Monday, November 16, 2020

13. தமிழ் மீது தீராக் காதல்கொண்ட ஸ்காட்லாந்து சிறுவன் கோல்ட்!

சவான்ட் சின்ட்ரோம் பற்றி என்னிடம் சொன்ன சிலர் 'மறு ஜென்மம்' பற்றிப் பேசினார்கள். அதாவது மீனாட்சி போன்ற குழந்தைகளுக்கு ஒன்றிற்கு  மேற்பட்ட பூர்வ ஜென்மங்களின் நினைவுகள் இருப்பதால்தான் இவர்களுக்கு பன்மொழித் திறமை உள்ளது என்று என்னிடம் கூறினார்கள்.‌பெரும்பாலான ஹைபர்லெக்சியா உள்ள ஆங்கிலம் மட்டுமே பேசும் குடும்பங்களில் பிறக்கும் வெளிநாட்டுக் குழந்தைகள் முன்பின் அறிமுகமில்லாத தமிழ், அரபி, கொரியன்,ரஷ்யன், ஸ்பேனிஷ்,உருது போன்ற  அந்நிய மொழிகளில் எழுதுகிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் எனது முகநூல் நண்பர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த திரு.மைக்கேல் அவர்களின்  மகன் 'கோல்ட்' (Colt). இது எங்களைப் போன்ற ஹைப்பர்லெக்சியா உள்ள குழந்தைகளின் பெற்றோர்களால் தொடங்கப்பட்ட முகநூல் பக்கம். இதன் மூலம் எனக்கும் மைகேலுக்கும் உள்ளதுபோல் தேசம்,மொழி,இனம் கடந்த நட்பு இக்குழந்தைகள் மூலம் பல பெற்றோர்களுக்குள்  ஏற்பட்டுள்ளது. பிறரிடம் பகிரமுடியாத இக்குழந்தைகளை கையாள்வதில் உள்ள சிக்கல்களை இங்கே பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் தீர்வுகளையும் பரிமாறிக்கொள்கிறோம். இங்கே ஜெர்மானியிலோ  இத்தாலியிலோ பிறந்த ஒரு குழந்தை முன்பின் அறிமுகமில்லா அரபியும் தமிழும் எழுதுவதாக ஆச்சார்ச்சத்துடன் சொல்லி  தினமும் ஒரு பெற்றோர் இக்குழுவில் சேர்வது வாடிக்கை. அது பெரும்பாலும் நாங்கள் கடந்துவந்த பாதையை  ஒத்திருப்பதும் வாடிக்கை. ஆனால் சமீபகாலமாக வரும் மேலைநாட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் மனநல மருத்துவர்கள் ஹைப்பர்லெக்சியா சோதனை மேற்கொண்டு தங்கள் குழந்தைக்கு  ஹைப்பர்லெக்சியா உள்ளதை அங்கீகரித்துள்ளதாக சொல்வது மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் நம்நாட்டில் இதை ஆட்டிசத்திலிருந்து பிரிக்காமல் வைத்திருப்பது வேதனையே!

கோல்டிற்கு  மீனாட்சியின் வயதுதான். கோல்டிற்கும் மீனாட்சியைப் போல் தனித்து எழுதுவது பேசுவது போன்றவற்றில் பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனால் 5 வயதில் திடீரென ஒரே நாளில் அவனிடம் நல்ல மாற்றங்கள் தெரிந்திருக்கிறது. அவன் தனித்து எழுதத் தொடங்கிய நேரத்தில் அவன் 'வணக்கம்' என்று தமிழில் தொடங்கி உலக மொழிகள் அனைத்திலும் அதற்கு இணையாக உள்ள வார்த்தைகளில் வாழ்த்து தெரிவிக்கிறான். இது தவிர 'பென்10' என்ற கார்ட்டூன் நிகழ்ச்சியை கோல்ட் யூடியூப்பில் தமிழில் தான் பார்த்து ரசிப்பதாக மைக்கேல் என்னிடம் தெரிவித்தார்.‌ தமிழைப் பற்றி மைக்கேலிடம் கூறிய கோல்ட் "தமிழ்  குஜராத்திலும் இலங்கையிலும்" பேசப்படும் மொழி என்று கூறியிருக்கிறான்.‌ இலங்கையில் 'தமிழ்' என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்.குஜராத்திற்கு எப்படி தமிழ் வந்தது? இதுபற்றி என்னிடம் கூறிய இலங்கையைச் சேர்ந்த எங்கள் குடும்ப நண்பர் 'அந்தச் சிறுவன் சொல்வது ஒருவகையில் சரிதான். வடக்கு இலங்கையில் 'மேமன்' என்ற பிரிவைச் சேர்ந்த மக்கள் தமிழில் கதைத்தாலும் அவர்களின் பூர்வீகம் குஜராத் தான்'என்று கூறினார்.

இன்று கோல்டின்‌ முக்கிய பொழுதுபோக்கு: அவனுக்கு உலகின் அனைத்து நாடுகளின் பெயர்களும், கொடிகளும், தேசிய கீதங்களும் அத்துப்படி.‌மேலும் அவனே புதிய நாடுகளையும், கண்டங்களையும் கொண்ட உலக வரைபடத்தை உருவாக்கிவருகிறான்.

