இதே நேரத்தில் சென்னை அடையாரிலுள்ள ஒரு பிரபல குழந்தைகள் நரம்பியல் மருத்துவரின் (CHILD NEUROLOGIST) ஆலோசனையின் பேரில் குழந்தையை ஆக்குபேஷனல் தெரப்பியில் சேர்த்தோம். அவர் எங்களிடம் கூறியது "குழந்தைக்கு ஆட்டிஸம் பிரச்சனை உள்ளது. ஆனால் மிகக் குறைந்த அளவில் என்று தான் சொல்வேன். இவள் பேசுவதற்கு நிச்சயம் நேரம் எடுக்கும். அதே வேளையில் இவள் கணிதம் போன்ற சில பாடங்களில் மற்ற குழந்தைகளை விட சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் தாமதிக்காமல் உடனடியாக ஆக்குபேஷனல் தெரப்பியை ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே தெரபியை துவங்கிய ஒரு குழந்தைக்கும் தெரபியை கொடுக்காமல் வளரும் குழந்தைக்கும் நிச்சயம் செயல்பாடுகளில் வித்தியாசம் தெரியும். எனவே மீண்டும் சொல்கிறேன்! தாமதிக்காமல் இப்பொழுதே ஆரம்பியுங்கள்"என்று கூறினார்.
நான் புரிந்து கொண்ட வரையில் 'ஆட்டிஸம்' என்ற பெயருக்கு சரியான பொருள் "மன இறுக்கம்" என்பதே. தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், மனநலம் குன்றியவர்களும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களும் வெவ்வேறு பிரச்சினைகளை உடையவர்கள் என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுவது நாம் அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். ஏனென்றால் மனநலம் குன்றியவர்கள் முழுக்க தனது சுயநினைவை இழந்தவர்கள். ஆனால் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (ASD) பாதித்தவர்களுக்கு சுயநினைவு உண்டு. ஆனால் அவர்கள் செயல்படும் விதம் வித்தியாசமாகவும், பிறரைக் கண்ணோடு கண் பார்த்துப் பேசுவது, கேட்ட கேள்விக்கு பதில் கூறுவது, சில நுட்பமான வேலைகளைச் செய்வது போன்ற விஷயங்கள் அவர்களுக்கு மிகக் கடினமானதாக இருக்கும். அப்படியானால் இதை ஏன் நமக்கு மிகவும் பரிச்சயமான "ஸ்பெக்ட்ரம்" (அலைக்கற்றை) என்ற சொல்லோடு சேர்த்து சொல்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இதோ உங்களுக்கான பதில்! ஆட்டிஸம் உள்ளவர்களை உளவியல் துறையினர் கார்ஸ் சோதனை (CARS TEST) என்ற உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ஆட்டிஸத்திற்கான சோதனையை மேற்கொள்ளும்போது பிரச்சனைக்கு தகுந்தாற்போல் மதிப்பெண்களை வழங்குவார்கள். அதாவது 30 மற்றும் அதற்குக் கீழே மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம். 33இல் இருந்து 36 வரை எடுத்தால் அவர்களுக்கு மிதமான ஆட்டிஸம் (mild autism) என்றும், அதற்கு மேல் எடுத்தால் தீவிர ஆட்டிஸம் (severe autism) என்றும் மதிப்பீடு வைத்திருக்கிறார்கள். அதாவது ஒருவர் நான் 'பாஸ்' என்று கூறினால் அவர் 40 மதிப்பெண்கள் முதல் 100 மதிப் பெண்களுக்குள் எவ்வளவு மதிப்பெண் வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். இப்படி குறைந்தபட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக இதில் முடியும் என்னும் போது நமது மதிப் பெண் இடைப்பட்ட இடத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாமென்று குறிப்பிடுவதால் தான் இதை "ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர்" (ASD) என்று சொல்கிறார்கள். நீங்கள் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்து உங்களின் நிலை (பிரச்சினையின் அளவு) தீர்மானிக்கப்படுகிறது.
நான் முன்பே கூறியது போல் குழந்தை விளையாடும் முறை, விளையாட்டுப் பொருட்களை கையாள்வது, பிறர் உத்தரவைக் கேட்டு செயல்படுவது, வயதுக்கு ஏற்ற அளவு வார்த்தைகளை பேசுவது, பேர் சொல்லி அழைத்தால் திரும்புவது, கண்ணோடு கண் பார்ப்பது (eye contact) மற்றும் ஒரு விஷயத்தில் நீடித்த கவனம் செலுத்துவது (attention span) போன்றவை சோதிக்கப்படும். இவை தவிர பெற்றோர்கள் பதில் கூறவேண்டிய பகுதியானது மிகவும் விரிவானதாக குழந்தையின் வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் அதில் ஏதேனும் வேறுபாடு அல்லது தாமதம் இருந்ததா என்பதைப் பற்றியும் இருக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் இதுபோன்ற பாதிப்பு முன்பே இருந்ததுண்டா மற்றும் நெருங்கிய உறவுக்குள் திருமணம் நடந்து பிறந்த குழந்தையா, கர்ப்ப காலத்தில் குழந்தையின் தாய்க்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்து சக்தி வாய்ந்த மருந்துகளை உட்கொண்டுள்ளாரா, கர்ப்ப காலத்தில் விபத்தேதும் நடந்ததுண்டா மற்றும் சுகப் பிரசவமா இல்லை அறுவை சிகிச்சையா என்பதுவரை அதில் கேட்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் சுகப்பிரசவத்தை விட அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்குத் தான் இது போன்ற பிரச்சனைகள் வருவதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். குழந்தையின் செயல்பாடுகளோடு நாம் (பெற்றோர்கள்) கொடுக்கும் பதில்களைப் பொறுத்தே இறுதியில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.
தினமும் காலையில் ஆகுபேஷனல் தெரப்பி (இது நான் முன்பு கூறிய இடம்போல் அத்தனை தொலைவு இல்லை. வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டருக்குள் தான்!) அதன் பின்பு பள்ளி என்று நேரத்தை பிரித்துக் கொண்டோம். .
