Tuesday, May 19, 2020

3. தொடங்கின சில சிக்கல்கள்

குழந்தை பிறந்த சில மணிநேரங்களில் என் மனைவியை குழந்தைக்கு பாலூட்டச் சொன்னார் மருத்துவர். குழந்தையின் பசிக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு பால் சுரக்கத் தொடங்கவில்லை. இதனால் கோபமுற்ற குழந்தை பசியிலும் கோபத்திலும் வீர்.. வீரென அழத் தொடங்கினாள். அங்கிருந்த  செவிலி குழந்தையை சமாதானப் படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அவர் என் மனைவியிடம் கூறினார் " எனது இத்தனை ஆண்டுகள் அனுபவத்தில் பிறந்த குழந்தை இத்தனை முரண்டுபிடித்து நான் பார்த்ததேயில்லை. பக்கத்து அறையில் இருந்தவர்கள்கூட இவளது குரல் கேட்டு பார்த்துச் சென்றுள்ளார்கள்" என்றார்.

தாய் முயற்சித்தால் நிச்சயம் பால் சுரக்குமென்று அனுபம் வாய்ந்த பெண்டிர் சொல்லத் தொடங்கினர்."குழந்தை ஒத்துழைக்க மறுக்கிறது. தான் விரும்பிய வேகத்திற்கு குடிக்க முடியவில்லை என்று கோபப்படுகிறது" என்ற என் மனைவியின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது விரைவில் என் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதை நன்கு புரிந்து கொண்ட மருத்துவர் தாய்ப் பாலுக்கு மாற்றாக பால் பவுடரை கொடுக்கும்படி பரிந்துரைத்தார் (சில நாட்களில் பால் பவுடருக்கு பழகிய குழந்தை தாய்ப் பாலை அறவே தவிர்க்கத் தொடங்கிவிட்டது!).மருந்துவமனையிலிருந்து வீடு திரும்பும் பொழுது "மூன்று மாதங்களுக்குப் பிறகு நீங்க சென்னை சென்றதும் குழந்தையின் தலைக்கு ஒரு அல்ட்ரா சோனிக் ஸ்கேன் எடுத்து ரிப்போர்ட் அனுப்புங்கள்" என்று சொல்லிவிட்டு டிஸ்சார்ஜ் செய்தார் மருத்துவர்.நாங்களும் அவ்வாறே செய்தோம். இப்பொழுது குழந்தை பிறப்பதற்கு முன்னால் இருந்த கால்போகஃபாலி(colpocephaly) போன்ற எந்த பிரச்சனையும் அல்ட்ராசோனிக் ஸ்கேனில் தென்படவில்லை.‌ குழந்தை நல்ல அழகுடனும்  துறுதுறுப்புடனும் காணப்பட்டாள்.

‌மூன்று மாதங்களிலிருந்து மற்றவர்களுடன் நன்கு பழகுவது இன்னும் சொல்லப்போனால் கிண்டலும் கேலியும் புரியும் அளவிற்கு புத்திசாலியாகத் தெரிந்தாள். ஒருமுறை எனது அப்பா மீனாட்சிக்கு 4-5 மாதங்கள் இருக்கும்பொழுது "கண்ணன் வருவான் கதை சொல்லுவான்" என்ற பழைய பாடலை "அண்ணன் வருவான் அதை சொல்லுவான்" என்று குழந்தைக் குரலில் பாடிக்காட்ட; அவர் பாடியதில் உள்ள நகைச்சுவையை நன்கு புரிந்துகொண்டதுபோல் கடகடவென சிரித்ததோடு என் அம்மாவை நோக்கி "பாட்டி! தாத்தா எப்படி பாடுகிறார் பார்!" என்று அர்த்தபுஷ்டியுடன் சிரித்தது அனைவருக்கும் வியப்பளித்தது. நான் அவள் போல் குழந்தையாக இருந்தபொழுது "துலாபாரம்" படத்தில் வந்த "பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்" என்ற சோகப் பாடலை எனது அம்மா பாடிக் கேட்கும்போதெல்லாம் விசும்பி விசும்பி அழுவேன் என்று கூறியுள்ளார். என் மகள் அப்பொழுது வந்த குத்துப் பாடல்களுக்கு ஏற்றபடி படுத்த இடத்திலேயே காலல்களை ஆட்டி உற்சாகமாக ரசித்துக் கொண்டிருக்க, நான் ஒருநாள் இந்த பழைய பாடலைப் போட்டுக் காட்ட, அதுவரை உற்சாகமாக இருந்த குழந்தையின் முகம்‌ வாடியதுடன் அவளும் விசும்பத் தொடங்கியது எங்களுக்கு வியப்பாக இருந்தது. எனக்கும் இன்றுவரை எனது தாய் என்னை கருவில் சுமந்த காலத்தில் வெளியான சில திரைப் பாடல்களைக் கேட்டால் அடிவயிற்றைப் பிசைவதுபோல் உணர்வேன்.‌எனது தாய் அந்த நேரத்தில் மனக் கவலையில் இருந்ததால் அவருக்கும் அதே உணர்வு ஏற்பட்டதாகக் கூறுவார். அபிமன்யுவின் கதையை உண்மை என்று  ஆமோதிப்பதுபோல் இன்று இஸ்ரேல் போன்ற நாடுகளில் கற்பமுற்ற பெண்களின் மனதையும் குழந்தையின் மனதையும் சாந்தப்படுத்தும் விதத்தில் மென்மையான மேற்கத்திய இசையைக் கேட்கச் சொல்கிறார்கள். சமீபத்தில் கூட கருவிலிருக்கும் ஒரு குழந்தை இசையைக் கேட்டு கைதட்டி ரசிப்பதுபோன்ற ஸ்கேனில் தெரியும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி நம்மில் பலரும் கண்டிருப்போம்.

