ஒருநாள் மீனாட்சி என் அண்ணன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபொழுது எனது அண்ணனின் நண்பர்கள் அங்கு வந்திருந்தனர்.அவர்களுள் ஒருவர் பிரபல திரைப்பட இயக்குனர். அவர் என் அண்ணனிடம் "பாப்பாவுக்கு ஆட்டிஸம் இருக்குனு நினைக்கிறேன். நான் சொல்ற இடத்துக்கு தம்பிய கூட்டிட்டு போகச் சொல்லுங்க. இப்பவே பார்த்துட்டா நல்லது தானே?" என்று அவரும் சொல்லிச் சென்றுள்ளார். இவருடைய மகனுக்கும் ஆட்டிஸம் பாதிப்பு உண்டாம்!
இவை நடந்த ஓரிரு நாட்களில் இறுகிய முகத்துடன் வந்த எனது அண்ணன் என்னையும், என் மனைவியையும் அழைத்து "நான் சொல்றத நீங்க கவனமா கேட்கணும்! குழந்தைக்குப் பிரச்சனை இருக்கு. இதைப் பத்தி நெட்ல நெறைய பார்த்தேன். அவளோட நடவடிக்கையைப் பார்த்தா 'ஆட்டிஸம்' மாதிரி தான் தோணுது.அதனால என் ஃபிரண்டு சொன்ன இடத்துக்கு அவளை கூட்டிட்டு போங்க. என்ன பிரச்சனைனாலும் நாம சேர்ந்து பாத்துப்போம். நீங்க ரெண்டு பேரும் முதல்ல தைரியமா இருக்கணும்" என்று சொல்லவே எனக்கு என்னவென்று முழுமையாகப் புரியாவிட்டாலும் ஏதோ பெரிய பிரச்சனை ஒன்று 'காரிருளாக' சூழ்கிறது என்று மட்டும் புரிந்தது.
மறுநாள் காலை நேரத்தில் பார்த்தால் எதற்குமே கலங்காத எனது அப்பா பேத்தியின் நிலைகண்டு திடீரெனக் கண்ணீர்விட்டழுதது எனக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. கடும் மனஅழுத்தத்தின் காரணமாக எனக்குத் தலைவலியுடன் ரத்தக் கொதிப்பும், சர்க்கரை அளவும் அதிகரிக்கத் தொடங்கியது. நாங்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததை அறிந்த எனது மனைவியின் சகோதரர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். அதில் அவளது மூத்த சகோதரர் "மாப்ள! நீங்க எதுக்கும் கவலைப்படக்கூடாது. உங்களுக்கு உங்க அண்ணன் மட்டும் இல்ல நாங்களும் கூட இருக்கோம். நம்ப இந்த சொந்தம் இப்போ வந்தது .நாம அதுக்கு முன்னாடியே ஃபிரெண்டஸ். எதுனாலும் கவலைப் படாதீங்க! அவளுக்கு அமெரிக்காவுக்கு டிரீட்மெண்டுக்குப் போகணும்னாலும் நாம போகலாம்" என்று சொன்னது எங்களுக்கு "நாம் தனித்து விடப்படவில்லை" என்ற உணர்வைத் தந்தது.
அண்ணன் சொன்ன தெரப்பி சென்டருக்கு நானும், என் மனைவியும் மீனாட்சியை கூட்டிச் சென்றோம். அங்கிருந்த தெரபிஸ்டுகள் மீனாட்சியை பலவிதங்களில் சோதித்தார்கள். குறிப்பாக அவள் விளையாடும் விதம்! முக்கியமாக விளையாட்டுப் பொருட்களை கையாளும் திறனை சோதித்தார்கள். பெரும்பாலும் குழந்தைகள் பொருட்களை நேர்வரிசையில் அமைத்தல் (straight line) அல்லது ஒன்றன் மீது ஒன்றாக வைத்து கோபுரம் போல் எழுப்புவது(stacking). மேலும் கார் போன்ற சக்கரங்களையுடைய பொம்மைகளைக் கொடுத்தால், அவர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்தி விளையாடுகிறாளா அல்லது அதை தலைகீழாக கவிழ்த்து சக்கரங்களை மட்டும் உருட்டி உருட்டி விளையாடுகிறார்களா போன்ற மேற்படி விஷயங்களுக்கு "ஆம்" என்று பதில் வரும் பட்சத்தில் அது "ஆட்டிசத்தின் அறிகுறிகள்" (signs of autism) என்றே சொல்கிறார்கள். அப்படியானால் 'எல்லா குழந்தைகளுமே இப்படியும் செய்வதுண்டே!' என்று கேட்கிறீர்களா? இது போல் சாதாரண குழந்தைகளும் செய்யலாம் என்றாலும் எத்தனை முறை இப்படி விளையாகிறார்கள் என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்ற விஷயம் எனக்குப் பிறகு தான் புரிந்தது.