நான் எனது அனுபவத்தில் தெரிந்து கொண்ட விஷயங்கள் என்னென்ன? ஆக்குபேஷனல் தெரப்பி (OT) என்பது முதல் உலகப் போர் நிகழ்ந்த பின்பு போர்க்களத்தில் காயமுற்ற வீரர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், அறுவை சிகிச்சைகளுக்குப் பின்பு கை, கால் போன்ற உறுப்புகள் நுட்பமான வேலைகளை மீண்டும் செய்ய அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. அதே பயிற்சிகளை மீனாட்சியைப் போல் ஓர் இடத்தில் அமைதியாக உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து ஓரிடத்தில் உட்கார வைத்து, சொல்லும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வைப்பது.
இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் குழந்தை வந்தவுடனேயே முதலில் சில உடற்பயிற்சிகளை கொடுத்து அவளை சோர்வாக்கி பின்பு மேற்கூறிய விஷயங்களை செய்யச் சொல்வது. இவை தவிர குழந்தைகளுக்கு மூளைக்கு வேலை கொடுக்கும் சில பயிற்சிகள். உதாரணத்திற்குப் புதிர்களுடன் கூடிய விளையாட்டுக்கள் (PUZZLES) மற்றும் நேர் கோட்டில் நடக்க வைப்பது, ஊஞ்சல் போன்ற அசையும் விஷயங்களில் உட்கார வைத்துப் பழக்குவது (vestibular exercises) என்று தொடரும். அதாவது புவியீர்ப்பு விசை, பாதுகாப்பு, தற்காத்துக் கொள்ளும் திறன், தூண்டுதல், கவனிக்கும் திறன் போன்ற உணர்வுகள் சூழ்நிலைக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்புடையவை. சூழ்நிலை பற்றிய தகவல் (ஐம்புலன்களின் மூலம் அறியப்பட்டு) மூளைக்கு சரியாக எடுத்துச்செல்லப்படாத பட்சத்தில் அது குழந்தையின் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகிறது .
சில உதாரணங்கள்: சாலையில் ஒரு வண்டி அதிவேகமாக ஒலி எழுப்பியபடி வந்தால் நாம் அங்கிருந்து நகர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு, இந்த உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் நமக்கு அடிபட்டு விடும் என்ற உணர்வு, அதிக ஆழம் உள்ள தண்ணீரோ பற்றி எரியும் நெருப்போ நமக்கு ஆபத்தை உண்டாக்கும் என்று புரிந்துகொள்ளும் தன்மை நமக்கு இயல்பிலேயே இல்லாதபட்சத்தில் அது பிரச்சனையே. இவற்றை தூண்டிவிடவே பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.
குழந்தையைக் கூப்பிட்டால் திரும்ப மாட்டேனென்கிறாள் என்ற காரணத்திற்காக அவளது கேட்கும் திறனை சோதித்தோம். இதற்கு 'பெரா' டெஸ்ட் (BERA Test) என்று சொல்வார்கள். ஆனால் குழந்தை எந்த சோதனைக்கும் ஒத்துழைக்க மாட்டாள் (அவளுக்கு எதையும் சொல்லி விளங்க வைக்க முடியாது) என்ற காரணத்திற்காக ஒரு மயக்க மருந்து சிகிச்சை நிபுணரையும் வைத்துக் கொண்டு குழந்தைக்கு மயக்க ஊசி கொடுத்த பின்பே சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் குழந்தையின் காதுகளில் எந்த பிரச்சனையும் இல்லை நன்றாகவே கேட்கிறது என்று தெரியவந்தது. எனக்குத் தெரிந்து இன்னும் சில குழந்தைகளுக்கு கண்பார்வையில் உள்ள பிரச்சனை, கேட்கும் திறனில் உள்ள பிரச்சனை, ஹெர்னியா (குடலிறக்கம்), மலச்சிக்கல் போன்றவற்றால் அந்த குழந்தைகள் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் போலவே செயல்பட்டு வந்தார்கள்.ஆனால் அவர்களது அடிப்படை பிரச்சனைகள் தீர்ந்த பின்பு அந்தக் குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்கள். அப்படி ஒரு அதிசயம் மீனாட்சிக்கும் நடக்காதா என்ற ஆதங்கத்தில் தான் இந்த சோதனையை மேற்கொண்டோம். வேறு எந்தப் பிரச்சனையும் குழந்தைக்கு இல்லை என்று ஒவ்வொன்றாக தெரியவரவே, எங்களது கவனம் "ஆட்டிஸம் தானோ?" என்ற சந்தேகத்துடன் தொடர்ந்தது அதை உறுதிப்படுத்தும் நோக்கில்.