என் மகளுக்கு இதைத் தவிர யாராவது சத்தமாகத் தும்மினாலோ, கொட்டாவி விட்டாலோ அல்லது  தொலைபேசியில் கோபமாகக் கத்திப் பேசிக் கொண்டிருந்தாலோ சிரிப்பை அடக்க முடியாது. கடகடவென சிரிக்கத் தொடங்கிவிடுவாள். இதுதவிர நான் அவளை குப்புறப் படுக்க வைத்து "டண்டனக்கட டனக்கனக்கட" என்று வாயால் சத்தம் கொடுக்கத் தொடங்கினால், தன்னை மறந்து கை கால்களை உதறியபடி உற்சாகம் பொங்க ஆடத் தொடங்கிவிடுவாள். இவள் போகும் வேகத்தைப் பார்த்தால் வெகு சீக்கிரம் பேசிவிடுவாளென்று  நாங்கள் பேசிக் கொண்டோம். கிட்டத்தட்ட ஓராண்டை  நெருங்கும் சமயத்தில் மொட்டைமாடியில் விமானம் எங்கே காட்டென்று கேட்டால் அது எவ்வளவு தொலைவில் சிறு புள்ளியாய் இருந்தாலும் அழகாக தனது பிஞ்சு விரல்களால் சுட்டிக் காட்டுவாள் (Pointing). நானும் எனது அண்ணனும் பிறந்தது முதல் எங்கள் தாயார் எங்களிடம் பேசிக் கொண்டே இருந்ததால் நாங்கள் ஒரு வயதை எட்டும்போதே பேசத் தொடங்கிவிட்டோம் என்பார்கள். அப்படி இருக்கும்போது என்மகளும் பேசமாட்டாளா என்ன?

இந்த நேரத்தில் நாங்கள் கவனித்த சில விஷயங்கள்:-

 அ).குழந்தை பவுடர் பால் மட்டுமே சாப்பிட்டு வந்த காலத்தில் மலச்சிக்கல் (constipation) அவ்வப்போது ஏற்படும். திட உணவு சாப்பிடத் தொடங்கியபோது அவளுக்கு செரிமானப் பிரச்சனை இருந்தது. பெரும்பாலும் கக்கி விடுவாள்.

ஆ).மேலும் அவள் பின்னந்தலையில் ஒரு கட்டி இருந்தது. இதை ஆங்கிலத்தில் hemangioma (தோலின் வெளியே தென்படும் "இரத்தக்குழல் கட்டி") என்பார்கள். 

இ).ரோட்டிற்குச் சென்றாலே பயப்படுவாள். ஆட்டோ, பைக், கார் எதுவானாலும் அவள் அச்சம் கொள்வாள். அவளை சமாதானப்படுத்திக் கூட்டிச் செல்வது மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொன்றுக்கும் அவளைப் பழக்குவதற்குள் நாங்கள் நொந்து நூடுல்ஸாகி விடுவோம்.அருகிலிருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் எங்களிடம் சவால்விட்டு  மீனாட்சியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இறுதியில் தோற்பது வாடிக்கையே.