கோபுரம் போல் எழுப்புவது(stacking)
நேர்வரிசையில் அமைத்தல் (straight line)
இது தவிர அவளது கேட்கும் திறன், பிறர் உத்தரவுகளை பின்பற்றுகிறாளா என்றெல்லாம் சோதித்துவிட்டு அவர்களுடைய விரிவான ரிப்போர்ட்டை எங்களுக்கு வழங்கினார்கள். அவர்களின் முதல் பரிந்துரை "குழந்தை சப்தங்களை புரிந்துகொண்டு செயல்பட்டு வந்தாலும் தனது பெயரை கூப்பிடும்போது திரும்பவில்லை. இதை சற்று கவனமாக பார்க்க வேண்டும்". அதே நேரத்தில் குழந்தைக்கு பொழுதுபோக்கு போன்ற விஷயங்களுக்கு மொபைல் போனைக் காட்டுவதைத் தவிர்த்து பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வது, குழந்தையுடன் அதிக நேரம் உரையாடுவது போன்ற விஷயங்களை கடைபிடித்துவரச் சொன்னார்கள். மேலும் இரண்டு வயது கூட பூர்த்தி அடையாத ஒரு குழந்தைக்கு 'ஆட்டிஸம்' போன்ற முத்திரைகளை இப்பொழுதே குத்த வேண்டாம். நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியதுடன் வாரத்துக்கு இரண்டு நாட்கள் குழந்தையுடன் இங்கு வாருங்கள். இப்பொழுதே தெரப்பி வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் இருவரும் பெற்றோர்கள் எனவே நீங்கள் இந்த குழந்தையை எப்படிக் கையாள வேண்டும் போன்ற அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கற்றுத் தருகிறோம் என்றார்கள். நானும் எனது மனைவியும் அவர்கள் கூறியபடி கர்மசிரத்தையாக வாராவாரம் அங்கு சென்று வந்தோம். ஆனால் எங்கள் வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இருந்ததால் கோடைகாலத்தில் அங்கு சென்று வருவது எங்களுக்கும் குழந்தைக்கும் அதிக சோர்வை உண்டாக்கியது. மேலும் "சன் ரைஸ் ப்ரோக்ராம் ஃபார் ஆட்டிஸம்" (son rise program for autism) என்ற புத்தகத்தை எங்களிடம் கொடுத்து வார நாட்களில் அதை படித்துவிட்டு வாருங்கள். வார இறுதிநாட்களில் நாம் அதைப் பற்றி பேசுவோம் என்றார்கள். "ஆட்டிஸம்" தான் என்று உறுதியாக சொல்லவில்லை. அப்படி இருக்க, என்ன பிரச்சனை என்று தெளிவுபடுத்தாத நிலையில் அவர்கள் எங்களுக்கு என்ன கற்பிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது. நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அங்கு சென்று வருவதை நிறுத்தி விட்டோம்.
இந்த நேரத்தில் குழந்தை இரண்டரை வயதை எட்டிய சமயத்தில் ப்ளே ஸ்கூலில் (play school) சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் அவளை சேர்த்தோம். அவள் பள்ளியில் சேர்ந்து 2 மாதங்கள் நெருங்கும் சமயத்தில் பள்ளியிலிருந்து எங்களுக்கு ஒரு புகார் வந்தது. "உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் இல்லாமல் எப்பொழுதும் அழுது கொண்டே இருக்கிறாள். சாதாரணமாக அழுதால் பரவாயில்லை; அழுதழுது மூர்ச்சையாகி விடுவாளோ என்று எண்ணும்படி செய்கிறாள். எனவே அவளை தயவுசெய்து வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்" என்று சொன்னதோடு இல்லாமல், எங்களிடம் வாங்கிய 6000 ரூபாய் அவளுக்கான ஐடி கார்டு வழங்கியதில் செலவாகி விட்டதாக ஒரு காரணத்தைக் கூறி அந்தப் பெண்மணி நாங்கள் கட்டிய பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார். எங்களுக்கு குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. "சரி அடுத்து என்ன செய்யலாம்?" என்று யோசிக்கத் தொடங்கினோம். அதே நேரத்தில் என் மகளை கவனித்து வந்த குழந்தைகள் நல மருத்துவர் அவள் இன்னும் பேசாமல் இருப்பது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியதோடு அவளின் தலையின் சுற்றளவு அதிகப்படியான அளவை நெருங்கிவிட்டது.எனவே அவளுக்கு ஒரு எம்ஆர்ஐ(MRI) பார்த்துவிட்டு அப்படியே ஒரு கிளினிக்கல் சைக்காலஜிஸ்டை (clinical psychologist) அணுகி அவளுக்கு "ஆட்டிஸம்" டெஸ்ட் எடுக்கும்படி கூறினார்.
