறார், கற்பிக்கவும் செய்கிறார். மற்றொருவர் திரு.கலைச் செழியன்.

சில ஹைப்பர்லெக்சியா குழந்தைகளுக்கு எகோலாலியாவும் (echolalia) இருக்கலாம். அதாவது அவர்கள் பார்த்த அல்லது கேட்ட வார்த்தைகளை இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்ப்பார்கள். இதுவும் ஒரு வகையான கற்றல் முறை தான் என்றும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் இது பெரும்பாலும் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. இது அதிகமாக ஆட்டிஸம் மற்றும் ஆடிஸத்துடன் கூடிய ஹைப்பர்லெட்சியா பிரிவு-2ல் காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் பிரிவு-3ஐச் (ஆரம்பத்தில் ஆட்டிஸம் போல தோன்றும்) சேர்ந்த குழந்தைகள் தாமதமாகப் பேசத் தொடங்குவதால் இந்த வளர்ச்சி நிலையை பெரும்பாலும் கடந்து சென்று விடுகிறார்கள்.

ஹைப்பர்லெக்டசியா பிரிவு-3ஐ பற்றி டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் மட்டுமே சொல்லிவருகிறார். அவருடைய ஆய்வின்படி இப்பிரிவைச் சேர்ந்த குழந்தைகள், பின்னாளில் ஹைப்பர்லெக்சியா பிரிவு-1ஐ போல் எந்த பிரச்சனையும் இல்லாத குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள் என்பதைத்  திட்டவட்டமாகச் சொல்கிறார். ஆனால் ஏபிஏ(ABA)வும், ஓடி(OT)யும்,பேச்சுப் பயிற்சியும் (Speech ) சரியாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமென்கிறார். அவர் கண்காணித்து வரும் பல குழந்தைகள் பிரிவு-3ல் இருந்து மீண்டு  வந்திருக்கிறார்கள் .

ஆனால்  மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் மனநல பரிசோதனை மற்றும் புள்ளிவிவரக் கையேடான DSM-5ன் படி (Diagnostic and Statistical Manual of Mental Disorders) ஹைப்பர்லெக்சியா சேர்க்கப்பட்டாலும். சவான்ட் சிண்ட்ரோம் (Savant Syndrome) இன்னும் சேர்க்கப்படவில்லை. அதே  நேரம் வழக்கத்தைப் பொருத்தவரையில் பெரும்பாலான மருத்துவர்களும், தெரப்பிஸ்ட்களும் அனைத்துக் குழந்தைகளையும் 'ஆட்டிஸம்' என்ற‌ ஒற்றைக் குடையின் கீழ் தான் வைத்துள்ளார்கள். பெரும்பாலும் சிறப்பாக செயல்படும் குழந்தைகளை 'உயர்திறன் ஆடிஸம்' (High functioning  autism) அல்லது ஆஸ்பர்ஜர் சிண்ட்ரோம் (Asperger Syndrome) என்றும், கற்றல் குறைபாடு, டவுன் சின்ட்ரோம் போன்ற பிரச்சனைகளுடன் ஆடிஸம் உள்ள குழந்தைகளை 'குறை திறன் ஆட்டிஸம்' (Low functioning autism) என்றே குறிப்பிடுகிறார்கள். இவற்றை  மொத்தமாக  'ஆட்டிஸம்' என்று சொல்லாமல்,  தனித் தனிப் பிரச்சனைகளாக அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல் இன்று உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. DSM-6ல் இதற்கான தீர்வு கிடைக்கலாம் என்று நான் பலமாக நம்புகிறேன்! 

