Thursday, December 17, 2020

15. பின் நோக்கிப் பாயும் அறிவு முன்னோக்கியும் பாயும்

மீனாட்சி போல் ஹைபர்லெக்சியாவுடன் சவான்ட்சின்ட்ரோமும் உள்ள சில குழந்தைகளிடம் நான் பார்த்து வியந்த குணாதிசயங்கள்: 

  • கற்காமலேயே முன்பின் அறிமுகமில்லாத அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருக்கிறார்கள். 
  • மேலும் இக்குழந்தைகளுக்கு கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என முக்காலமும் தெரிந்திருக்கிறது (extrasensory perception).
  • 'டெலிபதி': நுண்ணுணர்வு/உள்ளுணர்வு மூலம் பிறர் மனதை அறிவது. மேற்கண்ட இந்த முக்கிய குணாதிசயங்கள் தான் 'சவான்ட்சின்ட்ரோம்' உள்ள குழந்தைகளை வெறும் 'ஹைபர்லெக்சியா' (கற்க்காமல் எழுதப் படிக்கத் தெரிவது) மட்டுமேயுள்ள குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அதிலும் மேலே குறிப்பிட்டதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குணாதிசயங்கள் அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது. 

உதாரணம்#1: சிறுநீரக பாதிப்புள்ள எனது தந்தைக்கு சில சமயங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு/ சில மணிநேரங்களுக்கு முன்பிருந்தே மீனாட்சியின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக காணப்படும். சில முறை அவள் புரியவைக்க முயற்சித்த விஷயங்களை நாங்கள்தான் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம். நீங்கள் கேட்கலாம் "அவளுக்குத்தான் எழுதத் தெரியுமே? உங்கள் கைகளை பிடித்து எழுதிக் காட்ட வேண்டியதுதானே?" என்று. இதற்கு என் பதில் "அங்குதான் பிரச்சினையே! உணர்ச்சி வசப்படும் நேரங்களில் அவள் சிந்திக்க மாட்டாள்.நாம் எழுதிக் காட்டினால் மற்றவர்கள் புரிந்துகொண்டு விடுவார்கள்!"என்ற சாதாரண விஷயம் அந்த நேரத்தில் அவளுக்குத் தோன்றாது.(இது ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கும் பொருந்தும்! அவர்கள் சொல்வது நமக்குப் புரியாவிட்டாலோ, நாம் சொல்வது அவர்களுக்கு புரியாவிட்டாலோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள்!) நாம் எழுத சொல்லி வற்புறுத்தினால் அழத் தொடங்கிவிடுவாள்.

கிட்டத்தட்ட எல்லாம் தெரிந்தும் அதை வெளிக்காட்டாமுடியாமல் இருப்பது, 'எதுவுமே தெரியாது' என்ற நிலைக்கு ஒப்பானது தான். நான் இதை கீழ்க்கண்டவாறு விளக்க விரும்புகிறேன்: 'எதுவுமே தெரியாது' (முட்டாள்) 'எல்லாமே தெரியும்' (அறிஞன்) என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட தூரம் மிகக்குறைவே.நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், இது ஒரு கடிகாரத்தின் சூழற்ச்சி போல் முழு சுற்று சுற்ற வேண்டுமென்று.ஆனால் எனக்குத் தோன்றுகிறது கடிகார முள் எதிர்திசையில் ஒரே ஒரு அங்குலம் நகர்ந்தாலே அது மிகப் பெரிய மாறுதலை‌ உண்டாக்குமென்று.


அதுபோல்தான் இதுவும். 'ஆம்', 'இல்லை' என்ற நிலைகளுக்குள் நிகழும் மாற்றம். மிகுந்த அறிவு கொண்டவர்கள் திடீரென மனநல பாதிப்புக்கு உள்ளாவதும், 'ஒன்றுமே தெரியாது' என நாம் சிலரைப் பற்றி நினைக்கும் போது அவர்கள் அனைத்தும் அறிந்தவர்களாக இருப்பது என  முரண்பட்ட இரண்டு விஷயங்களுக்குள்ள தொலைவு மிக மிகக் குறைவே எனத் தோன்றுகிறது. 

உதாரணம்#2:அதேபோல் அவளது பன்மொழித் திறமையை சோதிக்க நினைத்த நான் வீட்டில் அவள் அதிகம் எழுத ஒத்துழைக்காத காரணத்தால் அவளது ரைட்டிங் கிளாஸ் எடுக்கும் தெரப்பிஸ்டிடம் அவளுக்கு என்னென்ன மொழிகள் தெரியுமென்று சோதிக்கும்படி கேட்டிருந்தேன்.தெரப்பிஸ்டின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதத் தொடங்கிய மீனாட்சி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஐரிஷ் (உலகின் மிக வேகமாக அழிந்து வரும் மொழிகளில் ஒன்று), ஆங்கிலம் மற்றும் சைனீஸ் போன்ற மொழிகளில் ஒரு முக்கிய விஷயத்தை தனக்குப் பல மொழிகள் தெரியும் என்பதோடு சேர்த்தே வெளிக்காட்டினாள். அவள் சொன்ன விஷயம் தனக்கு வந்த கனவு என்கிறாள். அதாவது ஐஸ்வர்யா என்ற அந்த தெரபிஸ்டிற்க்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பதுதான் அந்த விஷயம் இதில் 'சப்னே' (கனவு) என்பதை மலையாளத்திலும் 'பேபி வில் கம் ஃபார் ஐஸு' என்பதை ஆங்கிலத்திலும், மேலும் பிறக்கப் போகும் குழந்தையை சீனமொழியில் "போபோ"என்றும் எழுதியிருந்தாள். அந்தந்த மொழிகளுக்குக் கீழேயே அது எந்த மொழி என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்திலும் எழுதியிருந்தாள். இதில் அவள் எழுதிய மலையாள எழுத்துக்கள் ஒரு கோணத்தில் பார்த்தால் தமிழ் எழுத்துக்கள் போல தெரிந்தது, இவளது தெலுங்கு எழுத்துக்களை டெல்லியில் உள்ள எனது அத்தை மகள் தனது அண்டை வீட்டாரிடம் கேட்க, அவர்களோ அது தெலுங்கு தான் ஆனால் இன்று வழக்கத்தில் இல்லாத எழுத்து வடிவமான கோவில் கல்வெட்டுக்களில் காணப்படும் பழைய கிரந்தத்தை ஒத்துள்ளது என்று கூறியிருக்கிறார்கள். "அவள் எழுதிய 'போபோ' சீன மொழியே இல்லை" என்றார் இதை தன்னிச்சையாக சோதித்த ஃபிரான்ஸில் இருக்கும் எனது உறவுக்கார பெண்மணி, தனது தோழியான ஒரு சீனப் பெண்ணிடம் விசாரித்துவிட்டு பதிலளித்திருந்தார். இதை நான் விரிவாக ஆராய்ந்த போது 'போபோ' என்ற அந்த வார்த்தைக்கு 'பாண்டாக் குட்டி' என்று கொச்சையாக குழந்தைகளை கொஞ்சு வதற்காக சீன தேசத்தில் வழக்கத்தில் பயன்படுத்தும் சொல் என்று அறிந்தேன். ஆனால் அவள் எழுதிய எழுத்துக்கள் சீன தேசத்தில் பயன்படுத்தும் எழுத்துக்களே அல்ல! அங்கு பயன்படுத்தப்படுவது நமது தமிழின் சீர்திருத்த எழுத்துக்களைப் போல் எளிமையாக்கப்பட்ட சீன மொழியாகும் (சிம்பிளிஃபைட் சைனீஸ்). இவள் பயன்படுத்திய எழுத்துக்கள் சீன தேசத்திற்கு வெளியே தைவான்,ஹாங்காங், மகாவா ஆகிய இடங்களில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் பண்டைய சீன எழுத்துக்களாகும் (ட்ரெடிஷனல் சைனீஸ்).என் உறவினரின் தோழி நேரடியாக சீனாவிலிருந்து வந்தவர் என்பதால் எளிய சீன எழுத்துக்களை மட்டுமே அறிந்திருக்கிறார். இதை நான் கூகுளில் கண்டுபிடித்து இரண்டு எழுத்துக்களுக்கும் உள்ள வித்தியாசங்களை அவருக்கு விளக்கினேன்.அவர் ஒப்புக் கொண்டாரா? தெரியாது! அவருக்கு இருந்ததும் ஒருவகை அக்கறை தான். நமது சந்திராயன் உண்மையிலேயே நிலவை நெருங்கியதா, அதன் தென்பகுதியில் தான் விழுந்ததா என்று நாசாவும், ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் சோதித்த அதே அக்கறை.நாம்ஆர்வக் கோளாறில் நமது உற்றார்‌ உறவினரிடம் நம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.அதை சரியாகப் புரிந்து கொள்வதும், எதிர்மறையாக செயல்படுவதும் அவர் அவர் மனநிலையைப் பொருத்தது! உங்களுக்கு அதிசயமாக தெரிந்த விஷயம் பிறருக்கு கேலிக்கூத்தாக தெரிவது இயல்புதானே?ஆனால் அதே பெண்மணியின் கனவில் இன்றும் அடிக்கடி மீனாட்சி வருவதாக அவரே கூறுகிறார். மீனாட்சியின் பள்ளி வகுப்பறை இப்படித்தான் இருக்கிறது, அங்கே ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்(சாதாரண ஒரு ஆசிரியர்+ ஒரு நிழல் ஆசிரியர்+ ஒரு உதவியாளர்) இருக்கிறார்கள் என்பது வரை அவர் கனவில் வந்ததாகச் சொல்லும் விஷயங்கள் உண்மையுடன் பொருந்திப் போகின்றன.





தான்  சொல்வது உண்மை (True) என்பதை  தமிழ்  ஆங்கிலம் சேர்த்து இறுதியாக 'Trண்மை' என்று எழுதியிருக்கிறாள். இதை எழுதியபோது மீனாட்சிக்கு  ஐந்து வயது!


ஐந்து வயது குழந்தையால்  எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கடந்தகால எழுத்துமுறையில் விளக்கமுடிகிறதென்றால் இது உண்மையில் வியப்பான விஷயம்தானே?!


(இது நடந்த ஆறு மாதங்களுக்குள் ஐஸ்வர்யா கர்ப்பமான காரணத்தால் வேலையிலிருந்து தற்காலிகமாக நின்றுகொண்டாள்.வேறு வழியில்லாமல் மீனாட்சியின் ரைட்டிங் கிளாஸும் நிறுத்தப் படவேண்டிய நிலை வந்தது!).

முக்கிய குறிப்பு: இதே ஐஸ்வர்யா, மீனாட்சியிடம் உனக்கு எத்தனைமொழிகள் தெரியும் என்று கேட்க "So many. Can't count"("நிறையத் தெரியும். எண்ணிலடங்காது)  என்று எழுதியிருக்கிறாள். "நீ அறிந்தவற்றுள் உனக்கு மிகவும் பிடித்த மொழி எது?" என்ற கேள்விக்கு ஏதோ மெத்தப் படித்த அறிஞரைப் போல் "தமிழ்" தான்! "இலக்கணம் இலக்கியம்" சிறப்பாக கொண்டுள்ளதால் காரணத்தால் என்று பொருள்படும்படி பதிலளித்துள்ளாள். மேலும் "எழில் மிகுந்த மொழி" என்று குறிப்பிட்டுள்ளாள். 


இது எழுதியபோது மீனாட்சிக்கு நாலரை வயது!

உதாரணம்#3: எனது மனைவியின் மூத்த சகோதரர் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபொழுது மீனாட்சியைப் பற்றி அவரிடம் குறிப்பிட்டேன். இதைக் கேட்ட அவர் "மாப்ளே!  எங்கிட்ட எழுதுவாளானு  தெரியல.நீங்களே அவ கையப் புடிச்சுக்கோங்க. நான் என்னைக்கு சுவிட்ஸர்லாந்து போவேன்னு அவ கிட்ட கேளுங்க!"என்றார். இது நடந்தது டிசம்பர் 2016ல். இவள் எழுதிய தேதி 'மே 5,  2017' என்று. இதைப் பார்த்த அவர் தனது மொபைலில் கேலண்டரை சென்று பார்த்தார். அவருக்கு முகமெல்லாம் வியர்த்து படபடப்பாக காணப்பட்டார் "மாப்ளே! நீங்க குழந்தைப் பற்றி கவலையே படாதீங்க!அவ பெரிய ஜீனியஸ்! என் மனைவியையும் அழைத்து "நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய நேரம் இது.எதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?"என்றார். அவர் மேலும் சொன்னார் "நான் மே முதல்வாரத்தில் வெளிநாடு செல்வேனென்று தெரியுமே ஒழிய, தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் எங்கள் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் வாரத்தின் இறுதி வேலை நாட்களில் தான் அதாவது வெள்ளிக் கிழமைகளில் தான் 'ஆன்சைட்' அனுப்புவார்கள். மீனாட்சி குறிப்பிட்டுள்ள தேதி வெள்ளிக்கிழமையாகத் தான் வருகிறது. அப்படியானால் எனக்கே தெரியாத நிலையில் நான் ஊருக்கு செல்லும் நாளை அவள் எப்படித் தெரிந்து வைத்திருக்கிறாள் பாருங்கள்!"என்றார்.