இந்த நேரத்தில் நான் முன்பு கூறிய சிங்கப்பூரில் வசிக்கும் எங்களுக்குத் தெரிந்த அந்த டாக்டர் பெண்மணி ஒரு மருத்துவ மாநாட்டில் பங்கேற்பதற்காக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் நான் மீனாட்சியை பற்றிய சொல்ல, அவர் என்னிடம் ஒரு நல்ல கருத்தை சொன்னார் "குழந்தைக்கு ஆட்டிஸம் இருக்கா இல்லையா என்று நீங்களே யோசித்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு உடனே ஒரு developmental pediatricianஐ (குழந்தைகளுக்கான வளர்ச்சி நிலை சிறப்பு மருத்துவ நிபுணர்) அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று வரவும்" என்று சொன்னார்.
இந்த சமயத்தில் பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில் வந்த ஒரு விவாத நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் சொன்ன ஒரு விஷயம் என்னையும், என் மனைவியையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியது. அவர்கள் சொன்னார்கள் "நாங்கள் இறந்து போவதற்குள் எங்கள் குழந்தை முதலில் இறக்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை" என்று சொன்னார்கள்.கேட்க அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்கள் கூறிய காரணம் மிகவும் நியாயமானதாகத் தோன்றியது . அவர்கள் சொல்கிறார்கள் "நாங்கள் இறந்து விட்டால் எங்கள் குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள்?" என்ற இதே கருத்தை அனைத்து பெற்றோரும் தனித்தனியாக சொன்னதுதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதையெல்லாம் கேட்டு நான் மனம் நொந்து என் மகள் மீனாட்சியைப் பார்த்தபடி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன். அவள் என் மனைவியின் மடியில் படுத்துக்கொண்டு இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்து அழுவதை உணர்ந்த குழந்தை திடீரென என்னை நோக்கிப் பார்த்தாள். சில நொடிகளில் என் மனைவி அவளை தூக்கி எழுந்துகொண்டு என்னை தாண்டி செல்லும்போது குழந்தை "படார்" என என் மீது பாய்ந்த அழுது கொண்டிருந்த எனது கண்களை துடைத்து என்னைக் கொஞ்சினாள். ஆனால் அவளது கண்கள் கலங்கியிருந்தன. இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. "நாம் கவலைப்பட்டால் அது குழந்தைக்கு நன்கு புரிகிறது" என்று அன்றுதான் நான் தெரிந்து கொண்டேன்.ஆனால் நாம் மனதில் நினைப்பது ஒவ்வொன்றும் அவளுக்கு புரியும் என்ற விஷயம் அன்று எனக்கு விளங்கவில்லை. நமக்கு அப்பாற்பட்ட விஷயங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் அந்த நேரத்தில் எனக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெளிவாகப் புரிந்தது! எனது அழுகைக்குக் காரணம் இயலாமை தான்! அந்த குழந்தைக்கு எப்படி உதவ வேண்டும் என்று புரியாத காரணம் தான் கண்ணீராக வெளிப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், மற்ற பெற்றோர்களும் என்னைப் போல் கண்கலங்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத் தான்.