ஈ).இதுதவிர அவளுக்கு அதிகமாக மொபைலில் திரைப் பாடல்களை என் மனைவி காட்டி வந்துள்ளாள். அந்தக் காலத்துத் தாய்மார்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லிய காலம் மாறி இன்றைய இளம் தாய்மார்கள் மொபைலைக் காட்டி சமாதானப் படுத்துவது "விதியின் சதி" என்றே கூறவேண்டும்.‌ இன்று ஆறு வயதைத் தொட்ட என் மகள் மீனாட்சிக்கு மொபைல் இல்லாமல் வாழமுடியாது. பெரும்பாலான மருத்துவர்கள் குழந்தைகளுக்கு மொபைலைக் காட்ட வேண்டாம் என்றே சொல்வார்கள்.ஏனென்றால் ஒரு குழந்தை தொடுவது, நுகர்வது இப்படிதான் ஐம்புலன்களின் மூலம் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர; மொபைல் திரையைப் பார்த்தால் அவர்களால் எதையும் உணர முடியாது என்று சொல்வார்கள். பொதுவாக மொபைலைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெரும்பாலும் பிறருடன் பேச விரும்புவதில்லை. பேசுவதற்கு தாமதமாகும் என்பதே முக்கிய காரணம். இந்த பாதிப்பு ஒற்றைக் குழந்தையாக வளரும் குழந்தைகளுக்கே அதிகம் ஏற்படுகிறது. 

உ). இதைவிட முக்கியமாக சில 'வளர்ச்சி நிலைகளை' (developmental stages) தொடாமலேயே  மீனாட்சி கடந்து வந்துவிட்டாள் என்றே கூற வேண்டும். குறிப்பாக அவள் உட்கார இயல்பை விட சற்றே தாமதமானது.மேலும் அவள் தரையில் நீஞ்சினாள் ஆனால் தவழவில்லை. நேரடியாக ஒரு வயது மூன்று மாதத்தில் நடக்கத் தொடங்கிவிட்டாள்.

இந்த நேரத்தில் எனது பெற்றோர் 5-6 மாதங்கள் வெளிநாடு சென்றுவிட குழந்தை முழுவதும் எங்கள் பராமரிப்பிற்கு வந்தாள். எனது பெற்றோர் கிளம்பிய நாளிலிருந்து தொடர்ந்து இரண்டு வாரங்கள் அவள் இடைவிடாது அழுது கொண்டே இருந்தாள். தாத்தா பாட்டி இல்லாத இடத்தில்  வெறுமையை உணர்ந்தாளோ?

எங்களால் அவளை சமாதானப்படுத்துவதென்பது மிகக் கடினமாகவே இருந்தது. என் மனைவி சமையலில் கவனம் செலுத்த, நான் எனது தொழில் சார்ந்து லாப் டாப்பில் மூழ்கிவிட, இந்த இடைப்பட்ட நேரத்தில் குழந்தை மீனாட்சி தனக்கென ஒரு உலகத்தையே உருவாக்கிக் கொண்டு ஒரு "பற்றற்ற  நிலையை" எய்தியதை  எங்களால் உணர முடிந்தது (இந்த சமயத்தில் அவளுக்குள் ஒரு பிரளயமே ஏற்பட்டதென்பதை நான் புரிந்துகொள்ள கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஆனது!).

