நமது சமூகத்தில் "பிறர் நலனில் அக்கறை" என்ற பெயரில் அளவுக்கு அதிகமாகவே நம்மையும் அறியாது பிறரின் விஷயங்களில் மூக்கை நுழைத்து விடுகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னைப் பற்றி சமூகம் என்ன பேசுமோ நாலு பேர் என்ன நினைப்பார்கள் என்று பிறரைத் திருப்திப்படுத்தவே வாழ வேண்டியுள்ளது.
சில உதாரணங்கள்: வறட்டு கவுரவத்திற்காக காசை வாரியிறைத்து திருமணங்களுக்கு செலவழிப்பது, பெருமைக்கு வீடு வாங்கிவிட்டு வட்டி கட்ட முடியாது விழிபிதுங்கி நிற்பது, 10வது அல்லது 12வது படிக்கும் மாணவனைக் கண்டால் "ஏன் நீ அந்தப் பள்ளியில் படிக்கவில்லை? என்ன மார்க்? நீ டாக்டரா? இஞ்ஜினியரா?" என்று கேட்டதன் கோளாறு இன்று டாக்சி ஓட்டுபவரிலிருந்து விவசாயம் செய்பவர் வரை (முகநூல் விவசாயிகளையும் சேர்த்தால் எண்ணிக்கை நிச்சயம் பன்மடங்கு கூடும்!) அனைவருக்கும் அடிப்படைக் கல்வியாகிவிட்டது பொறியியல் படிப்பு. திருமணம் ஆகாதவர்களைக் கண்டால் "எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?" என்று பொது வெளியில் கேட்டுக் குடைவது, திருமணம் ஆனவர்களென்றால் "எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்?" என்று நச்சரிப்பதில் தொடங்கி "குழந்தையிடம் பேசிக் கொண்டேயிருந்தால் இந்நேரம் பேசியிருக்குமே! நாக்கிலும் வாயைச் சுற்றிலும் ஒரு மண்டலம் தேன் தடவிப் பாருங்கள் அதற்குமேல் பேசாவிட்டால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்" என்று கூறியவர்கள் இன்னும் அதே பழைய பேருடன் தான் உலா வருகிறார்கள். "ராமன் கோபக்காரன் (சமரசமின்றி மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதால் எனக்குக் கிடைத்த பட்டம்!) பலர் வாயில் விழுந்தெழுந்ததால் அந்த சாபம் இன்று குழந்தையைப் போட்டுப் பார்த்துவிட்டது". மேற்கூறிய கடைசி விஷயம் என் அப்பாவே என் மனைவியிடம் ஒருநாள் சொன்னதுதான். என் மகள் எனக்கு "வரமா? சாபமா?" என்பதை இந்தப் பதிவை முழுமையாக வாசித்தவர்கள் இறுதியில் முடிவைச் சொல்லலாம்.
இதைவிட எங்கள் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெண்மணி மீனாட்சிக்கு காது கேட்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கீழே நானும் என் மனைவி ரேவதியும் குழந்தையுடன் காரில் ஏறும் சமயம் பால்கனியில் துணி காய வைக்கும் பொழுது சில கிளிப்களை கீழே தவறவிட்டார். நான் கூட கிளிப் கீழே விழுந்துவிட்டதே என்று எடுக்கச் செல்ல, என் மனைவி அந்தப் பெண்மணியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு "எடுக்காதீர்கள்!" என்று சைகை செய்ததோடு என்னைக் கிளம்பச் சொன்னாள். "ஆண்களுக்கு காரியம் மட்டுமே புரியும். ஆனால் பெண்களுக்கு காரணமும் சேர்த்தே புரியும்" என்ற காரணத்தால் நான் சில சமயங்களில் மனைவியின் பேச்சையும் கேட்பதுண்டு (மற்ற சமயங்களில் கருத்துக் கேட்பேன்.ஆனால் பெரும்பாலும் முடிவை நானே எடுப்பேன்). கார் புறப்பட்டதும் நடந்த விஷயத்தை மனைவி என்னிடம் சொல்ல, நான் கடும் கோபமுற்றேன். நான் இப்படியே இன்னும் எத்தனை பேரிடம் கோபப்பட வேண்டியிருக்கும்? அது முடியுமா?!
No comments:
Post a Comment