இதற்கிடையே எங்களை ஒரு நாள் அழைத்த அந்தப் பள்ளி நிர்வாகி "சார்! உங்க குழந்தைய பார்த்துக்கற்து கஷ்டம். அவள ஸ்பெஷல் ஸ்கூல்ல சேர்த்துடுங்க. அதான் நல்லது" என்று கூறினார். (பெரும்பாலும் பள்ளிகளில் தான் குழந்தைக்கு ஆட்டிஸம், ஹைப்பர் ஆக்டிவிட்டி போன்ற பிரச்சனைகள் உள்ளது என்று சொல்லி அனுப்புகிறார்கள். இது இங்கு மட்டுமல்ல உலகம் பூராவும் நடக்கின்ற விஷயம்தான். பிற்பாடு எனக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த பெற்றோர்களும் இதே புகார் வந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள்). நான் சொன்னேன் "அவளுக்கு மருத்துவ சோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை.அவை நிறைவடையும் பட்சத்தில் அவளுக்கு "ஆடிஸம்" பிரச்சனை தான் என்று உறுதியானால் நான் அதற்கு ஆவன செய்கிறேன். இந்த ஆண்டு அவள் பள்ளியை முடிக்கும்போது ப்ரீ கேஜி படித்ததற்கான சர்டிபிகேட் கொடுங்கள் நான் மேற்கொண்டு பார்த்துக்கொள்கிறேன்" என்றேன். அதற்கு அந்தப் பெண்மணி "சர்டிபிகேட் கொடுத்தா எங்களுக்குப் பிரச்சனை. அதெல்லாம் தர முடியாது சார்" என்று மறுத்துவிட்டார். இதனால் கோபமுற்ற எனது மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள் "இப்படித்தான் நடந்து கொள்ள போகிறோம் என்று முடிவெடுத்த நீங்கள் எதற்காக உங்கள் பள்ளியில் இடம் கொடுத்தீர்கள்? ஃபீஸும் வாங்கிக் கொண்டீர்கள் அதுவும் முன்கூட்டியே! இது நியாயம் தானா?" என்று கேட்டாள். மேற்கொண்டு அந்தப் பெண்மணியுடன் பேசுவது பிரயோஜனமில்லை என்று புரிந்துகொண்டதுடன் ஒரு முழு ஆண்டு வீணாகிவிட்டதே என்ற வருத்தத்துடன் நாங்கள் வீடு திரும்பினோம் (எனக்கு இதைவிடப் பெருங்கவலை! ஒருவேளை என் மகள் எதிர் காலத்தில் தனது வகுப்புத் தோழன் யாரையேனும் காதலித்தால், அவன் வயதில் இவளைவிட இளையவனாக இருப்பானே என்ற அச்சமே!) என் மனைவி என்னிடம் "முதலில் உங்கள் மகள் ஒரு சராசரிக் குழந்தைபோல் ஒரு பள்ளியில் படிப்பாளா என்பதே கேள்விக் குறியாக உள்ளது.இந்த நேரத்தில் இந்தக் கவலை உங்களுக்கு தேவையா?" என்று நொந்து கொண்டாள்.
அப்போது அந்தப் பள்ளியில் வேலை செய்த ஆசிரியை அங்கே ஒதுக்கி வைக்கப்பட்ட மீனாட்சி போன்ற குழந்தைகளின்மேல் கொண்ட தனிப்பட்ட அக்கறையினால் தனக்குத் தெரிந்த ஒரு சிறிய பள்ளியில் சேர்க்க உதவினார். அந்தப் பள்ளியை நடத்தி வரும் பெண்மணி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துடன் சிறப்பு குழந்தைகளை கையாள்வதிலும் அடிப்படைப் பயிற்சி பெற்றவர் என்ற காரணத்தால் அங்கு சேர்த்தோம். எங்களைப் போன்ற கதியற்ற பெற்றோருக்கு இந்த நேரத்தில் இப்படி ஒரு வாய்ப்பு நிச்சயம் மகிழ்ச்சியை தரும் விஷயம்தானே? நான் பெருமைக்காக பெயர் பெற்ற பள்ளியில் என் மகளை சேர்க்க வேண்டும் என்று என்றுமே விரும்பியதில்லை. அது அவசியமும் இல்லை என்றே கருதுவேன். ஆனால் ஒரு சாதாரண பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதே இத்தனை பிரச்சனையாகுமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பள்ளியில் குழந்தைகள் மிகக் குறைவு. மேலும் இந்த பள்ளியின் நிர்வாகி மற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் "இங்கு சில குழந்தைகளுக்கு உதவி தேவைப்படுகிறது.அதனால் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து ஒரே வகுப்பறையில் தான் படிப்பார்கள். அப்படி அந்தக் குழந்தைகள் உங்கள் குழந்தையோடு சேர்ந்து படிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நீங்கள் உங்கள் குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம்!" என்று சொல்லியுள்ளார். இப்படியும் பேசக்கூடிய ஆசிரியர்கள் இன்றும் இருக்கத் தான் செய்கிறார்கள்!
இதே நேரத்தில் எனது அண்ணனின் நெருங்கிய நண்பரின் மனைவி (உக்ரேன் நாட்டுப் பெண்மணி) இங்கே சென்னையில் புதிதாக ஏபிஏ(ABA-Applied Behavior Analysis ) என்ற முறையில் சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறி அங்கு மீனாட்சியை அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினார்.
நான் முன்பு கூறிய ஆக்குபேஷனல் தெரப்பியிலிருந்து சற்று மாறுபட்டது இந்த முறை. இதில் குழந்தையின் மூளைக்கும் சிந்தித்து செயல்படுவதற்கும் (cognitive development) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏபிஏ (ABA) ஒரு வாழ்க்கைமுறை என்றே கூறுகிறார்கள். வெளிநாட்டில் ஆட்டிஸத்துடன் வாழும் தனிநபர்கள் பிறரின் துணையின்றி இறுதிவரை வாழ இந்த முறை வழி செய்கிறது. இதில் சைகை மூலம் குழந்தைகள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பயிற்சி அளிக்கிறார்கள்.அதாவது குழந்தை பேச முடியாவிட்டாலும் செய்கையினால் தனது தேவைகளை பெற்றோரிடம் கூறி பூர்த்தி செய்து கொள்வதால் அவர்களுடைய மன அழுத்தம் மற்றும் கோபம் குறையும் என்று சொல்கிறார்கள்.இது தவிர குழந்தைகள் தானாகவே கழிப்பறைக்குச் சென்று வருதல், பூப்படையும் நிலையிலுள்ள பெண் குழந்தைகள் தங்கள் மாதவிடாயின் போது தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த பயிற்சியை ஒரு சேவையாக கருதி பள்ளி, கல்லூரி மாணவியர் கூட இதுபோன்ற சிறப்புப் பயிற்சி மையங்களுக்குச் சென்று இலவசமாக பயிற்சி வழங்கி வருவதாகச் சொல்கிறார்கள். இந்த முறையில் பயிற்றுவிக்கும் பெரும்பாலானவர்கள் இதற்குரிய கல்வித் தகுதியின்றி அனுபவம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள்.