"மீனாட்சி" என்று பெயர் சொல்லி அழைத்தால் திரும்ப மாட்டாள். ஆனால் தனக்குப் பிடித்த பாடல்களோ, விளம்பரமோ எங்கு கேட்டாலும் (எவ்வளவு ஒலி குறைவாகக் கேட்டாலும்!) தனது இடத்திலிருந்து புயலாக ஓடிவந்து விடுவாள். பலமுறை வரும் வேகத்தில் அடிபட்டதுண்டு (இவற்றிற்கு முக்கிய காரணம் தரையைப் பார்த்து நடப்பதே கிடையாது. அவள் செல்லும் வழியில் நாம் படுத்திருந்தால் நமக்கு மிதி விழுவது நிச்சயம்).பெரும்பாலும் வலி உணராது வேறு யாருக்கோ அடிபட்டதுபோல் (ரத்தம் வரும், வீக்கம் இருக்கும்) சென்று விடுவாள். தான் வந்த வேலை முடிந்ததும் தனது கடமையைச் செய்ய சென்றுவிடுவாள். அதென்ன கடமை? நாற்காலியோ சோஃபாவோ ஒருமுறையல்ல இருமுறையல்ல ஆயிரம் முறை ஏறி இறங்கிக் கொண்டிருப்பாள். நாம் நிறுத்தச் சொல்வது கேட்காது, பிடித்து நிறுத்திவைத்தாலும் சில நொடிகளில் மீண்டும் தனது வேலையைத் தொடங்கிவிடுவாள். கண்ணோடு கண் பார்ப்பது என்ற விஷயமே அவளுக்கு மறந்துவிட்டது. பிறகெப்படி பிறர் சொல்வதும், கற்பிப்பதும், விளையாட்டுக் காட்டுவதும் புரியும்? தொலைக் காட்சியில் வரும் தனக்குப் பிடித்த திரைப் பாடல்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை அதுவும் குறிப்பிட்ட சேனலில் மட்டுமே கேட்பாள். சேனலை நாங்கள் மாற்றினால் 'லோகோ'வை வைத்துக் கண்டுபிடித்து விட்டு சேனலை மாற்றச் சொல்லி டி.வியை அடித்தபடி அழுவாள்.சேதாரத்திற்கு பயந்து அவள் சொல்வதை கேட்டு சேனலை மாற்றி விடுவோம்.அதேபோல் அவளுடைய நேரக் கணக்கு (Biological clock) எங்களுக்கு மிகுந்த வியப்பை அளித்தது. தப்பித் தவறி நாங்கள் தொடரோ திரைப்படமோ பார்த்துவிட்டால் (அது அவளுக்கு பிடித்த சேனல் என்றால் மட்டுமே எங்களுக்குப் பார்க்கும் அனுமதியுண்டு!) சரியாக அது முடியும் நேரம் எங்கிருந்தாலும் வந்து கடைசியில் திரையில் ஓடும் பெயர்களை (End Credit) கைகளால் தொட்டுப் பார்ப்பாள். அது முடிந்ததும் தனக்குப் பிடித்த நிகழ்ச்சி என்பதால் ஆ...ஊ...என்ற சத்தத்துடன் துள்ளிக் குதித்து ரசித்தபடி பார்த்துவிட்டு மீண்டும் தனது வேலைக்குச் சென்று விடுவாள்(அதே ஏறி ஏறிக் குதிப்பதுதான்!).

இந்த சமயத்தில் அவள் "அம்மா" என்ற ஒரு வார்த்தையை மட்டுமே அரிதாகச்  சொல்லிவந்துள்ளாள். அதுவும் எங்களின் கடும் பிரயத்தனத்திற்குப் பிறகே. எந்த விளையாட்டையும் கற்றுக் கொள்ளவுமில்லை, யாருடனும்  உரையாடலைத் தொடர்வதில் விருப்பமும் இல்லை. ஒருமுறை அவள் திறந்து தரும்படி ஒரு மூடிய டப்பாவை என்னிடம் நீட்ட, அதை திறப்பது சிரமம் என்பதுபோல் நான் பாவனை செய்ய "முட்டாளே! என்னிடம் நடிக்காதே" என்பதுபோல் கோபமாக என்னைப் பார்த்துவிட்டு டப்பாவைப் பிடுங்கிக் கொண்டு அடுத்தவரிடம் திறந்து கொடுக்கும்படி உதவி கேட்கச் சென்றுவிட்டாள். இவளுக்கு எதுவும் புரியாததுபோல் இருந்தாலும் இவள் வயது குழந்தைகளுக்குக் காட்டும் விளையாட்டுக்கள் இவளுக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறதோ? ஓரிருமுறை நானும் என் மனைவியும் அவளை லேசாக நக்கலடித்துப் பார்த்ததுண்டு. அவள் கோபமாக எங்களை திரும்பி முறைத்துக் பார்த்ததில் நாங்கள் குலைநடுங்கிப்போனது‌ உண்மையே! "சிவனே" என்று இருப்பவளை சீண்டினால் இதுதான் கதியோ?!

நாங்கள் கவனித்த மேலும் சில குணாதிசயங்கள்:

அ).குழந்தைகள் மற்றும்  சற்றே வித்தியாசமான குரலைக் கொண்ட பெரிவர்களின் சத்ததைக் கேட்டால் மட்டுமே திரும்பிப் பார்த்து சிரிப்பதுண்டு.

ஆ). அவளுக்கு பட்டு உள்ளிட்ட சில துணிவகைகள் அறவே பிடிக்காது. நெற்றியில் பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவாள். எந்தப் பூவைக் கண்டாலும் பயந்து ஓடிவிடுவாள். கோவிலுக்குச் சென்றால் மேற்கண்ட விஷயங்கள் நடப்பது உறுதி. கோவில் வாசலில் பூ விற்கும் பெண்கள் குழந்தைக்கு பிரியமாகப் பூ கொடுப்பதும்; அதை உடனே இவள் பிடுங்கி எறிவதும் குழந்தையின் போக்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதையும் சுற்றுப்புறம் இவளை பார்க்கும் கண்ணோட்டம் மாறிவருவதையும் அப்பட்டமாக உணரத் தொடங்கினோம். சாமி கும்பிட்ச் சொன்னால் இரண்டு கைகளையும் கூப்புவது, கைகளை தலைக்குமேல் தூக்குவது ஆகியவற்றில் பிரச்சனை மற்றும் நன்றாக சுட்டிக் காட்டத் தெரிந்த குழந்தை தனக்கு பிரிட்ஜில் ஏதாவது வேண்டுமென்றால் சுட்டிக் காட்டாமல் எங்களின் கைகளை முரட்டுத்தனமாகப் பிடித்து பிரிட்ஜின் முன் இழுத்துச் சென்று நிறுத்துவது மற்றும் வேண்டியதை வாயால் கேளென்றால் பேசமுடியாத கோபத்தில் கேட்டவர்களை கடிப்பது பிராண்டுவதென்று ஆரம்பித்தாள். 

