Tuesday, May 19, 2020

2. வருகிறாள் மீனாட்சி

என் மனைவியின் சீமந்தம் (வளைகாப்பு) தடபுடலாக என் பெற்றோரால் நடத்தி வைக்கப்பட்டது.நான் ராம்(31). எனது மனைவி ரேவதி(24). என் தாய் தந்தையுடன் அவர்கள் வீட்டில் வசித்து வருகிறோம். தகவல் தொழில்நுட்பம் படித்துவிட்டு சுய தொழில் செய்துவருகிறேன்.எனது மனைவியும் பொறியியல் பட்டதாரிதான்.ஆனால் வேலைக்குச் செல்லவில்லை.  அவள் என் தாய் வழியில் தூரத்து உறவு. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

அவளது மூத்த சகோதரனும் நானும்  பால்ய சிநேகிதர்கள். அவரின் சிபாரிசும் எங்கள் திருமணம் நடக்க முக்கிய காரணம்.10ஆம் வகுப்புவரை நான் வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவன்.அவரைப் பார்க்கும் போதெல்லாம் படிப்பு பற்றியும் அவர் பெற்ற மதிப்பெண் என்னவென்றும் கேட்டு நச்சரிப்பேன். அவர் பதினோராம் வகுப்பு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார்.நான் அதே பள்ளியில் தொடர்ந்தேன் (நல்லவேளை நான் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் எப்படிப் படித்தேனென்று அவருக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அவரின் தங்கையைக் கொடுக்க நிச்சயம் சம்மதித்திருக்கமாட்டார்!). ஆம்! என் படிப்பு ஆரம்பம் முதல் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் படித்து முடிக்கும்வரை கடும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. நான் சராசரி மாணவனாக என்றுமே இருந்தில்லை. என்னை ஒரே நேரத்தில் முட்டாளாகவும் சிறந்த மாணவனாகவும் எனது ஆசிரியர்கள் அறிவார்கள்.

படிப்பென்பது சிறந்ததாகக் கிடைத்தாலும் எனக்கு அது எளிதில் கிட்டவில்லை என்பதே உண்மை. ஆனால் அனைத்திற்கும் நானே காரணம். நான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துவிட்டால் அனைவரையும் விட சிறப்பாக புரிந்து கொண்டுவிடுவேன்."இது எனக்குப் புரியாது" என்று மனதுக்கு தோன்றிவிட்டால் பிறகு என்ன முயற்சி எடுத்தாலும் எனக்குப் புரிய வைப்பது மிகக் கடினமே.இதே பிரச்சனை பின்னாளில் என் மகளுக்கும் வருமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை.ஆனால் நான் காலப்போக்கில் வளர்த்துக் கொண்ட ஒரு நல்ல குணமே என் மகளை முழுமையாக அறிந்து கொள்ள முக்கிய காரணமாக அமைந்து. அது என்னவென்றால் "பிறர் சொல்வதை (எதிர் கருத்தாக இருந்தாலும்!) நன்கு கவனித்து உள்வாங்கிக் கொள்வது. பிறகு அதிலுள்ள உண்மையை ஆழச் சிந்தித்து ஆராய்ந்தறிந்து கொள்வது".

மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்! நான் சென்னையிலிருந்து பிரசவத்திற்காக என் மனைவியை பெங்களூருக்கு (அவளின் சகோதரர்களும் தாயாரும் இருக்கிறார்கள்) அழைத்துச் சென்றேன்.ஓரிரு நாட்களில் சென்னை திரும்பிவிட்டேன். குழந்தை பெண்ணாகத்தான் இருக்குமென்று என் உள்மனது சொன்னதால் பெண் குழந்தைக்கு சூட்டப்பட வேண்டிய பெயரை மட்டுமே யோசித்து வந்தேன்.பிள்ளைக்கான பெயர் யோசிக்கவே இல்லை. அப்பொழுது தோன்றிய பெயர்தான் "மீனாட்சி" அது எங்கள் குல தெய்வத்தின் பெயர். நாங்கள் மதுரைக்கு சென்றுவந்ததும் என் மனைவி கருவுற்றது ஒரு காரணம்.மேலும் மறைந்த என் மாமனாரின் பெயரின் ஒரு பகுதியும் அதில் அடங்கியுள்ளது மற்றொரு சிறப்பு.