உதாரணம்#4: ஒருமுறை அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது மாமாவிடம் மீனாட்சியின் கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி உங்களுடைய அலைபேசி எண்ணைக் கேளுங்கள் எழுதுவாள் என்றேன். அவரிடம் அழகாக ஒத்துழைத்த மீனாட்சி அவருடைய பத்து இலக்க அமெரிக்க அலைபேசி எண்ணை அவருக்கே எழுதிக் காட்டினாள் (அவள் எழுதியதைப் பார்த்தால் அவரது கையை தொட்டதால் அவரது உணர்வுகளை புரிந்து கொண்டது போல் இல்லை! தனக்கு முன்பே தெரிந்த விஷயத்தை ஆர்வமாக எழுதுவது போல் நடந்து கொண்டாள்). இது தவிர அவரது மகள் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும்பொழுது அமெரிக்காவின் பிரபல போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருந்தாள். நான் "சந்தியா எந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்?" என்று மீனாட்சியிடம் வினவினேன். இவள் உடனே 'Lockheed Martin' (லாக்ஹீட் மார்ட்டின்) என்று ஆங்கிலத்தில் தொடங்கி கடைசி எழுத்து 'ன்'னை மட்டும் தமிழில் எழுதிக் காட்டினாள். இன்று அவளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் வேலை கிடைத்தாலும் அவள் வேலைக்கு சேர்ந்தது என்னவோ லாக்ஹீட் மார்டினில் தான். 

உதாரணம்#5: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒரு விஷயம்!

அப்பொழுது எனது மனைவி கருத்தடை மாத்திரை உட்கொண்டதையும் மீறி கருவுற்றிருந்தாள். இதில் ஆபத்து அதிகம் என்ற காரணத்தால் மருத்துவரின் பரிந்துரைப்படி 38 நாள் கருவை மாத்திரை மூலம் கலைக்க முடிவு செய்திருந்தோம். குறிப்பிட்ட நாளில் கருக்கலைப்பு மாத்திரையை எனது மனைவி உட்கொண்ட அந்த சமயத்தில் கையில் ஒரு கைக்குட்டையை எடுத்துக் கொண்ட மீனாட்சி பூஜை அறையில் போய் உட்கார்ந்து கொண்டாள். ஒரு மணிநேரத்தில் கரு கலையத்
தொடங்கியது. சரியாக கரு கலைந்துவிட்டது என்று தெரிந்த அந்த நேரம் பூஜை அறையை விட்டு வெளியே வந்த மீனாட்சி தனது அம்மா ரேவதியின் மணிக்கட்டை கடிக்கத் தொடங்கினாள்.இதனால் மீனாட்சியின் பற்கள்பட்டு ரேவதியின் கைகள் முழுவதும் புண்ணாக்த் தொடங்கியது. இது கிட்டத்தட்ட 2 வாரங்கள் நீடித்தது. 'மீனாட்சிக்கு புதிதாக மனநல பாதிப்பும் ஏதேனும் சேர்ந்துவிட்டதோ?' என்று நாங்கள் அஞ்சத் தொடங்கினோம். அந்த சமயத்தில் ரேவதி ஓய்வில் இருக்க, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு நான் மட்டுமே மீனாட்சியை தெரப்பி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று வந்தேன். ஒருமாத காலம் கழித்து ரேவதி சற்று உடல் நலம் தேறியவுடன் அவளே அழைத்துச் செல்ல தொடங்கினாள். அவளை வெகு நாட்கள் கழித்து பார்த்த அந்த தெரப்பி சென்டர் நிர்வாகி "ரேவதி! உங்களுக்கு கருக்கலைப்பு ஏதேனும் நிகழ்ந்ததாயென்று கேட்க?". ரேவதிக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. அவர் மேலும் கூறியதாவது "உங்கள் மகள் உங்கள் மீதும் உங்கள் கணவரின் மீதும் மிகுந்த கோபத்தில் இருப்பதாக என்னிடம் எழுதிக் காட்டினாள். மேலும் "நன்றாகத்தானே இருந்தான் எனது தம்பி? (எனது கருத்து: 38 நாள் கரு ஆணா பெண்ணா என்று மருத்துவர்களாலேயே  கணிக்க முடியாதே!) பிறகு ஏன் அவனை அழித்தார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்" என்று ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறாள். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில்தான் கருக்கலைப்பு நடந்ததாக மீனாட்சியிடம் நாங்கள் வாய்மொழியாக எடுத்துச் சொன்னோம். பெரிய விஷயத்தை தானாகவே புரிந்து கொண்ட மீனாட்சிக்கு நாங்கள் சொன்னது புரிந்ததா என்று தெரியாது‌. ஆனால் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து எந்த பொம்மைக் கடைக்குச் சென்றாலும், அங்கே ஒரு தவழும் சிறுவனின் பொம்மையோ அல்லது பால்புட்டியுடனிருக்கும் ஒரு சிறுவனின் பொம்மையைக் கண்டாலோ மீனாட்சி  முதலில் அதைத் தான் எடுப்பாள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்  இன்றுவரை மீனாட்சி அவளது விரல்களைப் பிடித்துக் கொண்டால் மட்டுமே எழுதுகிறாள். எல்லோரிடமும் எழுதுவதில்லை. பள்ளியிலும்  தெரப்பி கிளாஸ்களிலும் அழகாக ஒத்துழைக்கிறாள்.பள்ளியில் தற்போது நிழல் ஆசிரியையின் (shadow teacher) உதவியுடன் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் (இது ஒரு இன்க்ளூஷன் பள்ளி. சிறப்பு பள்ளி அல்ல!) பயிலும் மீனாட்சி, அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதுடன் வியக்கத் தகுந்த வகையில் அனைவரையும் விடவும் மிக விரைவாகவே தேர்வுகளை எழுதுகிறாள் என்கிறார்கள். பெரிய வகுப்புகளின்  பாடங்கள் கூட அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை பள்ளி நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் வீட்டில் எங்களிடம் எழுதுவது அவளது அப்போதைய மனநிலையைப் பொருத்தது.தெரிந்தவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் போன்றவர்களிடம் அவளது இந்தத் திறமையைப் பற்றி சொல்லி எழுதுகிறாளா என்று பார்த்தால் பெரும்பாலும் கிறுக்கிவிடுகிறாள். யாரிடம் எப்போது எழுத வேண்டும் யாரிடம் எழுத வேண்டாம் போன்ற விஷயங்களை அவளே தீர்மானிக்கிறாள். அவளது பிடிவாதத்தை உடைப்பது எங்களால் முடியாத காரியமாகவே உள்ளது.அவள் எழுதுவதை கேமராவில் பதிவு செய்வதுகூட எங்களால் முடியாது! (எப்படி மறைத்துக்கொண்டு வீடியோ எடுத்தாலும் 'டெலிபதி' மூலம் தெரிந்து கொண்டு விடுகிறாள்!)அவளைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவளோ ஒரு மேதை. புரியாதவர்களுக்கு ஒன்றும் தெரியாத குழந்தையைப் பற்றி நடக்காத விஷயங்களை நடந்ததாகச் சொல்லி பொய்க்கதை பரப்பிவரும் பெற்றோர்கள் நாங்கள். ஒரு சில கண்முன் நிகழும் அதிசயங்களை பிறருக்கு புரிய வைக்கமுடியாமல் போவது மிகப்பெரிய தவிப்பு தான். கிட்டத்தட்ட எங்களின் நிலைமையும் பேசமுடியாமல் மீனாட்சி கஷ்டப்படுவதற்கு ஒப்பானதே. அவளுக்கு  தொலைக்காட்சி மூலமோ,செய்தித் தாள் மூலமோ பெருமை வாங்கித் தர வேண்டியது எங்களுடைய வேலையல்ல. அது எங்களின் நோக்கமும் அல்ல. உற்றார், உறவினர், அவள் பயிலும் பள்ளி போன்றயிடங்களில் அவள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால் அவளை கையாள்வது அனைவருக்கும் எளிதாக இருக்கும் என்பது மட்டுமே எங்களின் ஆதங்கம்.

நாம் அனைவரும் காய்ச்சல்,தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றின் அறிகுறிகளை உணர்ந்துள்ளதால் நமக்கு அவற்றின் தாக்கம் தெரியும். இப்படியும் ஒரு பிரச்சனை உள்ளது என்பதை சொன்னாலும் பிறருக்குப் புரிய வைப்பது மிகவும் கடினமாகவே உள்ளது. இது ஒருவகையில் பார்த்தால் இதுபோன்ற குழந்தைகளுடன் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே நான் சொல்வது முழுமையாகப் புரியும். 

நான் மேற்கொண்டு இணையத்தைத்  தேடியதில் கருநீலக் குழந்தைகள் (Indigo Children) பற்றித் தெரிந்து கொண்டேன்:
நான்ஸி ஆன் டாஃபே என்ற‌ அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு பெண்மணி. இவருக்கு சினஸ்தீஸியா பிரச்சனை உண்டென்று சொல்லப்படுவதுண்டு. வண்ணங்களால் ஏற்படும் சினஸ்தீஸியாவை (colored grapheme synesthesia) அடிப்படையாகக் கொண்டு வண்ணங்களின் (colorology) அடிப்படையில் மனிதர்களை ஒளி வட்டங்களாகப் பிரித்து (energy level or aura) அவர்களது குணாதிசயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இவரது கூற்றின்படி கருநீலக் குழந்தைகள் (Indigo children) என்பவர்கள் 70களின் பிற்பகுதி மற்றும் என்பதுகளில் அதிகம் பிறந்த குழந்தைகள்.பெரும்பாலும் நினைத்ததைச் சாதிக்கும் குணமும், கட்டுப்பாடுகளை அதிகம் விரும்பாததும் இவர்களின் குணாதிசயங்களாக இருக்கும் என்கிறார். ஆனால் மருத்துவ உலகமோ ADHD போன்ற கவனச்சிதறல் உள்ள குழந்தைகளை 'கட்டுப்பாடுகளை விரும்பாதவர்கள்' என குறிப்பிடுவது ஒரு வகையில் அவர்களின் குறைகளை மறைப்பதற்கு எடுத்தாண்ட முயற்சி என்று குறிப்பிடுகிறார்கள். இதே  கருநீலக் குழந்தைகளை அடிப்படையாக வைத்து ஹாலிவுட் திரைப்படங்களும் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஸ்படிகக் குழந்தைகள் (crystal children): நான்ஸியைத் தொடர்ந்து கருநீல குழந்தைகளைப் பின்பற்றி புதிதாகப் பிறக்கத் தொடங்கியிருக்கும் புதிய தலைமுறைக் குழந்தைகளைப் பற்றி டோரன்‌ வெர்ச்யூ என்ற பெண்மணி ஸ்படிகக்  குழந்தைகள் (crystal children) என்ற தத்துவத்தை முன்வைக்கிறார். இவரது புத்தகம் "A guide to the newest generation of psychic and sensitive children" அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவர் குறிப்பிடும் குணாதிசயங்கள் மீனாட்சிக்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. அதாவது இக்குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், பேரன்பைக் கொண்டவர்கள், தாமதமாகவே பேசுவார்கள், ஆனால் நுண்ணுணர்வும் (telepathy) அமானுஷ்ய சக்தியும் இவர்களுக்கு உண்டு. கூட்டமான இடங்களில் தவிர்ப்பார்கள். இயற்கையை அதிகம் விரும்புவார்கள். சில குழந்தைகள் பிரபஞ்சத்தைப் பற்றியும் முற்பிறவியைப் பற்றியும் கூட பேசுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவை எதுவுமே மருத்துவர்களாலும் விஞ்ஞானத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 





Wednesday, December 09, 2020

14. முன்ஜென்மம் உண்மையா?