பொதுவாக நாம் செய்ய வேண்டியது "பிரச்சனை என்று ஒரு விஷயம் தெரியும் பட்சத்தில், அதற்கு என்ன தீர்வு என்று பார்க்க வேண்டும். மேலும் அது நமக்கு பிரச்சனை என்று புரியாவிட்டாலும், பிறர் (குறிப்பாக நமது நலம் விரும்பிகள்-எனக்கு என் அண்ணன் சொன்னதுபோல்!) அது பிரச்சனை தான் என்று நம்மிடம் எடுத்துக் கூறினால், அது ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை ஏற்கும் மனப்பக்குவத்தை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.பிரச்சனையை தீர்க்கத் தெரியாமல் தேங்கி நிற்பது காலத்தை வீணடிக்கும் என்பது தான் இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். உண்மை தான் என்று தெரிந்த பிறகும் இறுதிவரை அந்தப் பிரச்சனையை நாம் அணுகாமலேயே விட்டுவிட்டால் நம்மை நாமே கடைசியில் ஏமாற்றிக் கொள்வோம் என்பதே நிதர்சனமான உண்மை. முடிவில் இழப்பும் நமக்கே!
இந்த நேரத்தில் குழந்தையை சேர்க்க வேறொரு பள்ளியைப் பார்த்தோம். பள்ளியில் சேர்க்கும் போதே குழந்தைக்கு சில பிரச்சினைகள் உள்ளது என்பதை எழுத்துப்பூர்வமாக கொடுத்தேன். மேலும் குழந்தைக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொண்டால் அதன் முடிவுகளையும் நிச்சயம் பகிர்ந்து கொள்வதாகவும் நானே தன்னிச்சையாக உறுதியளித்தேன். அவர் "குழந்தைகளை நாங்கள் பல ஆண்டுகளாக கையாண்டு வந்துள்ளோம். நல்ல முறையில் நிச்சயம் பார்த்துக் கொள்வோம்" என்று உறுதி கூறிய பின்பே சேர்த்து வந்தோம்.சேர்த்தது மீண்டும் அதே ப்ளே ஸ்கூல் தான். அந்தப் பள்ளி நிர்வாகி எங்கள் வீட்டின் அருகே இருக்கும் தங்கள் பள்ளியின் மற்றொரு கிளையில் சேர்க்கும்படி சொன்னதோடு அதை நிர்வகித்து வரும் தனது உறவுக்காரப் பெண்மணியையும் கைபேசியில் அழைத்து மீனாட்சியைப் பற்றி சொன்னார். குழந்தையை பள்ளியில் விடும்போதும் மீண்டும் அழைத்து வரும் போதும் அந்த பள்ளியின் நிர்வாகிக்கு உரிய மதிப்பளித்தே நடந்து வந்தோம். ஒரு முறை பள்ளி நிர்வாகம் குழந்தைகளை கிண்டி சிறுவர் பூங்காவிற்கு அழைத்துச் சென்றபோது மீனாட்சியையும் இன்னும் சில குழந்தைகளையும் அழைத்துச் செல்லவில்லை என்ற விஷயம் எங்களுக்கு மற்ற பெற்றோர் மூலம் தெரியவந்தது. அதாவது 50 குழந்தைகளில் 5 குழந்தைகளுக்கு மீனாட்சி போல் பிரச்சனை உள்ளவர்கள் என்று பள்ளி நிர்வாகம் கணித்து அவர்களை மட்டும் கூட்டிச் செல்லவில்லை. இதை மற்ற பெற்றோர்கள் எங்களிடம் புகாராகச் சொன்னபோதுகூட "நியாயம்தானே! இந்தக் குழந்தைகளை சமாளிப்பது அவர்களுக்கும் கஷ்டமாகத் தானே இருக்கும்" என்று நானும் எனது மனைவியும் பேசிக் கொண்டோம். அங்கிருந்த பெற்றோருக்குள் ஒரு பெண்மணி "நமது குழந்தைகளை அவர்கள் மற்ற குழந்தைகளோடு வகுப்பறையில் சேர்க்காமல் தனிமைப்படுத்தி தான் வைத்திருக்கிறார்கள்" என்றார். நாங்கள் அந்தப் பெண்மணி ஏதோ அனுமானத்தில் பேசுகிறார் என்றே நினைத்தோம். ஆனால் பள்ளி முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு என்னுடன் பேசிய அந்த பள்ளி நிர்வாகி; தங்களது பள்ளிக்கு கணக்குகளை தணிக்கை(audit) செய்ய வேண்டி உள்ளது. அதன்படி மிச்சமிருக்கும் நான்கு மாதங்களுக்கான மாதாந்திரத் தொகையை மொத்தமாக உடனே கொடுத்து விடும்படி கேட்டார். நாங்களும் அவ்வாறே செய்தோம்.
No comments:
Post a Comment