இதேவேளையில் நாங்கள் குழந்தைக்கான பேச்சுப் பயிற்சியை (speech therapy) தொடங்கினோம். ஒரே நேரத்தில் ஆக்குபேஷனல் தெரபி, ஏபிஏ மற்றும் பேச்சுக்கான பயிற்சி என்று மூன்று வகுப்புகளும் மூன்று திசைகளில் இருந்தது. இது தவிர பள்ளி வேறு! 24 மணி நேரம் போதவில்லை எங்களுக்கு. குழந்தையையும் இது நிச்சயம் கஷ்டப்படுத்தியிருக்கும். என் செய்வது? மந்தையில் செல்ல வேண்டிய எங்கள் ஆட்டுக்குட்டி தனித்து தொலைந்துவிடக் கூடாதே என்ற கவலைதான்! இவள் வயதுடைய மற்ற குழந்தைகளைப் பார்க்கும்போது தான் பேசுவதும், கைகளால் சுட்டிக் காட்டுவதும், கூப்பிட்ட குரலுக்கு திரும்புவதும், மழலையுடன் திரைப் பாடல்களை பாடுவதும் உலக அதிசயம் போல் காட்சியளித்தது எங்களுக்கு. மேலும், எங்கள் குடும்பத்தாரின் உதவியின்றி எங்களால் நிச்சயம் இத்தனை தூரம் கடந்து வந்திருக்க முடியாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதிலும் பொருளாதார ரீதியாக எனது அண்ணனும், அப்பாவும் எங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டிய நேரத்தில் செய்துள்ளார்கள் (இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள்!).
இந்த நேரத்தில் ஆக்குபேஷனல் தெரபி மையத்தில் நாங்கள் கண்ட ஒரு காட்சி எங்களை சற்று தலைசுற்றச் செய்தது. அங்கு வந்த பன்னிரெண்டு வயது மதிக்க தக்க ஒரு சிறுவன் அங்கே பணிபுரியும் ஒருபெண் ஊழியரிடம் தனது முதுகிலுள்ள பையைக் கழட்டி வைக்க உதவி கோரினான். அவர் உதவும் அந்த நேரத்தில் சற்றென்று அப்பெண்மணியின் நெஞ்சில் "கிண்"ணென்று ஓங்கிக் குத்திவிட்டு, உடனே தான் பயிற்சி மேற்கொள்ளும் அறைக் கதவை திறக்கிறான் இப்படிக் கூறியபடி "அக்கா...என்னைய அடிக்காதீங்க! எனக்கு பயமா இருக்கு!". நான் மட்டும் அவன் அடிப்பதைப் பார்க்காவிட்டால் தவறு அந்த பெண்மணியின் மேல்தானென்று நினைத்திருப்பேன். அந்தப் பெண்மணி என்னை நோக்கி பதற்றத்துடன் "நானா சார் அவன அடிச்சது?நீங்களே பாத்தீங்கயில்ல?"என்கிறார். பிறரை தனது கண்களால் நேருக்கு நேராக பார்க்க முடியாத மெலிந்த உடல்கொண்ட அந்த சிறுவனைப் பார்த்தால் யாருக்கு தான் பரிதாபம் பிறக்காது? இது அவன் தினமும் விளையாடும் விளையாட்டு போலும். அதி புத்திசாலித்தனத்துடன் கூடிய கொடூர விளையாட்டல்லவா இது? இப்பொழுது புரிந்தது கொண்டோம் தாமதமாக தெரப்பியை தொடங்கினாலோ அல்லது இளம் வயதிலேயே பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருந்திருந்தாலோ இப்படி தான் ஆகுமென்று!
அதே நேரத்தில் நாங்கள் சென்று வந்த அந்த ஏபிஏ தெரபிஸ்ட் குழந்தைக்கு வேண்டிய பயிற்சிகளை கொடுத்து வந்தார். ஆனால் அவருக்கு நாங்கள் கொடுக்க வேண்டிய கட்டணம் மற்ற பயிற்சி மையங்களில் கொடுக்கும் கட்டணத்தைவிட மிக அதிகமாகவே இருந்தது. அமெரிக்க வாழ்க்கை முறையை மையமாக வைத்து கொடுக்கப்படும் இந்த பயிற்சி பிறர் உதவியின்றி தனித்து வாழ சிறப்புக் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வாழ்வியல் பயிற்சியாகும். ஆனால் பயிற்சி கொடுத்த பெண்மணியிடம் சில பிரச்சனைகள் இருந்தது. 'காசு தான் குறி" என்பதை அவர் சற்று வெளிப்படையாக காட்டிக் கொண்டார். உதாரணத்திற்கு குழந்தைகளின் தகவல்களை மென்பொருளில் சேமித்து வைத்திருப்பதாக் கூறி அதற்கு ஆண்டிற்கு 6000 ரூபாய் சந்தா தொகை என்றால் அதை தனித்தனியாக ஒவ்வொரு குழந்தையிடன் பெற்றோரிடமிருந்தும் பெற்றுக்கொள்வார். "இதை எளிய முறையில் எக்ஸெலில் (excel sheet) பராமரிக்கலாமே?" என்று நான் கேட்டதுண்டு. அவருக்கு நான் கேள்வி கேட்டால் பிடிக்காது. நான் கேள்வி கேட்பதை "மீட்டிங்" என்ற பெயரில் உட்காரச் சொல்லி ஒன்று முதல் இரண்டு மணி நேரங்களுக்கு (என்னை பேசவிடாமல்) அவரே பெரும்பாலும் பேசிக்கொண்டு, அதை இரண்டு வகுப்புகளாக கணக்கிட்டு அதற்கான தொகையைக் கழித்துக் கொண்டு விடுவார். இதுபோல் எனக்கு இரண்டு மூன்று முறை நடந்துள்ளது.