கோல்ட்

முன்பிருந்த 'லெமூரியா' கண்டம் இன்று இல்லை. அதேபோல் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைய தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் நடக்கப் போவதை தான் சிறுவன் கோல்ட் விளையாட்டாக உருவாக்கிப் பார்க்கின்றானோ?


கோல்டிற்கும் மீனாட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
நான் மைக்கேலிடம் கேட்டவரையில் கோல்டிற்கு ஹைபர்லெக்சியா மட்டுமே உள்ளது. மீனாட்சியைப் போல் பிறர் மனதைப் படிக்கும் நுண்ணுர்வுத் திறன் போன்ற 'சவான்ட்' திறமைகள் வெளிப்படவில்லை.தன்னிச்சையாக பேசவும் எழுதவும் தொடங்கிவிட்டான்.மீனாட்சி தனக்கு நன்கு பரிச்சயமான தாய், ஆசிரியை, தெரப்பிஸ்ட் போன்ற குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே குறைவான வார்த்தைகளுடன் மெல்லிய குரலில் பேசத் தொடங்கியிருக்கிறாள். கோல்ட் நிறையப் படித்து அறிவை மேம்படுத்திக் கொள்கிறான்.‌தன் திறமைகளை பிறரிடம் வெளிப்படுத்திக் கொள்கிறான். மீனாட்சிக்கு படிக்காமலேயே சகலமும் தெரியுமென்றாலும் தன்னை எல்லோரிடமும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.

கீழே : எங்களுக்குள் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள்!

மீனாட்சியின் தமிழ், மலையாளம் போன்ற இந்திய மொழிகள்  மற்றும் உயர்த்த ஆங்கிலப்புலமை  பற்றி நான் கூற, மைகேல் உள்ளிட்ட வெளிநாட்டுப் பெற்றோர் தங்கள்குழந்தைகள் இந்திய மொழிகள் மற்றும் அந்நியமொழிகளில்  பெற்றிருக்கும் அறிவைப்  பற்றி விவரிக்கிறார்கள்!










அறிவார்ந்த குழந்தைகளின் உலகம் எப்படிப்பட்ட பொழுதுபோக்குகளையும் விளையாட்டுக்களையும் கொண்டுள்ளது என்பதை நீங்கள் காணவேண்டாமா!

 கீழே உள்ள படங்களைப் பாருங்கள்! இவை ஹைபர்லெக்ஸியா முகநூல் குழுவில் உலகெங்கிலுமுள்ள பெற்றோர்களால் பகிரப்பட்ட புகைப்படங்கள். இனிமேல்  உங்கள் குழந்தைகளை 'சிறப்புக் குழந்தைகள்' என்று சொல்லப்படும் குழந்தைகளுடன்  ஒப்பிடலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளவும்.என்னைப் பொறுத்தவரை படைப்பால் அனைத்துக்  குழந்தைகளும் ஒன்றுதான். அவர்களின் மனதில் பெற்றோராகிய நாம் 'தான்' என்ற உணர்வை ஊட்டி அதை அவர்களின் தலையில் ஏற்றிவிடக் கூடாது. 'தான்' என்ற உணர்வுதான் நமது அறிவிற்கு பின்னாளில் உடனிருந்து குழிபறிக்கும் நம்பிக்கை துரோகியாகிவிடுகிறது.


எழுத்துக்களுடன் விளையாடும் ஒரு சிறுவன் 



மும்மொழி அகர வரிசைகளுடன் ஒரு சிறுவன் 



எண்களுடன் பூஜ்யங்களை சேர்த்துக்கொண்டே போயி  ஸ்தனங்களுடன் விளையாடும் பொடியன் 



                                     இந்த வயதில் இவ்வளவு ஸ்தனங்களுடன் வகுத்தலா? 



இவன் வடிவியலில் நிபுணன்! 

                                                      
இது அர்த்தமுள்ள சுட்டித்தனம்!



புகைப்படத்துக்கு  போஸ் கொடுக்க வைப்பது என்றுமே கடினம்தான்!


இவன் மூன்று வயதில் பெற்ற  பிறந்தநாள் பரிசு 'லோகோக்கள்' அடங்கிய புத்தகம்  



கிரேக்கப் பிரபுபோல் உடை அணிந்துள்ளான். இவன் அறிந்த 44 மொழிகளுள் இவனுக்குப் பிடித்தது கிரேக்க மொழியாம்! 



உறங்கும்போதும் எழுத்துக்களே உற்றதோழன் 



கணக்கிற்கு  விடை எழுதி ஐபாடின் பாதுகாப்பை தகர்த்து ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய முயலும் 3 வயது சிறுவன்!





இந்த 10 வயது சிறுவன் தாத்தா பாட்டியிடம் பெற்ற பிறந்த நாள் பரிசு "கனிம அட்டவணை"



இவன் தினமும் கண்விழிப்பது அட்லஸின் முன்! 