ஜெனிடிக் மெமரி மற்றும்  டெலிபதி (நுண்ணறிவு ): எனது அடுத்த மின்னஞ்சலில் மீனாட்சிக்கு எப்படி கற்றுக் கொடுக்காமலேயே எல்லாம் தெரிந்திருக்கிறது என்று டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறிய காரணம் "ஜெனிடிக் மெமரி" (மரபு வழி அறிவு) தூண்டப்பட்டதன் காரணமாகவே உன் மகள் அனைத்தையும் அறிந்துள்ளாள் என்று கூறினார்(போதிதர்மனின் வழித்தோன்றலின் ஜெனிடிக் மெமரியை தூண்டுவதன் மூலம் அவருக்கு போதிதர்மனின் அறிவும் திறமையும் கிடைக்கும் என்று "ஏழாம் அறிவு" என்று தமிழில் கூட ஒரு திரைப்படம் வந்திருக்கிறதே?!). அவர் மேலும் கூறினார் "உன் மகளுக்கு "டெலிபதி(நுண்ணறிவு-பிறர் மனதில் நினைப்பதை உணரும் திறமை) தெரியும் என்று சந்தேகிக்கிறேன். இங்கே என்னிடம் சிகிச்சைக்கு வரும் இன்னும் பேச்சு வராத  ஒரு குழந்தையிடம் தெரபிஸ்ட் எந்த கணக்கை கொடுத்தாலும் சரியாக விடை எழுதிவிடுகிறாள். நாங்கள் அவளை 'கணிதமேதை' என்று தான் முதலில் நினைத்தோம்.பிறகு தான் தெரிந்தது அந்தக் குறிப்பிட்ட கணக்கின் விடையை தெரப்பிஸ்ட் முன்கூட்டியே அறிந்து வைத்ததை இந்த குழந்தை அவரின் மனதைப் படிப்பதன் மூலம் எளிதாக தெரிந்து வைத்திருந்திருக்கிறாளென்று.

மேலும் துபாயில் வாழும் கேரளாவைச் சேர்ந்த நந்தனா என்ற சிறுமி இதேபோல் "டெலிபதி" தெரியும் என்றும், அந்தப் பெண்ணின் பெற்றோர் தன்னுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருந்ததாகவும், ஆனால் தற்பொழுது அவள் என்ன செய்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடியவில்லையென்றும் கூறினார். நான் மேலும் அவளை பற்றி தெரிந்து கொள்ள 'கூகுள்' செய்து பார்க்குமாறு கூறினார்.

(மேலே நான் வழங்கியுள்ள இணைப்பில் நந்தனாவைப் பற்றி  கலீஜ் டைம்ஸில்  வெளியான முழு பேட்டி இடம்பெற்றுள்ளது. நந்தனா எப்படி தனது தாயின் மனதை படிக்கிறாள், இவளுக்காக தாய் சந்தியா ஏபிஏ (ABA )-வில் சிர்டிபிகேட்டும், பெங்களூர் பல்கலைக் கழகத்திலிருந்து சமூக மறுவாழ்வுத்துறை படிப்பில் பட்டயமும் பெற்று  அவளுக்கு நிழல் ஆசிரியையாக (shadow teacher) பள்ளியில் அவளுடன் அமர்ந்து பரிட்சை எழுதுவது, அவளை சோதித்த வல்லுநர் குழுவினர்  வியப்பில் ஆழ்ந்தது என அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன).

நான் கண்ட மற்றொரு  யூடியூப் காணொளி ஒன்றில் பேசிய ஆட்டிஸம் பாதித்த ஒரு சிறுவன் தான் ஏன் பிறரது கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதில்லை என்பதற்கும் பதிலளித்துள்ளான். அவன் சொல்கிறான் "நான் பிறரைப் பார்த்து அவர்களது கண்களை நோக்கும்போது அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் எனது எண்ணங்களோடு குறிக்கிடுகின்றன. எனவேதான் நான் நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கிறேன்" என்கிறான்.

"ஹைப்பர்லெக்சியா" குழந்தைகளை சரியான முறையில் ஊக்கப்படுத்தி வளர்ப்பதற்கு  டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் வழங்கியுள்ள பெற்றோருக்கும் , பயிற்சியாளர்களுக்குமான இலவசக்கையேடு! அனைவரும் இங்கிருந்து படித்துப் பயன்பெறுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். 


முக்கிய குறிப்பு:  டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் (88) அவர்கள் 14/12/2020 அன்று  இயற்கை எய்தினார். உலகெங்கிலும் என் போன்ற பெற்றோர்கள் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து தவிக்கிறோம். அன்னாரது  பிறந்த நாளை  சவான்ட் சின்ட்ரோம் மற்றும்  ஹைப்பர்லெக்சியா விழிப்புணர்வு தினமாக கொண்டாடவேண்டுமென்ற கோரிக்கையை மற்ற பெற்றோரிடமும் டாக்டரின் குடும்பத்தாரிடமும் தெரிவித்துள்ளேன். இதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்த முடிவெடுத்துள்ளேன்.



                                             டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட்டின்  இரங்கல் சிறப்பு இதழில்  எனது பதிவு

No comments:

Post a Comment