மேலும் புதிதாக வேலைக்குச் சேர்ந்து ஏபிஏ முறையில் பயிற்சி பெற வந்த ஒரு பெண்மணியை மீனாட்சிக்கு வகுப்பெடுக்க விட்டுவிட்டு, கடைசியில் மீனாட்சி சரியாக ஒத்துழைக்கவில்லை என்று எங்களிடம் புகார் கூறியதுடன், இன்னும் அதிக வகுப்புகள் எடுத்துக் கொண்டால் நல்லதென்று எங்களுக்கு அட்வைஸ் கூறினார். இதை ஏற்காத நான் "இத்துறையில் அனுபவம் வாய்ந்த நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டுமென்று தான் உங்களிடம் மீனாட்சியை சேர்த்துள்ளோம். பயிற்சி எடுக்க வந்தவர் மீனாட்சியை கையாளத் தெரியாததால் தான் அவளிடம் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கு வழங்கும் அதே தொகையை பயிற்சி பெற வந்தவர்க்கும் கொடுக்கச் சொன்னால் எப்படி நியாயமாகும்?" என்று கேட்டதுண்டு. இதுபோன்ற கேள்விகளுக்கு தான் அவர் நீண்ட நெடிய விளக்கமளிப்பதுடன் என்னிடமிருந்து பணத்தையும் கழித்துக்கொண்டு விடுவார். நாங்கள் விடுப்பு எடுத்து எங்கும் சென்று விடக்கூடாது என்று சொல்வதுண்டு. அதற்கு அந்த அம்மையார் கூறும் காரணம், அப்படி இடைவெளி விட்டுவிட்டால் குழந்தை பழைய நிலைக்குப் பின்னோக்கிச் சென்று விடுவாள். பிறகு அவளை மீண்டும் பழக்கிக் கொண்டுவருவது கடினம் என்று கூறுவார். இதற்கு உண்மையான காரணம், நாங்கள் வகுப்பிற்கு வராதா நாட்களில் அவருக்கு வருவாய் குறைந்துவிடும் என்பதுதான். இதேபோல் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் "சிறப்புப் பயிற்சி பட்டறை" என்ற பெயரில் எனது பெற்றோரை அங்கு வரச் சொல்லி தாத்தா, பாட்டி போன்ற சொந்தங்கள் சிறப்புக் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தனித் தனியாக வகுப்பெடுத்து பணத்தைக் கறந்துவிடுவார். இதை நான் சொல்வதாக இருந்தால் சுருக்கமாகச் சொல்லி விடுவேன்! அதாவது குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். பெற்றோர்கள் சில சமயங்களில் கண்டிப்புடன் குழந்தையிடம் நடந்து கொண்டால், தாத்தா பாட்டி போன்ற மற்ற குடும்ப உறுப்பினர்கள் அந்த நேரங்களில் தலையிட்டு பெற்றோர்களைக் கண்டிக்காமல் சற்றே ஒதுங்கி இருத்தல். மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு குழந்தைகள் பெற்றோரை விட்டுவிட்டு தாத்தா பாட்டியிடம் வந்து எளிதாக 'தாஜா' செய்து தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வார்கள். எனவே அவர்களும் பயிற்சியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு ஒருமித்த கருத்தோடு செயல்படுதல் என்பவை தான்.
உதாரணத்திற்கு: குழந்தை ஃபிரிட்ஜில் உள்ள சாக்லேட்டை கேட்டால், பேசமுடியாத குழந்தைகள் பெற்றோரை கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் ஃபிரிட்ஜின் அருகில். அப்போது பெற்றோர் "உனக்கு வேண்டியதை கைகளால் சுட்டிக்காட்டு அல்லது வாயால் கேள்"என்று கேட்க வேண்டும். குழந்தை சுட்டி காட்ட மறுப்பதுடன் பேசவும் மறுக்கும். ஒரு கட்டத்தில் வெறுப்பின் உச்சத்திற்கு செல்லும் குழந்தை கத்திக் கூப்பாடு போடுவதுடன் கோபத்தில் பெற்றோரைக் கீறுவது, கையில் சிக்கிய பொருட்களைத் தூக்கி உடைப்பது என்று ஆரம்பிக்கலாம். அந்த நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தை அவர்கள் தனக்கு வேண்டியதை எடுத்துக் கொடுப்பார்கள் என்ற நோக்கத்தில் முகத்தை சற்று பரிதாபமாக வைத்துக்கொண்டு அழுதபடி அவர்களை நோக்கி திரும்பும். இந்த நேரத்தில் அவர்கள் "குழந்தையை ஏன் அழவிடுகிறாய்? அவள் கேட்டதை கொடுக்க வேண்டியதுதானே?" என்று பெற்றோரைக் கடிந்து கொள்ளாமல் அவர்களும் குழந்தையைப் பேச வைக்கவோ அல்லது சுட்டிக்காட்டும்படியோ சொல்ல வேண்டும். பொதுவாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் குழந்தையை வற்புறுத்தி எந்த எந்தவிதமான பயிற்சியும் கொடுக்க வேண்டாம் என்றே சொல்கிறார்கள். அப்படி வற்புறுத்துவது அங்கே சட்டத்திற்குப் புறம்பானது. இங்கே "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?" என்ற அடிப்படையில் குழந்தையை கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் பரவாயில்லை நமது கட்டளைகளை அவள் பின்பற்றியே ஆகவேண்டுமென்று கண்டிப்புடன் பயிற்சியைத் தரும்படி சொல்கிறார்கள் ஆக்குபேஷனல் தெரபி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பவர்கள். இதையே ஏபிஏ முறையில் சற்றே வித்தியாசமாக நம் கட்டளைகளைக் கேட்டு குழந்தை செயல்பட்டால், உடனே "உனக்கு சாக்லேட் தருவேன் அல்லது கன்னத்தில் முத்தம் கொடுப்பேன்" என்று "ஆடுகின்ற மாட்டை ஆடிக் கறக்கும்" (Positive reinforcement) வித்தையை செய்யச் சொல்கிறார்கள்.