இ).அவளின் முதல் பிறந்த நாளில் காது குத்தியதும் எனது அப்பா பரிசளித்த வைரத் தோடை திருகோடு சேர்த்து ஆட்டி ஆட்டி  காது ஓட்டையைப் பெரிதாக்கி அப்படியே எடுத்து கழட்டிக் கொடுத்து விட்டாள். மீண்டும் அணிவிக்க முயன்ற எங்களை (மூன்று பெரியவர்கள்) ஒரே நேரத்தில் எட்டித் தள்ளியபோது அவளின் பலம் எங்களை பயம் கொள்ளச் செய்தது.

ஈ).அவள் தனது எடை போல் இரண்டு அல்லது மூன்று மடங்குள்ள பொருட்களை மிக இலகுவாகத் தூக்கிவிடுவாள்.இதில் பிரச்சனையாக நாங்கள் உணர்ந்தது மென்மையான பொருட்களுக்கு அதிக அழுத்தமும், அதிக அழுத்தத்துடன் பிடிக்க வேண்டியதை அவள் மிக லேசாகவும் பிடித்துவந்ததால் அவள் கைபட்டு பொருட்கள் விழுந்து நொறுங்குவதும் உடைவதும் வாடிக்கையாகிவிட்டது எங்கள் வீட்டில். 

உ).காலை எட்டு மணி வாக்கில் எழும் குழந்தை நடு இரவையும் தாண்டி விழித்துக் கொண்டு வழக்கமான அர்த்தமற்ற விளையாட்டையே மீண்டும் மீண்டும் விளையாடி வந்தது எங்களை கடும் சோர்வடையச் செய்தது. உணவு உட்கொள்ளவும் மிக அதிக நேரத்தை எடுத்துக் கொள்வாள்.அவளைக் கையாள்வதென்பது எங்களின் கைமீறிய விஷயமென்பதை உணரத் தொடங்கினோம். 

ஊ). இதைத் தவிர மீனாட்சியை கவனித்து வந்த குழந்தை நல மருத்துவர் அவளின் தலையின் சுற்றளவு அனுமதிக்கப்பட்ட அளவில் அதிகபட்ச அளவை நெருங்கி வருவதை கவலையுடன் கவனித்துவந்தார். 

எ). இந்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய‌ எனது பெற்றோர் குழந்தையின் குணாதிசயம் தலைகீழாக மாறியதைக் கண்டு மனம் நொந்து போனார்கள்.அவர்கள் வாங்கிவந்த 'ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பால்' என்று படத்துடன் வந்த புத்தகத்தை கோபமாக விசிறி  எறிந்துவிட்டாள்.தாங்கள் வெளிநாடு போகாதிருந்தால் இப்படி ஆகியிருக்காதோ என்று இன்றுவரை எனது அம்மா என்னிடம் கேட்பதுண்டு. பெங்களூரில் எனது மாமியார் தனது பங்கிற்கு குழந்தையின் நன்மைக்காக விரதமிருக்கத் தொடங்கினார்.

ஏ). இதுதவிர பிரபல துணி துவைக்கும் சலவை சோப்பு வில்லைகளை வரிசையாக அடுக்கி வைத்து பார்ப்பது மற்றும் அதன் விளம்பரம் செய்தித்தாளில் வந்தால் அந்தப் பக்கத்தை சோப்புக்கு அருகில் வைத்துப் பார்த்து மகிழ்வாள். வாசனையான பொருட்களை குறிப்பாக தரை துடைக்கும் திரவம், சோப்பு போன்ற பொருட்களை எங்கிருந்தாலும் எடுத்து  முகர்ந்து பார்ப்பாள்.‌ நாம் சற்று கவனிக்காமல் இருந்துவிட்டால் அவற்றை எடுத்து திங்கவும்,குடிக்கவும் கூட முற்படுவாள்.

No comments:

Post a Comment