 'முன்ஜென்ம நினைவு' பற்றி எனது அடுத்த மின்னஞ்சலில் டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்டிடம் கேட்டேன். அதற்கு அவர் "உலகின் பல பகுதிகளிலிருந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் பெற்றோர்கள் இது குறித்த கேள்வியை என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார்கள். இதற்கு எனது பதில் 'இருக்கலாம்! இல்லை என்று சொல்வதற்கு நான் யார்?' ஆனால் இதையெல்லாம் நான் ஜெனிடிக் மெமரி (மரபுவழி அறிவு) என்பதோடு சுருக்கிக் கொள்கிறேன்" என்று பதில் எழுதியிருந்தார். முன் ஜென்ம நினைவுகள் பற்றி நான் மேற்கொண்டு இணையத்தில் தேடியதில், முன்ஜென்ம நினைவுகளோடு பிறந்த குழந்தைகளைப் பற்றி வெர்ஜினியா பல்கலைக்கழகத்தின் உளவியல்துறையைச் சேர்ந்த டாக்டர்.ஜிம் டக்கர் முன்ஜென்ம நினைவுகளுடன் பிறந்த 200க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட டாக்டர்.இயன் ஸ்டீவன்சனின் ஆய்வைத் தொடர்கிறார். இதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்கள் உடலில் இருக்கும் மச்சம், மேலும் மீனாட்சிக்கு உள்ள ரத்த குழல் கட்டி (hemangioma), வினோதமான தழும்புகள் மற்றும் விரல்கள் இல்லாமல் பிறப்பது போன்ற பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்கள் பெரும்பாலும் அந்தக் குழந்தைகளாலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களெல்லாம் ஆட்டிசம், பேச்சு தாமதம் போன்ற பிரச்சினைகள் இல்லாத சாதாரணக் குழந்தைகள். எனவே இளம் வயதிலேயே தெளிவாகப் பேசக்கூடியவர்கள்.இதில் ஒரு சிலர் தங்களுக்கு முற்பிறவியில் இவர்களால் இந்த இடத்தில் இந்த நேரத்தில் இப்படிதான் பாதிப்பு ஏற்பட்டது என்பதுவரை தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு நெற்றிப்பொட்டில் வட்ட வடிவமான தழும்புடன் பிறந்த சிறுவன், தன்னை முற்பிறவியில் துப்பாக்கியால் ஒரு நபர் சுட்டதை தெளிவாகச் சொல்லி இருக்கிறான். இதில் அக்குழந்தைகள் குறிப்பிடும் சம்பவங்கள் சில ஆண்டுகள் முதல் பல ஆண்டுகள் முற்பட்டதாக இருந்திருக்கிறது. இதற்கு சாட்சியாக இருந்த பலர் நடந்த சம்பவங்கள் உண்மைதான் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். இதேபோல் ஸீனோக்ளாஸி(xenoglossy) என‌று டாக்டர் இயன் ஸ்டீவன்சனின் முக்கிய ஆராய்ச்சியாகக் குறிப்பிடப்படுவது, முன்ஜென்மத் தொடர்பால் ஒரு சிலர் முன்பின் தெரியாத மொழிகளில் சரளமாக பேசவும் எழுதவும் தொடங்குவதைப் பற்றியது. மேலும் சிலரிடம் 'ஹிப்னாடிசம்' போன்ற உத்திகளைப் பயன்படுத்தி ஆழ்மனதைத் தூண்டியபோது அதில் சிலர் முன்பின் அறியாத மொழிகளில் கூட பேச தொடங்கியதாக கூறியுள்ளார். சமீபத்தில் கூட இஸ்ரேலின் கோலன் குன்றுப் பகுதியில் ஆங்கிலம் தெரியாத குடும்பத்தில் பிறந்த ஓநீல் முகம்மது என்ற மூன்றரை வயது சிறுவன் மிகச் சரளமாக தெற்கு லண்டனில் வசிக்கும் பாகிஸ்தானியர் பேசும் வட்டார வழக்குடன் ஆங்கிலம் பேசுவதாக செய்தி படித்தேன்.

Monday, November 16, 2020

13. தமிழ் மீது தீராக் காதல்கொண்ட ஸ்காட்லாந்து சிறுவன் கோல்ட்!

சவான்ட் சின்ட்ரோம் பற்றி என்னிடம் சொன்ன சிலர் 'மறு ஜென்மம்' பற்றிப் பேசினார்கள். அதாவது மீனாட்சி போன்ற குழந்தைகளுக்கு ஒன்றிற்கு  மேற்பட்ட பூர்வ ஜென்மங்களின் நினைவுகள் இருப்பதால்தான் இவர்களுக்கு பன்மொழித் திறமை உள்ளது என்று என்னிடம் கூறினார்கள்.‌பெரும்பாலான ஹைபர்லெக்சியா உள்ள ஆங்கிலம் மட்டுமே பேசும் குடும்பங்களில் பிறக்கும் வெளிநாட்டுக் குழந்தைகள் முன்பின் அறிமுகமில்லாத தமிழ், அரபி, கொரியன்,ரஷ்யன், ஸ்பேனிஷ்,உருது போன்ற  அந்நிய மொழிகளில் எழுதுகிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் எனது முகநூல் நண்பர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த திரு.மைக்கேல் அவர்களின்  மகன் 'கோல்ட்' (Colt). இது எங்களைப் போன்ற ஹைப்பர்லெக்சியா உள்ள குழந்தைகளின் பெற்றோர்களால் தொடங்கப்பட்ட முகநூல் பக்கம். இதன் மூலம் எனக்கும் மைகேலுக்கும் உள்ளதுபோல் தேசம்,மொழி,இனம் கடந்த நட்பு இக்குழந்தைகள் மூலம் பல பெற்றோர்களுக்குள்  ஏற்பட்டுள்ளது. பிறரிடம் பகிரமுடியாத இக்குழந்தைகளை கையாள்வதில் உள்ள சிக்கல்களை இங்கே பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் தீர்வுகளையும் பரிமாறிக்கொள்கிறோம். இங்கே ஜெர்மானியிலோ  இத்தாலியிலோ பிறந்த ஒரு குழந்தை முன்பின் அறிமுகமில்லா அரபியும் தமிழும் எழுதுவதாக ஆச்சார்ச்சத்துடன் சொல்லி  தினமும் ஒரு பெற்றோர் இக்குழுவில் சேர்வது வாடிக்கை. அது பெரும்பாலும் நாங்கள் கடந்துவந்த பாதையை  ஒத்திருப்பதும் வாடிக்கை. ஆனால் சமீபகாலமாக வரும் மேலைநாட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் மனநல மருத்துவர்கள் ஹைப்பர்லெக்சியா சோதனை மேற்கொண்டு தங்கள் குழந்தைக்கு  ஹைப்பர்லெக்சியா உள்ளதை அங்கீகரித்துள்ளதாக சொல்வது மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் நம்நாட்டில் இதை ஆட்டிசத்திலிருந்து பிரிக்காமல் வைத்திருப்பது வேதனையே!

கோல்டிற்கு  மீனாட்சியின் வயதுதான். கோல்டிற்கும் மீனாட்சியைப் போல் தனித்து எழுதுவது பேசுவது போன்றவற்றில் பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனால் 5 வயதில் திடீரென ஒரே நாளில் அவனிடம் நல்ல மாற்றங்கள் தெரிந்திருக்கிறது. அவன் தனித்து எழுதத் தொடங்கிய நேரத்தில் அவன் 'வணக்கம்' என்று தமிழில் தொடங்கி உலக மொழிகள் அனைத்திலும் அதற்கு இணையாக உள்ள வார்த்தைகளில் வாழ்த்து தெரிவிக்கிறான். இது தவிர 'பென்10' என்ற கார்ட்டூன் நிகழ்ச்சியை கோல்ட் யூடியூப்பில் தமிழில் தான் பார்த்து ரசிப்பதாக மைக்கேல் என்னிடம் தெரிவித்தார்.‌ தமிழைப் பற்றி மைக்கேலிடம் கூறிய கோல்ட் "தமிழ்  குஜராத்திலும் இலங்கையிலும்" பேசப்படும் மொழி என்று கூறியிருக்கிறான்.‌ இலங்கையில் 'தமிழ்' என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்.குஜராத்திற்கு எப்படி தமிழ் வந்தது? இதுபற்றி என்னிடம் கூறிய இலங்கையைச் சேர்ந்த எங்கள் குடும்ப நண்பர் 'அந்தச் சிறுவன் சொல்வது ஒருவகையில் சரிதான். வடக்கு இலங்கையில் 'மேமன்' என்ற பிரிவைச் சேர்ந்த மக்கள் தமிழில் கதைத்தாலும் அவர்களின் பூர்வீகம் குஜராத் தான்'என்று கூறினார்.

இன்று கோல்டின்‌ முக்கிய பொழுதுபோக்கு: அவனுக்கு உலகின் அனைத்து நாடுகளின் பெயர்களும், கொடிகளும், தேசிய கீதங்களும் அத்துப்படி.‌மேலும் அவனே புதிய நாடுகளையும், கண்டங்களையும் கொண்ட உலக வரைபடத்தை உருவாக்கிவருகிறான்.

கோல்ட்

முன்பிருந்த 'லெமூரியா' கண்டம் இன்று இல்லை. அதேபோல் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைய தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் நடக்கப் போவதை தான் சிறுவன் கோல்ட் விளையாட்டாக உருவாக்கிப் பார்க்கின்றானோ?


கோல்டிற்கும் மீனாட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
நான் மைக்கேலிடம் கேட்டவரையில் கோல்டிற்கு ஹைபர்லெக்சியா மட்டுமே உள்ளது. மீனாட்சியைப் போல் பிறர் மனதைப் படிக்கும் நுண்ணுர்வுத் திறன் போன்ற 'சவான்ட்' திறமைகள் வெளிப்படவில்லை.தன்னிச்சையாக பேசவும் எழுதவும் தொடங்கிவிட்டான்.மீனாட்சி தனக்கு நன்கு பரிச்சயமான தாய், ஆசிரியை, தெரப்பிஸ்ட் போன்ற குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே குறைவான வார்த்தைகளுடன் மெல்லிய குரலில் பேசத் தொடங்கியிருக்கிறாள். கோல்ட் நிறையப் படித்து அறிவை மேம்படுத்திக் கொள்கிறான்.‌தன் திறமைகளை பிறரிடம் வெளிப்படுத்திக் கொள்கிறான். மீனாட்சிக்கு படிக்காமலேயே சகலமும் தெரியுமென்றாலும் தன்னை எல்லோரிடமும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.

கீழே : எங்களுக்குள் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள்!

மீனாட்சியின் தமிழ், மலையாளம் போன்ற இந்திய மொழிகள்  மற்றும் உயர்த்த ஆங்கிலப்புலமை  பற்றி நான் கூற, மைகேல் உள்ளிட்ட வெளிநாட்டுப் பெற்றோர் தங்கள்குழந்தைகள் இந்திய மொழிகள் மற்றும் அந்நியமொழிகளில்  பெற்றிருக்கும் அறிவைப்  பற்றி விவரிக்கிறார்கள்!










அறிவார்ந்த குழந்தைகளின் உலகம் எப்படிப்பட்ட பொழுதுபோக்குகளையும் விளையாட்டுக்களையும் கொண்டுள்ளது என்பதை நீங்கள் காணவேண்டாமா!

 கீழே உள்ள படங்களைப் பாருங்கள்! இவை ஹைபர்லெக்ஸியா முகநூல் குழுவில் உலகெங்கிலுமுள்ள பெற்றோர்களால் பகிரப்பட்ட புகைப்படங்கள். இனிமேல்  உங்கள் குழந்தைகளை 'சிறப்புக் குழந்தைகள்' என்று சொல்லப்படும் குழந்தைகளுடன்  ஒப்பிடலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளவும்.என்னைப் பொறுத்தவரை படைப்பால் அனைத்துக்  குழந்தைகளும் ஒன்றுதான். அவர்களின் மனதில் பெற்றோராகிய நாம் 'தான்' என்ற உணர்வை ஊட்டி அதை அவர்களின் தலையில் ஏற்றிவிடக் கூடாது. 'தான்' என்ற உணர்வுதான் நமது அறிவிற்கு பின்னாளில் உடனிருந்து குழிபறிக்கும் நம்பிக்கை துரோகியாகிவிடுகிறது.


எழுத்துக்களுடன் விளையாடும் ஒரு சிறுவன் 



மும்மொழி அகர வரிசைகளுடன் ஒரு சிறுவன் 



எண்களுடன் பூஜ்யங்களை சேர்த்துக்கொண்டே போயி  ஸ்தனங்களுடன் விளையாடும் பொடியன் 



                                     இந்த வயதில் இவ்வளவு ஸ்தனங்களுடன் வகுத்தலா? 



இவன் வடிவியலில் நிபுணன்! 

                                                      
இது அர்த்தமுள்ள சுட்டித்தனம்!



புகைப்படத்துக்கு  போஸ் கொடுக்க வைப்பது என்றுமே கடினம்தான்!


இவன் மூன்று வயதில் பெற்ற  பிறந்தநாள் பரிசு 'லோகோக்கள்' அடங்கிய புத்தகம்  



கிரேக்கப் பிரபுபோல் உடை அணிந்துள்ளான். இவன் அறிந்த 44 மொழிகளுள் இவனுக்குப் பிடித்தது கிரேக்க மொழியாம்! 



உறங்கும்போதும் எழுத்துக்களே உற்றதோழன் 



கணக்கிற்கு  விடை எழுதி ஐபாடின் பாதுகாப்பை தகர்த்து ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய முயலும் 3 வயது சிறுவன்!





இந்த 10 வயது சிறுவன் தாத்தா பாட்டியிடம் பெற்ற பிறந்த நாள் பரிசு "கனிம அட்டவணை"



இவன் தினமும் கண்விழிப்பது அட்லஸின் முன்! 