இதேவேளையில், இதற்கு நேர் எதிராக செயல்பட்டு வந்தார் மீனாட்சியின் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட். அவர் கையாண்ட விதம் சற்று முரட்டு தனமாக இருந்தது.அதாவது குழந்தையின் ஹைப்பர் ஆக்டிவிட்டியைக் குறைக்க அவளது கை மற்றும் கால்களை படுக்க வைத்த நிலையில் இறுகப் பிடித்துக் கொள்வார் (JOINT CO -CONTRACTION EXERCISE). உதவிக்கு என்னையும் கூப்பிடுவார். குழந்தையின் ஒரு கை மற்றும் காலை நான் (எனது எடை 100ஐ தொடும்!) அமுக்கிப் பிடித்தபடி இருக்க, மற்றொருபுறம் அவர் பிடித்துக் கொண்டிருப்பார். இது 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடரும். குழந்தை மீனாட்சி வெகு சாதாரணமாக இதற்கிடையே இரண்டு மூன்று முறை எங்களை எட்டித் தள்ளி இருப்பாள். அப்படியானால் 4 வயது கூட நெருங்காத பெண் குழந்தையின் வலிமை எவ்வளவென்று தெரிந்து கொள்ளுங்கள். இதே நேரத்தில் அவள் படுத்திருந்த இடத்தில் சிறுநீர் கழித்து அதை துடைக்கின்ற நேரத்தில் தனக்கு ஓய்வு கிடைக்கும் என்ற நோக்கில் எங்களை திசைதிருப்பி விடுவாள். நீங்கள் இந்தக் குழந்தைகளை அவர்களின் வயது, நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை வைத்து குறைத்து எடை போட்டால் நீங்கள் ஏமாற்றப்படுவது உறுதி!
இந்த சமயங்களில் வீட்டிலிருந்து எடுத்துவந்த டெட்டால் மற்றும் துணியுடன் வரும் எனது மனைவி, இடத்தை சுத்தம் செய்துவிட்டு பயிற்சியைத் தொடர உதவுவாள். இது மற்ற ஆக்குபேஷனல் தெரபிஸ்டுகள் பின்பற்றும் முறையிலிருந்து வெகுவாக மாறுபட்டிருந்தது. பெரும்பாலானவர்கள் இந்தக் கட்டத்தில் குழந்தைகளை ஊஞ்சல் போன்றவற்றில் உட்காரச் சொல்லி பயிற்சியைத் தொடங்குவார்கள் (VESTIBULAR EXERCISES). இந்த நேரத்தில் நாம் சொல்லிக் கொடுப்பதை குழந்தைகள் கேட்டு பதிலளிக்கத் தொடங்கும். நிலையாக உட்கார்ந்திருப்பதை விட இதுபோன்ற நிலையில்லாத ஊஞ்சல் போன்ற இடங்களில் உட்காரும் நேரங்களில் அவர்களால் எளிதில் கவனிக்க முடியும் என்று சொல்வார்கள் இதற்கு "வெஸ்டிபுலார் சீக்கிங்" (vestibular seeking) என்று பெயர். ஆனால் எங்கள் தெரப்பிஸ்டோ இறுதிகட்டமாக தான் இதை செய்யப் போவதாக சொன்னார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை அவர் என்னை தனிப்பட்டமுறையில் கடிந்து கொள்ளத் தொடங்கினார். "உங்கள் வீட்டில் என்றாவது குழந்தைக்குத் தொட்டிலோ அல்லது தூளியோ கட்டியிருக்கிறீர்களா? உங்கள மாதிரி படிச்ச பேரன்ட்ஸ் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்" என்பார். நானும் கிராமத்தில் வளர்ந்தவன் தான். இங்கே அப்பார்ட்மெண்டில் ஃபேன் மாட்டவே இடம் இல்லாதபோது எங்கே கட்டுவது தூளியை? சொன்னால் கேட்கவா போகிறார்!
இதே சமயத்தில் வேறொரு விஷயத்தையும் கவனித்தேன். என்னிடம் இத்தனை கண்டிப்பாக இருக்கும் அந்த நபர் எனது மனைவியைக் கண்டால் "அந்நியனிலிருந்து ரெமோ வாக" மாறி விடுவார். அந்தக் கரும்பாறைக்குள்ளும் ஈரமுண்டென்று அப்பொழுது தான் தெரிந்துகொண்டேன். என் மனைவியின் ஜாடை அவருடன் படித்த மாணவி யாரையோ நினைவுபடுத்தி இருக்க வேண்டும்! (ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது போல் ஒரு ஆணின் மனது இன்னொரு ஆணுக்குத் தெரியாதா என்ன?). இதுபோன்ற சமயங்களில் அவர் பேசும்போது மறந்தும் என் பக்கம் தலை திரும்பாது. அவர் வாயிலுள்ள பற்களைக் கூட அப்படியே எண்ணிவிடலாம்.என்ன! என்னைக் கடிந்து கொள்வது மட்டும் சற்றுக் குறையும். நான் கூட என் மனைவியிடம் சொன்னது உண்டு "நீ உள்ளே வந்து உட்கார்ந்தால். நான் சிறிது தப்பித்துக்கொள்ளலாம்" என்று.