இந்த ஐந்துவயது சிறுவனின் விருப்பம் உடற்கூறியல்




பன்மொழி  எழுத்துக்களுடன் ஒரு சிறுவன் 




 π(Pi)ன் மதிப்பிற்கு 127 தசமஸ்தானங்களில் (decimal places) விடையளிக்கிறான்


தின்பண்டத்தை வைத்து கண்டங்கள் வரையும் 4 வயது குழந்தை 


களிமண்ணில் பாக் மேன் (Pac -Man ) உருவாக்கி மகிழும் வெளிநாட்டுவாழ் இந்தியக் குழந்தை  


     
இது மீனாட்சியின் விளையாட்டு: இதை 'ஹைப்பர்லெக்சியா  பெற்றோர்கள்' முகநூல் பக்கத்தில் பகிர்ந்து என்னவென்று கேட்டேன். வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி இது வானவில்லின் வண்ணங்களை 'ROYGBIV' என்ற சரியான வரிசையில் அடுக்கி இருக்கிறாள் என்றார் (நமக்குத் தெரிந்த வரிசை VIBGYOR தானே?). ஒருசிலர் இது DNAவின் கட்டமைப்பை விவரிக்கும் 'ஹீலிஸ்' போல் உள்ளது என்றார்கள். இதில் மீனாட்சி ஸ்பூன் வைத்தவுள்ளதுபோல் தங்கள் குழந்தைகளும் வைப்பதாக ஒருசில தாய்மார்கள் தெரிவித்திருந்தார்கள்.                           




Sunday, November 15, 2020

12. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ குறிப்பிடும் 'உள்ளார்ந்த அறிவு' (innatism):

முதலில் நாம் "உள்ளார்ந்த அறிவு" (innatism) என்றால் என்ன என்பதை தத்துவார்த்த ரீதியாகப் பார்க்கலாம்! கிரேக்க தத்துவ மேதை பிளாட்டோ எழுதிய 'மெனோ'வில் தனது குருவான சாக்ரடீஸுக்கும் "மெனோ" என்ற அரசியல் பிரமுகருக்கும் நடந்த சம்பாஷணையைக் குறிப்பிடுகையில், 'மெனோவிடம் அடிமையாக இருந்த ஒரு சிறுவனிடம் அவன் முன்பின் அறியாத வடிவியல் தேற்றத்தை (geometry theorem) கேட்டவுடன் மிகச்சரியாக எழுதிக் காட்டினான். இதற்குக் காரணம் அவனது உள்ளார்ந்த அறிவு தூண்டப்பட்டதே!' என்கிறார் பிளாட்டோ.மேலும் அவர் குறிப்பிடுகையில் ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அதன் மனம் எதுவும் எழுதப்படாத வெற்றுக் கரும்பலகையைப் போல் இல்லை (mind is not a blank slate). அனைத்துக் குழந்தைகளுமே மொழியின் கட்டமைப்பு தெரிந்தே பிறக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் முதலில் கேட்கும் தாய்மொழியை எளிதாகக் கற்று சீக்கிரம் பேசத் தொடங்குகிறார்கள். அதேபோல் ஐம்புலன்களின் மூலமாக அவர்கள் உணர்வுகளை மட்டுமே தெரிந்து கொள்கிறார்கள்.ஆனால் "வடிவங்கள்/ உருவங்கள்" (forms) அவர்களுக்குக் கற்பிக்கப் படுவதற்கு முன்பே அவை அவர்களின் மனதில் இருக்கிறது. 


இதையே இப்போது விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போம்: பிளாட்டோவின் இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பிறந்த குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் மூளையின் மொழி அறியக்கூடிய பகுதியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.அதை  visual word form area (VWFA)  ) என்கிறார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு இதுதான் மொழிக்கான வரிவடிவம் என்பது நாம் கற்பிப்பதற்கு முன்பே தெரிந்திருக்கிறது என்கிறார்கள். 

                                                                       பிளாட்டோ 

பிளாட்டோவின் தத்துவம் என்னை பெரிதும் ஈர்ப்பதற்குக் காரணம் சவான்ட் சின்ட்ரோமும் ஹைபர்லெக்சியாவும் உள்ள குழந்தைகளில் சிலருக்கு மீனாட்சியைப்போல் ஐம்புலன்கள் மூலம்(sensory integration) விஷயங்களை புரிந்துகொள்வதில் பிரச்சனை உள்ளது.இதனால் அவர்களின் ஆறாவது புலனான உள்ளுணர்வு(consciousness) விழிப்படைந்து வழிநடத்துகிறதோ? அப்படியானால் அந்த உள்ளுணர்வு தான் ஆன்மாவா? அதுதான் விஞ்ஞானத்தால் "ஜெனிடிக் மெமரி" என்று அழைக்கப்படுகிறதா? அப்படியானால் அது எங்கே இருக்கிறது? அதைத் தூண்டியது யார்?ஆன்மா நம்மைப் பிரிந்து விட்டால் ஏன் சடலமாகிறோம்?