இந்த ஐந்துவயது சிறுவனின் விருப்பம் உடற்கூறியல்




பன்மொழி  எழுத்துக்களுடன் ஒரு சிறுவன் 




 π(Pi)ன் மதிப்பிற்கு 127 தசமஸ்தானங்களில் (decimal places) விடையளிக்கிறான்


தின்பண்டத்தை வைத்து கண்டங்கள் வரையும் 4 வயது குழந்தை 


களிமண்ணில் பாக் மேன் (Pac -Man ) உருவாக்கி மகிழும் வெளிநாட்டுவாழ் இந்தியக் குழந்தை  


     
இது மீனாட்சியின் விளையாட்டு: இதை 'ஹைப்பர்லெக்சியா  பெற்றோர்கள்' முகநூல் பக்கத்தில் பகிர்ந்து என்னவென்று கேட்டேன். வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி இது வானவில்லின் வண்ணங்களை 'ROYGBIV' என்ற சரியான வரிசையில் அடுக்கி இருக்கிறாள் என்றார் (நமக்குத் தெரிந்த வரிசை VIBGYOR தானே?). ஒருசிலர் இது DNAவின் கட்டமைப்பை விவரிக்கும் 'ஹீலிஸ்' போல் உள்ளது என்றார்கள். இதில் மீனாட்சி ஸ்பூன் வைத்தவுள்ளதுபோல் தங்கள் குழந்தைகளும் வைப்பதாக ஒருசில தாய்மார்கள் தெரிவித்திருந்தார்கள்.                           




Sunday, November 15, 2020

12. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ குறிப்பிடும் 'உள்ளார்ந்த அறிவு' (innatism):

முதலில் நாம் "உள்ளார்ந்த அறிவு" (innatism) என்றால் என்ன என்பதை தத்துவார்த்த ரீதியாகப் பார்க்கலாம்! கிரேக்க தத்துவ மேதை பிளாட்டோ எழுதிய 'மெனோ'வில் தனது குருவான சாக்ரடீஸுக்கும் "மெனோ" என்ற அரசியல் பிரமுகருக்கும் நடந்த சம்பாஷணையைக் குறிப்பிடுகையில், 'மெனோவிடம் அடிமையாக இருந்த ஒரு சிறுவனிடம் அவன் முன்பின் அறியாத வடிவியல் தேற்றத்தை (geometry theorem) கேட்டவுடன் மிகச்சரியாக எழுதிக் காட்டினான். இதற்குக் காரணம் அவனது உள்ளார்ந்த அறிவு தூண்டப்பட்டதே!' என்கிறார் பிளாட்டோ.மேலும் அவர் குறிப்பிடுகையில் ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அதன் மனம் எதுவும் எழுதப்படாத வெற்றுக் கரும்பலகையைப் போல் இல்லை (mind is not a blank slate). அனைத்துக் குழந்தைகளுமே மொழியின் கட்டமைப்பு தெரிந்தே பிறக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் முதலில் கேட்கும் தாய்மொழியை எளிதாகக் கற்று சீக்கிரம் பேசத் தொடங்குகிறார்கள். அதேபோல் ஐம்புலன்களின் மூலமாக அவர்கள் உணர்வுகளை மட்டுமே தெரிந்து கொள்கிறார்கள்.ஆனால் "வடிவங்கள்/ உருவங்கள்" (forms) அவர்களுக்குக் கற்பிக்கப் படுவதற்கு முன்பே அவை அவர்களின் மனதில் இருக்கிறது. 


இதையே இப்போது விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போம்: பிளாட்டோவின் இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பிறந்த குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் மூளையின் மொழி அறியக்கூடிய பகுதியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.அதை  visual word form area (VWFA)  ) என்கிறார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு இதுதான் மொழிக்கான வரிவடிவம் என்பது நாம் கற்பிப்பதற்கு முன்பே தெரிந்திருக்கிறது என்கிறார்கள். 

                                                                       பிளாட்டோ 

பிளாட்டோவின் தத்துவம் என்னை பெரிதும் ஈர்ப்பதற்குக் காரணம் சவான்ட் சின்ட்ரோமும் ஹைபர்லெக்சியாவும் உள்ள குழந்தைகளில் சிலருக்கு மீனாட்சியைப்போல் ஐம்புலன்கள் மூலம்(sensory integration) விஷயங்களை புரிந்துகொள்வதில் பிரச்சனை உள்ளது.இதனால் அவர்களின் ஆறாவது புலனான உள்ளுணர்வு(consciousness) விழிப்படைந்து வழிநடத்துகிறதோ? அப்படியானால் அந்த உள்ளுணர்வு தான் ஆன்மாவா? அதுதான் விஞ்ஞானத்தால் "ஜெனிடிக் மெமரி" என்று அழைக்கப்படுகிறதா? அப்படியானால் அது எங்கே இருக்கிறது? அதைத் தூண்டியது யார்?ஆன்மா நம்மைப் பிரிந்து விட்டால் ஏன் சடலமாகிறோம்?


Monday, June 01, 2020

11. இன்று பிறக்கும் குழந்தைகளுக்குள் என்னதான் நடக்கிறது?

தற்போதைய புள்ளி விவரங்களின்படிஉலகிலேயே மிக அதிகமாக ஹாங்காங்கில் 27 இல் ஒரு குழந்தைக்கு, தென்கொரியாவில் 38 இல் ஒரு குழந்தைக்கு அமெரிக்காவில் 45 இல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகள் எல்லாம் வளர்ந்த நாடுகள். இந்தியா இந்தப் பட்டியலிலேயே இல்லை. வேறு தளத்தில் தான் இந்தியா குறித்த தகவலைத் தேடிக்  கண்டு பிடித்தேன்! இங்கே குறிப்பிடப்படுவது என்னவென்றால் இந்தியாவில் 100ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது மேலும் 8ல் ஒரு குழந்தைக்கு ஏதோ ஒருவகையான நரம்பியல் பாதிப்பு உள்ளது.உண்மையில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலும், பின்தங்கிய நாடுகளில் இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளிடம் இல்லையா? நிச்சயம் இருக்கும்! ஆனால் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் அவர்களைப் பற்றிய தகவல்கள் பெற்றோர்களின் மூலமாகவோ மருத்துவமனைகளின் மூலமாகவோ அதிகம் இடம் பெறவில்லை. மேலும் ஹைபர்லெக்சியா, சவான்ட் சிண்ட்ரோம்  பற்றிய முகநூல் பக்கங்களில் கூட வளர்ந்த நாடுகளை சேர்ந்த பெற்றோர்களே அதிகம் இருக்கிறார்கள். அதிலும் வெளிநாட்டுவாழ் இந்திய பெற்றோர்கள் இருக்கிறார்களே தவிர இந்தியாவில் இருக்கும் என் போன்றவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இதற்கு நேர்மாறாக எனது மகள் இறுதியாகச் சென்ற அந்த தெரப்பி மையத்திற்கு வரும் குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமானவர்கள் மீனாட்சியை போல் பேரறிவைக் கொண்ட குழந்தைகளே! அதனால்தான் அந்த மையத்தின் நிர்வாகி மீனாட்சியை கண்டவுடனேயே அவளை இனம் கண்டுள்ளார்.அங்கே ஒரு சிறுவன் 22க்கும் அதிகமான மொழிகளில் எழுதத் தெரிந்தவன் (யாரும் கற்பிக்கவில்லை அவனும் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை!). மற்றொரு சிறுவன் பேசமாட்டான். ஆனால் பக்திப் பாடல்களை வாய்விட்டு நன்றாகப் பாடுவான். பேசச் சொன்னால் வாயை மூடிக் கொள்வான்.ஒரு சிறுமி உங்களைப் பார்த்தால் அப்படியே தத்ரூபமாக வரைந்து விடுவாள். இன்னொரு சிறுவனின் கதையை சற்றுப் பரிதாபமானது ! அவனுக்கு 15 வயது ஆகும் வரை அவனை எங்கும் அனுப்பாமல் அவனது பெற்றோர் வீட்டிலேயே வைத்திருந்திருக்கிறார்கள். அவன் அனைத்தும்  தெரிந்தவன் எழுதப் படிக்கவும் தெரியும் என்று உணர்ந்தவுடன் அந்தத் தெரப்பி மையத்தின் நிர்வாகியின் உதவிகொண்டு அவனை நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வைத்தார்கள். அவன் அதிக மதிப்பெண்களை பெற்றதுடன். மேலும் படிப்பைத் தொடர ஆர்வம் கொண்டிருக்கிறான்.அவன் ஓரளவிற்கு பேசத் தொடங்கி இருக்கிறான். ஆனால் சொந்தமாக பேனா பிடித்து எழுத வராது. அவன் அதிகம் நம்புவது தனது பெற்றோரை விட அந்தத் தெரப்பி மைய நிர்வாகியான அந்தப் பெண்மணியைத் தான். பீச்சுக்கோ திரைப்படத்திற்கோ அவரைத் தான் அழைத்துச்செல்லச் சொல்வான். இப்படியும் சேவை மனப்பான்மை கொண்ட பல நல்ல மனிதர்கள் இந்தத் தொழிலில் இருக்கத்தான் செய்கிறார்கள் !


எனது கருத்து: ஆட்டிசம் பாதிப்புடைவர்களில் 10% சதவீதத்தினர் சவான்ட்கள்.  உலகளவில் ஆடசம் பாதிப்பு அதிகரித்து வருகிறதென்றால் சவான்ட்சின்ட்ரோம்  பாதித்தவர்களும் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள் என்றுதானே அர்த்தம்? அப்படியானால் பிரச்சனையிலும் ஒரு நன்மையாக பேரறிவைக் கொண்ட குழந்தைகளும் இன்று அதிகளவில் பிறக்கிறார்கள் என்பதுதானே உண்மை? எனவே வித்தியாசமான மூளை அமைப்பைக் கொண்டு  விசித்திரமான பழக்க வழக்கங்களுடன் இனி வரும் காலங்களில் குழந்தைகள் அதிகம் பிறக்கப் போகிறார்கள். அவர்களை கையாள அரசும்,பெற்றோர்களும், பள்ளிகளும் தயாரா? இல்லை அனைவரையும் "சிறப்புக் குழந்தைகள்" என்று முத்திரையிட்டு அவர்களை சிறப்பு பள்ளிகளுக்கு அனுப்பிவிடப் போகிறோமா?

நான் இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு தெரிந்தவர்களிடம் இந்த பிரச்சனையை பற்றி வெளிப்படையாக சொல்லி வந்திருக்கிறேன். என்னை அனைவரிடமும் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று எனது நலம் விரும்பிகள் சொல்லியிருக்கிறார்கள். நான் பேசுவதற்கு காரணம் நாம் நமது விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது பிறர் நமக்குத் தேவையான கருத்துக்களை (இதில் பெரும்பாலும் தேவையற்ற மற்றும் முரண்பாடான கருத்துக்களும் வரலாம்!) பதிலுக்கு கூறலாம். மேலும் நமது அனுபவம் பிறருக்குப் பயன்படலாம். பிறருடைய அனுபவங்களையும் நாம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் நான் அறிந்த விஷயங்கள் அனைத்தையும் உங்களுடனும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

எங்களிடம் வேலை பார்க்கும் கன்சல்டன்ட் ஒரு நாள் என்னிடம் கேட்டான் "சார்! நீங்கள் உங்கள் மகளைப் பற்றி பெருமையாக பேசுகிறீர்களா? இல்லை அழுது புலம்புகிறார்கள்?" என்று கேட்டான். நல்ல கேள்விதான்! அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் தான் இருக்கிறார்கள் ஹைபர்லெக்சியா மற்றும் சவான்ட்சின்ரோம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்.எனது உதவி இல்லாமலேயே யார் வேண்டுமானாலும் இதே விஷயங்களை ஆய்வு செய்து புரிந்து கொள்ளலாம்.ஆனால் இதுவரை நான் செலவிட்ட நேரமும் முயற்சியும் இந்த நேரத்தில் உலகத்தின் வேறொரு மூலையில் இருக்கும் யாரோ ஒருவருக்கு நிச்சயம் பயன்படலாம். எனது தொழில் மற்றும் நண்பர்கள் வட்டத்தின் மூலம் பல நாடுகளிலிருந்தும் கண்டங்களிலிருந்தும் அவர்களுக்கு தெரிந்த இதுபோன்ற பிரச்சினைகளை உடைய குழந்தைகளின் பெற்றோர் என்னைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.இதில் பெரும்பாலானவர்களுக்கு நான் கூறும் விஷயங்கள் ஆறுதலாக நம்பிக்கை அளிப்பதாக இருப்பதுடன், பிரச்சனையை வேறு கோணத்திலிருந்து பார்க்க உதவுகிறது. பலர்  நான் பேசிய பிறகே தங்களது குழந்தையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டதாக என்னிடம் உணர்ச்சிப் பெருக்குடன் கூறியிருக்கிறார்கள். என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கு இந்த பிளாக் பயன்படட்டுமே!

 என்னுடைய இயல்பைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், வெகுளித்தனமாக மனதில் இருப்பதை பிறரிடம் கொட்டுவதற்கும், மனதிற்கு சரி என்று பட்டதை எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் நேர்மையாக பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. இதில் நான் இரண்டாவது வகை.