கிளாஸ் முடிந்து வீட்டிற்கு வந்தால் எனது பெற்றோர் என்னை நிச்சயம் திட்டுவார்கள் "என்ன இது! ஓடியாடி விளையாடும் குழந்தை ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாள்? இப்படியா முரட்டுத்தனமாக பயிற்சி கொடுப்பான் அந்த ஆள்?" என்பார்கள். "நமது நோக்கமே அவள் அமைதியாக ஓரிடத்தில் உட்கார வேண்டும் என்பது தானே?"என்று கேட்டால்"ஒரு பயிற்சியும் தேவையில்லை. குழந்தையை அவள் போக்கில் விட்டுவிடு" என்று சொல்வார்கள். அதேவேளையில் கிளாசில் சிறுநீர் கழிக்கும் மீனாட்சி வீட்டிலும் திடீர் திடீரென சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். இது நாங்கள் ஏற்கனவே ஏபிஏ பயிற்சி வகுப்பில் கழிப்பறையில் சிறுநீர் கழிக்க கற்றுக் கொடுத்த பயிற்சிக்கு எதிராக அமைந்தது. இந்தப் பிரச்சனை பற்றி அந்த ஆகுபேஷனல் தெரப்பிஸ்டிடம் நான் கேட்க "நீங்க சும்மாவா இருக்கீங்க? ரொம்ப படிச்சிட்டோம் அதிபுத்திசாலினு நெனப்பு. ஒரே நேரத்துல ஏபிஏ, ஓட்டி(OT), ஸ்பீச்னு எல்லாம் சேர்த்து கொடுக்குறீங்க? குழந்தை குழம்பிப் போகாதா? நம்ம கலாச்சாரப்படி கையால் எடுத்து சாப்பிட பாப்பாவ பழக்கணும். ஏபிஏ-ல சொன்னாங்கன்னு வெள்ளக்கார குழந்தை மாதிரி ஸ்பூன்ல சாப்படப் பழகினா பாப்பாவுக்கு சூடு எது குளிர்ச்சி எதுன்னு எப்படி சார் தெரியும்? என்னயக் கேட்டா எல்லாம் பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம்னு சொல்லுவேன்" என்றார். இவரிடம் மேற்கொண்ட தொடர்வது சரியாக இருக்காது என்று என் மனைவிக்கு தோன்றவே அவரிடம் சொல்வதை நிறுத்த முடிவெடுத்தோம்.
(இதில் வேறொரு காரணமும் அடங்கியிருக்கிறது! நான் அலுவல் காரணமாக வராத ஒரு நாளில் என் மனைவி மட்டும் மீனாட்சியை அழைத்துக்கொண்டு அவரிடம் சென்றிருக்கிறாள். அன்று மீனாட்சிக்கு வகுப்பெடுப்பதை நிறுத்திவிட்டு என் மனைவியின் கையில் பிற்பாடு ஒரு பிரச்சனை வரும் என்பதை கணித்த அந்த தீர்க்கதரிசி ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட் பணியிலிருந்து பிசியோதெரபி ஸ்டாக மாறி அவரே தன்னிச்சையாக என் மனைவியின் கையைப் பிடித்து சில பயிற்சிகளைக் கற்பித்திருக்கிறார். அவரது நோக்கத்தில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்த என் மனைவி, அவர் கையை எடுக்கும்படி கண்டிப்பாக சொன்னதுடன் கிளாஸ் போதும் என்று சொல்லி வீட்டுக்கு வந்துவிட்டாள்).
இதே சிறுநீர் கழிக்கும் பிரச்சனை பள்ளியிலும் தொடர்ந்தால் அவர்களால் கவனித்துக் கொள்ள முடியாதே! என்ன செய்யப்போகிறோம் என்று குழம்ப தொடங்கினோம். ஒருவேளை இந்த முரட்டுத்தனமான பயிற்சியால் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் பிரச்சனை உண்டாகி இருக்கிறதோ என்ற ரீதியில் கூட யோசிக்கத் தொடங்கினோம்.
அதேசமயம் ஸ்பீச் கிளாஸில் என் மகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டியவர் அப்போது கருவுற்றிருந்த காரணத்தால் (அவர் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் கிளினிகல் சைக்காலஜி பட்டப்படிப்புப் பிரிவில் விரிவுரையாளர். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பீச் கிளாசில் ஒரு குழந்தை அவரது வயிற்றை எட்டி உதைத்ததால் அவருக்கு வயிற்றில் வளர்ந்த கரு கலைந்துவிட்டது). எனவே இம்முறை மீனாட்சியைக் கையாள தனது மாணவியை அமர்த்தியிருந்தார். அந்த இளம் பெண்ணுக்குத் தண்ணி காட்டத் தொடங்கினாள் மீனாட்சி! (யாருக்கு பயப்பட வேண்டும் யாரை மிரட்ட வேண்டும் போன்ற விஷயங்களில் கைதேர்ந்தவள் தான் எங்கள் மகள்!). அந்தப் பெண் ஆறு மாதங்களாக "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையைக் கற்பித்து "அம்"வரை சொல்லிவிட்டாள். இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக "மா" சேர்த்து சொல்லிவிடுவாள் என்று எங்களிடம் பெருமிதமாக கூற, இடைப்பட்ட நேரத்தில் அந்தப் பெண்ணுக்கும் தேர்வு நேரமும் வந்து சேர, நாங்கள் ஒரு மாதம் விடுப்பெடுக்க வேண்டியதாயிற்று."எத்தனை விதங்களில் துன்பம் வைத்தாய் இறைவா!"என்று நொந்து கொண்டேன்.