பிரசவதிற்காக சென்ற சில நாட்கள் கழிந்த நிலையில் என் மனைவியிடமிருந்து கைபேசியில் அழைப்பு வந்து. நிறைமாதத்தில் செய்யப்பட்ட குரோத் ஸ்கேனில் (growth scan) குழந்தையின் மூளையின் பின்பகுதியில் கால்போகஃபாலி (colpocephaly) என்ற சிறிய மாறுபாடு இருந்ததாக மருத்துவர் கூறியுள்ளார். இயல்பான அளவைவிட ஒருசில மில்லி மீட்டர்கள் அதிகமெனத் தெரிவித்ததாகக் கூறினாள். நானும் என் தாயும் பதற்றத்துடன் என் மனைவி கருவுற்றது முதல் பிரசவத்திற்கு பெங்களூர் செல்லும்வரை அவளை சென்னையில் கவனித்துவந்த மகப்பேரு மருத்துவரை (gynecologist) உடனே காணச் சென்றோம். அவர் "இதற்காக பயப்படத் தேவையில்லை. பார்த்துக் கொள்ளலாம்!" என்று கூறிவிட்டார்.

எங்களது உறவினர் (ஒரு பெண்மணி) சிங்கப்பூரில்  மருத்துவர். அவரிடமும் இதைப் பற்றிக் கூறினோம்.  அவர் தனது மருத்துவமனையின் தகவல் களஞ்சியத்தை (database) ஆராய்ந்துவிட்டு கால்போகஃபாலி (colpocephaly) பற்றி எந்தத் தகவலும் இல்லையென்றார். இணையத்தை அலசிய எனக்கும் உபயோகமாக எந்தத் தகவலும் அப்போது கிடைக்கவில்லை.

நாட்கள் நகர்ந்தது பிரசவநாள் வந்தது! 'அறுவை சிகிச்சை' (C-section) தான்  என்று மருத்துவர் நாள் குறிக்க, நானும் எனது அம்மாவும் பிரசவத்திற்கு முந்தைய நாள் பெங்களூர் சென்றோம். பிறக்கப்போவது ஆணா பெண்ணா எனத் தெரியாத காரணத்தால் பொதுவாக கிடைக்கும் குழந்தைகளுக்கான கம்பளி ஆடை, கையுறை,குல்லாயென வாங்கி வைத்துக் கொண்டோம்.

மறுநாள் ஆபரேஷன்‌ தியேட்டருக்கு என் மனைவியை கொண்டுசென்ற சில நிமிடங்களிலேயே  மருத்துவமனை முழுவதும் கேட்கும்படி வீறிட்ட அழுகையுடன் அழகாக வந்தாள் மீனாட்சி. 2.6 கிலோ எடை. மருத்துவர் என்னிடம் வந்து "வாழ்த்துக்கள்! உங்களுக்கு மகள் பிறந்துள்ளாள்" என்றார். அருகில் நின்ற என் மனைவியின் இளைய அண்ணன் அன்பு மிகுதியில் தன் கையில் குழந்தையை வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினார். என் மாமியார் "குழந்தையை முதலில் மாப்பிள்ளையிடம் கொடு" என்று சொல்லவே அவரும் இயல்பு நிலைக்கு வந்தார். தாய் மாமனின் பாசம் அப்படித்தானே?!

 அன்றே பெங்களூரில் வேலை பார்த்துவந்த எனது நண்பர்கள், எனது அத்தை மற்றும் எனது தாய்வழி உறவினர்கள் என அன்பு கொண்ட உள்ளங்கள் மருத்துவ மனைக்கு வந்தனர். எனது சகோதரனுக்கும் தந்தைக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தோம். பணி நிமித்தமாக இருவரும் வர இயலவில்லை.

No comments:

Post a Comment