இதை சமுதாயத்தில் புரிந்து கொள்ளக் கூடியவர்களின் மனநிலையும் இரு வேறாக இருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்தது கொண்டேன். ஒரு சாரார் நான் கூறுவதில் உண்மை இல்லை என்று நினைப்பதோடு நான் என் மகளைப் பற்றி இல்லாத விஷயங்களை கற்பனை செய்து கொண்டு கூறி வருவதாக நினைக்கிறார்கள். இது போன்ற வினோத பிரச்சனைகளைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பெரிய மருத்துவர்களுக்கும் இதே அவப்பெயர் தான் ஏற்படுகிறது என்பதை நான் பிறகு தெரிந்து கொண்டேன். முதன்முதலில்  உலகம் 'உருண்டை' என்று சொன்னவனை  "முட்டாள்" என்ற உலகமல்லவா இது! இதில் நானெல்லாம் எம்மாத்திரம்?

நான் இப்பொழுதும் சொல்கிறேன் என் மகளுக்கு ஒன்றுமே தெரியாது என்றால் நான் அவளுக்குப் புரியாத பாடங்களை வற்புறுத்தி படிக்கவைத்து பள்ளிக்கு அனுப்பி தலையில் ஏற்றி நிச்சயம் துன்புறுத்த மாட்டேன்.இதை நான் எழுதுவதன் நோக்கமே சில நேரங்களில் நமது கண்ணே நம்மை ஏமாற்றலாம். விஞ்ஞானத்திற்கும் மருத்துவத்திற்கும் சவால் விடக்கூடிய பிரச்சனைகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி சவாலான விஷயங்கள்தான் சவான்ட் சின்ட்ரோமும்  ஹைப்பர்லெக்சியாவும். சில ஆண்டுகளுக்கு  முன்பு தென் தமிழகத்தில் ஒரு குழந்தையின் உடலில் தானாகவே அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது என்ற செய்தியை ஒரு தமிழ் செய்தித்தாளில் படித்த நான் அதைப்பற்றி இணையத்தில் அலசி அந்த பிரச்சனைக்குப் பெயர் ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஸ்ஷன் (Spontaneous Human Combustion), வெகு சிலருக்கு அரிதாக உடலில் சுரக்கும் திரவங்கள் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்பதைக் கண்டறிந்து அந்த நாளேட்டின் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதோடு அதன் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு தொலைபேசியிலும் தெரிவித்தேன். (அதுவரை அந்த குழந்தையின் பெற்றோர் பொய் சொல்கிறார்கள் அல்லது அவர்களே குழந்தையின் உடலுக்கு தீ வைக்கிறார்கள் என்ற ரீதியில் விசாரணை சென்றுகொண்டிருந்தது).நான் மின்னஞ்சல் அனுப்பிய இரண்டு நாட்களில் நான் கூறிய அதே கருத்தை அந்த குழந்தைக்கு வைத்தியம் பார்த்த அரசு மருத்துவக் குழுவினரும்,தமிழக சுகாதாரத்துறையும் கூறியது அதே செய்தித்தாளில் வெளியானது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் சொன்னதைதான் அவர்கள் அந்த நாளேட்டின் ஆசிரியரின்  வாயிலாக அறிந்து வழிமொழிந்தார்களா என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. எனக்கு பாராட்டோ,பணமோ, நற்சான்றிதழோ தேவையில்லை.உண்மை புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் போதும்!

அதே வேளையில் நான்‌ கூறியவற்றை கேட்ட மற்றொரு சாரார் தீவிர ஆன்மிகவாதிகளாக இருக்கிறார்கள்.அதில் பெரும்பாலானவர்களுக்கு இந்த விஷயங்களை ஆன்மீகத்தோடு தொடர்புபடுத்தி புரிந்துகொள்ள முடிந்தாலும் அதிலும் சிலருக்கு அவர்களின்  மதமும் அவர்கள் குருமார்களின் வழியும் பிறருடைய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு தடையாக உள்ளது. இன்னும் சொல்வதானால் இந்தப் பிரச்சனையை நீங்கள் புரிந்து கொள்வது கிட்டத்தட்ட கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ரீதியில் மனிதர்களைப் பிரிக்கிறது.ஆனால் நான் ஒரு வகையில் கொடுத்து வைத்தவன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் எனது கர்வமோ  சுயசிந்தனையோ எனது கண்களை மறைக்காமல் மனதை நடுநிலையுடன் வைத்துக் கொண்ட ஒரே காரணத்தால் தான் எனக்கு பெரும்பாலான விஷயங்கள் நன்கு புரிந்தன.நான் இனி உங்களுடன் இங்கே பகிரப் போகும் கருத்துக்கள் இன்று புரியாததாகவும் உண்மைக்குப்  புறம்பானதாகவும் தோன்றலாம்.ஆனால் சில ஆண்டுகளில் இதைப் பற்றிய உண்மைகள் நிச்சயம் விஞ்ஞானத்தால் அறிந்து கொள்ளப்படும். அப்பொழுது விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்திற்கும் உள்ள தொலைவு குறைந்துவிடும்!

10. சவான்ட் சிண்ட்ரோம் (Savant Syndrome):

இப்பொழுது சவான்ட் சிண்ட்ரோம்  (கற்றறிந்தவர் அல்லது ஞானி) பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்!

1). பிறவி ஞானிகள்(congenital Savants )பிறப்பிலேயே மிகுந்த அறிவோடு பிறந்த ஞானிகளென்றால் நாம் முன்பே பார்த்த கிம்பீக்,  நம்முடைய "கணித மேதை" ராமானுஜம் அவர்களையும், ஐன்ஸ்டீன் அவர்களையும் உதாரணங்களாகக் கூறலாம்.

2). விபத்தால் அல்லது திடீர்ஞானியானவர்கள் (accidental Savants):
இவர்கள்  சாதாரண மனிதர்களாக இருந்து திடீரென பக்கவாதத்தினாலோ அல்லது தலை மற்றும் முதுகுப்பகுதியில் அடிபட்ட பிறகு  (CNS injury) சவான்டாகி (ஞானியாகி) விடுவார்கள். இதை கீழ்க்கண்டவாறு புரிந்து கொள்ளலாம்; அதாவது செடிகளில் கொழுந்தாக இருக்கும் இலைகளைக் கிள்ளிவிடுங்கள். சில நாட்களில் செடியின் பக்கவாட்டிலிருந்து புதிதாக இலைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ளலாமென்றால், நமக்கு மூளையில்  பக்கவாதம் அல்லது விபத்து போன்ற பாதிப்புகள்  ஏற்பட்டாலோ அல்லது பிறவியிலேயே கட்டமைப்பு வித்தியாசமாக இருந்தாலோ மூளை தன்னைத் தானே சீராக்கிக் கொள்ள அல்லது தற்காத்துக் கொள்ள மாற்று முயற்சிகளை மேற்கொள்ளும்.இதற்க்கு "நியூரோ பிளாஸ்டிசிட்டி" (neuroplasticity) என்று பெயர். இதில் மூளையின் ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நியூரான்கள் தனது வழியை மாற்றிக்கொண்டு புதுப்புது தடங்களில் பயணித்து மூளையின் மற்ற பகுதிகளோடு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். இந்த "நியூரான் பின்னலை"(brain wiring or neuron wiring) தகவல் தொழில்நுட்பத்தில் web (வலைப் பின்னலோடு) ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நமக்கு சில சமயங்களில் இன்டர்நெட் மூலம் வரவேண்டிய தகவல் நேரடியாக வராவிட்டால் அது மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்து சேரும்.

விபத்தால் ஞானியானவர்
 உதாரணம்-1: ஜேசன் பேட்ஜெட் (Jason Padgett)
என்ற மெத்தை மற்றும் சோஃபா விற்பனைப் பிரதிநிதி தனது விவாகரத்துக்குப் பின்  வாழ்க்கையின் பெரும் பகுதியை குடியும் கூத்துமாக கும்மாளம் அடித்துக் கழித்து வந்துள்ளார்.அவருக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ளதுபோல் தானாம். ஆனால் ஜேசனின் உடமைகளைத் திருட வந்த இருவர் குடி போதையில் இருந்த அவரின் தலையிலும் வயிற்றிலும் தாக்கிவிட்டு  சென்றுவிட்டார்கள். இந்த பிரச்சனையிலிருந்து தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டு வந்த அவருக்கு சில மன ரீதியான மாறுபாடுகளுக்குப் பின் பார்க்கும் இடங்களிலெல்லாம் நீள்வட்டமும் அதற்குள் சிறு புள்ளிகளும் தென்படத் தொடங்கின. ஒரு கட்டத்தில் பகுவியலில் (Fractal) அவருக்கு அளவு கடந்த ஈடுபாடு ஏற்பட்டது. திடீரென இது தொடர்பான படங்களாக வரைந்து தள்ளத் தொடங்கியுள்ளார்.இவரது படங்களின் உண்மை அர்த்தத்தை உணர்ந்த ஒரு கல்வியாளர் அது வானியல் தொடர்பான நுட்பமான ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது என்பதை அறிந்து இவரை ஒரு சமூகக் கல்லூரியில் சேர்ந்து முறையாக கணிதத்தைப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.நடந்த விபத்து இன்று இவரின் வாழ்க்கையையே மாற்றி எழுதியிருக்கிறது.

உதாரணம்-2: எனக்கு உடனே மலையாளத்தில் திரு.மம்மூட்டி அவர்கள் நடித்த "ஐயர் த கிரேட்" திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. அதில் அவருக்கு ஒரு விபத்திற்குப் பிறகு நடப்பதை முன்கூட்டியே அறியும் தன்மை வந்துவிடும்.

உதாரணம்-3: மேலும் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி படித்தேன்! ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு சமையல் கலைஞர் தனது மனைவி இறந்த பாதிப்பில் ஒரு வகையான மன நோய்க்கு ஆட்பட்டதாகவும், கணிதத்தில் எந்தவித முன்னறிவும் இல்லாமல் அல்ஜீப்ரா போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டதாகுவும், மேலும் இராமானுஜம் விட்டுச்சென்ற தேற்றங்களை இவர் முடிக்கும் முனைப்புடன் செயல்படுவதாகவும் படித்தேன்.

சவான்ட் சிண்ட்ரோம்-சில முக்கியத் தகவல்கள்! 
ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் 10 சதவீதத்தினர் சவான்டாகப் (ஞானியாகப் )பிறக்கிறார்கள். மேலும் வளர்ச்சிநிலை குறைபாடுகள் மட்டுமின்றி தலை மட்டும் முதுகுத் தண்டில் ஏற்படும் பாதிப்பு (CNS injury) மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களாலும் இந்நிலை ஏற்படலாம். திடீரெனத் தோன்றும் திறமையானது ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுபட்டதாக தனித்துவம் மிக்கதாக பாதிக்கப்பட்டவரின் பிரச்சனைகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமையலாம். ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இப்பிரச்சனை உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் நினைவுத்திறன் அபாரமான கொள்ளளவைக் கொண்டதாக இருக்கும்.

சவான்ட்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆண்களே அதிகம் சவான்ட்களாகப் பிறக்கிறார்கள்.

சவான்ட்களில் 50 சதவீதத்தினருக்கு ஆடிசமும், ஆடிசமற்ற மீதமுள்ள 50 சதவீதத்தினருக்கு மூளை மற்றும் நரம்பு சம்பந்தமான வேறு பாதிப்புகள் இருக்கலாம்.

வரலாற்றில் முதல் சவான்ட்யென  அறியப்பட்டவர் ஜெடிடியாபக்ஸ்டன் (Jedediah Buxton) என்ற மின்னல் வேகத்தில் கணக்கிடக்கூடியவரைப்  பற்றிய தகவல் 1783ஆம் ஆண்டு 'க்னோடி சாடன்' என்ற மனநலம் சம்பந்தமான ஜெர்மன்  மருத்துவ நாளேட்டில் வெளியானது.நமது "கணித மேதை" ராமானுஜத்தைப்போல் பிறர்  கற்பிக்காமலேயே  கணிதம்  இவருக்குக் கைவந்த கலையாக இருந்திருக்கிறது!  