கருப்பு ஆடு: இந்த சமயத்தில் போரூரில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலின் பின்பக்கம் இருக்கும் (வார இதழ்களில் தன்னைப் பற்றிய தானே சுய விளம்பரம் கொடுத்துக் கொள்வார்!) ஹோமியோபதி மருத்துவர் ஒருவரை என் அப்பா சிபாரிசு செய்ய, அவரைக் காண நானும் என் மனைவியும் மீனாட்சியை அழைத்துச் சென்றோம். அவர் நான் சென்ற நிமிடத்திலிருந்து என்னை பேச அனுமதிக்கவில்லை. மீனாட்சியும் அந்த மருத்துவரைக் கண்ட நிமிடத்திலிருந்து ஓயாமல் அழத் தொடங்கியதுடன், அவரது அறையை விட்டு வெளியேற முற்பட்டாள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த மருத்துவர், எடுத்ததுமே "நான் சொல்கிறேன்! நீங்கள் "உம்" கொட்டிக் கேட்டால் போதும். குறுக்கே பேசக்கூடாது! உங்கள் மகள் ஒரு இடத்தில் உட்கார மாட்டாள்- ஹைபர் ஆக்டிவ் குழந்தை. பெயர் சொல்லி அழைத்தால் கூட திரும்ப மாட்டாள். நீங்கள் அவளை சாதாரணப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தால் பிரச்சனைதான். அவளுக்கு எளிதில் பாடங்களைப் புரிய வைக்க முடியாது. அவளுக்கு ஆட்டிஸம் உள்ளது" என்று கூறியதுடன் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை, ஆனால் அந்த தலைக்கணம் பிடித்த மனிதர் மேலும் தொடர்ந்தார் "இது என்ன பையனா? பொண்ணுதானே! அவள எதையாவது படிக்க வச்சு எவனாவது இளிச்சவாயனாப் பாத்து பின்னாடி கட்டிவைக்கப் போறீங்க. அவ்வளவுதானே? செஞ்சிடலாம்! நான் ஜெர்மனியிலிருந்து 'நானோ செல்'னு (Nano cell) ஒண்ணு கொண்டு வந்திருக்கேன். அதை ரெண்டு மாசம் குடுத்துட்டு அதுகூட நீங்க ஆக்குபேஷனல் தெரபியும் கண்டினியூ பண்ணா நிச்சயம் ஆறு மாசத்துல பலன் கொடுக்கும்" என்றார். அவர் பேசிய விதம் எனது ஆத்திரத்தை தூண்டியது. இருந்தாலும் நாங்கள் இருந்த சூழ்நிலை மற்றும் எனது அப்பாவின் சிபாரிசு போன்ற காரணங்களால் அவர் விரும்பியது போலவே அவரை மட்டுமே பேச விட்டு விட்டு 500 ரூபாய் ஃபீசும் கொடுத்து விட்டு நாங்கள் வீடு திரும்பினோம்.
பொதுவாக நோயாளிகளிடம் "உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்டு அதை நாம் கூற, மருத்துவர் கேட்பதில் தான் நமக்கு ஒரு திருப்தி இருக்கும். அதுகூட பரவாயில்லை, ஆனால் ஒரு பெண் குழந்தையைப் பற்றி அவர் சொன்ன விஷயம் அவரது அந்தஸ்து, சார்ந்த தொழில் அனைத்தையும் தாண்டி அவர் வளர்க்கப்பட்ட விதம் மிகவும் தவறானது என்றே எங்களுக்குத் தோன்றியது. நல்ல பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட ஒரு ஆணின் வாயிலிருந்து இது போன்ற கீழ்த் தரமான வார்த்தைகள் நிச்சயம் வராது. அவரது வீட்டில் இருக்கும் பெண்களின் நிலைமை நிச்சயம் பரிதாபகரமானதே!
வீட்டிற்கு வந்ததும் நடந்ததை எனது பெற்றோரிடம் சொன்னோம். அன்றோடு அவருடன் பேசுவது மற்றும் அவரது மருத்துவ ஆலோசனைகளையும் எனது தகப்பனார் நிறுத்திக்கொண்டார். எனது தந்தையாருக்கு அந்த நேரத்தில் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் இருந்தது. அந்த மருத்துவர் கூறிய "நானோ செல்" பற்றி நான் இன்டர்நெட்டில் பார்த்த பொழுது அது கேன்சர் சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தக்கூடியது என்று தெரிந்து கொண்டேன்.மேலும் நிரூபிக்கப்படாத சோதனை நிலையிலிருக்கும் ஒரு விஷயத்தை குழந்தைக்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
இது போன்ற துறைகளில் இருப்பவர்கள் வல்லுநர்களாக இருப்பதுடன் பெற்றோர்களின் மனநிலை மற்றும் தனிப்பட்ட குழந்தைகளின் தேவையறிந்து சிறந்த முறையில் செயல்பட்டு பணம் என்கிற விஷயத்தையும் தாண்டி சேவை நோக்கத்துடன் செயல்படுகின்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இதுபோல் இருக்கும் ஒரு சில "கருப்பு ஆடுகள்" செய்யும் தவறுகளால் நாம் இவர்களின் சிகிச்சை முறைகளையே குறை சொல்வது பெரும் தவறாகிவிடும். எனவே நான் மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன், நடக்கும் தவறுகள் என்று நான் சொல்வதெல்லாம் தனி நபர்கள் செய்யும் தவறே ஒழிய எந்த ஒரு குறிப்பிட்ட பயிற்சி முறையையோ மருத்துவ முறையையோ நான் நிச்சயம் குறை கூற மாட்டேன். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப எந்த முறை வேண்டுமானாலும் உங்கள் குழந்தைக்குப் பயன் அளிக்கலாம். அதே விஷயம் எனக்குப் பலன் தராமல் இருந்திருக்கலாம். எனவே இது ஆளுக்காள் நிச்சயம் மாறக்கூடிய விஷயம். ஆனால் பெற்றோராகிய நமது கடமை தொடர்ந்து ஒவ்வொரு கதவாகத் தட்டி பார்க்க வேண்டியதுதான். நாம் இன்று ஏதாவது ஒன்றைச் செய்யாமல் விட்டுவிட்டு, பின்னாளில் "ஐயகோ! அதை அன்றே செய்திருந்தால் குழந்தை இந்நேரம் நேரம் குணமாகி இருக்குமோ?!” என்ற குற்ற உணர்ச்சியுடன் வருந்தக் கூடாது. ஆனால் கருப்பு ஆடுகளுக்கு பெற்றோர்களின் மனதில் இருக்கும் சந்தேகம், பயம், எதனால் பிரச்சனை என்று தெரிந்து கொள்ள துடிக்கும் தவிப்பு ஆகியவையே பணம் கறக்கக் காரணமாகிறது. 'பிறர் அறியாமையில் இருந்தால் தான் தனக்கு லாபம்' என்று நினைப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இது அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும்.