Sunday, November 15, 2020

12. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ குறிப்பிடும் 'உள்ளார்ந்த அறிவு' (innatism):

முதலில் நாம் "உள்ளார்ந்த அறிவு" (innatism) என்றால் என்ன என்பதை தத்துவார்த்த ரீதியாகப் பார்க்கலாம்! கிரேக்க தத்துவ மேதை பிளாட்டோ எழுதிய 'மெனோ'வில் தனது குருவான சாக்ரடீஸுக்கும் "மெனோ" என்ற அரசியல் பிரமுகருக்கும் நடந்த சம்பாஷணையைக் குறிப்பிடுகையில், 'மெனோவிடம் அடிமையாக இருந்த ஒரு சிறுவனிடம் அவன் முன்பின் அறியாத வடிவியல் தேற்றத்தை (geometry theorem) கேட்டவுடன் மிகச்சரியாக எழுதிக் காட்டினான். இதற்குக் காரணம் அவனது உள்ளார்ந்த அறிவு தூண்டப்பட்டதே!' என்கிறார் பிளாட்டோ.மேலும் அவர் குறிப்பிடுகையில் ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அதன் மனம் எதுவும் எழுதப்படாத வெற்றுக் கரும்பலகையைப் போல் இல்லை (mind is not a blank slate). அனைத்துக் குழந்தைகளுமே மொழியின் கட்டமைப்பு தெரிந்தே பிறக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் முதலில் கேட்கும் தாய்மொழியை எளிதாகக் கற்று சீக்கிரம் பேசத் தொடங்குகிறார்கள். அதேபோல் ஐம்புலன்களின் மூலமாக அவர்கள் உணர்வுகளை மட்டுமே தெரிந்து கொள்கிறார்கள்.ஆனால் "வடிவங்கள்/ உருவங்கள்" (forms) அவர்களுக்குக் கற்பிக்கப் படுவதற்கு முன்பே அவை அவர்களின் மனதில் இருக்கிறது. 


இதையே இப்போது விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போம்: பிளாட்டோவின் இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பிறந்த குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் மூளையின் மொழி அறியக்கூடிய பகுதியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.அதை  visual word form area (VWFA)  ) என்கிறார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு இதுதான் மொழிக்கான வரிவடிவம் என்பது நாம் கற்பிப்பதற்கு முன்பே தெரிந்திருக்கிறது என்கிறார்கள். 

                                                                       பிளாட்டோ 

பிளாட்டோவின் தத்துவம் என்னை பெரிதும் ஈர்ப்பதற்குக் காரணம் சவான்ட் சின்ட்ரோமும் ஹைபர்லெக்சியாவும் உள்ள குழந்தைகளில் சிலருக்கு மீனாட்சியைப்போல் ஐம்புலன்கள் மூலம்(sensory integration) விஷயங்களை புரிந்துகொள்வதில் பிரச்சனை உள்ளது.இதனால் அவர்களின் ஆறாவது புலனான உள்ளுணர்வு(consciousness) விழிப்படைந்து வழிநடத்துகிறதோ? அப்படியானால் அந்த உள்ளுணர்வு தான் ஆன்மாவா? அதுதான் விஞ்ஞானத்தால் "ஜெனிடிக் மெமரி" என்று அழைக்கப்படுகிறதா? அப்படியானால் அது எங்கே இருக்கிறது? அதைத் தூண்டியது யார்?ஆன்மா நம்மைப் பிரிந்து விட்டால் ஏன் சடலமாகிறோம்?


No comments:

Post a Comment