முட்டாள் அறிஞன்:ஆனால் 1887ல் லண்டன் மருத்துவ சமூகம் நடத்திய கூட்டத்தில் மனநல மருத்துவர் J.L.டவுன் (இவரே "டவுன் சின்ட்ரோம்" என்ற வளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிந்தவர்.தனது முப்பதாண்டு அனுபவத்தில் தான் கண்ட வியக்கத் தகுந்த திறமையுடன் கூடிய பிரச்சனையுள்ள இவர்களை "முட்டாள் அறிஞன்" (idiot savant) என்று பெயரிடுகிறார். அக்காலத்தில் திறன் அளவு (IQ) 25க்கும் குறைவாக இருந்ததால் "முட்டாள்" என்ற சொல்லி வந்துள்ளார்கள். ஆனால் பிற்காலத்தில் நடந்த ஆய்வுகளில் இப்பிரச்சனை உள்ள அனைவருக்கும் திறன் அளவு 40க்கும் மேல் என்ற காரணத்தால் "முட்டாள்" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'சவான்ட்‌' என்று  மட்டும் குறிப்பிடுகிறார்கள். டவுனின் காலம் தொட்டு இன்றுவரை இப்பிரச்சனை உள்ளவர்கள் கணிதம், இசை, கடிகாரத்தின் உதவியின்றி காலத்தை கணக்கிடும் அறிவு போன்ற சிறப்பு திறன்களோடு கூடிய அபார நினைவாற்றலும் கொண்டே தான் இன்றுவரை பிறந்து கொண்டிருக்கிறார்கள். இது தவிர ஓவியம், சிற்பம் போன்றவற்றில் உள்ள திறமைகளும் இதில் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் டாக்டர் டவுன் குறிப்பிட்ட முக்கிய விஷயம் "வளர்ச்சி பாதிப்பு" (developmental disorder  -இன்று இதுவே "ஆட்டிசம் குறைபாடு" என்று அழைக்கப்படுகிறது).அவர் மேலும் மனநல பாதிப்பு என்பது பிறவியிலோ அல்லது திடீரென்றோ ஏற்படக்கூடியது என்று குறிப்பிடுகிறார். அதேவேளையில் "மூன்றாவது பிரிவினர்" என்று அவர் குறிப்பிடும் குழந்தைகள் வெளியில் மனநல பாதிப்புக்கு உள்ளாகாவிட்டாலும் நன்றாக வளர்ந்து வரும் வேளையில் திடீரென ஒரு பின்னடைவைச் சந்திக்கிறார்கள் (regression). அவர்களிடம் தென்படும் அறிவுத் திறன்  திடீரென மங்கும், பேச்சு நிற்கும், மூளை வளர்ச்சி நின்று விட்டதோ என்றே எண்ணத் தோன்றும். இவர்கள் தனக்குள்ளேயே வாழத் தொடங்குவார்கள், நம் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது நபருடன் பேசிக்கொண்டிருப்பார்கள், செய்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பார்கள். மேற்கூறிய‌ "வளர்ச்சி பாதிப்பு" (developmental retardation) என்று டாக்டர் டவுனால் அழைக்கப்பட்ட இவையே 93 ஆண்டுகளுக்குப் பிறகு  அனைத்து மனநல மருத்துவர்களாலும் பயன்படுத்தப்படும் DSM (Diagnostic and Statistical Manual of Mental Disorders) என்ற மனநல பரிசோதனை மற்றும் புள்ளிவிவரக் கையேட்டின் படி"வளர்ச்சி நிலை மாற்றம்" (developmental disorder) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

1944ல் இதையே டாக்டர்‌.‌லியோ‌ கென்னர் "குழந்தைகளின் ஆரம்ப கால மன இறுக்கம்" (early infantile autism) என்று குறிப்பிடுகிறார்.‌ இவரே "ஆடிசம்‌" என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் (டாக்டர்.‌டெரால்ட் டிரெஃபர்ட்டின் பேராசிரியர்).

ஹில்லின் 1977 கணக்கீட்டின்படி இரண்டாயிரத்தில் ஒருவர் சவான்டாகப் பிறப்பதாக கூறுகிறார். சால்வோவீடாவின் 2000ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 10000த்தில் 1.4% சதவீதத்தினர் சவான்டாக பிறக்கிறார்கள்.

ஆண் பெண் விகிதாச்சாரம் ஆட்டிசத்தில் 4:1 என்று இருந்தால், சவான்ட் சிண்ட்ரோமில் 6:1 என்ற‌ கணக்கில் இருக்கிறது. கெஷ்விண்ட் மற்றும் கேலாபர்டாவின் 1987ன் ஆய்வு முடிவின்படி‌ கருவளர்ச்சியில் எற்படும் சில மாற்றங்களால் குழந்தைகளின் இடது மூளையின் வளர்ச்சி வலது மூளையை ஒப்பிடுகையில் தாமதப்படலாம். இது மேலும் ஆண் குழந்தையாக இருந்தால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் (Testosterone)காரணமாக இடது மூளையின் வளர்ச்சியை மேலும் தாமதப்படுத்தலாம். இதை ஈடுகட்ட இயற்கை வலது மூளையை வலுவூட்டுகிறது.அதாவது மொழி வளர்ச்சிக்கு உதவ வேண்டிய இடது மூளையின் திறன் வலது மூளைக்கு இடம்பெயர்கிறது. இதேபோல் இடது பக்கமாக தலையில் அடிபட்டாலும் அதை ஈடுகட்டும் வகையில் வலது மூளை செயல்படத் தொடங்குகிறது.

இதேபோல் சவான்ட் திறமையுள்ளவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் முதல் நிலை உறவினர்கள் 23 பேரை சோதிக்கும் போது அதில் ஒருவருக்கு சவான்ட் திறமை இருப்பதாகவும் (லா ஃபான்டெய்ன் 1974).மற்ற ஆய்வுகளில்  அப்படி குறிப்பிட்ட திறமையுடன் யாரும் இருப்பதாக முடிவு ஏதும் வெளியாகவில்லை.

சவான்ட்களின்‌ திறமைகள் என்றும் மங்குவதில்லை மாறாக வயது‌ மற்றும்‌ வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் மென்மேலும் வலுப்பெறுகிறது மெருகேறுகிறது.

சவான்ட்களுக்கு  அபார நினைவாற்றலுடன் கற்பனைத் திறனும் உண்டு! டாக்டர் டெரால்ட் டிரெஃபர்ட் தனது முந்தைய புத்தகமான "வியத்தகு மனிதர்கள்" (Extraordinary People) என்ற புத்தகத்தில் சவான்ட்களுக்கு கற்பனைத் திறன் குறைவு என்று கூறியதை பின்னர் வாபஸ் பெறுகிறார்.

உதாரணம்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியர் ஸ்டீபன் வில்ட்ஷயர் (Stephen Wiltshire).ஆட்டிஸ்டிக் சவான்டாக அறியப்படும் இந்த ஓவியர், ஒரு ஹெலிகாப்டரில் அமர்ந்து 20 நிமிடங்கள் நியூயார்க் நகரை வானிலிருந்து கண்காணித்தால், அவரால் அவர் கண்ட  வானளாவிய அனைத்து கட்டணங்களையும் நிலப்பரப்புகளையும் அப்படியே ஓவியமாக வரைய முடியும். இதற்கு அவரது "போட்டோகிராஃபிக் மெமரி"யே காரணம் என்று கூறுகிறார்கள். மேலும் தான் கண்ட காட்சிகளுடன்  கூடுதலாக சில விஷயங்களையும் தனது கற்பனையால் சேர்த்து அவர் அதை அழகுபடுத்தியும் காட்டியுள்ளார். இதைத்தான் டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் "சுய கற்பனைத் திறனும்" உண்டென பிறகு குறிப்பிடுகிறார்.

ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்து சவான்ட்களையும் பற்றி குறிப்பிடுவது இயலாத காரியம்.

இது தவிர மிகவும் அரியதாக சில குணாதிசயங்கள் சிலரிடம் இருப்பதாக விவரிக்கப்படுகின்றன. 
அவைகள்: பன்மொழிப் புலமை, தொடுவது, நுகர்வது, பார்ப்பது ஆகிய உணர்ச்சிகளை உணர்வதில் பிரச்சனை.‌ இதை சினஸ்தீசியா (synesthesia) என்று குறிப்பிடுவார்கள். இது தவிர மேற்கண்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு கடிகாரம் இல்லாமல் நேரத்தை உணர்வது, இவை தவிர நரம்பியல், கணக்கியல், மற்றும் திசை அறிவது போன்றவற்றில் உள்ள வியத்தகு அறிவு ஆகியவையும் குறிப்பிடப்படுகின்றன. இதேபோல் குழந்தைகளுக்கு எழுத்துக்களிலும் எண்களிலும் உள்ள வயதுக்கு மீறிய திறமையை "ஹைப்பர் லெக்சியா" என்றே குறிப்பிடப்படுகிறது.
(மேற்கண்ட அனைத்து குணாதிசயங்களும் நாம் மீனாட்சியிடம் கண்டதே!) 

உதாரணம்: இங்கிலாந்தை சேர்ந்த 'டேனியல் டாமட்' (Daniel Tammet )என்ற இளைஞர் இவரும் மின்னல் வேகத்தில் நேரடியாக கணக்குகளுக்கு விடை எழுதுபவர். சிறுவயதில் அடிக்கடி காக்கா வலிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். மற்ற ஆட்டிம் பாதித்தவர்கள் தங்களுக்கு என்ன நிகழ்கிறது, தங்களது செயல்பாடுகளை எது வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில்; திரு.டாமட் அவர்களால் சினஸ்தீசியாவைப் (synesthesia) பற்றியே விவரிக்க முடிகிறது. அவர் சொல்கிறார் மணங்களுக்கும் நிறங்கள் உண்டு (நான் முதலிலேயே கூறியுள்ளேன்  "மீனாட்சி வாசனை உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து முகர்ந்து பார்க்கிறாள்" என்று. குறிப்பாக: சோப்புக்கட்டிகள், தரையை துடைக்கும் திரவங்கள்!).

மேலும் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட குணாதிசமும், செயல்பாடும் உள்ளது என்கிறார் டாமட். உதாரணத்திற்கு '2' என்ற எண் அவருக்கு நகர்வதாக தோன்றுகிறது. '5' என்ற எண் அவருக்கு இடிபோல் கேட்கிறது. இந்த இரண்டு எண்களும் சேர்ந்து கொண்டால் அவருக்கும் மூன்றாவதாக ஒரு உருவம் தோன்றுகிறது! அதுவே விடையாகிறது. இப்படி தான் சிந்திக்காமலே விடைகள் தனக்குக் கிடைப்பதாக டானியல் குறிப்பிடுகிறார்.கன மூலம் (cube root)  போன்ற கணக்குகளுக்கு ஒரு கணிப்பானைவிட (calculator) வேகமாக விடையளிக்க இவரால் முடியும். π(Pi)ன் மதிப்பிற்கு 22,514 தசமஸ்தானங்களில் (decimal places) விடையளிக்கிறார். அவரால் 377ஐ  795துடன் பெருக்கி, பார்த்த மாத்திரத்தில் விடையெழுத முடியும். இது தவிர பன்மொழிப் புலமை கொண்ட திரு.டானியல் சொந்தமாக ஒரு புது மொழியும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு இன்றும் கார் ஓட்டுவது, கையைக் காட்டி திசையைச் சொல்வது, ஊசியில் நூல் கோர்ப்பது போன்ற நுட்பமான வேலைகள் செய்வது கடினமே. அவர் எழுதிய புத்தகங்கள் தலைசிறந்த புத்தகங்களாகக் கருதப்படுகின்றன.

(மீனாட்சியும் இதைத் தானே செய்கிறாள்?எதிர்காலத்தில் அவள் சந்திக்கப்போகும் பிரச்சினை என்ன? அனைத்தையும் புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்து 'ஸ்டெப் மார்க்' வாங்கியே மதிப்பெண்களை குவிக்கப் பழகிக் கொண்ட மாணவ சமுதாயத்திற்கு மத்தியில், மெய்யறிவுடன் கணக்குகளுக்கு நேரடியாக ஒரே வரியில் விடை எழுதினால் ஏற்றுக்கொள்வார்களா? மதிப்பெண் வழங்குவார்களா? இல்லை, ஏதோ தில்லுமுல்லு செய்து ஏமாற்றிவிடயளிக்கிறாள் என்று கூறி நுழைவுத் தேர்வுகளிலிருந்து  வெளியேற்றி "நீட்டாக" (neat) வீட்டிற்கு அனுப்பி வைக்கப் போகிறார்களா?  நான் இப்பொழுதே தலையைப் பிய்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டேன்!)

சினஸ்தீசியாவிற்கு நான் கூறும்  முக்கிய‌ உதாரணங்கள் : 


(சீக்ஷோபீனியாவும்,ஆட்டிமுன் பிரிக்கப்படாமல் இருந்த காலமும் உண்டு!)

ஆட்டிஸம் இல்லாமல் மற்ற வளர்ச்சி ரீதியான பிரச்சனைகளுடன் சவான்டாக இருப்பவர்களைவிட, அதிக அளவில் இருக்கிறார்கள் சவான்டாக இருப்பவர்களுக்கு ஆட்டிஸமும் சேர்ந்திருந்தால். மேலும் அவர்கள் பன்முகத் திறமை கொண்டவர்களாகவும் விளங்குகிறார்கள்-சொல்கிறார்கள் ரிம்லாண்ட் மற்றும் ஃபீன் (1988).

திறமைவாய்ந்த சவான்ட்கள் (Talented Savants): பெரும்பாலும் மனநலக் குறைபாடோ (cognitive impairment) அல்லது ஏதேனும் சில சிறப்பு திறன்களை மட்டும் பெற்றிருக்கும் சவான்ட்களை 'திறமைவாய்ந்த சவான்ட்கள்' என்பர்.

உதாரணம்#1: அமெரிக்காவைச் சேர்ந்த அலன்சோ  க்ளிமோன். இவருடைய திறனறிவு (IQ) 40-50 என்ற அளவில் சராசரிக்கும் குறைவானது. ஆனால் இவரால் மிருகங்களைப் பார்த்தால், அவற்றை நினைவில் கொண்டு மிகத் தத்ரூபமாக சிலைகளாக வடிக்க முடிகிறது. ஒவ்வொரு சிலையும் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விலை போகிறது!

உதாரணம்#2: இதேபோல், நான் கல்லூரியில் படித்த காலத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தின் சுற்றுச் சுவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டதாக அறியப்பட்ட ஒரு நபர் கையில் கிடைக்கும் கரித்துண்டு, செங்கல் துண்டு ஆகியவற்றைக் கொண்டு மிக அழகான படங்களை வரைவார். நான் கல்லூரிக்குச் செல்லும் பல நாட்கள் அவற்றை நின்று ரசித்துச் செல்வதுண்டு. சமீபத்தில் கூட கேரளாவின் கொல்லத்தில் இதுபோன்ற ஒரு ஓவியர் தென்பட்டுள்ளார். இவரது வரையும் பாணியையும், வரைந்த ஓவியங்களையும் பார்த்தால் தாம்பரத்தில் வரைந்த நபர் தான் இவரோ என்று எனக்கு தோன்றுகிறது. காணொளி இங்கே!

அதிமேதைகளான சவான்ட்கள்(Prodigious Savants): இவர்களிடம் இருக்கும் சிறப்பு திறமையானது சாதாரண மனிதர்களுக்கு சிறப்பு திறமை வாய்த்தால் அவர்கள் பரிமளிப்பதைவிடவும் பன்மடங்கு உயர்ந்ததாக இருக்கும். உலகம் முழுவதும் பார்த்தால் மொத்தமும் 100 பேர் என்ற கைவிட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இவர்கள் இருக்கிறார்கள்.

உதாரணம்: சென்னைச் சேர்ந்த சிறுவன் விஷால் ஆனந்த் . விஷாலைப் பற்றி ஹார்வர்டு நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர் பேராசிரியை டயானா ஹின்னசி பவல் தன்னுடைய வலைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விஷாலுக்கு யாரும் கற்பிக்காமலேயே பல விஷயங்களும் தெரியும்! பிறவி ஆங்கிலேயர்கள் எழுதுகின்ற அளவிற்கு சிறப்பான ஆங்கிலப் புலமையுடன் கதைகளும்,கவிதைகளும் ஆறு வயதிலேயே எழுதி, புத்தகங்களாக வெளியிடத்  தொடங்கி விட்டான். இவனது உதவி கொண்டு சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாசி போன்ற தாவரங்களிலிருந்து எரிபொருள் (algae fuel) தயாரித்துப் பயன்படுத்துவது பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.மேலும் சிறுவன் விஷால் தன்னிச்சையாக சமஸ்கிருத மொழியில் க்ருதிகள் எழுதி, பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடி சமீபத்தில் ஒரு மேடைக் கச்சேரி நிகழ்ந்துள்ளது. 

டாக்டர்.டெம்பிள் கிராண்டின்  அம்மையார்: ஆட்டிஸம் பாதிப்புடன் சவான்டாக அறியப்படும் கொலராடோ பல்கலைக்கழக விலங்கியல்துறை  பேராசிரியை  டாக்டர். டெம்பிள் கிராண்டின்  அம்மையார் அவர்கள், விலங்கியல் சம்பந்தமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். இறைச்சிக் கூடங்களில் கொல்லப்படும் விலங்குகளை வதைக்காமல்  கொல்வது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 2010ஆம் ஆண்டில் இவர் பெயரிலேயே  ஒரு ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகியுள்ளது.இவர்  டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்டின் நெருங்கிய நண்பரும் கூட. அடிக்கடி டிரெஃபர்டின் கருத்தரங்குகளில் பங்கேற்கிறார். இவரது படைப்புகளாக "படங்களாக சிந்திப்பது" (1995) மற்றும் "விலங்குகளுடன் சம்பாஷனை"(2005) ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இது தவிர "திறமையை மேம்படுத்துதல்: உயர்நிலை ஆட்டிசம் மற்றும் அஸ்பர்ஜர் சின்ட்ரோம் பாதிக்கப் பட்டோருக்கு" என்ற பெயரில் ஒரு புத்தகத்தை டஃப்பியுடன் இணைந்து 2004ல் வெளியிட்டுள்ளார்.
டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட் மற்றும் டாக்டர்.டெம்பிள் கிராண்டின் அம்மையார் (டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்டின் சிறப்பு அனுமதியுடன் உங்களுக்காக!)  

இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களென்ன?
டெம்பிள் கிராண்டின் அம்மையார் அவர்கள் மாடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவை தான் காணும் காட்சிகள் அனைத்தையும் புகைப்படங்களாக மனதில் வைத்துக்கொள்ளும் என்று குறிப்பிடுகிறார். இதைத்தான் "போட்டோகிராஃபிக் மெமரி" என்கிறார். இதை நான்  கீழ்கண்டவாரு புரிந்துகொள்கிறேன், கிராமங்களில் மாட்டுக்காரன் தான் எப்பொழுதும் பயன்படுத்தும் வழியில் இரவு நேரங்களில் பயணிக்கும்போது சற்று கண்ணயர்ந்து தூங்கி விட்டாலும் மாடு தானாகவே பயணத்தைத் தொடர்ந்து வீட்டிற்கு சரியாகச் சென்று நிற்க வேண்டிய இடத்தில் நின்று விடும்.

மேலும் அந்த அம்மையாரின் மூளையை விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அதில் அவர் இடது மூளையின் பின்பகுதி குறிப்பாக இடது உச்சிக்குழி (left ventricle) அளவில் பெரியதாக உள்ளது. இதனால் மொழி வளர்ச்சிக்கு தேவையான இடது மூளையில் சேதம் ஏற்பட்டு  (அல்லது) வளர்ச்சி குன்றி அவரது பேசும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதேவேளையில் இங்கே நான் கவனித்த மற்றொன்று, பாதிப்படைந்த பகுதிகளில் மூளையின் நீர்/திரவம் (Cerebrospinal Fluid) சராசரி மூளையில் இருப்பதை விட அதிக அளவில் தேங்கி உள்ளது. மீனாட்சியின் மருத்துவ அறிக்கையும் கிட்டத்தட்ட இதே பிரச்சனைதான் அவளுக்கும் உள்ளதாகக் காட்டுகிறது.

மீனாட்சி அதிக நேரம் எதையும் தொடர்ந்து பார்ப்பதில்லை அவளுக்கு கற்றல் குறைபாடு (learning disability) இருப்பதாக அவளுடைய ஏபிஏ (ABA )தெரப்பிஸ்ட் முன்பு கூறியதாக சொல்லியிருந்தேன். அவளுக்கு இருப்பதும் "போட்டோகிராஃபிக் மெமரி"தான் என்பதை மேற்கண்ட விஷயங்களை படித்தபிறகு தெரிந்துகொண்டேன்.நான் ஒருநாள் அவளுக்கு பிடித்த விஷயமான ஒரு தரை துடைக்கும் திரவ‌ பாட்டிலை (floor cleaning liquid) இரண்டு நொடிகள் காட்டிவிட்டு மறைத்துக் கொண்டு விட்டேன்.எனது மனைவியிடம் மீனாட்சியின் கையில் பேனாவைக் கொடுத்து பிடித்துக்கொள்ளச் சொல்ல, நான் அவளிடம் பார்த்ததை எழுதச் சொன்னேன். அந்த பாட்டிலில் இருந்த விவரங்கள் அனைத்தையும் வரி விடாமல் சிறு பிழையும் இல்லாமல் மீனாட்சியால் எழுத முடிந்தது. இதைப் படித்து புரிந்துகொண்டு திருப்பி எழுதுவதாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு சராசரி மனிதனுக்கே இரண்டு நிமிடங்களாவது ஆகும். எனவே ஒரு குழந்தை அதிகநேரம் எதையும் கண்கொண்டு கவனிக்கவில்லை (short attention span) என்றால் அதை குறை என்று நினைப்பது நமது தவறே. பார்த்த விஷயங்களை புகைப்படம் போல் மனதில் பதித்து வைத்துக் கொள்ள முடிந்தவர்கள் அதிகநேரம் எதையும் பார்க்கத் தேவையில்லை போலும். அதேவேளையில் உண்மையிலேயே கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அதிக நேரம் எடுத்து எதையும் பார்க்க மாட்டார்கள். இதில் பிரச்சனை என்னவென்றால் 'எல்லாம் தெரிந்தவர்கள், எதுவும் தெரியாதவர்கள்' என்று  இருவேறு துருவங்களாக இருப்பவர்கள் வெளி உலகிற்கு பார்ப்பதற்கு ஒன்று போல் தோன்றுவதால் நிகழும் குழப்பமே இது!

இதையேதான் டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்டின் ஹைப்பர்லெக்சியா கையேட்டில் (Hyperlexia Manualஐந்து நிமிடங்கள் ஸ்டீபன் கமரட்டாவுடன் (Five minutes with Stephen Cammarata) என்ற பகுதியில் திரு.ஸ்டீபன் கமரட்டரா (பேராசிரியர்-வான்டர்பில்ட் மருத்துவ மையம்-பேச்சு மற்றும் கேட்டல் துறை) '"ஹைபர் லெக்சியா-பிரிவு#3 (சிறுவயதில் ஆட்டிம் போன்ற அறிகுறிகளைக் கொண்டு பின்னாளில் பேரறிவுடன் சாதாரணமாக மாறிவிடும் குழந்தைகள்) மற்றும் சவான்ட் சின்ட்ரோம் பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். அதாவது, ஒருவருக்கு அதிக தாகம் எடுக்கிறது என்றால் நாம் அவருக்கு உடனே நீரிழிவு நோயாகத் தான் இருக்குமென முடிவெடுத்து; அதனை உறுதிப் படுத்தத் தேவையான சோதனைகளை மேற்கொள்கிறோம். அதேவேளையில், அந்த நபருக்கு அதிக நீர் வெளியேற்றம் மற்றும் சோர்வின் காரணமாகவும் தாகம் எடுக்கலாம். அறிகுறி ஒன்று தான் ஆனால் பிரச்சினைகள் வெவ்வேறு. எனவே அறிகுறிகளை மட்டும் வைத்து ஆட்டிசம் பாதிப்பு தான் என்று அனைத்து குழந்தைகளையும் கூறுவதற்கு முன் அதிக கவனம் தேவை என்கிறார்.மேலும் பெரும்பாலான பள்ளிகளும் குழந்தைகள் சற்று வித்தியாசமாக செயல்படத் தொடங்கினால், அவர்களுக்கு "ஆட்டிம்" முத்திரையைக் குத்தி விடுவது தவறு என்றும் சொல்கிறார். அதேபோல், அக்குழந்தைகளுக்கு "ஆடிசத்தை உறுதிசெய்ய மேற்கொள்ளும் திறன் தொடர்பான (IQ Test-பேசுகின்ற குழந்தைகளுக்கு, Development Quotient Test -பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு) சோதனைகள் குழப்பக் கூடியதாக அமையலாம்.‌ ஏனென்றால் இக் குழந்தைகளுக்கு இருக்கும் வேறுசில பிரச்சனைகள் உண்மை முடிவுகளை மறைக்கக் கூடியதாக அமையும் என்கிறார்.

 உண்மைதான்! நாங்கள் மீனாட்சிக்கு மேற்கொண்ட வருடாந்திர சோதனைகளில் (DQ Test) முதலாம் ஆண்டு அவளுக்கு மிகக் குறைந்த அளவு ஆட்டிசம் (mild autism), இரண்டாம் ஆண்டு மிதமான அளவு ஆட்டிசம் (modrate level) என்றே முடிவுகள் வந்தது. இதன் முக்கிய காரணம், வயதிற்கு ஏற்ப பேச்சுத்திறன் வளராததால் அவளது பெரும்பாலான மதிப்பீடுகள் அதை ஒட்டியே அமைந்ததால் அவளுக்கு மதிப்பெண்கள் குறையத் தொடங்கின.

அதேவேளையில் அவள் எழுதத் தெரிந்த குழந்தை என்று நாங்கள் கூறினாலும், அவர்களுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டாள். இதில் நான்  உணர்ந்த முக்கியமான காரணம் இக்குழந்தைகளை சோதித்து ஒரே நாளில் மதிப்பிடுவது மிகவும் சிரமம்; அவர்கள் பழகியவரிடம் ஒரு மாதிரியும், தெரியாதவர்களிடம் ஒரு மாதிரியும் நடந்துகொள்வார்கள். இதை சோதித்த தெரப்பிஸ்களே ஒப்புக் கொள்கிறார்கள். மேலும், வீட்டில் இருப்பது ஒரு போல் வெளியிடங்களில் நடந்து கொள்ள மாட்டார்கள். இது பொதுவாக அனைத்து குழந்தைகளுமே பொருந்தக்கூடிய குணம் தானே? என்ன சாதாரண குழந்தைகள் சற்று சமாதானம் செய்தால் சொல் பேச்சுக் கேட்பார்கள்.ஆனால்  இவர்களை சமாதானம் செய்வது அத்தனை சுலபமல்லவே!

ஐன்ஸ்டின் சின்ட்ரோம் (EINSTEIN SYNDROME): என்னைப்போலவே மருத்துவத்துறைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர் பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான தாமஸ் சொவல் (Thomas Sowell).என்ன செய்வது! நான் பள்ளியில் படித்த காலத்திலேயே பிற்காலத்தில் என் மகளுக்கு இது போன்ற வினோதமான பிரச்சினை வரும் என்று தெரிந்திருந்தால் அப்பொழுதே சோம்பேறித் தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒழுங்காக மருத்துவம் படித்து நரம்பியல் துறையில் மேற்படிப்பு மேற்கொண்டு நிச்சயம் ஒரு தீர்வைக் கண்டிருப்பேன். எங்கள் வீட்டில் கூட அடிக்கடி சொல்வார்கள் "கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமென்று!".

சரி... விஷயத்துக்கு வருவோம்! தாமஸ் சொவலின் மகனுக்கும் மேற்கண்ட பாதிப்புகள் இருந்துள்ளது. மேலும் பேச்சும் தாமதமாகத்தான் வந்துள்ளது. இதைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர் இளம் வயதிலேயே மிகுந்த அறிவைக் கொண்டிருப்பது, வளர்ச்சி நிலைகளில் தாமதம் ஏற்பட்டிருப்பது மற்றும் பேச்சு தாமதமாக வந்தது போன்ற குணாதிசயங்கள் இளம் வயது  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை ஒத்திருப்பதால்; இந்தப் பிரச்சனைக்கு "ஐன்ஸ்டீன் சின்ட்ரோம்"என்று பெயரிட்டு புத்தகமும் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளது, படித்த குடும்பங்களில் குறிப்பாக பொறியியல், டாக்டர் பட்டம், கணிதம், இசை, அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் உயர்கல்வி படித்த பெற்றோர்-ஆகியோருக்கே பெரும்பாலும் சவான்ட் சின்ட்ரோம் (பேரறிவு) கொண்ட குழந்தைகள் பிறக்கிறார்களாம்.

ஆம்! எங்கள் குடும்பத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் அதிகம். இதேபோல் இசையிலும் இசைக் கருவிகளை வாசிப்பதில் கைதேர்ந்தவர்களும் அதிகம். எனக்குக்  கூட மூன்று நான்கு வயதிலேயே 40க்கும் மேற்பட்ட ராகங்களை அடையாளம் காணத் தெரிந்திருந்தது. என்னை "மழலை மேதை"(child prodigy) என்று சொல்லியிருக்கிறார்கள் (இன்று என்னைப் பார்த்தால்  சொன்னதற்கு வருத்தம் தெரிவித்து "வாபஸ்" பெற்றுக் கொள்வார்கள்!). அதேபோல் நான் அதிக சுட்டித்தனம்  செய்வேன். வெகு சீக்கிரத்திலேயே பேசியிருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் பிறந்திருந்தால் எனக்கும் "ஹைபர் ஆக்டிவ் குழந்தை" என்ற முத்திரை விழுந்திருக்கும். அதேபோல் எனக்கு சிறுவயதில் OCD (Obsessive Compulsive Disorder) இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது!வீட்டைப் பூட்டினாலோ அல்லது காரைப் பூட்டினாலோ நான் ஐந்தாறு முறை சென்று  'பூட்டியுள்ளது' என்பதை உறுதி செய்து கொள்வேன்.பிறர் கிண்டல்செய்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக வெளியிடங்களில் சற்று குறைத்துக் கொள்வேன். இதே பிரச்சனை மீனாட்சிக்கும் உள்ளது. அடுத்தகட்ட பரிமாணமாக!

அதேபோல் என்னிடமிருந்து அவளுக்கு மரபு வழியாகப் புகுந்த நல்ல விஷயம்: ரைம்ஸ்களையும் குத்துப் பாடல்களையும் மட்டுமே யூடியூப்பில் கேட்டு வளர்ந்த மீனாட்சிக்கு என்னைப் போலவே கர்நாடக சங்கீத ராகங்களை அடையாளம் காணத் தெரிகிறது.அதைவிட எங்களுக்கே தெரியாத மேற்கத்திய இசைக் குறிப்புகளையும் எழுதத் தெரியுமென்கிற விஷயம் நான் அவளுக்கு சமீபத்தில் மேற்கொண்ட கைரேகை சோதனை(Dermatoglyphic Test) மூலம் தான் வெளிப்பட்டது.

ஐன்ஸ்டீனின் திருடப்பட்ட மூளை சொல்லும் ரகசியங்கள்:  ஐன்ஸ்டீன் இறந்தபிறகு அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் தாமஸ் ஹார்வி (Thomas Harvey) அவரது குடும்பத்தாருக்கு தெரியாமல் ஐன்ஸ்டீனின் மூளையைத் திருடி, பல சிறு துண்டுகளாக வெட்டி, பதப்படுத்தி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தன்னகத்தே ஆய்விற்காக வைத்திருந்திருக்கிறார். ஐன்ஸ்டீனின் மூளையில் சில மடிப்புகள் இயற்கையிலேயே தோன்றவில்லை என்றும், அதை சமன் செய்யும் விதமாக சராசரி மனிதர்களை விட 17 சதவீதம் அவர் மூளையில் அதிக அளவிலான நியூரான்கள் தோன்றி இருந்ததாகவும் கூறுகிறார். இதுதான் அவரின் பேரறிவிற்குக் காரணமோ?

அதேபோல், ஐன்ஸ்டீனின் வலது மற்றும் இடது மூளையின் மின் சமிக்ஞைகளை பரிமாற உதவும் இணைப்பான கார்பஸ்கலோசம் (corpuscollosum) பகுதி; அளவில் மிகப்பெரியதாக கிட்டத்தட்ட மூளையின் முன் பகுதியிலிருந்து கழுத்துப் பகுதி வரை நீண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.செய்தி இங்கே!

கவனிக்க: நான்  முதலில் குறிப்பிட்ட கிம் பீக்கிர்க்கு (Kim Peek)கார்பஸ்கலோசமே இல்லாததால் அவரது மூளையின் வலது மற்றும் இடது பகுதிகள் தனித்தனியாக இரண்டு மூளைகள் போல் செயல்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தேன்.இந்தப் பிரச்சனைக்கு 'அக்னஸிஸ் ஆஃப் கார்பஸ்கலோசம்'(Agenesis of corpus callosum) என்று பெயர். 


சில முக்கியத் தகவல்கள்:
  • ஆட்டிம், ஹைபர்லெக்சியா, சவான்ட்சின்ரோம், ஹைபர் ஆக்டிவிட்டி, டவுன் சின்றோம் போன்ற நரம்பியல் மற்றும் வளர்ச்சி நிலை குறைபாடுகள் தனியாகவும் வரலாம், ஒன்றுடன் ஒன்று கலந்தும் வரலாம். பெரும்பாலும் 2-3 வயதில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக அறியப்படும் குழந்தைகளை ஆறு ஏழு வயதில் பரிசோதிக்கும்போது ஏதேனும் ஒரு பிரச்சினையுடன் மட்டும் தான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் மூளையின் வளர்ச்சிக்கு ஏற்ப பிரச்சனைகளின் தீவிரம் குறைகிறது.


  • அதேபோல் கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படும் எம்.எம்.ஆர் (MMR )போன்ற தடுப்பூசிகள்தான் ஆட்டிஸமும் ஹைப்பர் ஆக்டிவிட்டியும் ஏற்படக் காரணம் என்று நம்பப்படுவது மிகப்பெரிய தவறு. தடுப்பூசி வழங்கப்படாத குழந்தைகளுக்கு பின்னர்  சில பிரச்சனைகள்  வந்தால்  கையாள்வது மிகவும் கடினமே!

  • ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் கண்பார்வையை சோதிப்பது மிகவும் அவசியம். இவையெல்லாம் நரம்பியல் தம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்பதால் கண் நரம்புகளையும் பாதிக்கலாம்.

  • பெரும்பாலான தெரப்பிஸ்டுகள் குழந்தைகளுக்கு அதிக இனிப்புள்ள மிட்டாய்கள், பிஸ்கட்டுகள் மற்றும் சர்க்கரையுள்ள பானங்களை தவிர்க்கச் சொல்கறார்கள்.சர்க்கரையானது ஏற்கனவே உடலில் அதிக சக்தியுள்ள 'ஹைப்பர் ஆக்டிவ்' குழந்தைகளுக்கு மேலும் சக்தியை அதிகரிக்கிறது.எனவே  தவிர்க்க வேண்டுமென்கிறார்கள். அதேபோல் க்ளூட்டன் நிறைந்த மாவுப் பொருட்களையும், ஐஸ்கிரீம் போன்றவற்றையும் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

  • மேலும் 'வைட்டமின் டி' குறைபாடே ஆன்ட்டிஸ் அதற்கு காரணம் என்றும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் அது போன்ற வைட்டமின்களை கொடுப்பதாக இருந்தால் கண்டிப்பாக தங்கள் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்கவும்.

  • சமீபத்தில் நான் படித்த ஓர் ஆய்வறிக்கையில்  தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவிட்டி போன்ற பாதிப்புகள் குறைவென்றும். மேலும் பால் பவுடர் மற்றும் சமன் படுத்தப்பட்ட பாக்கெட் பால்களை (toned milk) தவிர்த்தல் நலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

வளர்பிறை தேய்பிறைக்கும்- மனநல மற்றும் நரம்பியல் பாதிப்புகளுக்கும் உள்ள தொடர்பு:

சந்திரமா மனஸோ ஜாதஒருவரின் மனநிலைக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் ஸ்லோகம்.

பொதுவாக  மனநல பாதிப்பு  உள்ளவர்கள் பௌர்ணமி போன்ற நாட்களில் உக்கிரம் அடைவதாக பழங்காலம் தொட்டு நமது நாட்டில் சொல்வதுண்டு.

நவீன விஞ்ஞானம் சொல்வதென்ன? அதாவது கடலானது பௌர்ணமி போன்ற தினங்களில் பொங்குவதற்கு காரணம்  சந்திரனின் ஈர்ப்பு விசையே. அதேபோல் 75% நீராலான மனித உடலில் "கிரிப்டோக்ரோம்" என்ற புரதம் உள்ளது.இதுவே உடலின் சுழற்சி கடிகாரத்தை (circadian rhythm) இயங்கச் செய்யவல்லது. நமக்கு இரவையும், பகலையும் உணரச் செய்கிறது. இந்தப் புரதம் ஃபிளாவின்(flavin) என்ற ஒளியை இழுக்கக் கூடிய மூலக்கூறுடன் சேரும்போது அதற்கு காந்தங்களுடன் சேரக் கூடிய தன்மை கிடைக்கிறது. இதுவே இரவையும், பகலையும் உடலுக்கு சொல்கிறது.

 பௌர்ணமி போன்ற நாட்களில் உடலில் இருக்கும் திரவங்கள் சந்திரனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் பொழுது, உடலின் சுழற்சி கடிகாரத்தை பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு பிரச்சனைகள் அதிகரிக்கிறது. 

ஏன் எல்லாம் தெரிந்தும் மீனாட்சி போன்ற சில குழந்தைகளால் தனியாக எழுத முடியவில்லை?
நான் முன்பே குறிப்பிட்டதுபோல் மீனாட்சி வளர்ச்சி நிலைகளில் நீஞ்சிவிட்டு தவழாமல் ஒரு வயதிற்கு மேல் நேரடியாக நடக்கத் தொடங்கிவிட்டாள்.

நான் இதுபற்றி புரிந்து கொண்டது: எழுதுவதற்கு தோள்களில் பலம் வேண்டும். தவழாத குழந்தைகளுக்கு தோள் பலம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு எழுதுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இன்றுவரை மீனாட்சிக்கு தோள் வலிமை சேர்க்க நாங்கள் சிறப்புப் பயிற்சிகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அவள் தனியாக எழுதினாலொழிய அவளது திறமையை யாரும் புரிந்து கொள்ள போவதில்லை. நாங்களே எழுதிவிட்டு அவள் எழுதுவதாக பொய் சொல்கிறோம் என்றே சொல்வார்கள்!

அதே நேரத்தில் இக்குழந்தைகளை தனியாக எழுத வைக்க பயிற்றுவிக்கும் பொழுது மேஜையில் அமர்ந்தால், இவர்களின் கால்களை தொங்க விடாமல் கீழே ஒரு பலகையை வைத்தால் முன்னேற்றம் ஏற்படும் என்றும், மேலும் செங்குத்தாக கரும்பலகையில் (black board) எழுதும்போது தன்னிச்சையாகவே எழுதுகிறார்கள் என்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தாய்மார்கள் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.